Saturday, January 22, 2011

மக்களை மறந்த மன்னர்கள்

இயற்கைப் பேரழிவுகளான நிலநடுக்கம், கடுமையான மழை, பெரும் வறட்சியைப் போலவே விலைவாசி உயர்வு” என்று தமிழக சட்டப் பேரவையில் நம்முடைய நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பேசி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாலபாரதி விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்த போது பேராசியர் அன்பழகன் இந்தக் கருத்தை கூறி இருக்கிறார். ”விலைவாசி பிரச்னை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது; உலக அளவிலும் இருக்கிறது” என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். ”எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், விலைவாசி உயர்வு என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்” என்றும் அவர் பேசி இருக்கிறார். தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்னை பற்றி பேசும்போது நம்முடைய தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள்!

அதேசமயம் முதலமைச்சர் கருணாநிதி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்கான அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் சொல்வதைப் போல் உலகளாவிய பிரச்னையாக விலைவாசி உயர்வு இருக்கும்போது, நம்முடைய சின்ன மாநிலத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் பேசாமல் இருந்துவிடவில்லை. நிலநடுக்கத்தைப் போல, பெரு மழையைப் போல மக்களுடைய அல்லது ஆட்சியாளர்களுடைய சக்திக்கு மீறிய ஒரு சங்கதியாக விலைவாசி உயர்வு இருந்தால், முதலமைச்சர் கருணாநிதி கூட்டும் அந்த ஆலோசனைக் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஆனால் நிதியமைச்சர் அப்படி ஒரு கருத்தை முன்வைத்துப் பேசுகிறார். ஒருவர் ஒரு பிரச்னையை எழுப்பியவுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே சராசரியாக இருக்கும் ஒருவர் விரும்புகிறார். எழுப்பப்பட்ட பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதை மனம்திறந்து விவாதிக்கலாம் என்ற எண்ணம் உடனடியாக வருவதில்லை. சராசரியாக இருக்கும் நம்மைப் போலவே அல்லது நம்மைவிட சில சமயங்களில் சராசரியாக நம்முடைய பிரதிநிதிகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!

விலைவாசி உயர்வு தொடர்பாக டெல்லியில் என்ன நடக்கிறது? அதிகரித்து வரும் விலைவாசியை மத்திய அரசால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ராகுல் காந்தியிடம் ஒரு மாணவர் கேட்டிருக்கிறார். அதற்கு ”கூட்டணி நிர்ப்பந்தங்களே விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் என்று ராகுல் காந்தி பதில் சொல்லி இருக்கிறார். ‘இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தனிக்கட்சி ஆட்சியாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால், அப்போது விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது’ என்றும் கூறி இருக்கிறார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் டி.பி.திரிபாதி கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். “மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே பிரதானமானது. அதனால் அந்தக் கட்சித் தலைவர்களுடைய வார்த்தைகள் எளிமையாகவும் பணிவாகவும் இருக்க வேண்டுமே தவிர திமிராக வெளிப்படக் கூடாது” என்று சொன்னதுடன் அவர் நின்றுவிடவில்லை. “இத்தாலியில் கூட கூட்டணி அரசுதான் நடக்கிறது” என்று சோனியாகாந்தி பிறந்த நாட்டை ‘உள்ளே’ இழுத்து, தனிப்பட்ட முறையில் தாக்கினார்.

அதே கட்சியை சேர்ந்த தாரிக் அன்வர், “மத்திய அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிராகரித்துவிட்டு, ஒரு அமைச்சரை மட்டும் குறை சொல்வது நியாயம் அல்ல; பீகாரில் படுதோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் இப்படிப் பேசக் கூடாது” என்று காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். விலைவாசி உயர்வுக்கு ‘கூட்டணி நிர்ப்பந்தங்களே காரணம்’ என்று சொன்ன ராகுல் காந்தியின் பேச்சை தி.மு.க.வோ, மமதா பானர்ஜியோ கண்டிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் மட்டுமே எதிர்க்குரல் எழுப்பியது. ஏனென்றால், ராகுல் காந்தி யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குற்றம் சாட்டியது மத்திய விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத்பவாரைத் தான் என்பதை எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் தி.மு.கவும் கூட்டணிக்கு எதிரான காங்கிரஸின் கருத்தாக அதை எடுத்துக் கொள்ளாமல், சரத்பவாருக்கு எதிரான புகாராக எடுத்துக் கொண்டது போலிருக்கிறது.

ஆனால், இந்த சொற்போரை தொடர்ந்து நீடிப்பதற்கு காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் விரும்பவில்லை. ராகுல்காந்தியின் பேச்சை ஊடகங்கள் தவறாக வெளியிட்டுவிட்டன என்று காங்கிரஸ் ஊடகங்களின் மேல் பழியைப் போட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் அவருடைய கட்சித் தலைவர்களின் எதிர்வினையை அவர்களுடைய சொந்தக் கருத்து என்று சொல்லி காங்கிரசிடம் ‘வெள்ளைக் கொடியை’ உயர்த்திப் பிடித்தார்! அதோடு மட்டும் நிற்காமல், ‘ராகுல் காந்தி எந்த அமைச்சருடைய பெயரையும் குறிப்பிடாத போது, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஏழைகளால் வாங்க முடியாத அளவு விலை ஏறி நிற்கும் உணவுப் பொருட்கள் யாருடைய துறைக்குக் கீழ் வருகிறது? அந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய விவசாயத் துறையின் அமைச்சர் யார்? இரண்டு துறைகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பொறுப்பிலேயே இருக்கின்றன!

அமைச்சர்கள், அதிகாரிகள், திட்டக் கமிஷன் உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை நடத்திய பிறகு, மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை, இறக்குமதிக்கு இருந்த தடைகளைத் தளர்த்துதல், பதுக்கல்காரர்கள் மீது வருமானவரி சோதனை என்று சில நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள், வழங்கலுக்குத் தயாராக இருக்கும் இருப்பும் தேவைகளும் விலையைத் தீர்மானிக்கின்றன என்ற பொருளாதார விதி ஒன்றின் அடிப்படையில் மட்டுமே இருக்கின்றன. மத்திய அரசாங்கம் செய்த வேறு சில செயல்களும் செய்ய மறுக்கும் சில விஷயங்களும் இந்த விலையேற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை அரசாங்கங்கள் ஏற்க மறுக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு கை கழுவியது. எண்ணெய் நிறுவனங்கள் நினைத்த போதெல்லாம் இப்போது விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற நிலையை அரசு உருவாக்கியது. இந்த விலை உயர்வு மற்ற பொருட்களின் விலையே அதிகரிக்கச் செய்யும் என்பதை எந்தப் பண்டிதரும் வந்து நிதியமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. சின்னச் சின்ன குழுக்களில் இருந்து சில அரசியல் கட்சிகள் வரை ஊக வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொண்டை வறளக் கத்துகிறார்களே, அரசாங்கம் அந்தக் குரலைக் காது கொடுத்துக் கேட்காமல் இருப்பது ஏன்?

மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த ஹூய் என்ற மன்னரிடம் மக்கள் அரிசி வாங்க முடியாமல் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது அவர், ‘அரிசி இல்லை என்றால் என்ன? இறைச்சியை அவர்கள் சாப்பிடலாமே!’ என்றாராம். இதைப் போலவே பிரான்சில் ஓர் இளவரசி, மக்கள் பஞ்சத்தில் வாடிய போது, ‘ரொட்டி இல்லை என்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்’ என்றாராம். மன்னராட்சியில் பரம்பரை பரம்பரையாக ராஜாக்களாகவே இருந்தவர்களுக்கு சாதாரண மக்கள் பஞ்சத்தில் படும்பாடு புரியாது. ஆனால் மக்களாட்சியில் நமக்கு மத்தியில் சாதாரண மனிதர்களாக இருந்து, அதன் பிறகு அதிகாரத்துக்குப் போனவர்களுக்கும் புரியாதா என்ன?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, January 15, 2011

நெற்றிக்கண் திறப்பினும் ......

”பேராசை நல்லது; அதிக பேராசை இன்னும் நல்லது; ஏனென்றால் அப்போதுதான் ஊழல்கள் வெளி உலகத்துக்குத் தெரிகின்றன” என்று அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு ஊழல் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார். அதைப்போலவே ’குற்றவாளிகள் அரசியலுக்கு வருவது நல்லது; அதிக குற்றவாளிகள் அரசியலுக்கு வந்து அதிகாரத்தில் அமரும்போதுதான், அதற்கு எதிரான உணர்வு அதிகரிக்கிறது’ என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. இந்திய அரசியலில் 1980 களில் இருந்து ‘குற்றமயமாகும் அரசியல்’ குறித்த விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு முன்னதாக குற்றவாளிகளோடு தொடர்பு இல்லாமல் அரசியல் இருந்தது என்று இதற்கு அர்த்தம் இல்லை! ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் வேட்பாளர்களில் எத்தனை சதவீதம் பேர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று செய்திகள் வரும். தேர்தல் முடிந்த பிறகு உருவாகும் மக்களவையிலோ அல்லது சட்டப் பேரவைகளிலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் ‘கிரிமினல்’ பின்னணி கொண்டவர்கள் என்று ஒரு செய்தி போடுவதும் நம்முடைய சம்பிரதாயங்களில் அல்லது சடங்குகளில் ஒன்று!

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று உலக மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறது. பல கட்சிகள் இருக்கும் ஓர் ஜனநாயக அமைப்பில் உலகத்திலேயே அதிகமான மக்கள் வாக்களித்து தங்களுடைய அரசாங்கத்தை தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்பது ஒரு காரணம்! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74-வது திருத்தங்கள் கொண்டு வந்து பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்த பிறகு அதிகமான மக்கள் பிரதிநிதிகளும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஏறத்தாழ முப்பது லட்சம் பிரதிநிதிகள் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்களில் பத்து லட்சம் பேர் பெண்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெருமை வாய்ந்த ஜனநாயக அமைப்பு உண்மையில் பெருமை கொள்ளும்படி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான நியாயத்தை அடிக்கடி இந்திய தேர்தல் ஆணையமே நமக்கு உணர்த்துகிறது.

“அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும் கிரிமினல் அரசியல்வாதிகள் அதிகமாக இருப்பதும் தேர்தல் நடைமுறைக்கு மிகப் பெரிய அழிவாக இருக்கிறது. எனவே அவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை விதிப்பது குறித்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். விசாரணைக் கைதியாக சிறையில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருக்கும்போது, வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதால் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடிகிறது. நம்முடைய மக்களவை 543 உறுப்பினர்களில் 162 பேர் கிரிமினல் வழக்கு விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அதில் 76 பேர் கொடூரமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்” என்றெல்லாம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி பேசி இருக்கிறார். கருத்துக்கணிப்புக்குத் தடை, காளான்களைப் போல் புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளைக் கட்டுப்படுத்துதல் பற்றியும் பேசி இருக்கிறார்.

அவர் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு சிக்கலைப் பற்றியும் எவ்வளவோ பேச முடியும். ஆனால் இங்கு இப்போது குற்றமயமாகும் அரசியலைப் பற்றி மட்டும் பார்க்கலாம். தலைமைத் தேர்தல் ஆணையர் இந்த விஷயத்தில் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாரா? அல்லது ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னால் நடக்கும் வழக்கமான சடங்குதானா? இந்த மாதிரி கேள்வியை கேட்கும் நம்பிக்கையற்ற மனநிலையிலேயே சராசர் வாக்காளர் இருக்கிறார். இதற்கு முன்னால் இருந்த தேர்தல் ஆணையர்களுடைய முயற்சிகள் என்ன ஆயிற்று? உச்சநீதிமன்றம் அவ்வப்போது தலையிட்டும் நிலைமைகளில் பெரிய மாற்றம் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யும்போது நிலுவையில் இருக்கும் வேட்பாளருடைய வழக்குகள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும் என்ற நிலை நடைமுறைக்கு வந்தும் பெரிதாக பலன் இருப்பதாகத் தெரியவில்லை. குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த அதிசயம்? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஏன் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘டிக்கெட்’ கொடுக்கின்றன? ‘எப்படியாவது’ தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் யாருக்கும் கிடையாது. “எங்கள் மீது மரியாதை வைத்து எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது. ”சரி, மரியாதை வேண்டாம், அது உள்ளன்போடு கிடைப்பதில்லை. அதனால் உங்களிடம் சொன்ன வாக்குறுதிகளை நாங்கள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை வைத்து எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்ற நிலையும் இப்போது பல இடங்களில் மாறி விட்டது. “மரியாதை போச்சு; அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்பகத்தன்மை போச்சு; அதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. எங்களைப் பார்த்து பயந்து போய், எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற நிலையே இப்போது நிலவுகிறது.

அவர்கள் வெற்றி பெற்று அதிகாரத்தில் உட்கார்ந்ததும் அவர்களுடைய ‘முதலீட்டை’ திரும்பப் பெற நினைக்கிறார்கள். அப்போது கொள்கை சார்ந்த அரசியல் அவர்களுடைய புஜபலத்துக்கு முன்னால் மண்டியிட நேர்கிறது. மக்களுடைய வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற கருப்புப் பணம் தேவைப்படுவதாக ஒரு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள், பயங்கரவாதிகளுக்கு இடையில் இருக்கும் தொடர்பு பற்றி விசாரித்து வோரா கமிட்டி கொடுத்த அறிக்கை தூசி படிந்து கிடக்கிறது. மும்பையில் நடந்த கலவரம், கொள்ளை, கொலைகள் குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையும் பரணில் தூங்குகிறது. பணமும் குற்றமும் அதிகாரமும் ஜனநாயகப் பூச்சும் சேரும் போது, அது வலிமையாகி விடுகிறது. அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திர அமைப்பான தேர்தல் ஆணையத்தால் கூட இந்த வலிமையை உடைக்க முடியவில்லை.

