Saturday, December 25, 2010

இவர்கள் ஆபத்தானவர்கள்!

“தொழில் நிறுவனங்களுக்காக ஆதரவு திரட்டும் ‘லாபியிஸ்ட்கள்’ கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்; எல்லை தாண்டிவிடக் கூடாது” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அல்லது அவர் உரக்கச் சொன்ன அந்த செய்தி ‘ராடியா டேப்ஸ்’ எழுப்பும் ஆரவாரத்துக்கு முன்னால் நமக்கு வெறும் முணுமுணுப்பாகக் கேட்கிறது! இவ்வளவு காலம் அதிகார மட்டங்களில் இயல்பாக நடந்து கொண்டிருந்த இந்த தரகுத் தொழில் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அப்பட்டமாக பொதுமக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த உண்மையை ஆட்சியாளர்களால் தாங்க முடியவில்லை. அதனால் மக்களின் பார்வையில் சேதமாகி நிற்கும் ‘ஜனநாயக அமைப்பைச்’ சரிசெய்ய முயல்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய இந்த தரகர்களை ஆங்கிலத்தில் ஏன் நாகரிகமாக ‘லாபியிஸ்ட்’ என்று அழைக்கிறார்கள்? பெரிய தொழில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகளைப் போல, அதிகாரத்தின் புறவாரத்தில் நின்று தேவையான காரியங்களை செய்து வாங்கிக் கொள்ளும் ’வலிமை’ கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற ‘லாபி’யில் நின்று கொண்டு நம்முடைய மக்களின் பிரதிநிதிகளை அணுகி, தங்களுக்கு ஆதரவு திரட்டும் நபர்களை முதலில் ‘லாபியிஸ்ட்’ என்று சொல்லி இருக்கலாம். இதற்குப் பொருள் என்ன? இந்த ‘லாபியிஸ்ட்’களுக்கு அதிகார பீடங்களின் ’லாபி’ அல்லது ‘புறவாரத்துக்கு’ மேல் போகும் சக்தி இல்லை. இது ஜனநாயகத்தின் ஆரம்ப கட்டத்தில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நிலைமைகள் வேறு. அதிகார பீடத்தில் யார் உட்கார வேண்டும் என்பதைக் கூட இவர்களே தீர்மானிக்கிறார்கள். நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ராடியா டேப்ஸ்’ உரையாடல்களில், இந்திய ஜனநாயகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அத்தனை போர்வைகளும் கிழிந்து தொங்குகின்றன!

அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று இதுவரை ஊடகங்களும் சில சமூக ஆர்வலர்களும் தீவிரமாகப் பேசி வந்தார்கள். அப்போதெல்லாம் கூட அரசாங்கத்தின் கொள்கைகளின் மீது சில பெரிய தொழில் நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்று எண்ணிக்கையில் குறைவான குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்த வகைப் பிரசாரத்தை அல்லது பரப்புரையை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இறுதி ‘எஜமானர்களுக்கு’ தங்களுடைய ‘சேவகர்களான’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை! ’இவர்களை நாம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறோம்; இவர்கள் நம்முடைய பிரச்னைகளை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் விவாதிப்பார்கள்; நம்முடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் ஏதாவது செய்வார்கள்’ என்று ‘கடவுளை’ நம்புவது போல அரசியல் தலைவர்களை நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளை எல்லாம் நம்முடைய பிரதிநிதிகள் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்!

’காலுக்குச் செருப்பும் தலைக்கு எண்ணெயும்’ இல்லாத கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் இருந்து ‘வறுமையை வெளியேற்றுவார்கள்’ என்று அவர்களை நம்பினோம்; அதன் மூலம் அந்த ஏழைகளைச் சிரிக்க வைத்து அந்த சிரிப்பில் ’இறைவனைக்’ காண்பார்கள் என்று எதிர்பார்த்தோம்; அந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் சிலரை மத்திய ஆட்சிக்கு அனுப்பி வைத்தோம்; ஆனால் அவர்கள் அங்கே போய் என்ன செய்திருக்கிறார்கள்? அரசியல் தரகர்களிடம் கெஞ்சியிருக்கிறார்கள்; ‘எனக்குப் பதவி வாங்கிக் கொடு; அவருக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்’ என்று மன்றாடி இருக்கிறார்கள். மக்களுடைய வேதனையைப் புரிந்து கொள்ளும் மென்மையான மனம் கொண்டவர்கள் என்று நாம் நம்பியவர்கள் கூட போட்டியும் பொறாமையும் பதவி ஆசையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்” என்பதே ராடியா டேப்ஸ் நமக்கு உணர்த்தும் செய்தி!

