Tuesday, July 05, 2011

அன்னையின் நிழலில்….

“நீங்க இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா, நான் அழுதுடுவேன்,” என்று குழந்தைகள் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் அந்த மாதிரிப் பேசும் குழந்தைகளையோ வளர்ந்த மனிதர்களையோ பார்த்திருக்கக் கூடும். அவர்களை அவர்கள் விருப்பப்படி விட்டுவிட வேண்டும். மாறாக அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக யாராவது அவர்களிடம் ஏதாவது பேசினால் போதும். கண்களில் கண்ணீர் உடனடியாக எட்டிப் பார்க்கும். அதைப் போன்ற ஒரு காட்சியே, அந்த செய்தியைப் பார்த்ததும் என்னுடைய நினைவுக்கு வந்தது. அது என்ன செய்தி?

ஐந்து அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு அவர்களுடன் ஒன்றரை மணி நேரம் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசி இருக்கிறார். பல விஷயங்களைப் பற்றி அவர்களிடம் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்தே முதலில் சொன்ன காட்சியை நினைவுபடுத்தியது. “இந்த மாதிரி அரசாங்கத்தை செயல்பட விடாமல் முற்றுகையிட்டால், விரக்தி அதிகமாகும்; வளர்ச்சிக்காக பாடுபடும் எண்ணம் குறைந்துவிடும்” என்பது அவர் சொன்ன செய்தி. அவருடைய அரசாங்கத்தை யார் செயல்படவிடாமல் ‘கெரோ’ செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு உடனடியாக உங்களிடம் பதில் இருக்கும். ஆனால் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.

“ஒரே நேரத்தில் குற்றம் சாட்டுபவர்களாகவும் விசாரணையில் வழக்காடுபவர்களாகவும் நீதிபதிகளாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன,” என்று மன்மோகன்சிங் மனம் பொருமி இருக்கிறார். அதாவது ஊடகங்கள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன; விசாரணை நடத்துகின்றன; தீர்ப்பும் வழங்கி விடுகின்றன என்று ஊடகங்களைக் குறை சொல்கிறார். “காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசலை உருவாக்குவதற்கு ஊடகங்கள் முயல்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி சில வாரங்களுக்கு முன்னால் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அதைப் போலவே மத்திய அரசாங்கத்தில் எதுவுமே நடக்காததைப் போலவும் ஊடகங்களே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து ‘விசாரணை’ நடத்தி தீர்ப்பு வழங்கிவிடுவதைப் போலவும் அவர் சொல்லி இருக்கிறார்!

ஊடகங்கள் என்ன செய்கின்றன? சில பிரச்னைகளை எழுப்புகின்றன. அவற்றின் மீது விவாதங்களை நடத்துகின்றன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அந்த சிக்கல்கள் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. எதிர்க்கட்சிகள் அவை குறித்து அறிக்கை விடுகின்றன; ஓரிரு கட்சிகள் மட்டுமே போராட்டங்களை நடத்துகின்றன. ஜனநாயக அமைப்பில், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை முற்றுகையிடும் நடவடிக்கை அல்ல; நிர்வாகத்தை முடக்கிப் போடும் செயல்பாடும் அல்ல; ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் இதற்காக வேதனைப்படுகிறார்; ஊடகங்களைக் குற்றம் சாட்டுகிறார். அப்படி என்றால் அவர் வேண்டுவது என்ன? முழு அளவிலான சர்வாதிகாரமா?

“எல்லா உண்மைகளும் தெரியாத நிலையில் முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதிகமாக உண்மை தெரிந்த நிலையில், தணிக்கை அதிகாரி, நாடாளுமன்றம், ஊடகங்கள் ஆகியவை அரசாங்கத்தின் முடிவுகளை ஆய்வு செய்கின்றன. இந்தச் சூழ்நிலையில் செயல்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்றும் அவர் பேசி இருக்கிறார். இதற்கு என்ன பொருள்? நிர்வாகத்தில் முடிவெடுக்கும்போது முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிவதில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு முறையும் ஊழல் புகார் வரும்போது, ‘என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மன்மோகன்சிங் சொன்னதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது.