அரசியல் கட்சிகள் கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்கப்போவதில்லை. அதேசமயம் வெறும் வழக்குப் பதிவும் குற்றச்சாட்டும் இருந்தால், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இயற்கை நீதிக்கு எதிராக இருக்கிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவரை நிரபராதி என்றே கருத வேண்டியிருக்கிறது. அவருடைய மேல்முறையீடுகள் உச்சநீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டு, முடிவு தெரியும் வரை சில பத்தாண்டுகள் கடந்து போய் விடுன்றன. அப்படி என்றால் என்ன செய்வது? “அரசியல்வாதிகளின் வழக்கு விசாரணைகள் தினசரி நடை பெற வேண்டும். அவர்களுடைய விசாரணை முடிந்து அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது. பதவியில் இருக்கும்போது அவருக்கு குற்றவாளி என்று தண்டனை விதிக்கப்பட்டால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றெல்லாம் பல குரல்கள் நம்மூரில் எழுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, மக்கள் இவர்களை அடையாளம் கண்டு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதே!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

நெருக்கடியில் காங்கிரஸ்

அவர்கள் ஐந்து பேரும் அந்த வேலையை மிகவும் கஷ்டப்பட்டு செய்து முடித்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்கள். எல்லாவிதமான பிரிவுகளையும் சார்ந்த மக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். மிகவும் நீண்ட ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு விவகாரம் குறித்து அவர்கள் விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணி அவர்களுடையது. அந்தப் பணியை முடித்து அறிக்கையைக் கொடுத்து விட்டார்கள். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் அவர்கள் கொடுத்த அறிக்கையை கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி வியாழக்கிழமை வெளியிட்டு இருக்கிறார். ஆம்! மிகவும் உணர்ச்சிமயமான தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் காரணமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை வெளிவந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் கூட்டிய அந்தக் கூட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தனித் தெலுங்கானா மாநிலத்துக்குக் குறைவான எந்த ஒரு தீர்வையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் நிலை எடுத்துவிட்டார். காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த விவகாரத்தில் எப்போதும் தங்களுடைய நிலையில் உறுதியாக இருந்ததில்லை. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இயல்பான ஒன்று. அதே சமயத்தில் ஜனநாயகம் விவாதங்களையும் அவற்றின் அடிப்படையில் கருத்தொற்றுமையையும் வலியுறுத்துகிறது. விவாதங்களில் நியாயமான வாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் இருப்பவர்களே, அன்றாட நிகழ்வுகளை ஜனநாயக தளத்தில் இருந்து சதி செய்து கடத்திச் செல்ல முனைவார்கள். இந்த பிரச்னையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கருத்தொருமித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றே மத்திய அரசு நினைக்கிறது என்றும் அந்த அடிப்படையிலேயே ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அமைக்கப்பட்டது என்றும் மத்திய அரசு சொல்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை உருவாகும் என்ற நம்பிக்கை இல்லை. அப்படியே சில பிரதான கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவை எடுத்தாலும் மற்ற கட்சிகள் அதை அரசியலாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே எல்லா முக்கிய கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவு தெலுங்கானா அல்லது ஆந்திராவின் பிற பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எடுத்ததாகவே இருக்கும். அரசியல் கட்சிகளின் எல்லா நிலைப்பாடுகளையும் தீர்வுக்கான ஆலோசனைகளாக அந்த குழு முன்வைக்கிறது. அதாவது ஆறு ஆலோசனைகளை முன்வைத்து அவற்றில் மூன்றை முழுவதுமாக நிராகரிக்கிறது. ஆந்திரா இப்போது இருப்பதைப் போலவே தொடர்ந்து நீடிக்கலாம் என்பது முதல் பரிந்துரை. இதை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையே சொல்கிறது. ஆந்திராவை சீமா ஆந்திரா, தெலுங்கானா என்று இரு தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கலாம்; இரண்டுக்கும் தனித்தனி தலைநகரங்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கி விடலாம்’ என்று இரண்டாவது ஆலோசனை கூறுகிறது.

மாநிலத்தை ராயல தெலுங்கானா, கடலோர ஆந்திரப் பகுதி என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பது ஓர் ஆலோசனை. ஹைதராபாத் ராயல தெலுங்கானாவின் பகுதியாக இருக்கும். இந்த ஆலோசனையை எல்லா தரப்பும் நிராகரிக்கும். நான்காவதாக, தெலுங்கானா, ராயலசீமா என்று பிரித்து ஹைதராபாத் மாநகரத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் யூனியன் பிரதேசமாக மாற்றுவது என்ற ஆலோசனை. அடுத்து, தெலுங்கானா, ஆந்திரா என்று இரு மாநிலங்களாகப் பிரித்து தெலுங்கானா போராளிகள் கேட்பதைப் போல தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் நகரத்தை அறிவிக்கலாம். இதை இரண்டாவது நடைமுறை சாத்தியமாக அந்த அறிக்கை சொல்கிறது. இந்த ஆலோசனையை தெலுங்கானா பகுதி மக்களைத் தவிர ஆந்திராவின் பிற பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தப் போக்கை சென்ற வருடத்தின் இறுதியில் நாம் பார்த்தோம்.

ஆறாவதாக, ஆந்திர மாநிலத்தை இப்போது இருப்பதைப் போலவே பிரிக்காமல் வைத்திருக்கலாம். தெலுங்கானா பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட தெலுங்கானா மண்டல கவுன்சில் ஒன்றை அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கலாம். இதுவே ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் முதல் தேர்வு. அதாவது ஆந்திராவைப் பிரிக்கவும் கூடாது; அதேசமயம் தெலுங்கானா பகுதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த உணர்வும் உருவாக வேண்டும். இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று எண்ணுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ளவில்லை.

என்ன தீர்வாக இருந்தாலும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும் என்று ஒரு கருத்து தீர்மானமாக உலவுகிறது. அதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது ஆந்திர சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 294. இவற்றில் 107 உறுப்பினர்கள் மட்டுமே தெலுங்கானா பகுதியில் இருந்து வருகிறார்கள். மீதி அனைத்து உறுப்பினர்களும் ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது 187 உறுப்பினர்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? தெலுங்கானா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களால், பிற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்துக்குள் தோற்கடிக்க முடியாது.

ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் போடுவதற்கு முன்னால் என்ன சொன்னது? ‘தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டோம்; அதற்கு ஆந்திர சட்டமன்றத்தில் இருந்து ஒரு தீர்மானம் மட்டும் வந்தால் போதும்’ என்றது. அப்படி ஒரு தீர்மானத்தை ஆந்திர சட்டமன்றத்தால் எப்படி நிறைவேற்ற முடியாது என்பது மத்திய அரசைத் தலைமை தாங்கி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் அப்படிச் சொன்னது? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெலுங்கானாவைத் தனிமாநிலமாக அறிவிக்கத் தயாராக இல்லை. ஆனால் நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகிறது. பெரிய மாநிலங்களை பிரித்து சிறிய மாநிலங்களாக மாற்றுவதன் நன்மைகளையும் தீமைகளையும் விவாதிப்பது வேறு விஷயம்! அந்த விவாதமாக மாற்றினால் ஒருவர் எடுக்கும் நிலைக்கும் மக்கள் உணர்வுகள் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். அதாவது ஒரு கோணத்தில் சரியாக இருக்கும் ஒரு தீர்வு இன்னொரு கோணத்தில் தவறாகவும் நமக்குத் தெரியக் கூடும்.

