Saturday, July 31, 2010

நிமிர்ந்து நில்லுங்கள்!

”அமெரிக்காவின் போர்களுக்கு எதிராக அமெரிக்க குடியுரிமையை துறந்த ஜெஃப் நேபல் பற்றி ரிப்போர்ட்டரின் எரிதழல் பகுதியில் எழுதி இருந்தீர்கள். அவரைப் பற்றி நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற அபூர்வமான மனிதர்கள் குறித்து அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு நண்பர் என்னிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் தவிர இன்னும் சிலர் தொலைபேசியில் அழைத்து இதே மாதிரியான கருத்துக்களை சொன்னார்கள். ஓர் இதழின் வாசகர்களில் எல்லோரும் இப்படியே இருக்க மாட்டார்கள் என்ற உண்மையும் புரிகிறது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நடத்தும் அறிக்கைப் போர்களை அக்குவேறு ஆணி வேறாக ஏதாவது பத்திரிகையில் யாராவது பிரித்து மேய்ந்தால், அதைப் படிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. எதிர்மறையான செய்திகள் மட்டுமே வாசகர்களையோ பார்வையாளர்களையோ ஈர்க்கும் என்ற பொதுவான புரிதலுக்கு எதிராக ஒரு புது தலைமுறை உருவாகி வருவதையும் பார்க்க முடிகிறது!

உலகத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் இயல்பாக மனிதர்களுக்குள் இருக்கிறது. அவரவர்களுடைய வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த தாகத்தைத் தீர்ப்பதற்கு அவர்கள் முயல்கிறார்கள். அவர்களுடைய அந்தத் தேவையை நிறைவேற்றுவதே ஊடகங்களின் வேலை. கிசுகிசுக்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்திக் கொடுப்பதுதான் இதழியல் என்று சிலர் ஊடகங்களை விமர்சனம் இருக்கிறார்கள்; நிச்சயம் அப்படி இல்லை என்றும் பத்திரிகை என்பது ஒரு நடமாடும் வரலாறு என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்த இருவகை மக்களையும் உள்ளடக்கிய அனைவருக்குமான உள்ளடக்கத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது.

அந்தக் கடமையை ஊடகங்கள் எப்படி செய்து முடிக்கின்றன? அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களே அந்தப் பணியை செய்து முடிக்கிறார்கள். அந்த வேலையில் சிலசமயம் பூக்கள் தூவி வரவேற்கப்படலாம்; அல்லது ரத்தம் சொட்டச் சொட்ட கல்லடி கிடைக்கலாம். கடந்த ஜூலை 12-ம் நாள் உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி நமக்கு சில செய்திகளை உணர்த்துகிறது. அன்று விஜய் பிரதாப் சிங் என்ற பத்திரிகையாளர் தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக அலகாபாத் நகரில் ஓர் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார். நன்றாக கவனியுங்கள். அடர்ந்த காட்டுக்குள் அருந்ததி ராயைப் போல அவர் போகவில்லை. சர்வதேச எல்லையைக் கடந்து கடல் வழியாக பக்கத்து நாட்டுக்கு அவர் செல்லவில்லை. அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் வீட்டுக்கு அவர் போயிருந்தார். அந்த வேலையில் என்ன அபாயம் இருக்கிறது? ஆனால் அவருடைய உயிருக்கு அங்கு வெடித்த குண்டு மூலம் ஆபத்து வந்தது. அமைச்சரைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், அவரைப் பார்க்கப் போயிருந்த பத்திரிகையாளர் விஜய் பிரதாப் சிங் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் ஒன்பது நாட்கள் உயிருக்குப் போராடினார். கடைசியில் கடந்த ஜூலை 21-ம் தேதி இறந்து போனார்.

அவர் ஏற்கனவே கன்சியாம் கேவத் என்ற கொள்ளையனுக்கும் 400 காவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையை நேரடியாகப் பார்த்து எழுதி இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் ஜான்பூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய நீதிக் கட்சி வேட்பாளர் பகதூர் சோங்கர் மர்மமான முறையில் இறந்து போனார். அந்த சாவு எப்படி நடந்த்து என்று அவர் புலனாய்வு செய்திருந்தார். போர்ட்டர் வேலைக்கு சேரும் பெண்களுக்கு விநோதமான சோதனை நடத்தப்படுவதை அம்பலப்படுத்தி சர்ச்சையாக்கினார். கொள்ளையனுக்கும் போலீசுக்கும் நடந்த மோதல் நடந்த இடத்தில் அவருடைய உடலில் குண்டு பாய்ந்து அவர் செத்துப் போயிருந்தால் அதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.

அரசின் தூதுவராக இல்லாமல் சந்தனக் கடத்தல் வீரப்பனின் பேட்டிக்காக ரகசியமாக காட்டுக்குள் போகும்போது ஒரு பத்திரிகையாளருக்கு அதிரடிப்படையால் ஏதேனும் நேர்ந்திருந்தால் அந்த அபாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். விடுதலைப் புலிகளை சந்திப்பதற்காக படகில் போய்க் கொண்டிருக்கும்போது ஓர் இதழாளன் நடுக்கடலில் சிங்களப் படையினராலோ அல்லது இந்தியக் கப்பல் படையாலோ சுட்டுக் கொல்லப்பட்டால், மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். அது போன்ற பணிகளுக்குச் செல்லும் பத்திரிகையாளர்களும் நமக்கு ஏதேனும் நேரக் கூடும் என்ற புரிதலோடுதான் அந்த வேலைகளில் இறங்குவார்கள். ஆனால் பாதுகாப்பு நிறைந்த அமைச்சர் வீட்டில் இப்படி ஒரு கோர முடிவு ஏற்படும் என்று எந்தப் பத்திரிகையாளர் எதிர்பார்க்க முடியும்?

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விஜய் பிரதாப் சிங்கின் உயிர்த் தியாகத்தை மதித்துப் பேசி இருக்கிறார். அண்மையில் ராம்நாத் கோயங்கா விருதுகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி அவர் பேசினார். அப்போது விஜய் பிரதாப் சிங்கைப் பாராட்டி இருக்கிறார். அதேசமயம் ஊடகங்களை அவர் எச்சரித்தும் இருக்கிறார். ”இரண்டு முக்கிய சவால்களை ஊடகங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன; செய்திப் பஞ்சம், ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குதல் ஆகிய இரண்டில் இருந்தும் ஊடகங்கள் விடுபட வேண்டும்,” என்று அவர் சொல்லி இருக்கிறார். ஆம்! முந்தைய நாள் தொலைக்காட்சி செய்திகளில் வந்ததை விட விரிவாக செய்திகளை அடுத்த நாள் வரும் நாளிதழ்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. செய்தித் தாள்களில் வரும் செய்திகளில் இல்லாத பின்னணியையும் வேறு பரிமாணங்களையும் வாரம் இருமுறை வரும் இதழ்களும் வார இதழ்களும் தர வேண்டியிருக்கிறது. 24 மணிநேர செய்தி சேனல்களோ தொடர்ந்து 24 மணிநேரமும் ஏதாவது புதிய செய்திகளைக் கொடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன!

இந்த நெருக்கடிகள் காரணமாகவே சில ஊடகங்கள் ‘ஸ்டிங்க்’ நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சமூகத்தில் நடக்கும் தீமைகளை, அந்தத் தீமைகளுக்கு காரணமாக இருக்கும் மனிதர்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்ற சமூக நோக்கம் அந்த நடவடிக்கைகளில் இல்லாமல் இருக்கலாம். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற வியாபார நோக்கம் மட்டுமே அவர்களை உந்தித் தள்ளி இருக்கலாம். ஆனால் அவர்களுடைய வியாபார நலனிலும் ஒரு பொதுநலன் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ’குளத்தில் வாழும் மீன்கள் அழுக்கைத் தின்று நீரை சுத்தப்படுத்துகின்றன; அந்த மீன்களின் சுயநலத்தில் ஒரு பொதுநலனும் இருக்கிறது’ என்ற பிரபலமான வசனத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்!

ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று முண்டாசு கட்டி விடுகிறார்கள். அந்த நம்பிக்கையில் செயல்பட்ட சில ஊடகங்கள் மிக மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருக்கின்றன. ராணுவத்தில் நடக்கும் ஆயுத பேரங்களை அம்பலப்படுத்திய தெஹல்கா இதழின் பொருளாதார பின்புலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் சிதைக்கப்பட்டது. ஆந்திராவில் ‘ஈ நாடு’ ஊடகங்களை நடத்தும் ராமோஜிராவ் அரசாங்கத்தின் தொல்லைகளுக்கு உள்ளானார். ’தீய சக்திகளை வெட்கத்தில் தலைகுனியச் செய்வதற்காக உண்மையை சொல்ல வேண்டும் என்பதை விட வேறு உயர்ந்த சட்டம் இதழியலில் இல்லை’ என்று சொல்வார்கள். அதை நம்பிச் செயல்படுகின்ற நிறுவனங்களும் தனிமனிதர்களும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள்.

பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு என்று ஒரு சர்வதேச அமைப்பு இருக்கிறது. அது தரும் தகவலின் அடிப்படையில் பார்த்தால் 2010-ம் ஆண்டு மட்டும் இதுவரை உலக அளவில் 18 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1992 முதல் 819 இதழாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 454 ஊடகவியலாளர்கள் அரசின் அடக்குமுறை காரணமாக வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் கார்ட்டூனிஸ்டு ‘காணாமல்’ போவதும் அடிக்கடி செய்திகளாகின்றன. திசநாயகம் கைது செய்யப்பட்டு சர்வதேச அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமசிங்கே கொலை செய்யப்பட்டார். கார்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகோடா ’காணாமல்’ போனார். இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் எத்தனை சம்பவங்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை!

பத்திரிகையாளர்களுக்கு எதிரான பயங்கர நாடுகள் என்று இருபது நாடுகளை அந்த அமைப்பு பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் முதலிடத்தில் இராக் இருக்கிறது. ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. 13 வது இடத்தில் இலங்கை இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அந்தப் பட்டியல் நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்தியாவின் பெயரும் இருக்கிறது, எட்டாவது இடத்தில்! அதாவது பாகிஸ்தானை விட பரவாயில்லை என்று இந்தியர்கள் பெருமைப்படலாம். இலங்கையை விடவா இந்தியா மோசம் என்று தமிழர்கள் ஆச்சர்யப்படலாம்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களை செய்தவர்களில் 89 சதவீதம் பேர் எந்தத் தண்டனையும் பெறவில்லை. பலியானவர்களில் 57 சதவீதம் அச்சு ஊடகத்திலும் 26 சதவீதம் காட்சி ஊடகத்திலும் வேலை செய்தவர்கள். போரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கப் போய் போர்க்களத்தில் இறந்தவர்கள் 35 விழுக்காடு; அரசியல் களத்தில் 38 சதவீதமும் ஊழலை அம்பலப்படுத்திய வகையில் 21 சதவீதமும் உயிர் இழந்திருக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த பிறகும் சில ஊடகங்கள் உண்மையைச் சொல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அரசிடம் இருந்து விளம்பர வருமானம் இல்லை என்றாலும் கவலைப்படாமல் ‘கருமமே கண்ணாக’ இருக்கின்றன. லாபத்திற்காகத்தான் ஒரு தொழிலை ஒரு நிறுவனம் நடத்துகிறது என்றாலும் சாராயத்தில் கிடைக்கும் லாபம் ஊடகங்களில் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்! ’நீக்குப் போக்காக’ நடந்து கொண்டே சில நல்ல பணிகளையும் பல ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே இங்கும் சில தவறுகள் நடக்கின்றன. ‘கவர்’ ஸ்டோரிகளும், ஆதாரம் இல்லாத அவதூறுகளும் ஊடகங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கின்றன. உயிர் உட்பட பல இழப்புகளுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களின் தியாகத்தை இதுபோன்ற செயல்கள் கேலிக்குரியதாக்குகின்றன. இந்தியப் பிரதமருக்கு ஆட்சிக்காலம் ஐந்து வருடம்; ஆனால் ஊடகங்களின் ஆட்சி நிரந்தரம் என்பது உண்மையாக வேண்டுமானால், ஊடகங்கள் பொறுப்புடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 01.08.2010

Tuesday, July 27, 2010

பயமோ பரிவோ தேவையில்லை!

பார்வையில்லாத ஒருவர் அவருடைய நண்பருடைய வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். சூரியன் மறைந்து இருட்டத் தொடங்கியது. மின்வசதியும் தெரு விளக்குகளும் இல்லாத காலகட்டம் அது. பார்வையில்லாதவர் நண்பரிடம் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவருடைய நண்பர் அவரிடம் ஒரு அரிக்கேன் விளக்கைக் கொடுத்து ‘வீட்டுக்குப் போவதற்கு இந்த விளக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்,’ என்றார். பார்வையில்லாதவரோ, ‘விளக்கு எரிவதால் மட்டும் எனக்குப் பாதை தெரிந்துவிடப் போவதில்லை. இருளும் ஒளியும் எனக்கு ஒன்றுதான். எனவே இந்த விளக்கு எனக்குத் தேவையில்லை,’ என்று பதில் சொன்னார். ஆனால், அவருடைய நண்பர் அவரை விளக்கில்லாமல் வெளியில் போக அனுமதிக்கவில்லை. ‘உங்களுக்கு அந்த விளக்கின் ஒளியால் பயன் இல்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நீங்கள் வருவதை உங்களுக்கு எதிரில் வருபவர்களுக்கு அந்த விளக்கின் ஒளி காட்டும். அவர்கள் உங்கள் மேல் மோதாமல் விலகிப் போவார்கள். அதனால் நீங்கள் அவசியம் விளக்கை எடுத்துக் கொண்டு போக வேண்டும்’ என்றார்.

பார்வையில்லாத நண்பர் கையில் விளக்கை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் கொஞ்ச தூரம் போன நிலையில் வேறொருவர் அவசரமாக வந்து அவரை நிறுத்தினார். ‘இந்த இருட்டுல நீங்க எங்கே போறீங்க,’ என்று புதியவர் கேட்டார். அதற்கு, ‘இருட்டா? நான் தான் கையில் விளக்கு வைத்திருக்கிறேனே! உங்களால் பார்க்க முடியவில்லையா என்ன?’ என்று பார்வையில்லாதவர் பதில் கேள்வி கேட்டார். ‘அன்புள்ள நண்பரே, உங்க விளக்கு எப்பவோ அணைஞ்சு போயிருக்கு. நான் உங்களை முதல்ல பார்த்ததுலேர்ந்து இப்போ வரைக்கும் நீங்க எரியாத ஒரு விளக்கையே தூக்கிப் பிடிச்சிட்டு இருக்கீங்க,’ என்று சொன்னார். எரியும் விளக்கை காற்று அணைப்பது போல நம்முடைய வளர்ச்சித் திட்டங்களை ஊழல் அழிக்கிறது. விளக்கு எரிகிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவர் இருந்ததைப் போலத்தான் நாமும் நம்முடைய ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் பயன் தருகின்றனவா என்று தெரியாமலே வைத்திருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

டெல்லி மாநில லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மூன்று வருடங்களில் எந்தத் துறையினர் மேல் அதிகமான ஊழல் வழக்குகளைப் போட்டிருக்கிறது என்பதே அந்த செய்தி. அதில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் முதலிடத்தையும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். இந்த இரு துறைகளிலும் வேலை பார்க்கும் 300 அதிகாரிகள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் சிக்கியவர்களில் அதிகபட்ச உயர்பதவியில் இருப்பது காவல்துறையின் இன்ஸ்பெக்டர்கள் அல்லது ஆய்வாளர்கள். அதற்கு மேலான பதவிகளில் இருப்பவர்களிடம் ஊழல் இல்லையா என்றோ உயர்பதவிகளில் இருப்பவர்கள் வழக்குகளில் சிக்கிக் கொள்வதில்லையா என்றோ கேட்காதீர்கள். அந்தக் கேள்விகளுக்கான பதில் அந்த செய்தியில் இல்லை!

சின்ன மீன்கள் மட்டுமே வலையில் சிக்குகின்றன; பெரிய பெரிய திமிங்கிலங்கள் எல்லாம் வலையை அறுத்துக் கொண்டு தப்பித்து விடுகின்றன என்று நம்மைப் போன்ற சாதாரண மக்கள் பேசுவார்கள் என்பதை பிரதமர் மன்மோகன்சிங் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் கடந்த 2009 ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த மத்திய புலனாய்வு அமைப்பு, மாநில லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில், ‘பெரிய திமிங்கிலங்களைத் தப்ப விடாதீர்கள்’ என்று பேசி இருக்கிறார். ‘வேகமாகவும் உறுதியாகவும் பயம் இல்லாமலும் யாருக்கும் பரிவு காட்டாமலும் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அதற்கான சட்டப் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறது’ என்று அதிகாரிகளை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சர்வதேச அரங்கங்களில் இந்தியாவுக்கு நல்ல பெயர் கிடைப்பதற்குத் தடையாக லஞ்சமும் ஊழலும் இருக்கின்றன என்பது பிரதமரின் கவலை!

டெல்லியில் மட்டும்தான் ஊழல் இருக்கிறதா என்ற கேள்வி இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். பானையில் இருக்கும் சோறு நன்றாக வெந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஒரு சோறை எடுத்துப் பதம் பார்ப்பதைப் போல, டெல்லி மாநிலம் குறித்த தகவல் இருக்கிறது. வேறு மாநிலங்களின் நிலையைப் பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் சில வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு முதல் இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் வரை எல்லா பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்திருக்கின்றன. ராணுவத்துக்கு வாங்கப்பட்ட ஜீப்கள் தரமானதாக இல்லை என்பதால், பிரிட்டனில் தூதராக இருந்த கிருஷ்ணமேனன் பதவி விலக நேர்ந்தது. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்துடன் இருந்த நெருக்கம் காரணமாக சுரங்கத்துறை அமைச்சர் கே.டி.மாளவியா பதவியை இழந்திருக்கிறார். ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முதலீடு குறித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது புகார் செய்யப்பட்டது.

பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் ஊழல் புகார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. கர்நாடகத்தில் குண்டுராவ், ஒரிசாவில் ஜே.பி.பட்நாயக், பீகாரில் ஜெகனாத் மிஸ்ரா, மகாராஷ்டிராவில் ஏ.ஆர்.அந்துலே, மத்திய பிரதேசத்தில் அர்ஜூன்சிங் என்று இந்திராவின் தளபதிகள் பலர் மீது ஊழல் புகார்கள் இருந்தன. போபர்ஸ் பீரங்கி ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் என்று ராஜீவ் காந்தியின் ஆட்சியிலும் சர்ச்சைகள் தொடர்ந்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பதற்காக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததில் இருந்து நரசிம்மராவ் ஆட்சியின் அடிப்படை நமக்குப் புரியும். ஹவாலா ஊழலும் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை மோசடிகளும் உர ஊழலும் அவர் நிர்வாகத்தின் சில எடுத்துக்காட்டுகள். பாஜக தலைமையிலான ஆட்சியிலும் சவப்பெட்டி ஊழல், கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை வாங்கியது என்று பல செய்திகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். மாட்டுத் தீவனம், தாஜ் வளாகம், மதுகோடா, லாவ்லின் என்று குறுநில மன்னர்களின் ஊழல் பட்டியல் தனியாக இருக்கிறது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எழுந்த சமீபத்திய புகார்கள் இப்போதும் செய்திகளில் இருப்பதால், யாரும் நமக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை!

1991 –க்கு முன்னால் வரை இந்தியா ‘லைசன்ஸ் ராஜ்யமாக’ இருப்பதால் ஊழல் மலிந்திருக்கிறது என்று சொன்னார்கள். அதாவது என்ன தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக அரசாங்கத்திடம் உரிமம் அல்லது லைசன்ஸ் பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாடு தான் ஊழலுக்குக் காரணம் என்றார்கள். 1991-ல் இருந்து இன்று வரை எந்தத் தடையும் இல்லாமல் ’பொருளாதார சீர்திருத்தங்கள்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் இப்போது ஊழல் குறைந்திருக்க வேண்டும்! ’ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ என்ற வெளிப்படையான நிர்வாகத்துக்காக போராடும் ஓர் அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஊழல் குறைந்த நாட்டை முதல் இடத்திலும் ஊழல் அதிகமாக இருக்கும் நாட்டை கடைசியிலும் இருக்கும்படி, ஒரு பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்தியா 2005-ல் 92-வது இடத்தில் இருந்தது. இப்போது கடைசியாக வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியா 86-வது இடத்தில் இருக்கிறது. இதன்படி பார்த்தாலும் இந்தியாவில் இப்போது ஊழல் குறைந்திருக்க வேண்டும். அல்லது மற்ற நாடுகளில் ஊழல் அதிகரித்திருக்க வேண்டும். மற்ற நாடுகளை விட்டுவிடுவோம், இந்தியாவில் ஊழல் குறைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு உங்கள் அனுபவம் தரும் பதில் என்ன?

சமீபகாலமாக நாம் பார்க்கும் சில செய்திகளில் இருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறது? ஒவ்வொரு நாள் வெளியாகும் புதிய புகார்களும் பழைய புகார்களை மிஞ்சி நிற்கின்றன. பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணைமுதல்வர் சுசில்குமார் மோடி உள்ளிட்டோர் மேல் ஏறத்தாழ 11500 கோடி ரூபாய் மோசடி புகார் வந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இருக்கும் கருவூலங்களில் இருந்து பணம் எடுத்து செலவு செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு! சட்டவிரோதமாக சுரங்கங்களில் இருந்து கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று கர்நாடக மாநிலம் பரபரத்துக் கிடக்கிறது. ஆளுநரும் முதல்வரும் ஆளுக்கொரு பக்கம் நின்று கொண்டு அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக லலித் மோடி வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவற்றைப் போல எத்தனையோ செய்திகளை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஜூன் மாத இறுதியில் கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த ஜி20 நாடுகளின் மாநாட்டில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. “சந்தைகளின் ஒருமைப்பாட்டை ஊழல் அச்சுறுத்துகிறது; நியாயமான போட்டி நிலவ முடியாமல் செய்கிறது; நிதி ஒதுக்கீட்டை சிதைக்கிறது; மக்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது; சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது” என்று ஊழலின் தீமைகளை அந்தத் தீர்மானம் பட்டியலிடுகிறது.

சுதந்திரமான சந்தை செயல்படுவதற்கு ஊழல் தடையாக இருக்கிறது. உண்மைதான்! சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஊழல் பெருஞ்சுமையை ஏற்றுகிறது. இதுவும் இன்னொரு உண்மை. ஊழல் ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் சிலர், பெரிய இடங்களில் நடக்கும் ஊழலைப் போக்க வேண்டும் என்கிறார்கள். மேலிடம் சுத்தமானால், கீழடுக்குகளில் தப்பு செய்யும் சபலம் வராது என்பது அவர்கள் வாதம். ஆனால் அரசாங்கங்கள் எப்போதும் கீழ்நிலையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், தாசில்தார்கள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் வாங்கும் லஞ்சத்தையே முன்னிலைப்படுத்துகின்றன. கீழ்மட்டத்தில் நடக்கும் ஊழலை ஒழிப்பதால், அன்றாடம் காய்ச்சிகளும் பயன் பெறுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெரிய பெரிய ‘புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்’ புரிந்து கொள்ளப்படும் உணர்வு என்ன என்றோ அவை அவர்களுடைய தோள்களில் பளுவை ஏற்றுகின்றனவா என்றோ சாதாரண மக்கள் அறிய முடிகிறதா? தொழிலதிபர்கள் நலனுக்காக முன்வைக்கப்படும் ’ஊழல் ஒழிப்பும்’ சாதாரண மக்களின் வாழ்வைத் திசை மாற்றுகின்ற ஊழலை ஒழிப்பதும் ஒரே விதமானதுதானா? மேய்க்கப்படும் ஆடுகளின் நலனும் தன்னுடைய நலனும் ஒன்றுதான் என்று ஒரு மேய்ப்பன் சொன்னால் அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

வெள்ளாடுகளின் நலனும் வேங்கைகளின் நலனும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை!

நன்றி: ரிப்போர்ட்டர் 29.07.10

Saturday, July 24, 2010

யுத்தம் இல்லாத அமைதி கேட்டேன்

ஒவ்வொரு நாளும் வரும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை; செய்தித் தாள்களில் படித்தாலும் சரி, தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் சரி, எங்கும் ரத்தக் கறைகளே படிந்திருக்கின்றன. தனியாக வீட்டில் இருந்த பெண் அல்லது முதியவர்கள் படுகொலை, தனிக்குடித்தன பிரச்னைக்காக தற்கொலை அல்லது கொலை, காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி, பணம் அல்லது நகைகளைக் கொள்ளை அடிப்பதற்காக நடக்கும் கொலை, முன்விரோத பழி வாங்கும் படுகொலை என்று உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களின் செயல்கள் ஒருபுறம்; காஷ்மீரில் ராணுவத்துக்கும் இளைஞர்களுக்கும் மோதல், மாவோயிஸ்ட் தாக்குதலில் காவலர்கள் பலி அல்லது என்கவுண்டரில் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை, மீன் பிடிக்கப் போன இடத்தில் அந்நியப் படையினர் செய்யும் அத்துமீறல்களால் நம்முடைய மீனவர்கள் சாவு போன்ற அரசியல் விவாதங்களை உருவாக்கும் வன்செயல்கள் மறுபுறம்; எந்த வகையான வன்முறையாக இருந்தாலும் கொல்வதும் நாமே, செத்துப்போவதும் நாமே! அதாவது காஷ்மீரி, வங்காளி, தமிழன், மலையாளி என்று எந்த இனத்தின் பெயரிலாவது அழைக்கப்பட்டாலும், இந்தியர்களே இறந்து போகிறார்கள்!

இந்த வன்முறை குறித்தெல்லாம் நமக்கு தார்மீக கோபம் அல்லது அறச் சீற்றம் வருவதில்லை. நம்முடைய அப்பாவோ அல்லது அம்மாவோ, அண்ணனோ அல்லது தம்பியோ, நண்பர்களோ அல்லது சொந்தக்காரர்களோ நியாயத்துக்கு மாறாக ஏதேனும் செய்யும்போது நாம் அவர்களைக் கண்டிப்பதில்லை; கண்டனம் செய்து அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதில்லை; அவ்வளவு ஏன்? குறைந்தபட்சம் ஒரு முணுமுணுப்பைக்கூட நாம் வெளிப்படுத்துவதில்லை. மாறாக குடும்பத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாம் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம். குடும்பம் தவறு செய்தால் அதைக் கண்டிக்க நம்முடைய பாசம் தடுக்கிறது; அதைப் போலவே நாடு தவறு செய்தால் அதை எதிர்க்கவிடாமல் நம்முடைய தேசபக்தி குறுக்கே வருகிறது!

