Friday, September 24, 2010

தேர்தல் வேண்டும்; நியமனம் வேண்டாம்

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இதுவரை மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டவில்லை. அவரை மாற்றி விட்டு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்துப் போகிற ஒரு தலைவரை சோனியா காந்தி நியமிக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரி இருக்கிறார். அவருடைய இந்த பேச்சை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். அந்த செய்தியைப் படித்த போது உங்களுக்கு என்ன உணர்வு ஏற்பட்டது? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்துங்கள் என்று கேட்காமல், மாநிலத் தலைவரை நியமியுங்கள் என்று அவர் ஏன் கோருகிறார் என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழுந்திருக்கும்.

இளங்கோவன் மட்டும் ஏதோ ஜனநாயக விரோதமாக இப்படி ஒரு கோரிக்கையை வைத்துவிட்டார் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காங்கிரஸ் கமிட்டியால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் டெல்லி போய்ச் சேர்கிறது. “எங்கள் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை நாங்கள் காங்கிரசின் அகில இந்திய தலைவர் சோனியா காந்திக்கு வழங்குகிறோம்” என்பதே அந்த தீர்மானத்தின் வரிகள். கோவா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா என்று வரிசையாக தீர்மானம் நிறைவேற்றிய செய்திகள் கடந்த பத்து நாட்களில் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவும் பொதுவாக ஒரே மாதிரி அரங்கேற்றப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிப்பு வருகிறது. போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாள் எல்லாம் அறிவிக்கப்படுகிறது. அந்த நாளுக்குள் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் வேட்புமனு தாக்கல் செய்வதில்லை. பிறகு மாநிலத்தின் நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து மாநிலத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள். சில மாநிலங்களில் தேர்தல் நடந்து சில மாநிலங்களில் இந்த வகை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதைப் புரிந்து கொள்ள முடியும். எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடைமுறை என்றால், இதை அகில இந்திய தலைமையுடைய உத்தரவு என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதன்மையான அரசியல் கட்சி காங்கிரஸ். வரலாற்றுரீதியாகப் பார்த்தாலும் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு ஜனநாயக அடிப்படையில் இயங்கிய மிகப் பெரிய கட்சியாகவே காங்கிரஸ் இருக்கிறது. பிறகு ஏன் மாநில அமைப்புகளில் அந்தக் கட்சி தேர்தலை நடத்தத் தயங்குகிறது?

“மாநிலத்தில் தேர்தல் நடந்தால் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் பெரிதாகும்; போட்டியும் பொறாமையும் அதிகரிக்கும்; பகையும் வெறுப்பும் அதிகமாகி முதலுக்கே மோசமாகி விடும்” என்று நினைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான சிந்தனை இல்லையா? காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மக்களை விடுதலை பெறச் செய்வதிலும் அதன் பிறகு ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் முதன்மையான பங்கை ஆற்றிய பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இதுபோன்ற சிந்தனை மேலோங்குவது சரியா என்ற கேள்விகள் இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். உட்கட்சித் தேர்தல்களை ஜனநாயகரீதியில் நடத்துங்கள் என்று சோனியா காந்தி ஏன் உறுதியாக மாநில அமைப்புகளிடம் சொல்ல மறுக்கிறார் என்பது புரியவில்லை.

மாநிலத்தின் முதலமைச்சரை தேர்வு செய்வதாக இருந்தாலும் மாநில சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூடி டெல்லி மேலிடத்தில் இருந்து நியமிக்கப்பட்டவரையே முதலமைச்சராகத் தேர்வு செய்கிறார்கள். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் ஆறுதல் யாத்திரைகளுக்கு என்ன காரணம்? ஆந்திராவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு முதலமைச்சர் ரோசையாவுக்கு இருக்கிறதா என்ன? ரோசையா நியமனத்தால் வருத்தம் கொண்ட ஜெகன்மோகன், மேலிடத்தின் ஆறுதலை வேண்டித்தானே ஆறுதல் யாத்திரை நடத்துகிறார்?

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இல்லை என்றால் நம்முடைய அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தல் என்ற பெயரில் நடக்கும் சடங்குகளைக் கூட நடத்துவார்களா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் கட்சியை விட்டு மற்ற கட்சிகளைப் பார்த்தாலும் எங்கும் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகத் தெரியவில்லை. இரண்டாவது முக்கிய கட்சியான பாரதிய ஜனதாவில் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு தெரிகிறது. மாநிலக் கட்சிகள் அனைத்தும் யாராவது ஒரு தலைவரை சுற்றியே இயங்குகின்றன. முலாயம்சிங். மாயாவதி, லாலுபிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையே அரசியலில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த கட்சிகளில் விசுவாசத்துக்கு கிடைக்கும் முக்கியத்துவம் ஜனநாயகத்துக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.

ஜனநாயகம் என்றால் என்ன? பெரும்பான்மையினரின் கருத்துக்கள் எப்போதும் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய கொள்கை என்கிறார் அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன். வலியவர்களைப் போலவே எளியவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கும் நிர்வாக முறையையே ஜனநாயகம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்என்கிறார் உத்தமர் காந்தி. நான் அடிமையாகவும் இருக்க மாட்டேன்; எஜமானாகவும் இருக்கமாட்டேன். இதுவே ஜனநாயகத்தைப் பற்றிய என் கருத்துஎன்கிறார் ஆபிரகாம் லிங்கன். இவர்கள் சொல்லும் ஜனநாயகத்தின் எந்த வரையறைக்குள்ளும் நம்முடைய மாநில கமிட்டிகள் கோரும் ‘நியமனம்’ வரவில்லை.

“நீங்கள் நினைப்பது போல் காங்கிரஸ் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடவில்லை” என்பதை நமக்கு சொல்லும் விதமாக ராகுல் காந்தி சில வேலைகளை சிறப்பாக செய்து வருகிறார். இளைஞர் காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் சங்கம் இரண்டுக்கும் அமைப்புத் தேர்தல்களை வெளிப்படையாகவும் நியாயமாகவும் சுதந்திரமான ஓர் அமைப்பின் மேற்பார்வையில் நடத்தி இருக்கிறார். ஃபவுண்டேஷன் ஃபார் அட்வான்ஸ்டு மேனேஜ்மெண்ட் ஃபார் எலக்‌ஷன்ஸ்” எனப்படும் தேர்தல்களுக்கான உயர்தர மேலாண்மை நிறுவனத்திடம் இந்த தேர்தல்களை நடத்தும் பொறுப்பை ராகுல் காந்தி ஒப்படைத்தார். முன்னாள் தேர்தல் ஆணையர்களான ஜே.எம்.லிங்டோ, ஜி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோபால்சாமி உள்ளிட்டவர்கள் அந்த நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்தப் பணியை ஏற்றுக் கொள்வதற்கு முன் ராகுல் காந்தியை கே.ஜே.ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ராகுலிடம், “இளைஞர் காங்கிரஸ், மாணவர் சங்கத்தில் தேர்தல் நடத்தச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தலை நடத்த வேண்டாமா?” என்று கேட்டிருக்கிறார். “இந்த இரண்டு அமைப்புகளும் என் பொறுப்பில் இயங்குகின்றன. இவை குறித்து நான் முடிவெடுக்க முடியும். கட்சித் தேர்தல் பற்றி நீங்கள் கட்சித் தலைமையுடன் தான் பேச வேண்டும்” என்று ராகுல் பதில் சொன்னாராம்!

இருவேறு இந்தியா இருக்கிறது என்று ராகுல் காந்தி போகுமிடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கே.ஜே.ராவிடம் சொன்னதைப் பார்க்கும்போது இருவேறு காங்கிரஸ்கள் இருப்பதாகத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26.09.10

அவர் அப்படி ஒன்றும் ‘ரிச்’ இல்லை!

"உங்க பெயர் என்ன?”

“காந்திலால்”

“உங்க அப்பா பெயர் என்ன?”

மருத்துவமனையில் படுக்கவைக்கப்பட்டிருந்த அந்த தாடிக்காரரிடம் மருத்துவர்கள் கேட்டார்கள். சாலையில் எங்கோ மயங்கி விழுந்து கிடந்த அவரை யாரோ மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் சத்தமாக பதில் சொல்ல முடியவில்லை.

“காந்தி” என்று அவருடைய உதடுகள் மெதுவாக உச்சரித்தன.

அப்படியே அவருடைய கடந்த கால நிகழ்வுகளில் அவருடைய மனம் இறங்கியது.

மருத்துவர்களுக்கு அனுமதிப் படிவங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம். அந்த நபரிடம் மீண்டும் கேட்கிறார்கள்.

“தேசத்தின் தந்தை காந்தி என்பது எல்லோருக்கும் தெரியும்; நாங்கள் கேட்பது உங்களுடைய தந்தையின் பெயரை! உங்க அப்பா பெயர் என்ன?”

“பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” என்று தாடிக்காரர் முணுமுணுக்கிறார்.