எப்படி தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது என்ற பழைய வரலாறையும் நாம் இந்த நிலையில் நினைத்துப் பார்ப்பது நமக்கு இந்த சிக்கலைப் புரிந்து கொள்வதற்கு உதவக் கூடும். ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா 1956-இல் தான் இணைக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கூட இதை ‘விரிவாக்க ஏகாதிபத்திய’ மனநிலை என்று சொன்னதாக அறிய முடிகிறது. இணைக்கப்பட்ட காலத்தில் இருந்தே தனி மாநிலத்துக்கான கோரிக்கையும் பலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன. போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை எல்லாம் காங்கிரஸ் பலவிதங்களில் உள்வாங்கிக் கொண்டது. அதன் பிறகு போராட்டத்தின் தீவிரம் படிப்படியாக குறைந்து போகும். சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் அந்தப் போராட்டம் தீவிரமாகும். இந்த வரலாறைப் பார்க்கும்போது, தெலுங்கானா கோரிக்கையின் நியாயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் என்று புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இந்த எடுத்துக்காட்டுகளைப் பார்க்கும்போது என்ன நோக்கத்துக்காக தனி மாநிலம் கோரப்படுகிறதோ, அந்த நோக்கங்கள் நிறைவேறுமா என்ற கவலையே எழுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

சஞ்சயைக் கைவிடும் காங்கிரஸ்

அன்று அவன் வீட்டில் இருந்தான். தினமும் ரேடியோவில் மதியம் 12.45 மணிக்கு தமிழில் செய்திகள் கேட்பது அவனுடைய வீட்டு வழக்கம். அப்பாவோ அண்ணனோ அல்லது அவனோ வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்திகள் ஓடும். அன்று வீட்டில் இருந்த அவன் அதிசயமாக அந்த செய்திகள் நேரத்தில் ரேடியோவை அணைத்தான். “ஏன் அதை அணைக்கிறாய்?” என்று அம்மா கேட்டார். ‘அது எதுக்கும்மா இப்போ? எப்போ பார்த்தாலும் அது உண்மைக்கு மாறான தகவலையே தருகிறது’ என்று அவன் பதில் சொன்னான். சிறிது நேரத்தில் அப்பா மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அருகில் இருந்த உயர்நிலைப்பள்ளி ஒன்றில் அவர் ஆசிரியராக இருந்தார். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக, “என்னடா! ரேடியோவில் நியூஸ் கேட்டியா?” என்றார். அவன் ”இல்லையே என்ன விஷயம்பா?” என்று கேட்டான். “விமான விபத்துல சஞ்சய் காந்தி இறந்து போயிட்டாராமே, ஊரே பரபரப்பா இருக்கு” என்றார். அவன் திகைத்து நின்றான்.

அந்த நாள் ஜூன் 23, 1980. அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காந்தி. பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன். விமானங்களை ஓட்டுவதில் ஆர்வமாக இருந்தவர். அன்று காலை எட்டரை மணியளவில் ’ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளாகியது. அந்த விமானத்தை சஞ்சய்காந்தி ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் இறந்திருக்கலாம்’ என்று டெல்லியில் செய்தி பரவி இருக்கிறது. அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று! 1977-ல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு நடந்த 1980 தேர்தலில், மீண்டும் இந்திரா காந்தியை இந்தியாவின் பிரதமராக்கி அரியணையில் அமர வைத்ததில் முக்கிய பங்காற்றியவர் சஞ்சய். 1977 தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது வேறு விஷயம்!

பிரதமராக இருந்த இந்திரா காந்தியை மிரட்டியே சில காரியங்களை சஞ்சய் காந்தி சாதித்துக் கொள்வார் என்றும் இந்திரா முழுக்க முழுக்க சஞ்சய்காந்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தார் என்றும் அப்போது செய்திகள் வந்ததுண்டு. இந்தியாவின் இருண்ட காலமான நெருக்கடி நிலையின்போது, சஞ்சய் காந்திக்கு நெருக்கமான முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்த ஹரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்தியாவுக்கு ‘புதிய அரசமைப்புச் சட்டம்’ வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றின. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, ஸ்வரண்சிங் தலைமையில் பன்னிரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்படி பிரதமரை சஞ்சய்காந்தி நிர்ப்பந்தம் செய்தார். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றி, அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து, இந்தியாவின் நிரந்தர குடியரசுத் தலைவராக இந்திரா காந்தி இருக்க வேண்டும் என்பது சஞ்சயின் விருப்பம்!

இப்படி எல்லாம் ஒரு பத்திரிகையாளன் எழுதினால் வழக்கமாக காங்கிரஸ் என்ன செய்யும்? அவனைக் காங்கிரசுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தும். அந்த காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் வாரிசு ஒருவரை ‘தன்னிச்சையானவர், எதேச்சதிகாரி’ என்று சொல்லும் என்பதை யாராவது எதிர்பார்த்திருப்பார்களா? ஆனால் அந்தக் கட்சி தன்னுடைய பார்வையில் பதிவு செய்யும் வரலாற்றில் அப்படியே எழுதி இருக்கிறது. ’காங்கிரசும் இந்திய தேச உருவாக்கமும்’ என்ற வரலாற்று நூலில் நெருக்கடி நிலை குறித்து காங்கிரஸ் பதிவு செய்கிறது. இந்த நூலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் வெளியிட்டார்கள். காங்கிரஸ் கட்சியே சஞ்சய் காந்தி குறித்த விமர்சனத்தை முன்வைத்த பிறகு மற்ற கட்சிகளின் தலைவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள் என்பது சராசரி நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையை நெருக்கடி நிலையின்போது 19 மாதங்கள் சிறையில் இருந்த பாரதிய ஜனதாவின் எல்.கே.அத்வானி பொய்யாக்கி இருக்கிறார். சஞ்சயை ‘பலிகடா’வாக்கி விட்டு காங்கிரஸ் தப்பித்துவிட முடியாது என்று அவர் ’சஞ்சய்க்கு ஆதரவாக’ குரல் கொடுக்கிறார்!

இந்திய அரசியலை ஊன்றிக் கவனித்து வருபவர்களுக்கு இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. சஞ்சய்காந்தியின் மறைவுக்குப் பிறகுதான் இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முதல் அமர்வே நடந்தது என்பது வேறு கதை. ஆனால் பா.ஜ.க.வின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கத்தின் தலைவர்களுக்கும் அந்தக் கட்சியை வழிநடத்தும் கொள்கையை வகுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர்களுக்கும் சஞ்சய் காந்தி மேல் அன்பு இருந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலையின்போது காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் மீதும் ஜனசங்கத்தின் மீதும் அரசு அடக்குமுறையை அவிழ்த்து விட்டதற்குப் பிறகும் சஞ்சய் காந்தி மீது அவர்களுக்கு ஓர் ஈடுபாடு இருக்கிறதென்றால், சஞ்சயின் கொள்கை என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது! இப்போது சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும் மகன் வருண் காந்தியும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள்!