ஒரு குடும்பத்துக்குள் இருக்கும் பூசல்களை அல்லது ஒரு கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை அந்தக் கட்சியினர் டெல்லியில் வேறு கட்சியைச் சேர்ந்த பிரதமரிடமோ அல்லது கூட்டணியின் தலைவரிடமோ கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. அந்த விஷயங்களை எல்லாம் அந்தக் கட்சியின் தலைமையுடன் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் அந்தக் கட்சியின் குரல் ஒன்றாக ஒலிக்க வேண்டும் என்றும் நம்முடைய ‘ஜனநாயக’ உணர்வு அல்லது ‘இன’ உணர்வு நம்முடைய பிரதிநிதிகளிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், இவர்களோ அதிகாரத் தரகர்களிடம் எல்லா விஷயங்களையும் பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் அடுக்குகளில் இந்த தரகர்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்ற உண்மையே இவர்களை அவர்களிடம் எல்லாவற்றையும் பேச வைக்கிறது!

அமெரிக்காவில் இதுபோன்ற லாபியிஸ்டுகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு அல்லது தோற்கடிக்கப்படுவதற்கு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுபவர்களை ‘லாபியிஸ்ட்’கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளாக இயங்குகிறார்கள். அரசாங்கத்தின் கொள்கைகள் வகுக்கப்படுவதில் இந்த லாபியிஸ்டுகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். யார் யார் எந்தெந்த வகையில் எதற்காக ஆதரவு திரட்டுகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதைப் போல ஓர் அங்கீகாரத்தை இங்கே இருக்கும் லாபியிஸ்ட்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பலர் முயற்சி செய்கிறார்கள். லாபியிஸ்ட்கள் எல்லை தாண்டக் கூடாது என்று சல்மான் குர்ஷித் சொல்லும்போதே, அவர்களை அங்கீகரித்து விடுகிறார்!

இந்திய ஜனநாயகத்தில் இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தரகர்கள் தேவையில்லை. இந்திய ஆட்சிப்பணிக்கும் மக்களுக்கும் இடையில் கமிஷன் ஏஜெண்டுகள் அவசியம் இல்லை. ஆனால் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் என்ற பெயரிலும் ஆலோசனை அலுவலகங்கள் என்ற பெயரிலும் இயங்கி வந்த அதிகாரத் தரகர்கள், இப்போது ‘லாபியிஸ்ட்கள்’ என்று பகிரங்கமாகவே இயங்கத் தொடங்கி இருக்கிறார்கள். டெல்லியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படுவதாக செய்திகள் சொல்கின்றன. அரசுத் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களை அந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பழைய தொடர்புகள் மூலம் அரசு அலுவலகங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். வழக்கறிஞர்களோ நீதிமன்ற மனுக்கள், நோட்டிஸ்கள் மூலம் ‘மெலிதான மிரட்டல்களை’ முன்வைக்கிறார்கள். ஊடகங்களில் வேலை செய்யும் சிலர் தங்களுடைய செய்தி நிறுவனங்களுக்கு செய்தியை சொல்வதற்கு முன்பாக இதுபோன்ற தரகர்களுக்கு நாட்டு நடப்புகளைச் சொல்லும் அளவுக்கு அங்கங்கே விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயத்தில் என்ன விதைகள், என்ன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஆய்வு செய்து சொல்கிறது என்று நம்பினோமே, அது இந்த தரகர்களின் முடிவாக இருக்கலாமோ என்ற அச்சம் எழுகிறது. சில்லரை வணிகத்தில் வால்-மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க அரசு நினைக்கிறதே, அதுவும் வால்மார்ட்டுக்கு ஆதரவான தரகர்களின் தொழில் வெற்றிதானா என்ற சந்தேகம் வருகிறது. வாக்களித்த மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர்கள் வேறு யார் யாருக்கோ ஆதரவாக இருக்கும் தரகர்களின் ‘மாய வலைக்குள்’ வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை தங்கள் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்வதற்காக முன்னிறுத்தும் தரகு நிறுவனங்கள் செய்வதற்குப் பெயர் தொழில் அல்ல, ஊழல்! அதனால் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது. அரசியல் அரங்கில் இருந்து இந்த தரகர்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கோரிக்கையாக இருக்க முடியும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

சோதனை மேல் சோதனை

"அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவும் இல்லை; எனக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முன்வரவில்லை; அவர்கள் என்னை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை” என்றார் தாமஸ் டாம் சாயர். அவருக்கு வயது 61. அவர் ஒரு அமெரிக்கர். அவருடைய மேல்சட்டை, கால்சட்டை எல்லாவற்றிலும் ஈரம். சிறுநீரின் நெடி. ‘அவர்கள்’ அனுமதித்தவுடன், அவர் அப்படியே வந்து விமானத்துக்குள் ஏறினார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் கழித்தே அவர் கழிப்பறைக்குப் போய் ஆடைகளை மாற்றிக் கொண்டு வர முடிந்தது.

அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய். மற்றவர்களைப் போல் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவருடைய உடலுடன் ஒரு குழாயைப் பொருத்தி ஒரு பிளாஸ்டிக் பையில் சிறுநீரை சேகரித்து பிறகு கொட்டும்படி மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை செய்யும் காவலர்களுக்கு இதுபோன்ற நுட்பங்கள் எல்லாம் தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஓர் எதிர்பார்ப்பை நாம் வைத்திருப்பதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சோதனை விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அந்தக் காவலர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அவர்களிடம் சோதனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கும் ஒரு மனிதன் என்ன சொல்கிறான் என்பதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டாமா? அமெரிக்காவில் இருக்கும் டெட்ராய்ட் மெட்ரோபாலிடன் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு சோதனை அதிகாரிகளுக்கு ‘சந்தேகப்படும்படி இருக்கும் மனிதர்களை’ ‘முழுமையாக’ தொட்டுத் தடவி சோதனை செய்யலாம் என்ற விதி மட்டுமே கவனத்தில் இருந்திருக்கிறது.

தாமஸ் சாயர் அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ‘என்னைத் தனி அறைக்கு கொண்டு போய் கூடுதல் சோதனையைச் செய்யுங்கள். நான் ஒரு சிறுநீர்ப்பை புற்றுநோய் நோயாளி. என் சிறுநீரை சேகரிப்பதற்கு என் உடலோடு பை பொருத்தப்பட்டிருக்கிறது. சோதனை செய்யும் உங்கள் கைகள் அதன் முனையை வேகமாக தொட்டால், ஒட்டியது விட்டுப்போய் பையில் இருக்கும் சிறுநீர் கொட்டி விடும்” என்று மன்றாடி இருக்கிறார். ஆனால், அந்த சோதனை அதிகாரிகள் அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆடைக்குள் இந்தக் குழாயும் பையும் இருப்பது தெரியாமல், சாயருடைய உடைகளின் மேல் காவலருடைய கைகள் சோதனை செய்தன. உள்ளே வைத்திருந்த சிறுநீர்ப்பை உடைந்து அவருடைய உடைகளில் சிறுநீர் கொட்டியது. இது கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவம்!

மருத்துவ உதவியுடன் இருப்பவர்களும் மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு தனியறையில் சோதனை நடத்துங்கள் என்று கேட்பதற்கு அமெரிக்க விமான நிலைய விதிகள் அனுமதி அளிக்கின்றன. அவர்கள் உடலில் செயற்கையாகப் பொருத்தி இருக்கும் உறுப்புகளைக் கழற்றிக் காட்டுங்கள் என்று அதிகாரிகள் கேட்க மாட்டார்கள் என்று விதி சொல்கிறது. ஆனால் ‘யு.எஸ். ஏர்வேஸ்’ என்ற அமெரிக்க விமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். அந்தப் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். நோயால் பாதிக்கப்பட்ட மார்பகம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் செயற்கையாக ’மார்பகம்’ போல் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை சோதனையிட்ட காவலரின் கைகளில் அந்த செயற்கை மார்பகம் தட்டுப்பட்டிருக்கிறது. “இது என்ன என்று கேட்ட அந்தக் காவலர் அதை வெளியில் எடுத்துக் காட்டு என்று சொன்னார். நான் மிகவும் நொந்து போனேன்; அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்” என்றார் அந்த விமானப்பணிப்பெண்!

இவர்களைப் போல இன்னும் எத்தனையோ அமெரிக்கர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்க விமானப் பயணியிடம் தீவிரமான சோதனை நடத்தப்படும் போது, அது குறித்த விமர்சனம் வேறுவகையாக இருக்கும். அதில் இனவாதம், மாற்றுப் பண்பாட்டை மதிக்கத் தெரியாத ‘திமிர்’ பிடித்த அமெரிக்கர்கள் என்று புதிய குற்றச்சாட்டுகள் திணிக்கப்படாது. அண்மையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு இதுபோன்ற அதிரடி சோதனை நடந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அதிகாரி ஹர்தீப் பூரி என்ற சீக்கியருக்கும் இந்த சோதனை நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய ஊடகங்களில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன. ‘இனவாதக்’ கண்ணோட்டத்தில் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவதாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.

மீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் இந்திய அடையாளங்களைக் கொண்டிருந்ததால்தான் தீவிரமான சோதனைக்கு உள்ளானார்கள் என்று நம் அரசியல் ‘நிபுணர்கள்’ கருத்து சொல்கிறார்கள். மீரா புடவை அணிந்திருந்தார்; புடவையை ‘புஸ்புஸ்’ என்று உடலைச் சுற்றி இருக்கும் உடையாக அமெரிக்கர்கள் நினைக்கக் கூடும். அதற்குள் எதையேனும் மறைத்து வைக்க முடியும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் போலிருக்கிறது. சீக்கிய மரபுப்படி பூரி தலைப்பாகை வைத்திருந்தார். தலைப்பாகைக்குள் சிறிய ஆயுதங்கள் ஒளித்து வைக்க முடியும் என்று அவர்கள் அச்சப்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் இந்தியர்கள் என்பதற்காக சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜார்ஜ் பெர்னாண்டஸ், கமல்ஹாசன், ஷாருக் கான் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் அங்கே பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நம்மூரில் வி.ஐ.பி.க்களுக்கு நாம் கொடுக்கும் ‘மரியாதையை’ பிற நாடுகளிலும் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அதேசமயம், வெள்ளை அமெரிக்கர்களை விட மற்றவர்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் அவர்கள் சோதிக்கிறார்கள் என்ற கருத்தையும் முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது! நாம் வாழும் சமூகத்தில் நிலவும் கருத்துக்கள் நம்முடைய அதிகாரிகளின் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்வதால், அவர்கள் ‘சிலரை’ கடுமையாக நடத்துவதைப் போல், அமெரிக்க அதிகாரிகளும் நடந்து கொள்கிறார்கள் போலிருக்கிறது.

இது போன்ற புகார்களைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம்? பல நாடுகளில் இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகளை காவலர்கள் புரிந்து கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வது எளிது. சேலைக்கும் தாலிக்கும் இந்தியப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்க காவலர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கும் தனித்தன்மையான பண்பாட்டை ஒரு சராசரி காவல்துறை அதிகாரி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது மிகையாகவே தெரிகிறது. இந்தியாவில் நடக்கும் பரவலான சோதனைகளில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி, பர்தா போன்றவை படாத பாடு படுகிறது என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

மீரா சங்கரும் ஹர்தீப் பூரியும் நம்மைப் போல சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அல்ல. ‘டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்’ எனப்படும் அரசாங்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். இது போன்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றன. பலகாலமாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றுவதென்று அமெரிக்கா முடிவெடுத்திருந்தால், அதை மற்ற உலக நாடுகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்திய அதிகாரிகளை அமெரிக்க காவலர்கள் ’தடவு’ சோதனை செய்ததை விட, முதலில் சொல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களை அவர்கள் மனிதத்தன்மை இல்லாமல் நடத்தியதே கண்டனத்துக்குரியதாகத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்


உள்ளிருந்து கொல்லும் வைரஸ்!


"நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் கவலை அடைகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைக்காக ஜெர்மனிக்குப் போகும்போது விமானத்தில் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் பேசி இருக்கிறார். ஜனநாயகத்தின் பண்புகள் மீதும் இந்திய ஜனநாயக அமைப்புகள் மீதும் இந்தியாவின் பிரதமருக்கு மட்டும் மிகுந்த அக்கறை இருப்பதைப் போலவும் எதிர்க்கட்சிகளுக்கு அந்தக் கவலை இல்லை என்பதைப் போலவும் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு உங்களுக்கு ஓர் எண்ணம் உருவாகிறதா? அப்படி என்றால், பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த அரசியல்வாதியாக உருமாற்றம் பெற்றுவிட்டார் என்று அர்த்தம்!

டாக்டர் மன்மோகன்சிங் ஏன் இப்படி சொல்கிறார்? நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை; எந்த மசோதா பற்றியும் கலந்துரையாடல் அங்கு நடக்கவில்லை; கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கிய அந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது; காலவரையின்றி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கான திட்டம் இருந்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவற்றை எல்லாம் விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி விட்டன என்றும் அதனால் இந்திய நாடாளுமன்ற எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் சொல்கிறார்!

பிரதமரின் பார்வை குறித்து பேசுவதற்கு முன்னால், நாடாளுமன்ற நடைமுறையை சிறிது பார்க்கலாம். ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் மூன்று முறை கூடுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என்று மூன்று முறை கூடுகிறது. பட்ஜெட்டின் போது ஏறத்தாழ 35 அமர்வுகளும் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் போது ஒவ்வொரு தொடரிலும் 24 அமர்வுகளும் என்று வருடத்துக்கு 83 அமர்வுகள் நடக்க வேண்டும். இதற்கான செலவாக இந்த வருடத்தில் மக்களவைக்கு 347.65 கோடி ரூபாயும் மாநிலங்களவைக்கு 172.33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுதவிர, நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு இந்த வருடம் 7.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் சேர்த்து ஒரு நாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு அரசு 6.35 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இருபது நாட்களுக்கும் மேலாக நடந்த அமளியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 146 கோடி ரூபாய் என்கிறது ஒரு செய்தி!