“காந்தி மை ஃபாதர்” என்ற இந்திப் படத்தின் ஆரம்பக் காட்சிகளே அவை. இந்திய மக்கள் தொகையில் பாதியாக இருக்கக் கூடிய இந்திய இளைஞர்களுக்கு ஹரிலால் என்றால் யார் என்று தெரிந்திருக்காது. ஆனால் ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் வருண் காந்தியையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். ஒருவேளை, பிரியங்காவின் குழந்தைகளான ரேஹனையும் மிரயாவையும் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதிகாரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? காந்தியைப் போல அதிகாரத்தில் இருந்து தானும் விலகி தன்னுடைய குடும்பத்தையும் விலக்கி வைக்கும் மனத்துணிவு இன்று நம்மிடையே இருக்கும் எந்த அரசியல் தலைவருக்கு இருக்கிறது?

ஹரிலாலைப் போல இன்றைய அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒரு நாளும் மயங்கி விழுந்து வீதியில் கிடக்கப் போவதில்லை. சமீபத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் பல அமைச்சர்களின் சொத்து விபரங்களைப் பார்க்கும்போது இந்த எண்ணமே ஏற்படுகிறது. இந்த விபரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தேர்தலில் நிற்கும்போது கொடுத்த சொத்துப்பட்டியல் மனுவின் அடிப்படையிலும் அதற்குப் பிறகு அமைச்சர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் கொடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் சொல்கிறது. இந்த விபரங்களை வாங்குவதற்கே சமூக ஆர்வலர்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நாளிதழ்களில் நீங்கள் ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கக் கூடும். ஐந்து வெற்றிகரமான ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமை நமக்கு அதிகாரத்தை தந்திருக்கிறது என்பது அந்த விளம்பரத்தின் சாரம். ”குடிமக்களின் வெளிப்படையான அதிகாரம்” என்று அந்த விளம்பரம் நம்மிடம் பறைசாற்றுகிறது. அலுவல் ரகசிய சட்டம் 1923-இல் இருந்து விடுதலையாகி விட்டோம் என்ற நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 தந்தது என்பது உண்மைதான். ஆனால் நாடாளுமன்றம் இயற்றிய இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தான் எத்தனை தடைகள்! தாங்கள் இயற்றிய சட்டத்தை செயல்படுத்துவதற்கு தாங்களே தடையாக யாரேனும் இருப்பார்களா என்றுதான் சாதாரணமாக ஒருவர் நினைக்கக் கூடும். ஆனால் நம்முடைய பிரதிநிதிகளும் அதிகாரிகளும் நாம் தகவல்களைப் பெறுவதற்குத் தடையாக இருக்கிறார்கள் என்பதைப் பல நிகழ்வுகளில் இருந்து அறிய முடிகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குறை சொல்லும் நடுத்தர வர்க்க மனநிலையில் இருந்து இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. இப்போது ”நீங்கள் குறை சொல்லும் அரசியல்வாதிகள்தானே நம்முடைய பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தையே இயற்றினார்கள்” என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆமாம், அவர்கள் தான் இயற்றினார்கள். ஆனால் அதன்பிறகு ஏன் அந்த சட்டம் நடைமுறைக்கு வருவதில் நாள்தோறும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்? தடைகளை நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். ஆனால், அரசியல் தலைமையின் மௌனமான ஒத்துழைப்பு அல்லது ஆசீர்வாதம் இல்லாமல் அதிகாரிகளால் அவ்வளவு தடைகளை உருவாக்க முடியாது. அப்படியே அவர்கள் உருவாக்கினால், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து விடலாம். ஆனால் ஆளும் அரசியல் தலைமையும் அந்த தடைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்றால், தடைகளை உடைப்பதற்கு நடக்கும் போராட்டத்தை நீண்டகாலம் நடத்த வேண்டியதாகிறது.

இப்போது பிரதமர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் அமைச்சர்களுடைய சொத்துப்பட்டியலைப் பெறுவதற்குக் கூட நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. புதுடெல்லியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சரவைச் செயலரிடம் அவர் மனு கொடுத்தார். மேற்படி சட்டத்தின் கீழ் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வரவில்லை என்று அவருக்கு அமைச்சரவைச் செயலர் பதில் சொன்னார். இந்த முதல் முட்டுக்கட்டையை மீறி இந்த விவகாரத்தை தலைமை தகவல் ஆணையத்துக்கு அகர்வால் எடுத்துப் போனார்.

மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விபரங்கள் ரகசியமானவை அல்ல என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருபவையே என்றும் தலைமைத் தகவல் ஆணையம் தெளிவுபடுத்தியது. அதை விளக்கி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியது. மக்களவை சபாநாயகரிடமும் மாநிலங்களவைத் தலைவரிடமும் ஒப்புதல் பெற்று அமைச்சர்களின் சொத்துக்களை வெளியிடுங்கள் என்று அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்திடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விபரங்களை பிரதமரிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். பிறகு அந்த விபரங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகுதான் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!

இந்த விபரங்கள் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம். அதாவது பிரதமர் அலுவலகம் நாட்டு மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவல்களைத் தராது என்ற நம்பிக்கையில் இந்த தகவலை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், பிரதமரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்முடைய அமைச்சர்கள் தந்திருக்க மாட்டார்கள் என்று நம்ப வேண்டியதாகிறது. நெப்போலியன், சிதம்பரம், அழகிரி போன்ற கோடீஸ்வர அமைச்சர்களை விட்டு விடுங்கள். பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளான ஆ.ராசாவின் சொத்து மதிப்பு ஒரு கோடியைக் கூட எட்டவில்லை. கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் தானாம்! ஆனந்த் சர்மாவின் உடைமைகள் 26 ஆயிரத்துக்கு மேல் தாண்டவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வங்கிக் கணக்கில் வெறும் 29 ரூபாய்தான் இருக்கிறதாம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் உங்களுக்கு அதிகாரத்தைத் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம் விபரங்களையும் கொடுத்திருக்கிறது. பிறகு இந்த விபரங்களைப் படிக்கும்போது உங்களுடைய கை ஏன் உங்கள் காதைத் தடவிப் பார்க்கிறது? யாராவது அங்கு பூ சுற்றியிருக்கிறார்களா என்று தேடுகிறீர்களா? அல்லது வலியே இல்லாமல் யாரேனும் காது குத்தி விட்டார்களோ என்று தடவிப் பார்க்கிறீர்களா? இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களே, அரசு கொடுக்கும் தகவலை நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23.09.10

கோடீஸ்வரர்களின் பாரதம்


"உங்கள் நண்பன் யார் என்று சொல்லுங்கள்; நான் உங்களைப் பற்றி சொல்கிறேன்என்பார்கள்; வேறு சிலரோ இந்த வாசகத்தை சிறிது மாற்றி நீங்கள் படிக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்லுங்கள்; உங்கள் குணநலன்கள் என்ன என்று சொல்கிறேன் என்பார்கள். அந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. "உங்கள் நகரத்தில் இருக்கும் வங்கியைப் பற்றி சொல்லுங்கள்; அந்த நகரத்தின் வளர்ச்சியை நாங்கள் விவரிக்கிறோம்" என்பதே அது. ஹைதராபாத் நகரில் நடந்த ஒரு சம்பவமே இந்தப் புதுமொழிக்கு காரணம். அப்படி அங்கு என்ன நடந்து விட்டது?

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஒரு கிளையைத் திறந்திருக்கிறது. 4000 சதுர அடியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் அந்தக் கிளை இருக்கிறது. நீங்கள் அழைத்தால் உங்கள் வீட்டிற்கு வந்து அனைத்து சேவைகளும் செய்யப்படும். அல்லது நீங்கள் அழைத்தால் கார் அனுப்பி உங்களை வீட்டில் இருந்து அழைத்து வருவார்கள். திரும்பவும் வீட்டில் கொண்டு விடுவார்கள். லாக்கர் என்னும் பாதுகாப்புப் பெட்டகம் நாள் முழுக்க திறந்திருக்கும். அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கு சென்று உங்கள் நகைகளை எடுத்து அங்கேயே அணிந்து கொண்டு விழாக்களுக்கு சென்று விட்டு வரும் வழியிலேயே மீண்டும் லாக்கரில் வைத்துவிட்டு வீடு திரும்பலாம். வீட்டுக்கு கொண்டு வந்து உங்கள் நகைகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருடர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரே ஒரு நிபந்தனைதான்! அந்த வங்கியின் கதவைத் திறந்து கொண்டு நீங்கள் அந்தக் கிளையின் உள்ளே நுழைய வேண்டும் என்றால் அந்த வங்கி உங்களை அழைக்க வேண்டும். அப்படி ஒரு அழைப்பு உங்களுக்கு வரவேண்டும் என்றால் நீங்கள் ஒரு கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்!