இப்படிப்பட்ட பாசம், தேசபக்தி போன்ற பொதுவான இலக்கணங்களை எல்லாம் மீறி வாழும் தனிமனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜெஃப் நேபல் என்ற அமெரிக்கர்; வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அமெரிக்க கடற்படையில் கமாண்டராக வேலை பார்த்தவர்; உத்தமர் காந்தியின் மேல் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். கடந்த 1995 முதல் இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் வசித்து வருகிறார்; அங்கு காந்திய ஆசிரமம் ஒன்றில் தங்கி இருக்கிறார்; காந்தியின் உயிருக்கு நிகரான கொள்கையான அஹிம்சையை பிரசாரம் செய்வதே அவருடைய முழுநேர வேலை. காந்தியை வழிகாட்டியாக நினைக்கும் அவர் இந்தியாவில் ‘அரசியல் புகலிடம்’ கேட்கிறார். காந்தியை தேசப்பிதாவாக வரித்துக் கொண்ட நம்முடைய மத்திய அரசு அவருக்குப் புகலிடம் கொடுக்க மறுக்கிறது!

வெளிப்படையான குற்றங்கள் பற்றிய செய்திகளுக்கு நடுவில் இது போன்ற செய்தியும் சின்னதாக வருகிறது. இப்படி வரும் செய்தியை நாம் ஒருவேளை பார்க்காமலே இருந்திருக்கலாம். அப்படியே பார்த்தாலும் அந்த செய்தி பெரிய பாதிப்பு எதையும் நமக்குள் ஏற்படுத்திவிடப் போகிறதா என்ன? சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வர அனுமதியுங்கள் என்று கெஞ்சிய ஒரு தேசத்தின் குரலை நாம் காதில் வாங்கினோமா? நாம் அனுமதிக்க மறுத்த சில மாதங்களில் அந்தக் குரல் அடங்கி விட்டது. .. அதாவது நடந்து முடிந்து வருடங்கள் ஓடிவிட்டன.. நாம் மறந்து போயிருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இன்னும் நமக்கு நினைவில் இருக்க வேண்டுமே, இருக்கிறதா? சர்க்கரை நோயாலும் பக்க வாதத்தாலும் துன்பப்படும் பார்வதியம்மாள் என்ற மூதாட்டி, சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு வந்தார். அவரை நகருக்குள் நுழைய விடாமல், விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினோமே, ஞாபகம் இருக்கிறதா? மத அடிப்படைவாதிகள் மரண தண்டனை விதித்ததால், உயிர்ப்பிச்சை கேட்டு வந்த தஸ்லிமா நஸ்ரினுக்காவது தொடர்ந்து புகலிடம் கொடுத்தோமா?

”பாலசிங்கம் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்; அவரை சென்னையில் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது” என்றார்கள்; அவர் இங்கு இருக்கும் தமிழர்களிடம் ‘சுதந்திர தாகத்தை’ ஊட்டி விடுவாரோ என்ற சந்தேகத்தில் நாமும் தலையாட்டி ஏற்றுக் கொண்டோம். தஸ்லிமா நஸ்ரின் எழுதியவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதிலும் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று ‘கருத்து சுதந்திரத்தில்’ அக்கறை கொண்ட ஜனநாயக அரசு சொல்லும் என்று எதிர்பார்த்தோம்; வாக்கு வங்கி அரசியலைக் குறிவைத்து தஸ்லிமா நஸ்ரினையும் வெளியேறச் செய்து விட்டோம். கணவனை இழந்த சோகத்திலும் குடும்பத்தோடு பெற்ற பிள்ளை ’மறைந்து’ போயிருக்கும் கவலையிலும் துவண்டு போயிருக்கும் 80 வயதுப் பெண்மணிக்கே கூட நம்முடைய உள்ளம் உருகவில்லையே, பிறகு மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது?

ஆனால் காந்தியை உண்மையாகவே வழிகாட்டியாக வரித்துக் கொண்ட ஜெஃப் நேபல், ‘நெட்டை மரமாக’ நின்று புலம்பவில்லை; கடந்த 2009 ஜூலை 19-ம் தேதி டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் காந்தியின் சமாதிக்கு முன்னால் உட்கார்ந்தார். தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை வேண்டாம் என்று தூக்கி எறிந்தார். அவருடைய அமெரிக்க பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போட்டார்; பிறப்புச் சான்றிதழ் உட்பட அமெரிக்க அரசாங்கம் கொடுத்திருந்த எல்லா ஆவணங்களையும் சுக்குநூறாக கிழித்தெறிந்தார்; எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வல்ல என்று நம்பும் இவரால், சீனியர் ஜார்ஜ்புஷ் அதிபராக இருந்து நடந்திய வளைகுடாப் போரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் அவருக்கு இருந்த சொத்துகளை எல்லாம் விற்று விட்டு இந்தியா வந்தார். 1995 முதல் சிம்லாவில் வசித்து வருகிறார்.

இவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம்? ஒருவர் வாழும் நாட்டின் அரசு செய்யும் தவறுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அல்லது ஒப்புக்கு எதிர்த்துக் கொண்டு எத்தனையோ பேர் இருக்கும் போது இவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது எது? “சொந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தாண்டி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சர்வதேச கடமைகள் இருக்கின்றன. எனவே அமைதிக்கும் மனிதத்தன்மைக்கும் எதிரான குற்றங்கள் உலகில் நடக்காமல் தடுப்பதற்காக உள்நாட்டு சட்டங்களை மீற வேண்டியிருந்தால், அப்படி மீறும் கடமை தனிமனிதர்களுக்கு இருக்கிறது என்று நியூரெம்பர்க் போர்க் குற்ற தீர்ப்பாயம் 1950-ல் சொல்லி இருக்கிறது” என்று ஜெஃப் நேபல் எடுத்துச் சொல்கிறார்! இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் ஆணையை ஏற்று கொடுமைகள் செய்தோம் என்ற வாதத்தை மறுத்து போர்க் குற்றங்களை விசாரித்த தீர்ப்பாயம் சொன்ன வார்த்தைகள் இவை!

சர்வதேசக் கடமையை செயல்படுத்துகிறேன் என்று சொல்லி அரசுக்கு எதிராக வரி கொடாமை இயக்கத்தை நேபல் என்ற தனிமனிதரால் அமெரிக்காவில் நடத்த முடியுமா? அதை சட்டபூர்வமான ஒரு வாதமாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொள்ளுமா? இருந்தும் அவர் கவலைப்படவில்லை. சொந்த நாட்டு மக்களானாலும் சரி, எந்த நாட்டு மக்களானாலும் சரி, அவர்களைக் கொல்லும் ஆயுதங்களை வாங்குவதற்கு பயன்படும் நிதிக்கான பணத்தை, ஓர் அரசுக்கு வரியாக நான் செலுத்த மாட்டேன் என்று அவர் பிரகடனம் செய்கிறார்! ‘அமெரிக்காவில் வரி கொடுக்காமல் போராடுவதை விட அந்த நாட்டை விட்டே வெளியேறிவிடலாம் என்று நினைத்து இந்தியா வந்து விட்டேன்’ என்று அவர் சொல்கிறார்.

அமெரிக்கா அவருக்குக் கொடுத்த பாஸ்போர்ட்டை அவர் எப்படிப் பார்க்கிறார்? அவர் உலகின் எந்தப் பகுதிக்குப் போகிறார் என்பதைக் கண்காணிப்பதற்கும் அவருடைய நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குமான கருவியே பாஸ்போர்ட் என்று சொல்கிறார்! அவருடைய பாஸ்போர்ட்டையும் மற்ற அமெரிக்க ஆவணங்களையும் அழிக்கும் வேலையை காந்தி நினைவிடத்தில் வைத்து அவர் ஏன் செய்தார்? “தார்மீக அடிப்படை எதுவும் இல்லாத, ஊழல் மற்றும் வன்முறை நிறைந்த அரசாங்கத்தை எதிர்த்து, ஆயுதம் இல்லாமல் அறப் போராட்டம் நடத்த முடியும் என்பதற்கான அடையாளம் காந்தி என்பதால் இந்த இடத்தை நான் தேர்வு செய்தேன்” என்பது அவருடைய பதில்!

போன வருடம் பாஸ்போர்ட்டை அவர் கிழித்துப் போட்ட பிறகு என்ன நடந்தது? பாஸ்போர்ட்டைக் கிழிக்கவில்லை, அதன் நகலைத்தான் கிழித்தேன் என்றாரா? அல்லது கேமிரா முன்னால் வீர வசனம் பேசி விட்டு, ரகசியமாக ’டூப்ளிகேட் பாஸ்போர்ட்’டுக்கு விண்ணப்பித்தாரா? அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்கள் அப்படி செய்வார்கள்; ஆனால் ஜெஃப் அப்படி எதுவும் செய்யவில்லை. டெல்லியில் இருக்கும் ஒரு காவல்நிலையத்துக்கு நேராக போய் தன்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்றும் காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் என்றும் சொன்னார். அவர் யார், அவர் செய்தது என்ன, அமெரிக்க குடியுரிமையை மறுத்து அன்று அவர் வெளியிட்ட அறிக்கை பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரி அவரை கைது செய்யவில்லை. “உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு எந்த சிக்கலும் வராது. என்ன பிரச்னை என்றாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார்!