இனி, பிரதமரின் கவலை நம்முள் உருவாக்கும் கேள்விகளைப் பார்க்கலாம். அடுத்தடுத்து அம்பலமாகி நிற்கும் ஊழல்களால் இந்திய ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மன்மோகன்சிங் நினைக்கிறாரா? வளர்ச்சி என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே எதுவும் இல்லாதவர்களாக இடம் பெயர வைக்கிறோமே அது நமக்கு எந்தவகையிலாவது பெருமை சேர்க்கிறதா? ’வளர்ச்சி’ என்ற பெயரில் பழங்குடியினரின் வாழ்க்கையை சிதைப்பவர்களை எதிர்ப்பவர்கள் ‘வேட்டை’யாடப்படுவது எந்த வகை ஆட்சிமுறையில் சேர்கிறது? சட்டத்தை இயற்றும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் நீதியை நிலைநாட்டும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் இந்த மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று சமன்செய்து கொள்ளும் வகையில் ஜனநாயக அமைப்புகள் இயங்குகின்றன. இப்போதைய நிலையை விட மிகவும் மோசமாக ‘ஜனநாயகத்தின் குரல்வளை’ நெறிக்கப்பட்ட அவசரநிலைக் காலங்களையும் கடந்து இந்திய ஜனநாயகம் ‘உயிர்ப்புடன்’ இருக்கிறது. அந்த ஜனநாயகம்தான் மக்கள் ஆதரவு இல்லாத டாக்டர் மன்மோகன்சிங் என்ற முன்னாள் அதிகாரியை நிதியமைச்சராகவும் பிறகு பிரதமராகவும் ஏற்றுக் கொண்டது!

கடந்த நவம்பர் முதல் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கிப் போனதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே காரணமா? நிச்சயமாக இல்லை. இந்திய ஊழல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்திய அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய முறைகேடாக ‘2ஜி விவகாரம்’ பார்க்கப்படுகிறது. ”இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே நான் எடுத்தேன்” என்று மீண்டும் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜா சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டுக் குழுவின் விசாரணைக்கு பிரதமரை அழைத்து பிரதமர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என்று காங்கிரஸ் தரப்பில் சொல்கிறார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோமே, அது பிரதமருக்குப் பொருந்தாதா? எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுக் குழு விசாரணையில் ‘தேவைப்பட்டால்’ நேரில் ஆஜராகி தன் அமைச்சரவையின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கே பிரதமர் முயன்றிருக்க வேண்டும். அதுவே அவருக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் பெருமை சேர்க்கும் செயலாக இருந்திருக்கும்!

இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா? எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆளும் தரப்புக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா? மக்களைப் பாதிக்கின்ற பொதுவான பிரச்னைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதும், அவை குறித்த கருத்துக்களை விவாதிப்பதும், அந்த விவாதத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதிப்பதும், இறுதியில் பெரும்பான்மையின் கருத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவதும் தானே நாடாளுமன்ற நடைமுறை? ஆளும் கூட்டணியும் எதிர்த்தரப்பு கூட்டணியும் தங்களுடைய நிலையில் இருந்து கொஞ்சம் கூட கீழே இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்ததே இந்த இழப்புக்குக் காரணம்!

இப்போது வரும் செய்திகளைப் பார்க்கும்போது இரண்டு தரப்பும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கூட தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ‘நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கிய எதிர்க்கட்சியை மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்’ என்று சோனியாகாந்தி பேசி இருக்கிறார். “நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதால் கூட சில சமயங்களில் நியாயம் கிடைக்கும்” என்று பாஜகவின் எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். பாஜகவும் இடதுசாரிகளும் அடுத்து வரும் நாட்களில் இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்திடம் எடுத்துப் போக இருப்பதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றத்துக்குள் நடக்காத விவாதங்கள் இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி அரங்கங்களில் நடக்கும்; செய்தித்தாள்களில் பத்திகளாக தொடரும்; மக்களை நேரில் சந்திக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உயிர்ப்புடன் வைத்திருக்கவே முயலும்!