ஆம்! அங்கே ஒரு கணக்கு திறக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ’கோஹினூர் பஞ்சாரா பிரிமியம் பேங்கிங் சென்டர்’ என்ற பெயரில் அந்தக் கிளையை பாரத வங்கி திறந்திருக்கிறது. இந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி திறக்கப்பட்ட கிளைக்கு முதல் இரு நாட்களில் 50 வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்த நிதியாண்டுக்குள் 250 வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியும் என்று வங்கி நம்புகிறது. ஏற்கனவே நகர்ப்புறத்து ஏழை மக்களை வங்கியின் பக்கம் ஈர்ப்பதற்காக ‘ஒரு ரூபாய் சேமிப்புக் கணக்கு’ என்ற திட்டத்தையும் ஸ்டேட் வங்கி கொண்டு வந்திருக்கிறது என்பது வேறு விஷயம்!

ஆரம்ப சுகாதார நிலையமும் தொடக்கப்பள்ளியும் இல்லாத இடங்களில் கூட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளைத் திறக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார்; பரந்து வாழ்கிற ஏழை எளிய மக்களுக்கு வங்கிகளின் சேவைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார். கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வங்கிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றின என்று எல்லா அரசியல் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 1991-ல் நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற பிறகு அரசாங்கத்தின் பார்வை மாறத் தொடங்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் கருவியாக பயன்பட வேண்டும் என்றாலும் அவை லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் என்ற பார்வை கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. தனியார் வங்கிகளுக்கும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் 'சிவப்புக் கம்பள’ வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகளுடன் போட்டி போடுவதற்காக ஸ்டேட் வங்கியும் மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பலவிதமான சேவைகளை தொடங்கின. அந்த கவர்ச்சிகரமான வித்தைகளில் ஒன்றாகவே, கோடீஸ்வரர்களுக்கான கிளையை ஸ்டேட் வங்கி திறந்திருக்கிறது.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை விட தனியார் வங்கிகள் மீதும் வெளிநாட்டு வங்கிகள் மீதும் நம்மிடையே கவர்ச்சி கூடி இருக்கிறது. ஆனால் இன்னும் எண்ணற்ற கிராமப்புறங்களில் இந்த வங்கிகள் கிளைகளைத் திறக்க முன்வரவில்லை. அங்கெல்லாம் கிராம வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளுமே மக்களுக்கு தேவையான நிதி சேவைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளும் மக்களுடைய தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்கின்றன. ஆனால் இதை எல்லாம் நகர்ப்புறங்களில் வாழும் மனிதர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை; அவர்கள் மத்தியில், தனியார் வங்கிகளும் வெளிநாட்டு வங்கிகளும் நல்ல சேவைகளை வழங்குகிறார்கள் என்ற எண்ணமே பரவலாக இருக்கிறது. அந்த வங்கிகள் கடன்களை வசூலிப்பதற்கு கையாளும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்ற கண்டனங்கள் வந்த போதிலும், அந்த வங்கிகளின் மீது நமக்கு இருக்கும் கவர்ச்சி இன்னும் குறையவில்லை. அந்த கவர்ச்சியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக அரசு வங்கிகள் ‘புதுமையான’ வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்டேட் வங்கி அப்படி ஒரு முயற்சியாகவே கோடீஸ்வரர்களுக்கான கிளையைத் திறந்திருக்கிறது!

ஆனால், இதைக் கேள்விப்படும்போதே வேறு ஒரு கேள்வியும் எழுகிறது இந்திய மக்கள் அனைவரையும் எந்தவித காரணங்களுக்காகவும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஓர் அரசு, தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களை பணவசதியின் அடிப்படையில் பிரித்து வைப்பதை எப்படி அனுமதிக்கிறது என்பதே அந்தக் கேள்வி. இன்னும் அறுபது சதவீத இந்திய மக்களுக்கு வங்கிகளின் சேவைகள் போய்ச் சேரவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ‘காலாவதியாகிப் போன’ பொருளாதாரக் கொள்கையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை வணிக நிறுவனங்களாகவும் பார்க்க வேண்டியதுதான். ஆனால் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதேசமயம் அவை நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை, சேவை தான் செய்ய வேண்டும் என்றும் யாரும் சொல்வதில்லை. லாபம் ஈட்டுவதற்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் வங்கிகள் எடுக்கும் முயற்சிகளையும் யாரும் தடுக்கவில்லை. அவை எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன என்பதையும் அந்த விஷயங்கள் அரசுடைமையாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்துடன் ஒத்துப் போகின்றனவா என்பதையும் விவாதிக்கவே கூடாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் திறக்கப்பட்டிருக்கும் இந்தக் கிளையில் உள் அலங்காரங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல இருக்கின்றன என்பது செய்தி. மற்ற கிளைகளை விட இந்த ஒரு கிளைக்கு மட்டும் உள்கட்டமைப்புக்கு பல லட்சம் ரூபாய் கூடுதலாக செலவழிப்பது முறைதானா என்ற கேள்வியும் இயல்பாக தோன்றுகிறது. அந்தக் கிளையில் வேலை பார்க்கும் ஊழியர்களுடைய பணிநிலைமைகள் மற்ற ஊழியர்களை விட சிறப்பாக இருப்பதை நிர்வாகம் ஊழியர்களிடையே வேற்றுமை பாராட்டுவதாக ஊழியர்கள் நினைக்கக் கூடும். சாமான்யர்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது சாமான்யர்களை விலக்கி வைக்கும் ஒரு செயலை அரசு வங்கி செய்கிறது. அரசுக்கு சொந்தமான வங்கிகளுடைய செயல்பாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக இருக்கிறது. அல்லது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது உண்மையிலேயே அரசின் கொள்கை இல்லை! இதன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாருடைய நலன்களைப் பாதுகாக்கும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால், அதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

நன்றி: ரிப்போர்ட்டர் 19.09.10

Wednesday, September 15, 2010

எங்கே போவேனோ நீதி கிடைக்காவிட்டால்?

பிரதமர் மன்மோகன்சிங் அலங்காரமான அடுக்கு மொழியில் பேசி நம்மை எளிதில் கவர்ந்த அரசியல் தலைவர் அல்ல; அவர் நம்புகிற விஷயத்தை நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் என்பதே அவருடைய பெருமை. அதனாலேயே அவர் எப்போது என்ன பேசினாலும் நாம் கூர்ந்து அதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று அவர் சொல்லி இருக்கிறார். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி, திங்கட்கிழமை டெல்லியில் சில பத்திரிகை ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த செய்தி வந்த அதே நாளில் செய்தித்தாள்களில் வெளியான வேறு சில செய்திகளையும் பாருங்கள். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையான முறையில் நடைபெறவில்லை என்றும் அரசின் இந்த செயல் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டி இருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர்களின் சொத்து மற்றும் வருமானம் குறித்த தகவல்களை அளிக்காததற்கு பிரதமர் அலுவலகம் 10-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனத்தில் தன்னுடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி விஜயகுமார் நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். ஏற்கனவே இது தொடர்பாக டி.ஜி.பி. ஆர். நட்ராஜ் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ‘உரிய நடவடிக்கை எடுத்து ஒடுக்காவிட்டால், காவி பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக தலையெடுக்கும்’ என்று சொன்னது குறித்து விசாரிக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற விதி குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மன்மோகன்சிங் சொன்ன செய்தி வந்த அதே நாளில் இத்தனை நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்டத்தை மதிக்காத நிர்வாக முடிவுகள் பற்றிய செய்திகள்!

இந்த நிலைமை எதைக் காட்டுகிறது? நிர்வாகத்தின் அன்றாட அலுவல்களில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று பிரதமரைப் போலவே நாமும் சொல்லலாமா? அல்லது நிர்வாகம் அத்தனை தவறுகளைச் செய்கிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நிவாரணத்துக்காக நீதிமன்றங்களை நாடுகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டுமா? அரசாங்கம் எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளில் தலையிடுவதில்லை என்று நீதிமன்றங்களே கூட கடந்த காலத்தில் சொல்லி இருக்கின்றன. இருந்தாலும் நிர்வாக முறைகேடுகள், சட்டமீறல்கள் குறித்து புகார்கள் வரும்போது ஏதேனும் ஒரு சட்டப்பிரிவில் சொல்லப்பட்ட குடிமக்களின் உரிமையைக் காப்பதற்காக நீதிமன்றம் நிர்வாக முடிவுகளில் தலையிட நேர்கிறது. தனிமனிதர்களைப் பொறுத்தவரையிலும், எந்த ஒரு சாதாரண மனிதனும் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் பயணம் செய்ய விரும்புவதில்லை. இருந்தாலும் நிர்வாகத்தின் முடிவுகள் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதிக்கின்றன என்னும்போது வேறு நிவாரணம் இல்லாத நிலையில் நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது!