நெருக்கடி நிலை உருவாக காரணமாக இருந்த சூழ்நிலையை இரண்டு பக்கங்களுக்கு விவரிக்கும் அந்த நூல், நெருக்கடி நிலை அத்துமீறல்களை இரண்டு பத்திகளோடு நிறுத்திக் கொள்கிறது என்று அத்வானி குற்றம் சாட்டுகிறார். வரலாற்றைத் திரிக்கும் ஒப்பந்தத்தை யாரும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துவிட முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. நெருக்கடி நிலை அத்துமீறல்கள் குறித்த அந்த இரண்டு பத்திகளில் காங்கிரஸ் என்ன சொல்கிறது?

வழக்கமான அரசியல் நடைமுறைகளும் அடிப்படை உரிமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்; பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. தீவிரமான மதவாத இயக்கங்களும் இடதுசாரி அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. நெருக்கடி நிலை அமலில் இருந்த 19 மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எந்தவிதமான வரம்புகளும் இல்லாத முழுமையான அதிகாரம் பிரதமரிடம் குவிக்கப்பட்டது.

நிர்வாகம் பொதுவாக சிறப்பாக நடந்ததால், பெரும்பாலான மக்கள் ஆரம்பத்தில் நெருக்கடிநிலையை வரவேற்றார்கள். ஆனால் தனிமனித உரிமைகளும் கருத்து சுதந்திரமும் பறிக்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். துரதிருஷ்டவசமாக, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலும் குடிசைகளை ஒழிப்பதிலும் அதீத ஆர்வம் காரணமாக தவறுகள் நடந்தன. அந்த நாட்களில் சஞ்சய் காந்தி மிக முக்கிய தலைவராக வளர்ந்திருந்தார். குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் ஆதரவு முழுமையாக இருந்த்தால், அரசு அதைத் தீவிரமாக செயல்படுத்தத் தீர்மானித்தது. குடிசைகளை ஒழிப்பதிலும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் எழுத்தறிவை வளர்ப்பதிலும் பரவலான பொதுமக்களுடைய கருத்துக்கு எதிராக அவர் தன்னிச்சையாகவும் எதேச்சதிகாரமாகவும் நடந்து கொண்டார்.”

முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் ஜனநாயக விரோத செயல்கள் அனைத்தும் மிகவும் கொடுமையான சர்வாதிகாரியின் ஆட்சியில் நடக்கக் கூடியவை. அவை அனைத்துக்கும் சஞ்சய் காந்தியை மட்டுமே பொறுப்பாக்கி காங்கிரஸ் நழுவிவிட முடியாது. அதேசமயம் நிர்வாகத்தின் எந்தப் பதவியிலும் இல்லாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான அதிகார அமைப்பாக சஞ்சய் காந்தி இருந்தார் என்பதை அத்வானி மறைத்து விடவும் முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களும் வரலாறு உட்பட எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்ளவே முயல்கிறார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, January 07, 2011

அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!

“அவர்களை அப்படிச் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள்” என்று ஒருவர் இன்னொருவருக்கு கடிதம் எழுதினார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுடைய பெற்றோரைக் கூப்பிட்டு ஆசிரியர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கல்லூரிகளில் வரம்பு மீறும் மாணவர்களைப் பற்றி பேராசிரியர்கள் முதல்வரிடம் புகார்களைத் தெரிவிப்பதுண்டு; அலுவலகங்களிலும் மேலதிகாரிகளிடம் இப்படிப்பட்ட கோரிக்கைகளை சிலர் முன்வைப்பதுண்டு; ஆனால் இந்தக் கடிதம் அப்படி சாதாரண மனிதர்கள் சம்பந்தப்பட்டது அல்ல; மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு எழுதிய கடிதம். அவர்கள் நன்னெறிக் கோட்பாடுகளை மீறுகிறார்கள் என்றும் அவர்களை முறையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கோருகிறார். அவர் குறிப்பிடும் ‘அவர்கள்’ யார்? நம்முடைய மாண்புமிகு மக்களவை உறுப்பினர்களைத் தான்! அப்படி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர் அவர்கள் மேல் புகார் செய்கிறார்?

நம்முடைய எம்.பி.க்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை நேரில் சந்திக்கிறார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு அல்லது அவர்கள் தொடர்பான கம்பெனிகளுக்கு ஆதரவாக சில அனுமதிகளை அவரிடம் கோருகிறார்கள்; அதன் பிறகு அந்தத் துறை அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுக்கிறார்கள்; இது முதல் வகை; அதாவது அவர்களுடைய சொந்த விஷயங்களை செய்து முடிப்பதற்கு மக்கள் அவர்களுக்குக் கொடுத்த பதவியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த அணுகுமுறை எம்.பி.க்களின் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. இந்தப் போக்கை அனுமதிக்க முடியாது. இதைக் கட்டுப்படுத்த நான் முயல்கிறேன்; ஆனால் முழுமையாக அதில் நான் வெற்றி பெற்றதாக சொல்ல முடியாது” என்று ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார்.

அடுத்த வகை எம்.பி.க்கள் அவர்களுக்காக பேச மாட்டார்கள். அவர்களுடைய மாநிலத்துக்காகவோ அல்லது தொகுதிக்காகவோ வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்களின் திட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அமைச்சகத்துக்கு வந்து பேசுவார்கள். மனு கொடுப்பார்கள்; சில சமயங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக அந்த மனுவில் கையெழுத்து போட்டிருப்பார்கள். இந்த வகை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜெயராம் ரமேஷ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மூன்றாவது வகை எம்.பி.க்கள் அவர்களுடைய தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டத்துக்காகவோ, அல்லது மாநிலத்தின் திட்டங்களுக்காகவோ அமைச்சரை அணுகுவார்கள். “இந்த வகை எம்.பி.க்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; இவர்களை பார்த்து பேசுவதில் எனக்கு சிரமங்கள் எதுவும் இல்லை” என்பது அந்த அமைச்சரின் கருத்து.

மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கும் ஓர் அமைச்சரே மக்களவைத் தலைவருக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால் நம்முடைய பிரதிநிதிகள் எந்த அளவுக்கு அமைச்சரகத்துக்குள் படை எடுத்திருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அது சரி, சென்னை எம்.பி.க்கள் யாரேனும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவின் அனுமதிக்காக ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார்களா? சுற்றுச் சூழல் அமைச்சரகத்தின் அனுமதி கிடைக்காததால், பிரதமர் மன்மோகன்சிங் அந்தப் பூங்காவைத் திறந்து வைக்க இயலாமல் போய்விட்டதாக தமிழக அரசு சொல்லியதே, ஏன் ஜெயராம் ரமேஷ் அந்தப் பூங்காவுக்கு அனுமதி கொடுக்கவில்லை? அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதில் ஏதேனும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் இருக்கின்றனவா அல்லது அரசியல் சூழல்தான் பிரதமருடைய நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்ததா என்று புரியவில்லை.