அதேசமயம் கடந்த டிசம்பர் 13-ம் தேதியுடன் நம்முடைய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இந்திய ஜனநாயகத்தின் சின்னத்தை நிர்மூலமாக்குவதற்கு 2001 டிசம்பர் 13-ம் நாள் சில பயங்கரவாதிகள் முயன்றார்கள். இந்திய ஆட்சி முறையின் மையத்தைத் தகர்ப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. நாடாளுமன்றத்தின் வெளியில் இருந்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை நம்மால் எளிதில் முறியடிக்க முடிகிறது. நாடாளுமன்றத்துக்குள் நம்முடைய பிரதிநிதிகளாகப் போய் உட்கார்ந்து கொண்டு உள்ளே இருந்து இந்திய ஜனநாயகத்தை சிதைப்பவர்களை நாம் எப்படி எதிர்கொள்வது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Wednesday, December 15, 2010

மந்தமான மத்திய அரசு


”உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். இது தொடர்பாக நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்,” என்று ஒரு கடிதம் வந்தால் நம் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை. பிரதமருக்கு ஒருவர் கடிதம் எழுதினால், அதற்கு வழக்கமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் பதில் இப்படித்தான் இருக்கிறது. அப்படி ஒரு பதிலே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகருக்கும் கிடைத்தது. ராஜீவ் சந்திரசேகர் எப்போது பிரதமருக்குக் கடிதம் எழுதினார்? கடந்த 2007-ம் வருடம். அவர் எழுதிய கடிதம் எதைப் பற்றியது? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே அந்தக் கடிதத்தின் சாரம்.

அந்தக் கடிதத்தின் மீது பிரதமர் மன்மோகன்சிங் 2007 முதல் இன்று வரை என்ன நடவடிக்கை எடுத்தார்? அவராக எதுவும் செய்யவில்லை. 2ஜி தொடர்பான கோப்பில் அவர் எழுதிய குறிப்புகளும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலையிலும் கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்குத் தெரிந்த 2ஜி, சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று பத்திரிகைகளும் குறுஞ்செய்திகளும் கேலி செய்யும் வகையில் தான் அவருடைய செயல்பாடுகள் இருந்தன. தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற நிலையில் ஒருவேளை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பல செய்திகளைக் கசியவிட்டு அவற்றின் மூலமாக ஓர் அழுத்தம் ஏற்படுவதற்கு அவர் காரணமாக இருந்திருக்கலாம்.

இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் இடங்களிலும் அவருக்கு நெருக்கமான சிலரின் இடங்களிலும் மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது! கடந்த 2009, அக்டோபர் மாதம் 21-ம் தேதி ‘யாரோ’ சில தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மீதும் யாரோ சில தனிமனிதர்கள் மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது. அந்த வழக்கின்மீது விசாரணை நடத்தி இயல்பாக சில வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. மத்திய அரசையும் பிரதமரையும் கண்டிக்க வேண்டியிருந்தது. உச்சநீதிமன்றமும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய குரல்களுக்குப் பிறகே வேறு வழியில்லாமல் ஆ.ராசா அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஊடகங்களும் உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு நிலையை எடுக்காமல் இருந்திருந்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்காது!

இன்று ராஜா தவிர வேறு சில தனிமனிதர்களுடைய இடங்களை மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை செய்கிறதே, அந்தத் தனிமனிதர்களை அப்போது சி.பி.ஐ.க்கு தெரியாதா? அந்தத் துறையின் செயலர்களாக இருந்த அதிகாரிகளின் பெயர்களை ஏன் வழக்கு பதிவு செய்த போது சேர்க்கவில்லை? அமைச்சரின் பெயர் ஏன் விடுபட்டது? 2008-ம் வருடம் முதல் ஆ.ராசாவின் பெயர் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்த நிலையில், 2009-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருடைய பெயர் இல்லை என்பது சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. அரசியல் பருவநிலைக்கு தகுந்த மாதிரி, அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ‘சிபிஐ’ செயல்படுகிறதோ என்ற அச்சம் இதுபோன்ற வழக்குகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

ராஜா குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பது கூட இங்கு பிரச்னை இல்லை. அவருடைய முடிவால் அரசாங்கத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தால், அவர் மீண்டும் அதே துறையின் அமைச்சராகக் கூட பதவி ஏற்கலாம். யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஒரு லட்சம் கோடி ரூபாயை ராஜா சுருட்டி விட்டார் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீடு மிகவும் மலிவான விலையில் நடந்திருப்பதால், ஏதேனும் ‘பலன்களைப்’ பெற்றுக் கொண்டுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் ஒருவர்க்கு எழுவதை தவிர்க்க முடியாது!

இப்போது மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்திய சோதனைகளில் ’டயரி’ கிடைத்தது என்றும் ’முக்கிய ஆவணங்கள்’ சிக்கின என்றும் ‘வழக்கம்போல்’ செய்திகள் வருகின்றன. 2009-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதே யாராக இருந்தாலும் இதுபோன்ற ‘ஆவணங்களை’ அப்புறப்படுத்தி இருப்பார்கள். ‘தனக்குக் கிடைத்திருக்கும் பதவியும் அதிகாரமும் நிரந்தரமானவை’ என்று ஒருவர் நம்பினால் கூட, அமைச்சர் பதவியில் இருந்து விலகியவுடன் ‘ஆவணங்களை’ வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக் கூடும். ஆனால் ’பணம் யார் யாருக்கு எப்படி கொடுக்கப்படிருக்கிறது’ என்ற தகவல் டயரியில் இருப்பதாக பெயர்சொல்ல விரும்பாத வருமானவரித் துறை அதிகாரி சொன்னதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசாவின் ஒரு முடிவால், அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில், இவ்வளவு காலம் அமைச்சராக இருந்து, நிர்வாகத்தின் ’நெளிவு சுளிவுகளை’ அறிந்த ஒருவர் இப்படி ‘அப்பாவித்தனமாகவா’ ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பார்?