எப்போதெல்லாம் தங்களுடைய நிர்வாக அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிடுகிறது என்று அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பவும் தவறுவதில்லை. கடந்த 2007-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சியையே நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். “தமிழ்நாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆள நினைக்கிறார்கள்; முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்தைவிட தங்களுக்கு கூடுதலாக அதிகாரம் இருப்பதாக சில நீதிமன்றங்கள் நினைத்துக் கொள்கின்றன” என்ற தொனியில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசினார். ”பூனைக்கு மணி கட்டும் வேலையை அமைச்சர் செய்திருக்கிறார்” என்று நம்முடைய முதலமைச்சர் கருணாநிதியும் அந்தக் கருத்தை வழிமொழிந்தது போல் அப்போது பேசி இருந்தார்.

நிர்வாகத்தின் அன்றாடப் பணிகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பது சரிதான். ஆனால் அந்த நிலை ஏன் வருகிறது என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எந்த அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவி ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த தவறும்போது, நீதிமன்றமே தீர்வுக்கான இடமாக இருக்கிறது. அரசாங்கத்தின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதை உண்மையிலேயே அரசியல் தலைவர்கள் விரும்புவதில்லை என்றும் சொல்ல முடியவில்லை. பல சமயங்களில் நம்முடைய தலைவர்கள் நீதிமன்றத்தின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

செல்வாக்கு படைத்த பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக மக்களை இடம்பெயரச் செய்ய வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் புலம்பெயர வேண்டியிருக்கிறதே என்று தொழிலதிபருக்கு தொழில் தொடங்கவே அரசாங்கம் அனுமதி கொடுக்காமல் தடுக்க முடியும். ஆனால் அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள். அனுமதியும் கொடுக்க வேண்டும்; மக்கள் அதற்காக தங்களை தப்பாக நினைத்துவிடக் கூடாது; அந்த மாதிரி சமயங்களில் நீதிமன்றத்தை அவர்கள் ஒரு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொன்னால், அப்போது பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீதிமன்றம் நிர்வாகத்தில் தலையிடுகிறது என்று முணுமுணுப்பதில்லை!

இப்படி எத்தனையோ விஷயங்களை நீதிமன்றத்திடம் விட்டுவிட்டு இவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறை தடையாக இருக்கக் கூடாது என்று சில வழக்குகளில் தீர்ப்பு வரும்போது நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது. ஓரிடத்தில் அணை கட்டப்பட வேண்டுமா வேண்டாமா? அணையின் நீர் கொள்ளளவை உயர்த்தலாமா கூடாதா? ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் நதியில் இருந்து நீரை மற்ற மாநிலத்துக்கு கொடுக்க வேண்டுமா வேண்டாமா? கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும்? நதிகளை இணைக்க வேண்டுமா வேண்டாமா? இது போன்ற விஷயங்கள் மட்டுமல்ல, நம்முடைய குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதில் தொடங்கி நாம் யாருடன் படுக்க வேண்டும் என்பதுவரை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன என்பதை பிரதமர் மன்மோகன்சிங் நிச்சயம் அறிவார்.

ப்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு எதிராக பிரதமர் மன்மோகன்சிங் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உணவு தானியங்களை சேமிக்க முடியாமல் அழுகி வீணாக விடுவதற்கு பதிலாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லும்போது பிரதமர் பதில் சொல்கிறார். பிரதமர் யார் பக்கம் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியை விடுங்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய “இந்திய மக்களாகிய நாம்” எங்கு போய் நீதி கேட்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்?

நன்றி: ரிப்போர்ட்டர் 16.09.10

மறுபடியும் சோனியா

மறுபடியும் சோனியா

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த பதவிக்கு சோனியா காந்தி சார்பாக மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மத்திய அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து சோனியா காந்தியை மீண்டும் ஒரு முறை கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே, மீண்டும் சோனியாவைத் தான் தலைவராக கட்சி தேர்ந்தெடுக்கும் என்ற முடிவையும் எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள். இருந்தாலும் 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் அதிரடியாக பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்ததைப் போல, இப்போதும் ஏதாவது ஒரு முடிவை அவருடைய மனசாட்சி சொல்லிவிடுமோ என்று சிலருடைய மனதின் ஓரத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை!

‘நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்வதே உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதுதானே என்று நீங்கள் கேட்கக் கூடும். ‘காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கும்; சோனியாவே மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றோ அவர் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்றோ அந்தக் கட்சியில் இல்லாதவர்கள் பேசலாமா?’ என்று சிலர் நினைக்கலாம். சாதாரண மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களாக யார் வர வேண்டும் என்று கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் தேசிய அரசியலில் காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறது பாருங்கள்.

“நேரு குடும்பத்தைச் சேராத யாராவது ஒருவரிடம் கட்சித் தலைமையை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும். பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததைப் போல கட்சித் தலைவர் பதவியையும் அவர் தியாகம் செய்ய வேண்டும். இரண்டு முறைக்கு மேல் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர் வரக் கூடாது போன்ற கட்சி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றெல்லாம் அந்தக் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்து சொல்லி இருக்கிறார்! காங்கிரஸ் கட்சி அதற்கு சொல்லி இருக்கும் பதில் இன்னும் விசேஷம். “நாலு முறை என்ன, நாற்பது முறை நாங்கள் சோனியாவை எங்கள் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்போம்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் துவிவேதி வீம்பாக பதில் சொல்லி இருக்கிறார்!

மன்னராட்சியின் வாரிசுரிமை மரபுப்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி அலங்கரிக்கக் கூடாது என்றும் மக்களாட்சி மாண்பின்படி வேறு யாருக்காவது அந்தப் பதவியைக் கொடுத்து ஜனநாயக மரபுகளைப் போற்ற வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவுக்குத் தான் என்ன அக்கறை! ‘ஒருவர் ஒரே தடவை மூன்று வருடங்கள் மட்டுமே பா.ஜ.க.வில் தலைவராக இருக்க முடியும் என்று எங்கள் கட்சியில் விதி வைத்திருக்கிறோம்’ என்று ரவி சங்கர் பிரசாத் சொல்லி இருக்கிறார். 1980 முதல் 1986 வரை ஆறு வருடங்கள் அடல் பிகாரி வாஜ்பாய் பா.ஜ.க.வின் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை ஏன் அவர் மறைக்கிறார் தெரியவில்லை. சரி, விதிவிலக்காக வாஜ்பாயை மட்டும் அப்படி அனுமதித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 1986, 1993, 2004 என்று மூன்று முறை சேர்ந்து 13 ஆண்டுகள் வரை கட்சியின் தலைவராக அத்வானி இருந்திருக்கிறார். தற்போது தலைவராக இருக்கும் நிதின் கட்காரி கூட ரவிசங்கர் ஆசைப்படும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. ஆர்.எஸ்.எஸ். ஆணையை அல்லது வழிகாட்டுதலை ஏற்றுத்தான் கட்சி அவரை தலைவராக்கியது!

நேரு குடும்பத்து வாரிசுகள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இல்லாமல் வேறு யாராவது அந்தக் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுக்கு என்ன அவ்வளவு கரிசனம்? நேரு குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தபோது என்ன நடந்தது? ஏன் பா.ஜ.க அந்த நிலையை விரும்புகிறது? சமீபகால வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இந்திரா குடும்பத்தினர் தலைமையில் காங்கிரஸ் இல்லாமல் இருக்கும்போது, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பது புரிகிறது. 1996-ல் 13 நாட்கள் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோதும், 1998-ல் நிலையான ஆட்சி என்ற முழக்கத்தோடு வாஜ்பாய் பிரதமரான போதும் நேரு குடும்பத்து வாரிசின் தலைமையில் காங்கிரஸ் இல்லை. 1996-ல் நரசிம்மராவ் தலைமையிலும் 1998-ல் சீதாராம் கேசரி தலைமையிலும் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது! சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகிய பிறகும் 1999-ல் வாஜ்பாய் ஒருமுறை பிரதமரானார் என்பது உண்மைதான். ஆனால் அதன் பிறகு இரண்டு பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உருவானதற்கு சோனியாகாந்தியின் தலைமை முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நேருவும் அவருடைய குடும்பத்து வாரிசுகளும் தான் எப்போதும் உட்கார்ந்திருந்தார்களா? பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் வேறு யாருக்கும் கொடுக்காமல் தாங்களே ஆக்கிரமித்துக் கொண்டார்களா? 1947 முதல் 1964 வரை 17 வருடங்கள் நேரு பிரதமராக இருந்தார். இதில் 1951 முதல் 1954 வரை நான்கு வருடங்கள் மட்டுமே அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார். குடியரசு இந்தியாவின் நெருக்கடியான ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு நேருவே கட்சித் தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. 1959-ல் இந்திரா காந்தி ஒரு வருடம் தலைவராக இருந்திருக்கிறார். அதன்பிறகு தேர்தலில் தோற்று பிரதமர் பதவியை இழந்த பிறகு 1978-ல் தான் இந்திரா காந்தி மீண்டும் கட்சித் தலைவரானார்!