ஒரிசா மாநிலத்தில் நியாம்கிரி மலைப்பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத்துக்கு தடையில்லா சான்றிதழ் கொடுக்க மறுத்த நாள் முதல் ஜெயராம் ரமேஷ் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மரியாதை அதிகரித்தது. அதேசமயம், அமைச்சரவை சகாக்கள் சிலர் பகிரங்கமாக அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதையும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடுவதையும் அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தியும் முழங்கினார். ராகுல், ஜெயராம் ரமேஷ், திக்விஜய்சிங், மணிசங்கர் அய்யர் என்று சில தலைவர்கள் நம்பிக்கை அளிப்பதாக சில ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்பட்டதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயராம் ரமேஷ் சில நடவடிக்கைகளை உறுதியாக எடுத்தார். நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு சில இடங்களில் அனுமதி கொடுக்கவே முடியாது என்றும் வேறு சில இடங்களில் அனுமதிக்கலாம் என்றும் அவர் வரையறை செய்தார். இதற்கு நம்முடைய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்தார்.

”நிலக்கரி வளமாக இருக்கும் இடங்களில் 30 சதவீத இடங்களில் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொன்னால், என்ன பொருள்? எட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் நம்முடைய வளர்ச்சி விகித இலக்கை நாம் குறைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த முடிவின் விளைவுகளை ஜெயராம் ரமேஷ் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என்று மாண்டெக் சிங் அலுவாலியா ஓர் நாளிதழுக்கு பேட்டி கொடுத்தார். அதற்கு முன்னதாகவோ அல்லது பிறகோ வேறு யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பே இல்லை என்று ஜெயராம் ரமேஷ் அதிரடியாகப் பேசி இருக்கிறார்.

இந்த அணுமின்நிலையம் கட்டப்பட இருக்கும் இடம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் எனப்படும் டாடா சமூக அறிவியல் கழகம் அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்தப் பகுதி பாதுகாப்பான பகுதிதான் என்று தேசிய அணுமின் கழகம் சொல்கிறது. 930 கோடி ரூபாய் செலவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரிவா என்ற நிறுவனம் இங்கு இரு அணு உலைகளை அமைக்கும் என்று சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்த்த்தின்படி அணு உலைகளை அமைப்பதற்காக ஐந்து கிராமங்களில் 968 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அங்கு வாழும் மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலங்களை விற்பதற்கு கூடுதல் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆசை காட்டுகிறார். எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் நிலங்களைத் தரமாட்டோம் என்று மக்கள் உறுதியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னொரு ’நந்திகிராம்’ உருவாகிவிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன.

ஆனால் ஜெயராம் ரமேஷ் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாக இல்லை. அணுமின்நிலையத்துக்குக் கொடுத்த அனுமதியை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். “என்னுடைய முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் 120 கோடி மக்களின் மின்சார தேவைகளை நிறைவேற்ற சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகள் மூலம் மட்டும் முடியாது. அணுமின் நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஜெயராம் ரமேஷ் பேசி இருக்கிறார். அதே வார்த்தைகள்.. அதே வாதம்.. மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியாவுக்கு பதிலாக இப்போது ஜெயராம் ரமேஷ்! அவருடைய ’சுற்றுச்’ சூழலும் மாசு படிந்து கிடக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Sunday, January 02, 2011

சேவைக்குச் சிறை!

அவரைக் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு சொல்லும் என்பது எதிர்பார்த்ததுதான்; ஆனால் அவருக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கடந்த காலத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு அந்த டாக்டரை நடத்திய முறையையும் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்குவதற்கு இரண்டு வருடங்கள் போராடினார் என்பதையும் மறக்காதவர்கள் எல்லோருக்கும் இந்த மனநிலையே இருக்கும். சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றம் ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிய ‘ராஜ துரோக’ குற்றத்துக்காக டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தண்டனை அளிக்கப்பட்ட நாள் கடந்த டிசம்பர் 24-ம் தேதி. அதாவது மக்கள் மீது அன்பு கொண்டு ஆளுவோரை எதிர்த்த ‘தேவ குமாரன்’ இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக்கு முந்தைய நாள்! தமிழ்ச் சூழலில் சொல்வதாக இருந்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சுய மரியாதையைக் கற்றுத் தந்த பெரியார் மறைந்த நாள்!

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) ஆதரவாளர் என்ற முத்திரையை டாக்டர் பினாயக் சென் மீது குத்துவதில் ஏற்கனவே சத்தீஸ்கர் மாநில அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ‘தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பேன்’ என்று அவர் எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை; மாறாக, பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் ‘வன்செயல்களைக்’ கண்டித்துப் பேசி இருக்கிறார். அவருடைய செயல்பாடு பெரும்பாலும் காந்தியின் வழியிலேயே இருக்கிறது. ஆனாலும் அவர் மீது அந்த அரசு ‘வன்முறையாளன்’ முத்திரையைப் பதிக்கத் துடித்தது. ஏன்? அவர் அரசின் சட்டவிரோதமான வன்செயல்களை எதிர்த்தார். மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக மாநில அரசு உருவாக்கிய ‘சல்வா ஜூடும்’ என்ற அடியாள் படைக்கு அரசாங்கமே ஆயுதங்களைக் கொடுப்பதைக் கண்டித்தார். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கொடுப்பதாக யாரை எல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை எல்லாம் அந்தப் படையினர் கொன்றார்கள்; அவர்களுடைய குடிசைகளைக் கொளுத்தினார்கள். மாவோயிஸ்டுகளின் வன்முறையைக் கண்டித்த டாக்டர் பினாயக் சென் இந்த வன்முறை வெறியாட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் பொறுப்பில் இருந்த டாக்டர் பினாயக் சென், மாநில அரசின் அத்துமீறல்களை ‘உண்மை கண்டறியும் குழுக்கள்’ மூலமாக அம்பலப்படுத்தினார். மாநில அரசாங்கத்தால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உலகப் புகழ் பெற்ற வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரான பினாயக் சென் என்ன செய்திருக்க வேண்டும்? வணிகமயமான கார்ப்பொரெட் மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் மருத்துவ ஆலோசகராக இருந்திருக்கலாம்; டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்த பின்னணியில் இருந்து அப்படியே அமெரிக்காவுக்குப் போய் ‘செட்டில்’ ஆகி இருக்கலாம். பாவம்! பிழைக்கத் தெரியாத டாக்டர்! முப்பது வருடங்களுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்கிறார்! அவர்களுடைய சுகாதார வசதிகளை அதிகமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டே இலவச சிகிச்சை மையங்களையும் உருவாக்கி வருகிறார். சரி, அவருக்குத் தான் ஏதோ கோளாறு.. இப்படி எல்லாம் ஏழை எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.. அவருடைய மனைவியும் குழந்தைகளும் இதே மாதிரி மக்களுடன் மக்களாக கலந்து வாழ்கிறார்களே! இதை எப்படி அனுமதிக்க முடியும்?