அதனால் அரசியல் புகலிடம் கோரி ஜெஃப் நேபல் அரசிடம் விண்ணப்பம் செய்தார். அமெரிக்க குடியுரிமையை திருப்பிக் கொடுத்த ஒருவருக்கு இந்தியாவில் புகலிடம் கொடுத்தால் அமெரிக்கா என்ன நினைக்கும்? அது நினைக்கிறதோ இல்லையோ, அது ஏதாவது நினைக்கும் என்ற எண்ணம் போதாதா, நாம் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு? புகலிடம் கோரிய அவருடைய மனுவுக்கு பதில் எதுவும் கொடுக்காமல் அரசு மௌனமாக இருந்தது. அரசின் மௌனத்தை எப்படிக் கலைப்பது? நீதிமன்றத்தில் நேபல் முறையிட்டார். மௌனம் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு வந்தது. ”நேபலுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இயலாது” என்று அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ”இந்தியக் குடியுரிமை கோரி அவர் முறையாக விண்ணப்பித்தால், அரசு அதைப் பரிசீலிக்கும்” என்று அரசு சொன்னது. கடைசியில் இப்போது குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு இரு வார அவகாசத்தை நீதிமன்றம் அவருக்குக் கொடுத்திருக்கிறது.

இருவாரத்துக்குள் அவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அந்த மனுவைப் பரிசீலித்து அவருக்குக் குடியுரிமை வழங்கலாம். ஆனால், அவருடைய வாழ்க்கை அபூர்வமான ஓர் உண்மையை நமக்கு சுட்டிக் காட்டுகிறது; சொந்தப் பிரச்னைகளுக்காக மற்றவர்களைத் தூண்டி விட்டு வன்செயல்கள் நிகழ்த்தும் மனிதர்கள் மத்தியில், பொதுப் பிரச்னைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் நல்ல மனிதர்களும் நமக்கு நடுவில் இருக்கிறார்கள்! இந்த உண்மை நமக்கு நம்பிக்கை அளிக்கிறது!

நன்றி: ரிப்போர்ட்டர் 25.07.10

Wednesday, July 21, 2010

இன்னும் எத்தனை காலம் தான்…….

”டூ யூ ஹாவ் எனி சேஞ்ச் ஃபார் மீ?”

அருகில் வந்த அந்த மனிதர் என்னிடம் கேட்டார். உலகின் சொர்க்க பூமி என்று பலராலும் அழைக்கப்படுகிற அமெரிக்காவில், ’எனக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் சில்லறை இருக்கிறதா’ என்ற இந்தக் கேள்வியை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அய்யா பிச்சை போடுங்கய்யா...” என்ற பராசக்தி படத்தின் வசனம் எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது. ரங்கூனில் இருந்து தமிழ்நாடு வந்து இறங்கும் சிவாஜி கணேசன் காதில் விழும் முதல் வாசகம். “தமிழ்நாட்டுல கேட்க முதல் குரலே பிரமாதமா இருக்கே” என்று சிவாஜி அங்கதம் செய்வார். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் படும் அவலங்களை இந்த ஒரு வசனத்தால் எடுத்துச் சொன்னார் நம்முடைய முதல்வர் கருணாநிதி!

அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்தில் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அமெரிக்க ஆப்பிரிக்கர் ஒருவர் எங்கள் காரை நெருங்கி வந்து முதலில் சொன்ன கேள்வியைக் கேட்டார். இது அமெரிக்காவில் மிகவும் அபூர்வமாக நடக்கும் சம்பவமாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். கார் புறப்பட்ட அடுத்த நொடிகளில் நடந்த உரையாடலில் இருந்து அங்கு இருந்தவர்களின் வேறு பல அனுபவங்களை அறிய முடிந்தது.

”எனக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் பணம் இல்லை என்றால் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவை அப்படியே என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று ஒரு பெண் தன்னிடம் கேட்டதாக ஒருவர் சொன்னார். கையில் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கதவைத் தட்டி ஒருவர் ‘உதவி’ கேட்ட நிகழ்வுக்குப் பிறகு பயந்து போய் என்னுடைய நண்பரின் மகள் தான் இருந்த வீட்டை அடுத்த நாளே மாற்றி இருக்கிறாள். கார் நிறுத்தும் இடத்தில், கார் கண்ணாடியை உடைத்து ‘ஏர் பேக்’ மற்றும் ‘எம்.பி.3 ப்ளேயர்’ போன்ற பொருட்களை யாரோ திருடிச் சென்ற நிகழ்ச்சியும் நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் எங்களுக்கே நேர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் டிசி ஆகிய முக்கிய நகரங்களில் பூங்காக்களில் கையில் ஒரு பெட்டியுடன் சோர்ந்து படுத்துக் கிடந்த மனிதர்களைப் பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரிக்கும்போது ‘ஹோம்லெஸ்’ – அதாவது வீடில்லாதவர்கள் – என்று பதில் கிடைத்தது. ’கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்ற அட்டையைக் கழுத்தில் தொங்க போட்டுக் கொண்டு பிறரிடம் ‘உதவி’ கேட்கும் மனிதர்களையும் அங்கங்கே பார்க்க முடிந்தது. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களில் ஒரு பகுதியினர் வறுமையிலும் பசியிலும்தான் வாழ்கிறார்கள் போலிருக்கிறது!

உலகின் மற்ற நாடுகளை விட்டுவிட்டு நம் நாட்டுக்கு வருவோம். இந்தியாவின் எட்டு மாநிலங்களில் வறுமை கோரத் தாண்டவம் ஆடுகிறது என்று ஐ.நா. உதவி பெற்ற ‘பன்முக வறுமைக் குறியீடு’ சொல்கிறது. ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் உதவியுடன் ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி என்ற அமைப்பு இந்த அறிக்கையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம், ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் மனித வளர்ச்சி அறிக்கையில் இடம்பெறும்.

கோரமான வறுமை தலைவிரித்தாடுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டும் எட்டு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பது நமக்கு ஆறுதலான செய்தி. கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வாழும் மக்களும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கை சொல்லவில்லை. பீகார், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களின் நிலையே மிகவும் மோசமாக இருக்கின்றன. இந்த எட்டு மாநிலங்களிலும் சேர்த்து 42 கோடியே 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இருபத்தாறு ஆப்பிரிக்க நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்கள் தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம். 26 ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை 41 கோடி பேர் என்கிறது அந்த அறிக்கை. இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? ஆப்பிரிக்கக் கண்டத்தைவிட இந்திய நாட்டில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது!

இந்த வறுமையை எப்படியும் போக்கி ஆக வேண்டுமே! அதற்கு நம்முடைய ஆட்சியாளர்கள் நிச்சயம் கடந்த காலங்களிலும் நடவடிக்கை எடுத்திருப்பார்களே! பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 60 வருடத்துக்கு மேலாகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நீங்கலாக, ஏறத்தாழ 50 வருடங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே நம்மை ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சிகள் எப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்த மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின? அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளினால் உரிய பலன் கிடைக்கவில்லையா? பலன்கள் கிடைத்திருந்தால், ஏன் இப்போது ஆப்பிரிக்காவை விட அதிகம்பேர் இந்தியாவில் வறுமையில் வாடுகிறார்கள்?

கடந்த 1971 –ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இந்திரா காந்தியின் முழக்கம் ‘வறுமையே வெளியேறு’ என்பதாக இருந்தது. அவர் வறுமையை வெளியேற்றுவதற்காக வங்கிகளை அரசுக்குச் சொந்தமாக்கினார். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகளைத் தொடங்கினார்; கிராம வங்கிகளை ஆரம்பித்தார்; மன்னர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மான்யங்களை ஒழித்தார். 1991-ல் டாக்டர் மன்மோகன்சிங்கை நிதியமைச்சராகவும் பி.வி.நரசிம்மராவை பிரதமராகவும் கொண்ட காங்கிரஸ் ஆட்சி இந்திரா காந்திக்கு நேர் எதிரான பாதையை தேர்ந்தெடுத்தது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற மூன்று மந்திரங்கள் மூலம் இந்தியாவில் கிடுகிடு வளர்ச்சியை உருவாக்கி விட முடியும் என்றது. 2004-ல் சோனியா காந்தி ‘ஆம் ஆத்மி’ என்றார்; சாமான்ய மக்களின் நலனை உள்ளடக்கிய வளர்ச்சி என்றார்; 2009-ல் ‘இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இருக்காது; நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சி இருக்கும்’ என்றார் பிரதமர் மன்மோகன்சிங். 2010-ல் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் துன்பப்படுகிறார்கள் என்கிறது அறிக்கை!

இப்படிப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க முடியுமா? பருவ மழை பெய்யாமல் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது அரசாங்கம் ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது என்று கடந்த 2009 செப்டம்பர் மாதம் சிக்கன நடவடிக்கைகளுக்காக அவர் குரல் கொடுத்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ராகுல்காந்தி லூதியானாவுக்கு ரயிலில் போனதையும் சோனியா காந்தி தனி விமானத்தில் போகாமல் பயணிகள் விமானத்தில் சிக்கன வகுப்பில் பயணம் செய்ததையும் நாம் அவ்வளவு சீக்கிரம் நம் நினைவில் இருந்து அகற்றி விட முடியாது. இப்போதும் நம்முடைய அமைச்சர்களும் அதிகாரிகளும் பிரணாப் முகர்ஜியின் அந்த சிக்கனப் பரிந்துரைகளின்படிதான் செயல்படுகிறார்களா? அல்லது அவரே அப்போது சொன்னவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டாரா?

அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ‘ஒழுங்குக்கு’ கொண்டு வந்ததாகவே ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம். அதன் பிறகு பிரணாப் என்ன செய்யப் போகிறார்? பிரபல தொழிலதிபர்கள் சிலரை அழைத்துக் கூட்டம் நடத்த இருக்கிறார். தொழில் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் ஆடம்பரமான வாழ்க்கை வாழக் கூடாது என்று அவர்களிடம் அறிவுரை சொல்ல தீர்மானித்திருக்கிறாராம். ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 37.2 சதவீதம் அரசு தரும் தகவல்களின்படியே வறுமையில் வாடும்போது, தொழிலதிபர்கள் பகட்டாக வாழ்வதைப் போன்ற தோற்றம் இருக்கக் கூடாது என்று அவர்களிடம் உணர்த்தப் போகிறாராம். இப்படி ஒரு செய்தி சொல்கிறது. பிரணாப் முகர்ஜியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏழைகளின் வாழ்க்கையில் நேரடியாக ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுமா என்ன?

இன்னொரு முக்கியமான அமைச்சர் தொடர்பான காட்சி இது. விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் செய்தியாளர்கள், “உணவுப் பொருட்களின் விலை இவ்வளவு ஏறி இருக்கிறதே, மக்கள் ஏன் இதை எதிர்த்து தீவிரமாகப் போராட முன்வரவில்லை?” என்று கேட்கிறார்கள். அவர், “விலை அதிகமாக இருந்தாலும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன” என்று பதில் சொல்கிறார். அதாவது உணவுப் பொருட்கள் கடைகளில் கிடைத்தால் போதும், என்ன விலை விற்றாலும் அதற்குத் தகுந்தவாறு மக்கள் தங்களை ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் கேட்டுக் கொண்டால், தொழிலதிபர்களும் சரி, வறுமையில் வாடுகிறவர்களும் சரி, அரசின் முடிவுக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள்!

அப்புறம் என்ன? ஆரம்பிக்க வேண்டியது தானே! பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தொடங்கிய அடியை ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த வேண்டியதுதானே! உரத்தின் விலையை உர நிறுவனங்களே தீர்மானிக்கட்டும். பாதுகாப்பு, சில்லரை வணிகம், வங்கிகள் போன்ற துறைகளில் அந்நிய முதலீடுகளைப் பெருக்கட்டும். பொதுத்துறை நிறுவனங்களை பங்கு விலக்கல் என்ற பெயரில் தனியாருக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள். செய்தித் துறையில் மட்டும் ஏன் இன்னும் தயக்கம்? செய்தி என்ற பெயரில் தனக்குத் தகுந்தவாறு கருத்துக்களை இந்திய மண்ணில் உருவாக்கும் உரிமையை வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு தங்கத் தட்டில் வைத்து மரியாதையுடன் அளியுங்கள்.. இன்னும் என்னென்னவோ திட்டங்களை எல்லாம் அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடும்.

ஏனென்றால், அடுத்த சில மாதங்களில் வர இருக்கும் எந்த சட்டமன்றத் தேர்தல் பற்றியும் காங்கிரஸ் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி இழப்பதற்கு எதுவும் இல்லை. சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு பலமாக இருந்தால் கூட, அரசாங்கத்தின் கொள்கைகள் மாறப் போவதில்லை; திட்டங்களை செயல்படுத்தும் வேகம் வேண்டுமானால் குறையலாம்.

”பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்; பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்!” என்ற கண்ணதாசனின் வரிகளில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பலத்த நம்பிக்கை இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அந்த உறுதி இல்லை!

-ஜென்ராம்

நன்றி: ரிப்போர்ட்டர் 22.07.10

Saturday, July 17, 2010

அந்த சிவகாமி மகனிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் குடும்பத்துக்கு முதலிடம் கொடுங்கள்,” என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களிடம் பேசும்போது இந்த வார்த்தைகளை எப்போதும் சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக அல்லது ஒரு தேசத்தின் விடுதலைக்காக அல்லது சமூக மாற்றத்துக்காக போராட வருபவர்கள் இந்த அறிவுரையை ஏற்க முடியுமா என்பது விவாதத்துக்குரிய ஒரு கேள்வி. இருந்தும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் குடும்பத்தின் முக்கியத்துவம் போதிக்கப்பட்டே வருகிறது. ஏன்? நிலவும் சமூக அமைப்பை குடும்பங்களே காத்து நிற்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்!

”உங்கள் குடும்பத்தை முதலிடத்தில் வையுங்கள்; ‘ஸ்டாக் புரோக்கர், கணக்கு எழுதுபவர், உடன் விளையாடும் நண்பர் சூழ்ந்திருக்க அவர் காலமானார்’ என்று எந்த துக்க விளம்பரத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை” என்ற வாசகத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இந்த சொற்களை உதிர்த்தவருக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரைப் பற்றி தெரிந்திருக்காது. ‘போகும்போது விளக்கை அணைத்துவிட்டுப் போங்கள்’ என்று உதவியாளரிடம் சொல்லிவிட்டு மூடிய அறைக்குள் உயிர்விட்டவர் காமராஜர். அந்த கடைசி நிமிடங்களில் அவரைச் சுற்றி குடும்பத்தினர் யாரும் இல்லை. அவரைப் பற்றி நம்முடைய புதிய தலைமுறைக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக் கூடாது என்றும் நம்பிக்கை இல்லாமல் பேசக் கூடாது என்றும் உங்களில் சிலர் முணுமுணுக்கிறீர்களா? நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவின் அறிக்கையைப் படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை மக்கள் திருநாளாக கொண்டாட வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்” என்று அந்த அறிக்கையில் அவர் கோரியிருந்தார். இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் காமராஜரின் சிறப்புகளை பட்டியலிட்டிருந்தார்!

வருகிற ஜூலை 15-ம் நாள், காமராஜர் பிறந்து 107 ஆண்டுகள் நிறைவடைகின்றன. காங்கிரஸ் கட்சி இதை 108-வது பிறந்த நாள் என்று சொல்கிறது. காமராஜர் 1903-ம் வருடம் ஜூலை 15-ம் தேதி பிறந்தார். 1904-ம் வருடத்து ஜூலை 15-ஐ அவருடைய எத்தனையாவது பிறந்த நாளாக அவருடைய பெற்றோர் கொண்டாடி இருப்பார்கள்? முதலாவது பிறந்த நாள் என்றால், இந்த ஆண்டு காமராஜரின் 107-வது பிறந்த நாள் ஆகிறது. இரண்டாவது பிறந்த நாள் என்றால் தான் தங்கபாலு சொல்லும் எண் சரியாகிறது. இந்தக் கணக்கீடுகளில் ஆங்கில மரபு, இந்திய மரபு அல்லது தமிழ் மரபு என்று பெரிய சங்கதிகள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. தலைவருடைய நினைவைப் போற்றுவதுதான் முக்கியம் என்பதால் இந்த எண் சந்தேகத்தை இத்தோடு விட்டு விடுவோம்.

சரி, ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன? தமிழக அரசு ஜூலை 15-ஐ கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டங்களுக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி ஆணை இட்டிருக்கிறார். அதாவது, தொடக்கப்பள்ளிகளுக்கும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் 94 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஏறத்தாழ 25 லட்சம் ரூபாய் என்று செலவு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் கருணாநிதியின் இந்த உத்தரவைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘சரஸ்வதி’ வரத் தயங்கிய பகுதிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களையும், கட்டணமில்லாக் கல்வியையும் இலவச மதிய உணவையும் வழங்கிய ஒரு முன்னாள் முதலமைச்சரை இந்நாள் அரசாங்கம் நினைவு கூர்கிறது. இதற்கு மேல் அரசிடம் இருந்து பெரிதாக வேறெதுவும் எதிர்பார்க்க முடியாது!

ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நிறைய எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் காமராஜரின் அரசியலை கையில் எடுத்திருப்பதாக அந்தக் கட்சி பெருமையுடன் சொல்கிறது. காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்றும் அவ்வப்போது அதன் தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் காங்கிரஸ் உண்மையிலேயே காமராஜர் நினைவைப் போற்றுகிறது என்றால் வெறும் கொண்டாட்டங்களுடன் நிறுத்திக் கொள்ள முடியுமா? காமராஜரின் பிறந்தநாளை மக்கள் ‘திருநாளாக’ கொண்டாடினால், அது மட்டும் போதுமா? தமிழ்நாட்டில் இருக்கும் கட்சித் தலைவர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் எம்.பி.க்களையும் பார்த்தால், காமராஜரின் உண்மைத் தொண்டர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்க வேண்டாமா? பொதுவாழ்வில் காமராஜரும் கக்கனும் கடைப்பிடித்த ஒரு வாழ்க்கை முறையை தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் இன்று வாழ்ந்து காட்ட வேண்டாமா? இப்படி எத்தனையோ கேள்விகள் அடுக்கடுக்காய் மனதில் எழுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று தலைவர்கள் அழைப்பதாலும் இப்படிப்பட்ட கேள்விகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வேறு எத்தனையோ தலைவர்களை காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு கொடுத்திருந்தாலும் காமராஜரை மட்டுமே தமிழக மக்கள் மனதில் வைத்துப் போற்றுகிறார்கள். தேர்தல் நேரங்களில் அவருடைய பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எல்லா தலைவர்களுக்கும் வந்து விடுகிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஏராளமான நன்மைகளைப் பெற்றது என்பது உண்மைதான். சாத்தனூர், அமராவதி, வைகை, மணிமுத்தாறு உட்பட பல அணைகள் கட்டப்பட்டன. இவற்றின் மூலம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. தொழில் துறையிலும் குறிப்பிடத் தகுந்த அளவு தமிழ்நாடு முன்னேறியது. கல்வித் துறையில் அவர் செய்த மாற்றங்களே அடுத்தடுத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. இவையெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டுகள்.