இதற்குப் பொருள் இந்திரா ஜனநாயக மரபுகளின்படி செயல்பட்டார் என்பதல்ல; இந்திராகாந்தி நெருக்கடி நிலையை கொண்டுவந்தார்; ஜனநாயக நிறுவனங்களின் அடித்தளங்களைத் தகர்த்தார். 1980-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் இரட்டைப் பதவிகளில் நீடித்தார். மன்னராட்சியைப் போல மகன் சஞ்சய் காந்தியை தனது அரசியல் வாரிசு என்று பிரகடனம் செய்தார். ஒரு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணமடைந்த போது, மூத்த மகன் ராஜிவ் காந்தியை அரசியலுக்குள் கொண்டு வந்தார். 1984-ல் இந்திரா படுகொலை செய்யப்பட்டபோது இயல்பாக அவருடைய வாரிசு ராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரும் பிரதமராக இருக்கும்போது கட்சித் தலைவர் பதவியை விடாமல் பிடித்துக் கொண்டார்! அவருக்குப் பிறகு வந்த நரசிம்மராவ் நேரு குடும்பத்து வாரிசு இல்லைதான். அவரும் பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் அவரே வைத்துக் கொண்டார். ஆனால் சோனியா காந்தி பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியையும் 1991-லேயே ஒதுக்கி விட்டார். 1998-ல் அதிரடியாக சீதாராம் கேசரியிடம் இருந்து தலைவர் பதவியைப் பறித்து அவர் தலைவரானார் என்பது வேறு கதை! எந்த வகையில் பார்த்தாலும் மற்றவர்களைவிட சோனியாகாந்தி வித்தியாசமாகவே தெரிகிறார்!

இப்படிச் சொல்வதால், சோனியா காந்தி மீதான தனிமனித வழிபாடு என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது! சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலும் இன்னும் நிறைய ஜனநாயக மரபுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. சோனியாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் என்பதற்காக ஜிதேந்திர பிரசாத் சில கற்றுக்குட்டிகளால் என்ன பாடு படுத்தப்பட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக வேர் வலிமையானது. எதிர்த்துப் போட்டியிட்டதற்காக ஒருவரை சிறுமைப்படுத்தும் தன்மை அந்தக் கட்சிக்கு கிடையாது. 1938-39இல் மகாத்மா காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் தோற்றுப் போன கதையை பல மேடைகளில் கேட்டிருப்பீர்கள். அதேபோல் 1950-ல் நேருவுக்கும் நேர்ந்திருக்கிறது. நேருவின் ஆதரவு பெற்ற ஆச்சார்யா கிருபளானியை எதிர்த்து சர்தார் வல்லபபாய் படேலின் ஆதரவுடன் புருஷோத்தம் தாஸ் தாண்டன் போட்டி போட்டிருக்கிறார். நேரு ஆதரித்த வேட்பாளர் தோற்றுப் போயிருக்கிறார்!

இப்படிப்பட்ட ஜனநாயக மரபுகளை தற்போது காண முடியவில்லை என்று சிலர் முணுமுணுப்பதை சோனியா கவனத்தில் கொள்ள வேண்டும். நான்காவது முறையாக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் சோனியா காந்தியின் முன் பல கடமைகள் இருக்கின்றன. அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை கொண்டு வருவதற்கான பணியை மிகவும் கவனமுடன் அவர் செய்து வருகிறார். “பழங்குடியினரைப் பாதுகாப்பதற்காக டெல்லியில் இருக்கும் உங்கள் வீரன் நான்” என்ற ராகுலின் வார்த்தைகள் ’ஆம் ஆத்மி’ பற்றிய அக்கறையை வெளிப்படுத்துகின்றன. மன்மோகன்சிங் தலைமையிலான அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவர்களுடைய வணிக நலன்களுக்கும் ஆதரவாக இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அவருடைய வாரிசும் ஏழை எளிய மக்கள் மீது அக்கறையை வெளிப்படுத்தி ‘பாலன்ஸ்’ செய்கிறார்கள். நாலு கால் பாய்ச்சலில் சீர்திருத்தப் பாதையில் ஓடத் துடிக்கும் மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்களுக்கு அவ்வப்போது ‘பிரேக்’ போடுகிறார்கள். திக்விஜய்சிங், மணிசங்கர் அய்யர், ஜெயராம் ரமேஷ் போன்ற எதிர்க் குரல்களை சில சமயங்களில் ஒலிக்கச் செய்வதும் அவசியமாகவே தெரிகிறது!

ஆயிரம் விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சியின் மீது ஒருவருக்கு இருக்கலாம்; ஆனால் அந்தக் கட்சி சாதி, மதம், இனம், வர்க்கம் என்று ஏதோ ஒன்றை அடிப்படையாக வைத்து பிறர் மீது வெறுப்பை வளர்க்காத கட்சி. இப்படித்தான் இன்றைய இளைய தலைமுறை அந்தக் கட்சியைப் பார்க்கிறது. இந்த சாதகமான அடித்தளத்தை விரிவுபடுத்தும் பொறுப்பில் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும், இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகளும் காங்கிரஸ் வரலாற்றில் கரும்புள்ளிகள். அவற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம். ஒருவர் எவ்வளவு பெரிய மகாத்மாவாக இருந்தாலும் சரி, அவர் தவறாகப் பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கையில், அவரிடத்தில் ஜனநாயக நிறுவனங்களின் அடித்தளத்தை தகர்க்கும் அதிகாரத்தை மக்கள் கொடுத்துவிடக் கூடாது!

நன்றி: ரிப்போர்ட்டர் 12.09.10

Wednesday, September 08, 2010

அரசியல் ஓய்வதில்லை

இன்னிக்கு பேப்பர் பார்த்துட்டீங்களா?” கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார்.

“இன்னும் இல்லைங்க..” என்றேன்.

ஓர் ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் ‘இளைய இந்தியா முதிய தலைவர்கள்’ என்று ஒரு செய்திக்கட்டுரை வந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி ரிப்போர்ட்டரில் எழுதலாம் என்றும் அவர் ஆலோசனை சொன்னார். இப்போதெல்லாம் அடிக்கடி பலதரப்பட்ட நண்பர்கள் அவரவர் பார்வையில் முக்கியமாகத் தெரியும் விஷயங்களைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள். வற்றில் பல நிர்வாகம் தொடர்பானவையாகவே இருக்கின்றன. ஆனால் அன்று அந்த நண்பர் சொன்ன செய்தி பொதுவான தன்மை கொண்டது. அந்த செய்தியைப் படித்த பிறகு, இளைய இந்தியாவின் முதிய தலைவர்கள் குறித்து எழுதலாம் என்றே தோன்றியது.

இந்திய மக்களின் சராசரி வயது 26. ஆனால், மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64. இந்தியப் பிரதமரின் வயது 78. வலிமையான 15 நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மிகவும் இளைய நாடு. அதாவது இளைஞர்கள் அதிகம் வாழும் நாடு. ஆனால் இந்தியாவின் அரசியல் தலைமை மிகவும் முதுமையானதாக இருக்கிறது. அமெரிக்க மக்களின் சராசரி வயது 37. அதிபர் ஒபாமாவின் வயது 49. ரஷ்ய மக்களின் சராசரி வயது 39. ரஷ்யக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவர் மெத்வதேவுக்கு வயது 44. ஐக்கிய ராஜ்யத்தில் வாழும் – எளிமையாக சொல்வதென்றால் பிரிட்டனில் வாழும் – மக்களின் சராசரி வயது 40. பிரதமர் டேவிட் கேமரானின் வயது 43. அதாவது மற்ற நாடுகளை விட இந்தியாவில் மக்களின் சராசரி வயதுக்கும் அரசியல் தலைமையின் வயதுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் அது ஏறத்தாழ மூன்றரை மடங்கு வித்தியாசமாக இருக்கிறது!

இதுதான் அந்த செய்தி. இந்த செய்தி தரும் விபரங்கள் நமக்கு என்ன கருத்தைச் சொல்ல வருகின்றன? இளைஞர்கள் புலிப் பாய்ச்சலில் முன்னேறத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை இந்திய இளைஞர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படக் கூடிய இளைய தலைமையாக இல்லை! வளர்ந்த நாடுகளான பிரிட்டனும் அமெரிக்காவும் இளைய தலைவர்களைக் கொண்டிருக்கின்றன. வளர்முக நாடான இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அரசுப் பதவிகளில் உட்காரும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வளிக்கும் வயது வரம்பு ஒன்று வரையறுக்கப் படவேண்டும். ராஜிவ் காந்தி தலைமையேற்றதைப் போல, ராகுல் காந்தி தலைமை ஏற்பது இந்த வயது வித்தியாசத்தைக் குறைக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால், விரைவில் இளைஞர்களில் ஒருவரான ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்!