இப்படிப்பட்டவர்களை சமூகத்தில் நடமாட விடலாமா? சினிமாக்காரன் சினிமா எடுக்க வேண்டும்; டாக்டருக்குப் படிச்சவன் பெரிய கிளினிக் கட்ட வேண்டும்; இதற்கு மாறாக அவர்களுக்கு மக்கள் மேலே அக்கறை எல்லாம் எதற்கு? அப்படி அக்கறை காட்டினால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதான்! சரி, அப்படி என்றால், யாரெல்லாம் நம்முடைய சமூகத்தில் மதிப்புடனும் மரியாதையுடனும் வீதி வலம் வரலாம்? அதிகாரத்தில் இருக்கும் சிலர் ஒருவேளை சில வரையறைகளை வகுத்திருக்கலாம்; “கொலை செய்தாயா? கொள்ளை அடித்தாயா? வீதியில் விளையாடும் சின்னப் பெண்களைக் கடத்தி வல்லுறவு கொண்டாயா? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே! விளையாட்டுப் போட்டிகளில் கோடிகளைச் சுருட்டத் தெரியுமா உனக்கு? அல்லது வீட்டு வசதி சங்கத்தில் தான் வேண்டியவர்களுக்கு வீடுகளை ஒதுக்கத் தெரியுமா? யாருக்கு எதை ஒதுக்கினாலும் உன் பையை நிரப்பிக் கொண்டு அரசாங்கத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தத் தெரியாத உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் எதுக்கடா மதிப்பும் மரியாதையும்?” என்று ஒருவேளை அவர்கள் நம்மைப் பார்த்து கேட்கக் கூடும்!

பொதுமக்கள் மத்தியில் மருத்துவ சேவையை சிறப்பாக செய்வதாலேயே ஒருவர் என்ன செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா என்று நம்மில் சிலருக்கு கேள்வி எழலாம். “துணை ராணுவப் படையினரையும் அப்பாவி ஆதிவாசிகளையும் பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் ஏராளமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதன் மூலம் சமூகத்தில் அச்சமும் பயங்கரவாதமும் பரவுகிறது; ஒழுங்கின்மையும் அமைதியின்மையும் ஏற்படுகிறது; அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியாது” என்று அந்த நீதிபதி சொல்கிறார். சத்தீஸ்கர் விசாரணை நீதிமன்றத்தில் அந்த நீதிபதியிடம் பெருந்தன்மையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக அரசு தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளத் தக்கவையா என்று அவர் பார்த்தால் மட்டுமே போதும்!

ஆனால் என்ன நடந்திருக்கிறது? சிறையில் இருந்த மாவோயிஸ்ட்டான நாராயண் சன்யால் என்பவரை 35 நாட்களில் 33 தடவை டாக்டர் பினாயக் சென் காவலர்கள் முன்னிலையில் சந்தித்தார். இந்த சந்திப்புகளில் கடிதப் பரிமாற்றம் எதுவும் நிகழவில்லை என்று காவலர்கள் சாட்சி அளித்திருக்கிறார்கள். ஆனால் நாராயண் சன்யாலிடம் இருந்து கடிதங்களை வெளியில் இருக்கும் மாவோயிஸ்டுகளிடம் கொண்டு சேர்க்கும் ‘கூரியராக’ பினாயக் சென் இருந்தார் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. பினாயக் சென்னின் வீட்டில் சோதனை செய்யும்போது கிடைத்த ஆவணங்களில் எல்லாம் பினாயக் சென்னின் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஆனாலும் கையெழுத்து இல்லாத ஒரு கடிதத்தை அங்கிருந்து எடுத்ததாக சொல்லி நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்தது. “நீங்கள் செய்து வரும் சேவை மகத்தானது; அதற்காக உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள்” என்று தட்டெச்சு செய்யப்பட்ட அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார்கள் என்று எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அது மாவோயிஸ்டுகள் டாக்டர் பினாயக் சென்னுக்கு அனுப்பிய கடிதம் என்று அரசு சொல்வதை கோர்ட் ஏற்கிறது!

இன்னொரு ஆதாரம் வேடிக்கையானது; ஐ.எஸ்.ஐ.க்கு பினாயக் சென்னின் மனைவி டாக்டர் இலினா சென் அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல். இப்படி மொட்டையாக சொல்லும்போது நமக்கும் ‘பகீர்’ என்கிறது. ஆனால் இந்த ஐ.எஸ்.ஐ. என்பது இந்தியன் சோஷியல் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பே தவிர, பாகிஸ்தானின் உளவு அமைப்பு அல்ல என்ற உண்மை தெரிந்தவுடன் நீதி முறையையே சத்தீஸ்கர் போலீஸ் ‘கிண்டல்’ செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ”வெள்ளைமாளிகையில் உட்கார்ந்திருக்கும் சிம்பன்ஸி” என்ற வார்த்தைகள் பயங்கரவாதிகளுக்கு இடையில் சங்கேத மொழியாக இருக்கலாம் என்கிறது காவல்துறை!

பினாயக்சென்னுக்கு மேல் முறையீட்டில் விடுதலை கிடைக்கும் என்று தான் இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. பினாயக் சென் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய உத்தமர் காந்தியும் அரசுக்கு எதிரான கலகம், ராஜ துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் நாம் அவரை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம். நம் நினைவில் இப்போது இருப்பதெல்லாம் ராகுல் காந்தி மட்டும்தான் என்றால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

கண்களில் என்ன ஈரமோ?

அந்த நண்பர் அப்படி எரிச்சலான வார்த்தைகளை அந்தக் கடைக்காரரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சாதாரணமான வார்த்தைகள் தான் என்றாலும் கடைக்கார்ரின் குரலில் வெளிப்பட்ட எரிச்சல் அந்த நண்பரைப் பாதித்தது.

“ஏன் இவ்வளவு கோபப்படறீங்க?” என்று கடைக்காரரிடம் கேட்டார்.

“நீங்க செய்த வேலைக்கு கோபம் தான் வரணும். ஆனா நான் கோபப்படவில்லை. உங்களை ஜாக்கிரதையா எடுத்துப் போடுங்கன்னு தானே சொன்னேன்,” பழைய வாடிக்கையாளரை இழந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இப்போது கடைக்காரரிடம் தெரிந்தது. இரண்டு நாட்களாக எல்லா செய்திகளிலும் அடிபடும் வெங்காயத்தை கைதவறி தரையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் போட்டுவிட்ட ‘தப்பு’ இப்போது அந்த நண்பருக்கு உறைத்தது.