ஆனால் சிறந்த நிர்வாகத்துக்காக மட்டுமா அவர் போற்றப்பட்டார்? ஒருவேளை தமிழ்நாடு காங்கிரஸ் அப்படி நம்புகிறதோ என்னவோ? அதனால்தான் புதிதாக கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கும் விழாவில் மாநிலத் தலைவர் தங்கபாலு, ஆட்சிக்கு வருவதைப் பற்றி பேசினார் போலிருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் தானே சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும்! “திமுக, அதிமுக வுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அதை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம். தமிழகத்தில் நீண்டகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது. மத்தியிலும் பல ஆண்டுகள் நிலையான ஆட்சியை அளித்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஆட்சி நடத்துவதற்கான எல்லா தகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது” என்று அப்போது சொல்லி இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கான தகுதிகளாக அவர் எதைக் கருதுகிறார், பாருங்கள்!

தங்கபாலுவின் அறிக்கையில், “தான் ஆற்றிய தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல், ஏழைகள் உயர வழி காணவும், தமிழகம் வளர வகைகள் தேடவும், பாரதம் மிளிர பணிகள் செய்யவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று காமராஜர் போற்றப்படுகிறார். இதுவரை நேர்மறையாகவே – அதாவது ’பாசிட்டிவாக’வே – பாராட்டி வந்த அறிக்கை வாசகங்கள் திடீரென்று ஏன் பாதை மாறுகின்றன? ‘தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல்’ என்ற எதிர்மறைச் சொற்கள் ஏன் இடம் பிடித்திருக்கின்றன? தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் யார் சுகம் காண்கிறார்கள்? அவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களா அல்லது வேறு கட்சியில் இருக்கிறவர்களா? இயக்குநர் வசந்த் இயக்கிய ஒரு படத்தில் போகிற போக்கில் ஒரு காட்சி வரும். வீட்டுக்கு வந்த அத்தைக்கு நாயகி காபி போட்டுக் கொடுப்பாள். “நீ போட்டிருக்கற காபி பிரமாதம்; அவ காபி போட்டா இப்படி நல்லா இருக்காது;” என்று அத்தை நாயகியை பாராட்டுவார். அப்போது நாயகன், “அம்மா! ஒருவரைக் குறை சொல்லாம, இன்னொருத்தரை பாராட்டத் தெரியாதா?” என்று கேட்பார். தங்கபாலு அறிக்கையின் எதிர்மறை வாசகத்தைப் படிக்கும்போது இயக்குநர் வசந்தின் இந்த வசனமே நினைவுக்கு வருகிறது.

காமராஜர் ஆட்சியிலும் நிர்வாகம் குறித்த விமர்சனங்கள் இருந்தன. கொள்கைகள் பற்றிய கண்டனங்கள் இருந்தன. அன்று விமர்சனம் செய்தவர்களும் கண்டனக் குரல் எழுப்பியவர்களும் இன்று அவரைப் பாராட்டுகிறார்கள். ஏன்? அவர் லட்சியவாதம் பேசாத லட்சியவாதி. எளிமையும் நேர்மையும், அவருடன் ரத்தமும் சதையுமாகக் கலந்திருந்தன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி வகித்திருக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்ற இரண்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் இறக்கும்போது அவரிடம் இருந்த சொத்து எவ்வளவு? இன்று ஏதாவது ஒரு மாநகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருக்கும் காங்கிரஸ் உறுப்பினரின் சொத்து மதிப்பு என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினாலே, காமராஜரிடம் இருந்து காங்கிரஸ் ஏதேனும் கற்றுக் கொண்டிருக்கிறதா என்ற அடுத்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலோ, ஆட்சிக்கு வர நினைப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. காமராஜர் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் என்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு அவரிடம் சிறிது கூடுதல் உரிமை இருக்கிறது. அதனாலேயே அந்தக் கட்சித் தலைவர்கள் வேறு யாரை விடவும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பொதுவாழ்வின் முன்னுதாரணங்களாக காங்கிரஸ் தலைவர்கள் இருந்து கொண்டு, ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை அணுகலாம்; அப்போது மக்கள் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லக் கூடும்!

நன்றி : ரிப்போர்ட்டர் 18.07.10

Monday, July 12, 2010

கல்யாணப் பரிசு!


எல்லா திருமணங்களும் மகிழ்ச்சியானவையே; அதற்குப் பிறகான வாழ்க்கை தான் அனைத்துவிதமான சிக்கல்களையும் தருகிறதுஎன்பது பரவலான நம்பிக்கை. கல்யாண மேடைகளிலேயே தம்பதியிடம் இந்தக் கருத்தை வேறு வார்த்தைகளில் ஜாலியான அறிவுரையாக சிலர் சொல்வதுண்டு. அப்படி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே சிலருக்கு கல்யாணப் பரிசாக மரணத்தைக் கொடுக்கும் செய்திகள் சமீபகாலமாக வடமாநிலங்களில் இருந்து அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய மார்பிலே பால் குடித்து வளர்ந்த மகளை அம்மா கொல்கிறார்; தோளில் தூக்கி வளர்த்த பெண்ணையும் அவளுடைய கணவனையும் தீர்த்துக் கட்டுகிறார் அப்பா; தங்கையின் வீட்டுக்குள் புகுந்து அவளுடைய குடும்பத்தை அண்ணன் கொல்கிறார். தாய்மாமன்கள் அக்காவின் மரியாதையைக் காக்க மடியில் தூக்கி சீராட்டிய மருமகளை அழிக்கிறார்கள். இப்படி செய்திகளாக நம்மை வந்து சேரும் எத்தனையோ கொடூரமான சம்பவங்களில் பலியானவர்கள் செய்த பாவம் என்ன? தங்களுடைய விருப்பப்படி தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டதுதான்!

அது பெரிய குற்றமா? பெற்றோரின் விருப்பத்துக்கு விரோதமாக தன்னுடைய ஜோடியை ஒருவர் தேடிக் கொண்டால், பெற்றோரின் குடும்ப கவுரவம் பறிபோய் விடுகிறது. இப்படிப் பறிபோன கவுரவத்தை எப்படி மீட்பது? பெற்ற குழந்தைகளைக் கொன்று அவர்களுடைய ரத்தத்தில் கை நனைப்பதன் மூலமாகவா? அல்லது அவர்களை எரித்து கிடைக்கும் சாம்பலைப் பூசிக் கொள்வதன் வழியாகவா? ஆம், இதைப் போன்ற செயல்களின் மூலம் இழந்த மரியாதை மீண்டும் கிடைப்பதாக சிலர் நம்புகிறார்கள். அதற்காகவே அவர்கள் கொலைகள் செய்கிறார்கள். குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கொலைகளை செய்வதால், அவர்கள் பெருமிதமும் கொள்கிறார்கள்!

அப்படி இதுவரை இந்த ஆண்டு எத்தனை குடும்பங்களின் கவுரவம் காப்பாற்றப் பட்டிருக்கிறது? இப்படிப்பட்ட கவுரவக் கொலைகள் இந்தியாவில் ஒரு வருடத்துக்கு ஓராயிரம் நடக்கிறதாம்! அண்மையில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கில் சண்டிகாரைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இந்த விபரத்தை சொல்லி இருக்கிறார்கள். தேசிய மகளிர் ஆணையத்துக்காக நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு மேலும் சில புள்ளி விபரங்களைத் தருகிறது. கடந்த ஓராண்டில் பதிவு செய்யப்பட்ட கவுரவ குற்றங்களில்’ 72 சதவீதம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் மீது ஏவப்பட்டவை. ஒரேகோத்திரத்துக்குள்திருமணம் செய்து கொண்டதற்காக தாக்கப்பட்டவர்கள் 3 சதவீதம். பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டதற்காக 15 விழுக்காட்டினரும், வேற்று மதத்தைச் சேர்ந்தவரை மணம் செய்ததற்காக ஒரு சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விபரங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பானவை மட்டுமே.. அந்தந்த ஊர் பஞ்சாயத்துக்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் எத்தனையோ குடும்பங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கலாம்; காதலித்தவர்கள் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது ஊர்வலம் விட்டிருக்கலாம்; ஊருக்குள் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக நடந்து செல்லும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். ஊருக்குப் பொதுவான மைதானத்தில் வைத்து குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் வல்லுறவு கொண்டிருக்கலாம். வலுக்கட்டாயமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளச் செய்திருக்கலாம்; இன்னும் எத்தனையோ தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை பெரும்பாலும் எங்கும் புகார்களாக பதிவு செய்யப்பட்டிருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் அதே ஊரில் தொடர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதையும் அவர்கள் புகார் கொடுத்தால் அவை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு தூரம் கொடூரமாக நடந்து கொள்ளுமாறு அந்த மக்களை எது தூண்டுகிறது? பல நூறு வருடங்களாக - தலைமுறை தலைமுறையாக -அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். ‘ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களாலேயே அந்தக் குடும்பத்தின் கவுரவம் காப்பாற்றப்படுகிறது’ என்று அவர்கள் நம்புகிறார்கள். தனக்குக் கணவனாக யார் வர வேண்டும் என்ற சிந்தனையே ஒரு பெண்ணுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்கள். அந்த ஊரில் நிலவும் சமூக நம்பிக்கைகளுக்கு உட்பட்டு ஒரு பெண்ணின் விருப்பம் இருந்தால் கூட அவர்கள் நிறைவேற்றி வைக்கமாட்டார்கள். ஏனென்றால் மக்களிடம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அப்படி இருக்கின்றன!