அந்த செய்தி உணர்த்தும் கருத்து அதுதான். அந்த செய்தி சொல்வதைப் போல் இப்போதுதான் இந்தியா இருக்கிறதா? அல்லது எப்போதுமே இந்தியா முதியவர்களின் வழிகாட்டுதலில்தான் இருந்ததா? இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்தப் பொறுப்பை ஏற்கும்போது அவருக்கு வயது 58. ஏறத்தாழ 17 வருடங்கள் பதவியில் இருந்து இந்தியாவை குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேறச் செய்தபிறகு அவர் 75-வது வயதில் அவர் இறந்தார். அடுத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 60. அடுத்து இந்திரா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது அவருடைய வயது 48. அவருடைய மகன் ராஜிவ் காந்தி பிரதமராகும்போது அவருக்கு வயது 40!

ராஜிவ் காந்தி காலம் வரையிலும் அரசியல்வாதிகள் பதவி வகிப்பதற்கு வயது வரம்பு வேண்டும் என்று பெரிய அளவில் பேச்சு நடந்ததாகத் தெரியவில்லை. அப்போது இந்திய மக்களின் சராசரி வயது இன்று இருப்பதைப் போல மிகவும் இளமையாக இருந்திருக்காது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற கட்சிகள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் இருந்தன. ஏனென்றால், அந்தக் கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களைவிட வயதில் முதிர்ந்தவர்கள். இந்திரா காந்தியை தேர்தலில் வீழ்த்திய ஜனதா அரசாங்கம் 1977-ல் பொறுப்பேற்கும்போது, பிரதமர் மொரார்ஜி தேசாயின் 81. இரண்டு வருடங்களுக்குள் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங்குக்கு அப்போது வயது 76!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு ஓய்வுபெறும் வயது வரம்பு இருக்கிறது. நீதிபதிகளுக்கு இருக்கிறது; ராணுவ அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை என்று சிலர் தேர்தல் ‘சீர்திருத்தம்’ பேசுகிறார்கள். இப்படிப் பேசுகிறவர்கள் பொதுவாக எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்? சில தொழிலதிபர்கள் இப்படிப் பேசி இருக்கிறார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் வரும் ஆங்கில வணிக நாளிதழ்களில் எழுதுகிறவர்கள் அடிக்கடி இந்த கருத்தை வலியுறுத்துகிறார்கள். யாராவது முப்பது வயதைக் கடந்த கிரிக்கெட் வீரர் சரியாக விளையாடவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வயதைக் கடந்த பின்னும் வெட்கம் இல்லாமல் நம்முடைய அரசியல்வாதிகளைப் போல் விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலக மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள். சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் பற்றி எழுதும் போது, பதவி விலக மறுப்பது இந்தியாவின் தேசிய நோய் என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள்!

வயதானவர்களை அரசுப் பதவிகளில் இருந்து விலகச் சொல்வதன் மூலம் இவர்கள் ‘காலாவதியாகிப் போன’ சில அரசியல் கொள்கைகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கலாம். அதாவது முதிய அரசியல்வாதிகள் சிலர்தான் காலத்துக்கு ஒவ்வாத சில கொள்கைகளை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கக் கூடும். இப்படிப்பட்ட பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்தான் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். கொள்கை முடிவுகளை எடுத்துக் கொடுத்த பிறகு, நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்று சிலர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் அதற்கும் நிர்வாகத்தில் அரசியல் முடிவுகளே இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தலையீடு கூடாது என்ற பெயரில், அரசியல் அகற்றிய ஆட்சி நிர்வாகத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

தொழில் நிறுவனங்களை மேலாண்மை செய்வது போல் ஆட்சியை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் படித்த மேல்தட்டு மனிதர்கள் மத்தியில் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். அரசியல் அற்ற நிர்வாகம் என்ற இவர்களுடைய கொள்கைக்கு மாற்றாக நிற்கக் கூடிய கருத்துக்கள் எவை? சமத்துவமும் சமூகநீதியும்! அந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துப் போகும் பிம்பங்களாக இருக்கும் தலைவர்கள் யார் யார்? சமத்துவ அடித்தளத்தில் உருவான மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் அச்சுதானந்தன். அவருக்கு இப்போது வயது 86. சமூகநீதி அடிப்படையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி. அவருக்கும் இப்போது வயது 87. தங்களுக்கென்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் ஓரளவு செல்வாக்கோடு இருக்கும் முலாயம்சிங் யாதவுக்கு வயது 70. லாலு பிரசாத் யாதவுக்கு வயது 63!

இளைய தலைவர்களே பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் இன்று அரசு முன்வைக்கும் ‘வளர்ச்சி’யை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் ராகுல்காந்தி இவர்களுடைய நம்பிக்கையை தவிடுபொடியாக்கினார். பழங்குடியின மக்களிடம் பேசிய ராகுல், ”உங்களுடைய பிரதிநிதியாக டெல்லியில் நான் இருப்பேன்; கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். வாக்களித்தபடி உண்மையில் ராகுல்காந்தி பழங்குடியின மக்கள் இடம்பெயராமல் அவர்களுக்கான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்தினால், இவர்கள் ராகுலை ஒருவேளை கைவிட்டுவிடக் கூடும். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தேனாகத் தித்திக்கும் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று மந்திரங்களை ஜெபித்து, இன்றைய ‘வளர்ச்சிக்கான’ கதவை திறந்தவர் பி.வி.நரசிம்மராவ். அவர் பிரதமராக பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 80! அவருக்குப் பிறகு வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய், 1998-ல் ஆட்சிக்கு வந்தபோது அவருடைய வயது 74! உண்மையில் முதியவர்கள்தான் ‘பொருளாதார சீர்திருத்தங்களை’ செயல்படுத்தி இருக்கிறார்கள்!

பெரும்பாலான அரசியல்வாதிகள் பதவிகளை எளிதாக விட்டுக் கொடுக்கமாட்டார்கள் தான்! அதிகாரம் கைகளை விட்டுப் போவதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சாதாரணமான குடும்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் கூட விரும்பமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பெரும்பாலும் அரசியல் மாறிப் போன சூழலில், எந்த வயதினராக இருந்தாலும் பதவிகளை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதிகாரிகளைப் போலவோ அல்லது நீதிபதிகளைப் போலவோ அரசியல்வாதிகளும் கட்டாயமாக 60 அல்லது 65 வயதில் வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றால், தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய தலைவர்கள் ஓய்வு பெற வேண்டியதுதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வயது 62! காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிற ப.சிதம்பரத்துக்கு வயது 65! அந்த வரிசையில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஓய்வு பெறும் வயதை எட்டாமல் இருக்கிறார்!

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் இந்தியர் டாக்டர் மோகன் பகத் என்னும் பேராசிரியரை அண்மையில் அமெரிக்காவில் சந்தித்தேன். அவருடைய பெயரைக் கவனித்தீர்களா? மகாத்மா காந்தியும் பகத்சிங்கும் சேர்ந்த கலவை! பேராசிரியர் பணி தவிர, இந்திய வளர்ச்சிக்கான கழகம் என்ற லாப நோக்கில்லாத தன்னார்வ நிறுவனத்தில் முக்கியமான பணிகளையும் அவர் கூடுதல் சேவையாக செய்து வருகிறார். அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு வயது எதுவும் கிடையாதாம்! ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிற பணியை சிறப்பாக அவரால் செய்ய முடியும் வரை அவருக்கு அங்கு பணி உண்டு. முதுமை காரணமாக அவருக்கு மறதி இருக்கிறது, அவரால் திறம்பட பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்று மாணவர்களிடம் இருந்து புகார்கள் போகாதவரை பிரச்னை இல்லை!

அதைப் போல நம்முடைய தலைவர்களும் அரசுப் பதவிகளில் ஓய்வு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கட்டும். அவர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 09.09.10

Saturday, September 04, 2010

பயங்கரமான பசங்க

என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?”

அந்த நண்பர் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன எப்படிப் பண்ணிட்டேன்?” என்று திருப்பிக் கேட்டேன்.

“எல்லாம் நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சு.. திடீர்னு இப்படி நம்ம எம்.பி.க்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டீங்களே” என்றார் அவர்.

அப்போதுதான் எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரிந்தது. அன்று காலை வெளியான ’ரிப்போர்ட்டரில்’ எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதில் தவறில்லை என்று ‘எரிதழல்’ பகுதியில் நான் எழுதியிருந்ததை அந்த நண்பர் படித்திருக்கிறார். அந்தக் கருத்தில் அவருக்கு உடன்பாடில்லை!

ஒருவேளை அந்த நண்பர் ஒரேயடியாக நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாத நபர்களி்ல் ஒருவராக இருந்தி்ருந்தால், அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், என்னால் அவரைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அரசியல்வாதிகள் எது செய்தாலும் அவர்களைத் திட்ட வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்களை என்ன செய்ய முடியும்? அரசியல் என்ற சொல்லையே கெட்ட வார்த்தையாக நினைத்து முகம் சுளிக்கும் நண்பர்கள், நாம் அரசியல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? அவர்களுக்கு ராணுவப் புரட்சி நடந்து யாராவது சர்வாதிகாரியின் ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும் என்ற எண்ணம் இருக்கலாம். சரி, விடுங்கள். கனவு காண்பதற்கு அவர்களுக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன?