2006-ல் பதவி ஏற்ற நாள் முதல் இப்போதுவரை தி.மு.க அரசு தமிழகத்தில் செய்திருக்கும் நல்ல விஷயங்களால் கிடைத்த நல்ல பெயரைவிட, 2ஜி விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும் களங்கம் அதிகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் தமிழகத்தில் 2011-ல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ’ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல்’ என்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறும். தமிழக மக்கள் அதைப் பெரிய தேர்தல் பிரச்னையாக பார்க்கமாட்டார்கள் என்பதற்காக, அந்த விவகாரத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. ஊழலை தேர்தல் பிரச்னையாக மட்டும் சுருக்கி விட முடியாது. மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களும் வீணான முறைகளில் வாரி இறைப்பவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையில் அப்படி ஏதும் நடக்குமா? நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் நடப்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படும். ‘ஆஹா! நீதி கிடைத்து விட்டது’ என்று நாம் மயங்கி இருக்கும் நிலையில் விசாரணை மந்தமாகும்; புதிதாக முளைக்கும் வேறு ஒரு பிரச்னையில் நம்முடைய கவனம் குவியும். பழைய விவகாரங்களை நாம் படிப்படியாக மறந்து போய்விடுவோம். இதுதான் நம் நாட்டின் நிர்வாக நடைமுறை. எந்தப் புள்ளியில் இருந்து இந்த நடைமுறையை மாற்றுவது என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டியது அவசியம்!

’சட்டம் தன் கடமையைச் செய்யும்’, ’நீதியின் சக்கரம் மெதுவாக சுற்றலாம்; ஆனால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ போன்ற வார்த்தைகள் எல்லாம் நம்மை அமைதிப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே உதவும். இப்போது ராசாவின் வீடு மற்றும் பல இடங்களில் நடந்த சோதனைகள் காலதாமதமானவை என்றும் மிகவும் குறைந்த அளவிலானவை என்றும் புரிந்து கொள்வதற்கு ஒருவர் அரசியல் பண்டிதராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

மக்கள் காத்திருக்கிறார்கள்!

எனக்கு ஊக்கம் அளிக்கும் செய்தி ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்தேன்” என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி சொல்லி இருக்கிறார். கடந்த 2002-ம் வருடம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்த போது முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் முதல்வரின் கடமையை சரியாக செய்யவில்லை என்றும், அப்படிச் செய்து இருந்தால், பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் ‘கலவரங்களின்’ போது முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று சொல்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியைத் தான் ஊக்கம் தரும் செய்தி என்று அத்வானி தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் முழு உள்ளடக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

”இந்தக் கலவரங்களுக்கு நரேந்திர மோடி எந்தவகையிலும் காரணம் இல்லை. நடந்து விட்ட இந்தக் கலவரங்கள் துரதிருஷ்டவசமானவை. ஆனால், மோடி கலவரங்களைத் தூண்டி விட்டார் என்றோ கடமைகளைச் செய்யத் தவறினார் என்றோ சொல்வது பொய்” என்று குஜராத் அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி சொல்கிறார். ”உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு குஜராத் மாநில அரசு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது. சட்டத்தை மதித்து நடந்து கொள்வோம் என்று நாங்கள் கட்சிரீதியாக முடிவெடுத்தோம்; விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் வேலை செய்தன. இருந்தாலும் நாங்கள் சட்டத்தை நம்புகிறோம்” என்று பாஜகவின் ஷா நவாஸ் ஹூசேன் பேசி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்! நரேந்திர மோடியை முதலமைச்சராகக் கொண்ட அரசின் வழக்கறிஞர் வேறு எப்படிப் பேசுவார்? மோடியின் அரசியல் கட்சியான பாரதிய ஜனதா இந்த செய்திக்காக மகிழ்ச்சி அடையாமல் என்ன செய்யும்?