“தன்னுடன் படுக்கப் போகும் ஆண்களை விபச்சாரிகள் தான் தேர்வு செய்வார்கள்” என்பது மகேந்திரசிங் திகாய்த் என்ற விவசாயிகள் சங்கத் தலைவருடைய வார்த்தைகள். அதாவது யாருடன் தன்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் தீர்மானித்தால், அவள் ஒரு பாலியல் தொழிலாளி! இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? குடும்பப் பெண்கள் தங்களுடைய இணையைத் தாங்களே தேடிக் கொள்ள மாட்டார்கள்! இப்படி ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவனைத் தேர்வு செய்யும் உரிமையே கிடையாது என்று சொன்ன பிறகு அவளுக்கு அங்கு என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது? இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில் இருந்து வெளியேற நினைப்பவர்களே அநியாயமாக பலியாகிறார்கள்.

வட்டார அளவில் செயல்படும் பஞ்சாயத்துகளின் பெரிய கூட்டம் வருகிற ஜூலை 17-ம் தேதி நடக்க இருக்கிறது. அரசாங்கத்திடம் அந்தக் கூட்டம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. ஒரே ‘கோத்திரத்துக்குள்’ நடக்கும் திருமணம் தடைசெய்யப்பட வேண்டும். ஆணின் திருமண வயதை 17 ஆகவும் பெண்ணின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்க வேண்டும். அதாவது ஆணோ, பெண்ணோ வேலைக்குப் போய் ‘சுதந்திரமாக’ இருந்தால்தானே குடும்ப கவுரவத்துக்கு சிக்கல் வருகிறது? மீண்டும் ’பால்ய விவாக’ காலத்துக்கு போய்விட்டால், பெற்றோர் பார்த்து குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஏதோ ஒரு திருமணத்தை செய்து வைத்து விடலாம்!

இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று அரசாங்கம் சொல்கிறது. இருந்தும் வன்முறையைத் தூண்டும் வட்டாரப் பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ‘வாக்கு வங்கி’ அரசியல் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஊடகங்களிலும் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில் கடுமையான சட்டம் ஒன்றை மத்திய அரசு மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்திருக்கிறது. சிறப்பு திருமணச் சட்டத்திலும் சில திருத்தங்களை சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள். இந்தக் கோரிக்கைகளை ஏற்பதன் மூலம் அரசாங்கம் தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்!

நன்றி: ரிப்போர்ட்டர்

Tuesday, July 06, 2010

இது யாருக்காக?

இந்தியப் பிரதமர் பேசும்போது மக்கள் கவனமாகக் கேட்கிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொல்லி இருக்கிறார். ஆனால் நம்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் முடிவை ஏற்க மறுக்கிறார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டிக்கிறார்கள்; நாடு முழுவதும் ஜூலை 5-ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அரசின் ஜூன் 25 முடிவை எதிர்ப்பதில், அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் பா.ஜ.கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேர்கோட்டில் நிற்கின்றன. இதற்கு முன் எதிர்க்கட்சிகளிடம் இப்படி ஓர் ஒற்றுமையை 1975, ஜூன் 25 -ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை தான் உருவாக்கியது!

எதிர்க்கட்சிகள் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இந்த விலையேற்ற அறிவிப்பை ஜூன் 25, வெள்ளிக்கிழமை மாலையில் அரசு அறிவிக்கிறது. அடுத்து வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் பெரும்பாலும் அலுவலகங்கள் இயங்காது. விலையேற்றத்தால் மக்கள் கோபம் கொண்டால் கூட அல்லது எதிர்க்கட்சிகள் மக்களைத் திரட்டி கோபத்தை உருவாக்கினால் கூட அவர்கள் உடனடியாக போய் அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்த முடியாது. அல்லது அந்த போராட்டத்தால் ’இயல்பு’ வாழ்க்கை பாதிக்காது. சில நாட்களுக்குப் பிறகு கட்சிகளை ஒருங்கிணைத்து திட்டமிட்டு நடத்தப்படும் போராட்டத்தில் உணர்ச்சிகள் குறைந்து சம்பிரதாயங்களே நிறைந்து இருக்கும் என்பது அரசின் நம்பிக்கை போலும்!

இதுபோன்ற விலையேற்ற அறிவிப்புகளை நாம் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் தான் எதிர்கொள்கிறோம். ஆனாலும் அடுத்த நொடியில், எவ்வளவோ சுமைகளை தாங்கியிருக்கிறோம், இதைத் தாங்க மாட்டோமா” என்ற மனநிலைக்கு வந்து நகர்ந்து விடுகிறோம். இதைத் தான் அரசு வேறுவிதமாக புரிந்து கொள்கிறது. ”விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி காரணமாகத்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று புரிந்துகொண்டு மக்கள் பாராட்டுகிறார்கள்” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார்; “இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்; ரொம்ப நல்லவர்கள்” என்ற நினைப்பில், பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டு அதிகாரத்தையும் விலக்கிக் கொண்டார். டீசல் விலைக்கு இருக்கும் கட்டுப்பாடும் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லியும் இருக்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்? பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோல் விலையை முடிவு செய்து கொள்ளலாம். அரசு தலையிடாது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு அரசு சொல்லும் காரணம் என்ன? பெட்ரோல் விலை அதிகமாகி விடக் கூடாது என்று அரசு கட்டுப்படுத்துவதால், பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன. அந்த இழப்பை சரிசெய்ய அரசு மான்யங்களை கொடுக்க வேண்டியதாகிறது. பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த மாதிரியான காரணங்களையே நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று மத்திய ஆட்சியாளர்கள் மாறினாலும், இந்த ‘பல்லவி’ மட்டும் மாறுவதில்லை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

கடந்த 2009 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபமாக மத்திய அரசுக்கு ஏறத்தாழ 56000 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், இந்த நிறுவனங்களுக்கு அரசு கொடுத்த மான்யம் 14000 கோடி ரூபாய்” என்கிறது ஒரு செய்தி. அதாவது அரசுக்கு மக்கள் கொடுத்ததில் கால் பங்கை அரசு மான்யமாக மீண்டும் மக்களுக்கு அளித்திருக்கிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அரசு மக்களுக்கு மான்யம் அளிக்கவில்லை, மக்களே அரசுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள்!

அடுத்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதால் நாமும் இங்கு விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது என்கிறார்கள். நம்மூரில் ஏற்படும் விலை உயர்வுக்கு அது மட்டும் தான் காரணமா? பத்து வருடங்களுக்கு முன்னால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 25 அமெரிக்க டாலர் என்றால், அதற்கு நம் அரசு விதிக்கும் சுங்க வரி ஏறத்தாழ 5 ரூபாயாக இருந்தது. இப்போது ஒரு பீப்பாய் 75 அமெரிக்க டாலர் என்றால், சுங்கவரியும் மூன்று மடங்கு அதிகமாகிறது. அதாவது நாம் சுமப்பது சர்வதேச விலை ஏற்றம் மட்டுமல்ல, நம்நாட்டின் சுங்க வரியையும் சேர்த்துத்தான்!

அடுத்ததாக, கச்சா எண்ணெயில் இருந்து நம் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு பெட்ரோலியப் பொருட்களை உருவாக்குவதற்குத் தனியாக அரசு வரி போடுகிறது. இதில் கிடைக்கும் நிதியை மீண்டும் பெட்ரோலியத் துறைக்கே செலவிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2006, மே மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், விலை கட்டுப்பாட்டுக்கான நிதியை உருவாக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் இருந்தன. என்ன பயன்? அரசு இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அந்த நிலைக் குழுவின் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி! உறுப்பினர்களில் அகமது படேல், ராஜீவ் சுக்லா போன்ற காங்கிரஸ் எம்.பி.க்களும் அடக்கம்! இருந்தும் யார் கவலைப்படுகிறார்கள்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மன்மோகன்சிங் கேட்க மாட்டார். அவற்றை அதிகாரம் மிகுந்த மத்திய அமைச்சர்கள் குழுவும் பரிசீலிக்காது. அப்படியென்றால் அவர்கள் யாருடைய பரிந்துரைகளைத் தான் ஏற்றுக் கொள்வார்கள்? கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ’ஸ்பான்ஸர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அவை தெரிவதில்லை!

நன்றி: ரிப்போர்ட்டர் 11.07.2010

Labels: , , ,