நம்மில் பலருக்கு ஏதாவது திரைப்பட ஷூட்டிங்கில் ஹீரோ அல்லது ஹீரோயின் அடிபட்டாலே அந்தச் செய்தியைப் பார்த்து மனம் வலிக்கும். ஆனால் தினம் தோறும் நிஜமா துப்பாக்கி ஷூட்டிங்கில் மனிதர்கள் செத்து விழுந்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ நாம் மரத்துப் போகிறோம். அதைப் பற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று நம்மைத் தடுக்கிறது; அப்படி ஒரு நிலையில் தான் நாம் காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் என்று தோன்றுகிறது.

“கடந்த மே மாதத்தில் மூணு பேர் வந்தார்கள். ஜூனில் அது 15 ஆச்சு.. ஜூலையில் அந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் பத்து நாட்களில் மட்டும் 57 பேர் வந்திருக்காங்க” என்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருக்கும் டாக்டர் சொல்கிறார். அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் மொத்த நோயாளிகளே இவ்வளவுதானா என்று நினைக்காதீர்கள். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்த அல்லது காயம்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையையும் அவர்கள் சொல்லவில்லை. பிறகு? ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சிறுவர்களின் எண்ணிக்கையே அது! குழந்தைகளாகவும் இல்லாமல் இளைஞர்களாகவும் இல்லாமல் இடைப்பட்ட பருவத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் வந்தவர்களுடைய எண்ணிக்கை அது. இதுபோல் இன்னும் ஸ்ரீநகரில் எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

உடல்காயங்களுக்கு அளிக்கும் சிகிச்சைக்கான வசதிக் குறைவுகள் ஒருபுறமிருக்க, அப்பகுதி மக்களின் மனக் காயங்களை ஆற்றவும் வசதிகள் இல்லை. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துப்பாக்கிச் சூடும் குண்டுவெடிப்புமாக இருக்கும் ஒரு பகுதியில் அதிர்ச்சிகளுக்கு உளவியல்ரீதியாக சிகிச்சை கொடுக்க ஒரு தனிப்பிரிவு இல்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த ஜூன் 11-ம் தேதி 17 வயதுப் பையன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனான். அதிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், அந்த ஆர்ப்பாட்டத்திலும் துப்பாக்கிச் சூடு என்று ஒரு விஷ வட்டம் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ‘காயம்பட்டு வரும் டீன் ஏஜ் பையன்களைக் காப்பாற்றுவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது” என்று சொல்கிறார் அந்த டாக்டர். ஏன்? “பெரும்பாலான குண்டுக் காயங்கள் தலையிலும் மார்பிலும் வயிற்றிலுமே இருக்கின்றன! மூன்று இடங்களிலும் பல காயங்களுடனும் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அதனால் சிகிச்சை கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன” என்று அந்த டாக்டர் சொல்கிறார்.

‘’இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்பவர்களின் அதிக பட்ச வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் இருக்கலாம். பத்துவயதுப் பையன்களைக் கூட பலத்த காயங்களோடு கொண்டுவருகிறார்கள். இங்கு கொடுக்கப்படும் சிகிச்சை பலனளிக்காமல் சிலர் இறந்து போகிறார்கள். நான் ஒரு மருத்துவர் என்ற போதிலும் அடிப்படையில் நான் ஒரு காஷ்மீரி. எங்கள் குழந்தைகளை இந்தக் கோலத்தில் பார்ப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று சொல்லும் அந்த டாக்டர் இறுதியில் என்ன சொல்கிறார் பாருங்கள்! ”இங்கு சிகிச்சை பெற்று குணமான பிறகு மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்குப் போய் ராணுவத்தின் மீது கல்லெறிவோம் என்று அந்தப் பையன்கள் சொல்கிறார்கள்; குண்டு காயம் ஏற்பட்ட பிறகு அவர்களுடைய கோபம் இப்போது அதிகமாகி இருக்கிறது” என்று அந்த டாக்டர் சொல்லி இருக்கிறார்.

‘தண்ணிக்குள்ள இறங்கினா குளிர் விட்டுப் போயிடும்’ என்று நம்மூர்களில் சொல்வார்களே, அதைப் போல முதல்முறை அடிபடும் வரைதான் அரசை எதிர்ப்பதற்கு அந்தப் பையன்களுக்கு பயம் இருக்கும் போலிருக்கிறது. ஒருதடவை களத்துக்குப் போய்விட்டால் அதன்பிறகு அவர்களால் அதில் இருந்து விலக முடியாது என்பதைப் புரிந்து கொண்டவர்கள், ‘பசங்க’ கையில் போராட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். காஷ்மீரில் அரசியல் இப்போது இளம் சிறுவர்கள் கையில் இருக்கிறது. சிறுவர்களை எதிர்த்து என்ன செய்தாலும் ராணுவத்துக்கு கெட்ட பெயரே கிடைக்கும் என்ற செயல்தந்திரத்தில் சிறுவர்களைக் களத்தில் இறக்கி விடுகிறார்கள். சிறுவர்களை விசாரணைக்கு அழைத்துப் போனால், அதுவும் நேர்மறையான பலன்களைத் தராது. எப்படிப் பார்த்தாலும் இந்தப் போராட்ட களத்தில் இருந்து கொஞ்சம் பேராவது பயங்கரவாதிகள் முகாமுக்குப் போய்ச் சேர்வார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த செய்தியைப் படிக்கும்போது எனக்கு கடந்த 2009-ம் வருடம் வெளியான நியூயார்க்’ என்ற இந்திப்படம் நினைவுக்கு வந்தது. கபீர்கான் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடித்த படம். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்து படித்துக் கொண்டிருக்கும் சமீர் ஷேக் என்ற இளைஞனின் கதை; 2001-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை தடுமாறிப் போகிறது. செப்டம்பர் 21-ம் தேதி பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் சமீர் ஷேக் கைது செய்யப்படுகிறார். ஒன்பது மாதங்கள் சிறையில் கடுமையான ‘விசாரணையை’ அனுபவிக்கிறார். பிறகு அவர் பயங்கரவாதி என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் சிறையில் நடந்த கொடுமைகளை அவரால் மறக்க முடியவில்லை. அதுவரை பயங்கரவாத சிந்தனை துளியும் இல்லாமல் அமெரிக்கனாகவே இருந்த சமீர் அதன் பிறகு பயங்கரவாதியாக எப்படி மாறுகிறார் என்பது அந்தக் கதை.

காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளும் நியூயார்க் திரைப்படமும் நமக்கு ஒரு எச்சரிக்கை உணர்வைத் தருகின்றன. பிரச்னையை தீர்ப்பதாக நினைத்து நாம் எடுக்கும் நடவடிக்கைகள் புதிய பயங்கரவாதிகளை உருவாக்கிவிடக் கூடாது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 05.09.10

Wednesday, September 01, 2010

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற எம்.பி.க்கள்

அந்த இளைஞருடைய பெயர் மார்க் பாயல். அவருடைய வயது 31; அவர் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையால் பெரிய அளவில் கவரப்பட்டிருக்கிறார்; ‘மாற்றத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அந்த மாற்றமாகவே நீ மாறி விடு’ என்ற காந்தியின் வாசகத்தில் மனதைப் பறி கொடுத்த மார்க் பாயல் ஒரு மாறுபட்ட வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். “பணம் ஆறாவது அறிவைப் போன்றது; அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் பயன்படுத்த முடியாது” என்று சிலர் சொல்வதை அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த 2008 நவம்பர் மாதம் முதல் அவர் பணத்தை கையால் தொடவில்லை. அப்படியென்றால், கடன் அட்டை, காசோலை ஆகியவற்றை அவர் பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். இல்லை.. அவர் பணத்தை பயன்படுத்துவதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்!