ஓர் உறையில் போட்டு ஒட்டப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன என்பது உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் வரை யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தாலும் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை ’யாரோ’ ஊடகங்களுக்கு கசிய விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தக் ‘கசிவே’ ந்த செய்தியாகி இருக்கிறது. அப்படி வெளியாகி இருக்கும் செய்தியின்படி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த குஜராத் படுகொலைகளில் நரேந்திர மோடியைச் சேர்த்துப் பார்க்கும் வகையில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. அந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறதா அல்லது வேறு என்ன செய்யப் போகிறது என்பதை அறிய குஜராத்தில் நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்தனைபேரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சாகியா ஜாஃப்ரி என்ற பெண்மணியும் இந்த நீதிக்காக காத்திருக்கிறார்!

அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார் என்று புகார் செய்து வழக்கு தொடர்ந்தார். அவருடைய கணவர் எஹசான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அவருடைய வீடு அஹமதாபாத் நகரில் குல்பர்க் சொசைட்டி என்று அழைக்கப்படும் குடியிருப்பில் இருந்தது. கடந்த 2002, பிப்ரவரி 28-ம் தேதி எஹசான் ஜாஃப்ரி ஒரு கும்பலால் தீயிட்டுக் கொல்லப்பட்டார். முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய அமைச்சரவை சகாக்கள், காவல்துறை, அதிகாரிகள் அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான அவர்களுடைய கடமைகளைச் செய்திருந்தால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும் சாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டி இருக்கிறார். சாதி,மதம், பாலினம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து எல்லா உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சொல்லும் அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியை ஏற்றுக் கொள்பவர்கள், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது அவருடைய புகார்!

கலவரம் மற்றும் படுகொலைகள் தொடர்பான மாநில அரசின் காவல்துறையே விசாரணை செய்தது. அந்த விசாரணை நியாயமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக் குழு நரேந்திர மோடியை நேரில் அழைத்து விசாரித்தது. அரசிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் ஆவணங்களைப் பெற்று தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இதற்கெல்லாம் பிறகு இப்போது இறுதியாக, சிறப்பு விசாரணைக் குழு ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறது.

இந்த புகாரைக் கொடுத்த சாகியா ஜாப்ரியின் கணவர் எஹசான் ஜாஃப்ரி எப்படி கொல்லப்பட்டார்? அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது? கடந்த 2002, பிப்ரவரி மாதம் 28-ம் தேதி காலை ஒன்பது மணி அளவில் ஒரு கும்பல் குல்பர்க் சொசைட்டி வீடுகளின் முன்னால் திரண்டு நின்றது. அங்கு குடியிருக்கும் முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் முழக்கங்களை அந்தக் கும்பல் எழுப்பியது. நண்பகலுக்குப் பிறகு அந்தக் கும்பல் அங்கு குடியிருந்த முஸ்லீம்களைத் தாக்கத் தொடங்கியது. அங்கேயே குடியிருந்த எஹசான் ஜாப்ரியின் வீட்டுக்குள் அடைக்கலமாக மக்கள் வரத் தொடங்கினார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப்பினர் என்ற வகையில் அவருக்கு எப்படியும் எந்த ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையில் முஸ்லீம்கள் அவருடைய வீட்டுக்குள் புகலிடம் தேடி இருந்திருக்கக் கூடும். முதலமைச்சர் நரேந்திர மோடியில் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக எந்திரத்தின் முக்கிய பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்று பலரிடமும் எஹசான் ஜாஃப்ரி தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஒரு கும்பலின் வன்செயல்களுக்கு பலியாகப் போகும் அவலநிலையில் இருந்து மீட்கப்படுவதற்கு உதவி செய்யுமாறு அவர்களிடம் கெஞ்சி இருக்கிறார்!

காலை ஒன்பது மணியில் இருந்து அவர் எழுப்பிய குரலைக் கேட்டு யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக, முதலமைச்சர் மோடி தொலைபேசியில் பேசும்போதே அவரை அவமதித்ததாக சாட்சிகள் சொல்கிறார்கள். காவல்துறையில் இருந்த சில அதிகாரிகளும் ’கலவரத்தை தடுக்க வேண்டாம்’ என்ற உத்தரவு இருப்பதாக சொல்லி, அவருக்கு உதவ மறுத்ததாக சொல்லப்படுகிறது. யாருமே நம்மைத் தடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிச்சயமான பிறகு மதியத்துக்கு மேல் அந்தக் கும்பல் ஜாஃப்ரியின் வீட்டுக்குப் போய் அவரையும் அவருடன் அங்கு இருந்தவர்களையும் எரித்துக் கொன்றிருக்கிறது. அன்று சாயங்காலத்துக்குள் அந்த சொசைட்டியில் 69பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது செய்தி. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த மாநிலத்தில் நடந்தது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி! எல்.கே.அத்வானியும் அப்போது இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். அந்த அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு இவர்கள் தார்மீகரீதியாக பொறுப்பாக மாட்டார்கள் என்றால் வேறு யார்தான் பொறுப்பாவார்கள்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்