ஆம். சில நாட்களாக வெங்காயம் மீண்டும் ஊடகங்களில் முக்கிய செய்தியானது. ”மாமூல் வேணும்னா எவ்வளவுன்னு சொல்லிட்டு வாங்கிட்டுப் போயிடுங்க. அதைவிட்டுட்டு அரை கிலோ வெங்காயம் போடுன்னு கேட்காதீங்க” என்ற ரீதியில் ஒரு நாளிதழில் கார்ட்டூன் வந்தது. தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்கினால்தான் கடைக்குப் போய் காய்கறி வாங்க முடியும் போலிருக்கிறது என்று ஒருவர் நக்கலாக சொன்னதாக ஒரு செய்தியையும் படிக்க நேர்ந்தது. ஆப்பிள் பழத்துக்கு இணையாக வெங்காயத்தின் விலை ஏறிவிட்டதாக இன்னொரு செய்தி. பெரிய அளவில் மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு பற்றி மறுபடியும் ஊடகங்களில் தீவிரமாக விவாதம் நடக்கிறது.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை திடீரென்று தொண்ணூறு ரூபாய் முதல் 100 ரூபாய் என்றானது. பழைய சோறு, வெங்காயம் என்று சாப்பிடும் எளிய குடும்பங்களில் இருந்து வெங்காய சாம்பார், வெங்காய சட்னி என்று உணவில் சேர்த்துக் கொள்ளும் நடுத்தர மக்கள் வரை வெங்காயம் ஒரு முக்கிய பொருளாகவே இருக்கிறது. தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு; டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால்தானோ என்னவோ அவர்களும் சரி, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் சரி, இந்த விலை உயர்வை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கிறார்கள்!

பிற நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடைவிதித்தும், வெங்காய இறக்குமதிக்கு வரி குறைத்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனால் அதிகரித்த விலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி, பூண்டு ஆகிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் போதெல்லாம் நாம் என்ன நினைக்கிறோம்? அல்லது நாம் என்ன சொல்லப்படுகிறோம்? ”பலத்த மழை காரணமாக பொருட்கள் நாசமாகி விட்டன அல்லது கடுமையான வறட்சியால் உணவு உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது. அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் விளைவாக பொருட்களின் விலை ஏறுவதில்லை” என்று மீண்டும் மீண்டும் போதிக்கப்படுகிறோம். அதாவது விலைவாசி உயர்வுக்கு நிர்வாக ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கையான நிகழ்வுகளே இதற்குக் காரணம் என்று நாம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம். இந்திய உணவுப் பொருட்களின் உற்பத்தி காலம் காலமாக இயற்கையை நம்பியே இருக்கிறது. வறட்சிக்காலத்திலோ அல்லது கனமழைக்காலத்திலோ எப்படி சமாளிப்பது என்ற தொலைநோக்கு அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது போலிருக்கிறது.

“உங்கள் கஷ்டங்களை எல்லாம் இங்கு இறக்கி வையுங்கள். கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்” என்று மத போதகர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்போது ராகுல் காந்தியும் அதைப் போலவே பேசுகிறார். “ விலைவாசி உயர்வை பிரதமர் மன்மோகன்சிங் கட்டுப்படுத்துவார். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்” என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசும்போது ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, நாம் எல்லோருமே அப்படி யாராவது ஒரு பிரதமர் நம்மைப் பாதிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் என்று நம்பவே விரும்புகிறோம். ஆனால் வேறு என்னென்னவோ நம்முடைய நினைவுக்கு வந்து அந்த நம்பிக்கை நம்முள் வேர்விடாமல் கலைத்துப் போடுகிறது.

அடுத்தடுத்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையால், ஓரளவு நியாயமான சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பங்கள் கூட திண்டாடுகின்றன. 1993-94 முதல் 2004-05 வரையிலான அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட அர்ஜூன்சென் குப்தா அறிக்கை என்ன சொன்னது? 83.6 கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான உணவையே உட்கொள்ளுகிறார்கள். அதற்குப் பிந்தைய சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் அறிக்கை என்ன சொன்னது? கிராமப்புறங்களில் 41.8 விழுக்காட்டினரும் நகர்ப்புறங்களில் 25.7 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வறுமைக் கோட்டுக்கான வரையறை என்ன? அந்த வரையறை சரிதானா, நியாயமானதா என்ற விவாதத்துக்குள் நாம் இப்போது போக வேண்டாம். அந்தக் கோடு என்ன என்பதை மட்டும் பார்க்கலாம்.

கிராமப்புறங்களில் ஒரு மாதத்துக்கு 446.68 ரூபாயும் நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு 578.80 ரூபாயும் ஒரு நபரால் செலவழிக்க முடிந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்கள். அந்த அளவு கூட செலவு செய்ய இயலாதவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். டெண்டுல்கர் கமிட்டியின் கணக்குப்படி பார்த்தாலும், கிராமப்புறங்களில் ஏறத்தாழ 40 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ஒரு நாளைக்கு 15 ரூபாய் கூட செலவழிக்க முடியாத நிலைமையில் இருக்கிறார்கள். இவர்களும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் என்று காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள்தான்! அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் வர்த்தகத்துக்கும் தொழில்துறைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கு வறுமை ஒழிப்புக்காக கொடுத்திருந்தால், இன்று நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சரத்பவார்தான் நம்முடைய நாட்டின் உணவு மற்றும் விவசாயத்துறையின் அமைச்சராக இருக்கிறார். அதிக விக்கெட் எடுப்பவர்களையும் அதிக ரன் எடுப்பவர்களையும் நல்ல ஆட்டக்காரர்கள் என்று கிரிக்கெட்டில் சொல்வார்கள்; அதைப் போல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலோ, உணவுப் பொருட்களின் விலை அதிகமானாலோ, உணவு அமைச்சர் நன்றாக நிர்வாகம் செய்கிறார் என்று பாராட்டுவார்கள் என்று அவர் நினைக்கிறாரா தெரியவில்லை. அதனால் தான் ராகுல் காந்தி சரத்பவார் மீது நம்பிக்கை வையுங்கள் என்று நம்மைக் கோரவில்லை; பிரதமர் மன்மோகன்சிங் மீது நம்புக்கை கொள்ளுங்கள் என்கிறார்!

88 நாடுகளில் 66-வது இடத்தில் இந்தியா இருப்பதாக 2008-ல் குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் எனப்படும் உலக பட்டினிக் குறியீடு தகவல் தந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் 2010-ல் அதே குறியீடு 84 நாடுகளில் இந்தியாவுக்கு 67-வது இடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்! இன்னும் நிலைமைகள் மோசமாவது போலத்தான் தெரிகிறது. பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்கிறது; டீசலும் சமையல் எரிவாயுவும் விலை கூட்டப்படும் என்று எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய சட்டைப் பையில் இருந்து நமக்குத் தெரியாமல் நமக்குச் சொந்தமானவற்றை எடுப்பதற்குக் ‘கை’கள் நீளுகின்றன. அதை நாம் அறியாமல் இருப்பதற்கான ‘மயக்க பிஸ்கட்’டாக ராகுல் காந்தி இருக்கிறார்!