பிரிஸ்டல் நகரில் ஒரு பண்ணையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு கேரவன் தான் அவருடைய வீடு; அவருக்குத் தேவையான அளவு காய்கறியைப் பயிரிட்டு கொள்கிறார்; விறகு அடுப்பில் சமைக்கிறார்; சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார். அந்த சக்தியில் அவருடைய மடிக்கணினியும் செல்பேசியும் இயங்குகின்றன; சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், போரால் மனிதர்களுக்கு நேர்கின்ற துன்பம் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும் பணமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இதைத் தொடர்ந்து பணத்தைக் கைவிடுவது என்று முடிவு செய்து வாழ்ந்து வருகிறார். பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்த போது, உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் என்ற வார்த்தையையே அவர் கேள்விப்பட்டதில்லை என்கிறார். அதாவது கல்லூரிகளில் பொருளாதாரத்தைக் கற்றுக் கொடுப்பவர்கள் உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல், சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் கண்டு கொள்வதே இல்லை! இந்த வகையில் பொருளாதாரம் கற்ற மேதைகள் முன்வைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சாதாரண உயிரினங்களுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதை அவருடைய வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

அவரைப் போல நம்மால் பணம் இல்லாமல் வாழ முடியாது. ‘பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கை துரத்துதே’ என்று பாடிக் கொண்டே நாம் பொருள் தேடி அலைகிறோம். அப்படிப் பொருள் தேடும்போது கிடைக்கும் வேலையில் ஒருவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் இருநூறு சதவீதம் அதிகமாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது மாதம் 16000 ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு, அவருடைய நிறுவனம் திடீரென்று மாதம் 50000 ரூபாய் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் கம்பெனி நஷ்டத்தில் அல்லது நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போது அவருக்கு ஊதியத்தை கூட்டியிருக்கிறது என்றால், அந்த செய்தியைக் கேட்கும்போதே அவருடைய மனம் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போகும்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டும்; பஸ்ஸில் இடியும் மிதியும் வாங்கிக் கொண்டு கல்லூரி செல்லும் மகளை அல்லது அலுவலகம் செல்லும் மனைவியை இனி ஆட்டோவில் போகச் சொல்லலாம் என்றோ, அவர்களுக்கு ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கலாம் என்றோ அவருடைய மனம் கணக்குப் போடத் தொடங்கும். அப்படி ஒரு சம்பவம் நம்முடைய வாழ்க்கையில் நடந்தால், இன்னும் அதிகமாகக் கொடு என்று முதலாளியின் அறைக்குச் சென்று நம்மில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம்!

ஆனால் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படி ஓர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரோ அல்லது நம்மைப் போல் ஒருவரோ இல்லை என்பதை கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் நமக்கு உணர்த்தினார்கள்; சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் நம்மை விட வித்தியாசமானவர்கள் என்பதை அன்று மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்து நிரூபித்தார்கள். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த அந்த அந்த ஊதிய உயர்வு அவர்களுக்கு போதவில்லை. அவர்கள் அப்படி என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்? என்ன ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது? அந்த உயர்வு ஏன் அவர்களுக்கு போதவில்லை?

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக இருந்தது. இப்போது அது 50000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எம்.பி.க்களின் அலுவலக நிர்வாக செலவுக்காக கொடுக்கப்பட்டு வந்த தொகை 20000 ரூபாய். அது இப்போது 40000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. 20000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த தொகுதிப் படியும் 40000 ரூபாயாக கூட்டப்பட்டது. சொந்த வாகனம் வாங்குவதற்கு வட்டியில்லாத கடனாக இதுவரை 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அது இப்போது 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இவைதவிர, வழக்கம்போல இலவச விமானப் பயணம், ரயில் பயணம், தொலைபேசியில் குறிப்பிடத்தக்க இலவச அழைப்புகள் என்று தனிப் பட்டியல் வேறு.. சாலைப் பயணப்படியும் அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் அந்த அமளி நாடாளுமன்றத்தில் நடந்தது. அரசுச் செயலர்கள் 80000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது, எம்.பி.க்களுக்கு அதைவிட ஒரு ரூபாயாவது அதிகம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. இந்த விவகாரத்தை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவும் அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது. எம்.பி.க்களுக்கு 80001 ரூபாய் அடிப்படைச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. “இந்த பரிந்துரையை அரசு ஏற்காமல், நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டது” என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கோபப்பட்டார்கள். இதற்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் அலுவலக நிர்வாகச் செலவு 45000 ரூபாய் என்றும் தொகுதிப்படி 45000 ரூபாய் என்றும் மாதம் பத்தாயிரம் ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு நம்முடைய தலைவர்களும் சிறிது அமைதியாகி இருக்கிறார்கள்!

இந்த நிகழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் செய்திகளாக வந்தவைதான். இதையெல்லாம் பார்த்து பொதுமக்கள் பலர் ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்கள். அவர்களில் மிகவும் அதிகமானவர்கள் நம்முடைய எம்.பி.க்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்றார்கள்; அவர்கள் அப்படி என்ன வேலை செய்கிறார்கள் என்று கொந்தளித்தார்கள்; லஞ்சமும் ஊழலும் அவர்களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு ஊதிய உயர்வே தேவை இல்லை என்று பேசினார்கள். உணர்ச்சிவசப்பட்ட மத்திய தர உணர்வே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. எம்.பி.க்கள் மட்டும் அல்ல - அரசு ஊழியர்களோ, வங்கி ஊழியர்களோ அல்லது இன்ஷ்யூரன்ஸ் ஊழியர்களோ - யார் போராடினாலும் அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து அப்போது நம்முடைய எம்.பி.க்களும் பேசுவார்கள். அமைப்பு சாராத தொழிலார்களும் விவசாயிகளும் வறுமையில் வாடும்போது இவர்கள் அதிக சம்பளம் கேட்டு போராடுவது நியாயம்தானா என்று பிரசாரம் செய்வார்கள். ‘போராட்டம் நடத்துவோரை மக்களே கவனித்துக் கொள்வார்கள்’ என்று சொல்லி வன்முறையைத் தூண்டுவார்கள்!

அப்படியெல்லாம் கடந்த காலங்களில் நம்முடைய எம்.பி.க்கள் ‘ஜனநாயக விரோதமாக’ நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களுடைய கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை நாம் மறுத்துவிடக் கூடாது. ஊதிய உயர்வு கேட்டுப் போராடும் எல்லாருடைய போராட்டங்களிலும் இருக்கும் நியாயம் இவர்களுடைய கோரிக்கையிலும் இருக்கிறது. அவர்களுடைய செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக அவர்களுடைய நடத்தையை மாற்றிக் கொள்ளும்படி நாம் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தை மறுக்கக் கூடாது. சர்வதேச அளவில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கும் சம்பளத்தைவிட நம்முடைய எம்.பி.க்கள் மிகவும் குறைவாகவே வாங்குகிறார்கள். எட்டு இந்திய மாகாணங்களில் 42 கோடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்ற செய்தியை சில வாரங்களுக்கு முன்பு எரிதழல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அப்படி ஒரு சூழல் இந்தியாவில் இருக்கும்போது நம்முடைய பிரதிநிதிகள் அவர்களுடைய சம்பளத்துக்காக அமளியில் ஈடுபடுவது நியாயமா என்று பலர் கேட்கிறார்கள். அது போன்ற கேள்விகளில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொள்வதால், அவர்களுடைய நடத்தையை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைக்குப் பிறகான முதல் பத்தாண்டுகளில் வருடத்துக்கு சராசரி 124 அமர்வுகள் நாடாளுமன்றத்தில் இருந்தன என்றும் இப்போது அந்த சராசரி எண்பதைச் சுற்றி இருக்கிறது என்றும் ஒரு தகவல் சொல்கிறது. அதிலும் பாதி நாட்கள் அமளியில் கழிந்து விடுகிறது. மிக முக்கியமான மசோதாக்கள் கூட தீவிரமான விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 150 எம்.பி.க்கள் மேல் குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர்களில் 73 பேர் கொலை போன்ற கொடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. எழுபது கோடி மக்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் எழுபது சதவீதத்தினர் ரத்தசோகையுடனும் ஊட்டச்சத்து இல்லாமலும் இருக்கிறார்கள். 66 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று யுனிசெப் சொல்கிறது. இன்னும் எத்தனையோ குறைகள் அடிக்கடி இந்தப் பகுதியில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்தக் குறைகளைப் போக்குவதற்கும் நம்முடைய எம்.பி.க்கள் போராட வேண்டும். தங்களுடைய ஊதிய உயர்வுக்காக காட்டிய அக்கறையையும் கோபத்தையும் அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் நமது எம்.பி.க்கள் காட்ட வேண்டும்.

கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் சரியானதாக இருக்க வேண்டும் என்று சாதாரண மக்களுக்கு அரசியல் தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள். அதே ஆலோசனையை இப்போது நாம் அவர்களுக்கு திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுடைய சம்பளத்தை அவர்களே நிர்ணயம் செய்து கொள்வது சரியான வழிமுறையாகத் தெரியவில்லை. ஒரு சுதந்திரமான ஆணையத்தின் மூலம் இந்தக் குறையைப் போக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை அவர்களுடைய ஊதியம் திருத்தியமைக்கப்படலாம். கையெழுத்துப் போட்டுவிட்டு அவைக்கு வராமல் போகிறவர்களுக்கு சம்பளத்தைக் குறைக்கலாம். அவைக்கு ஒழுங்காக வந்து விவாதங்களில் சிறப்பாக பங்களிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுக்கலாம்.

ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருப்பவர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு தேவையா என்று உங்களில் சிலர் இன்னும் கேட்கலாம். எம்.பி. என்றவுடன் நீங்கள் விஜய் மல்லையா, நவீன் ஜிண்டால் போன்ற தொழிலதிபர்களை நினைத்துப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நம்முடைய எம்.பி. தென்காசி லிங்கத்தை நினைத்துப் பாருங்கள். ஊதிய உயர்வு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 02.09.10