“தொலைத் தொடர்புத் துறையில் என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. தலைமைக் கண்காணிப்பு ஆணையரிடம் யாரோ ஊழல் புகார் கொடுத்தார்கள்; சிபிஐ விசாரித்தது; அதன் பிறகும் கூட அந்த முறைகேட்டில் அமைச்சருக்கு எதிரான ஆதாரம் எதுவும் இருப்பதாக சிபிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை” என்று அந்த ஐந்து ஆசிரியர்களிடம் பேசும்போது மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் வேறொரு தகவலையும் அவர் சொல்கிறார். அவரை செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்கிறார். அவருடைய தலைமையில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முழுக்க முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார். அவருடைய இரண்டு கூற்றுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

இருந்தும் அவர் பேசியாக வேண்டியிருக்கிறது; ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரவை சகாக்களால் அரசாங்கத்தின் நற்பெயர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறை 2009-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன; இப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் அரசாங்கத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இழப்புகளையும் சேதங்களையும் சரிசெய்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இருக்கிறது. அதனால் அவர் ஊடகங்களை அழைத்துப் பேசி இருக்கிறார்!

அதேசமயம், அனைத்து ஊடகங்களையும் அழைக்காமல் தேர்வுசெய்யப்பட்ட ஐந்து அச்சு ஊடக ஆசிரியர்களிடம் மட்டும் பேசுகிறார். அவர்கள் மூலமாக தான் சொல்ல நினைப்பதை மக்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவருடைய எண்ணம். அது நிறைவேறி இருக்கிறது. ‘நான் அதிகாரம் இல்லாத பிரதமர் இல்லை; அரசு என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது; லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை; ஆனால் என் அமைச்சரவை சகாக்கள் தான் அதை எதிர்க்கிறார்கள்’ என்று அவருடைய கருத்துக்களை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கி மக்களிடம் சேர்த்தன.

“ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை; அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திடம் குவியும் லைசன்ஸ் ராஜ்யம் மீண்டும் வந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்று அவர் மக்களை எச்சரிக்கிறார். உரிமங்களைப் பெறுவதற்காக அரசாங்கத்திடம் காத்திருக்க வேண்டியிருப்பதாலேயே லஞ்சமும் ஊழலும் பெருகுகிறது என்று நமக்கு கற்பித்தார்கள். இப்போது பெருகி இருக்கும் லஞ்சத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ‘லைசன்ஸ் ராஜ்யம்’ வந்துவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்!

பரபரப்பான செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. ஊடகங்களுடன் பிரதமர் மனம் திறந்து பேசினார், ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்ற திக்விஜய்சிங்கின் பேச்சு போன்றவை பட்டையைக் கிளப்பும் செய்திகள். அவற்றுக்கு நடுவே கவனிக்கப்படாமல் நம்மைக் கவலைப்படச் செய்யும் செய்தி என்ன? 2002-ல் குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ‘வழக்கமான அரசு நடைமுறை’ காரணமாக அழிக்கப்பட்டது என்பதே அந்த செய்தி!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, July 01, 2011

இருட்டினில் மறையும் நீதி

“கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ‘ஸ்பான்சர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அது தெரிவதில்லை!” இந்த வரிகளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ரிப்போர்ட்டர் இதழில் இந்த எரிதழல் பகுதியில் நான் எழுதிய முதல் பத்தியின் கடைசி வரிகள். கடந்த 11.07.2010 இதழுக்காக ஜூலை இரண்டாம் தேதி நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். எதைப் பற்றி? பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது குறித்த விமர்சனமாக அது எழுதப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து அதே பிரச்னையைப் பற்றி மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. இடையில் எத்தனையோ முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம்!

எதற்காக நான் எழுதிய அந்த பத்தியை இங்கு நினைவூட்டுகிறேன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதே பிரச்னை.. அரசாங்கத்திடம் இருந்து அதே வாசகங்கள்.. “விலை உயரும் போது சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம்; ஆனாலும் நாட்டு நலன் கருதி சில கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் இப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி! அதே சொற்கள், அதே பொருள்! அன்று பேசியவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி! இப்போது அவர் இன்னும் ஒரு படி மேலே ஏறி உயரத்தில் இருந்து கொண்டு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குகிறார். விற்பனை வரியைக் குறைத்து, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைக் குறைந்த விலையில் அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசுகள் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்!

ஒரு லிட்டர் டீசலின் விலை மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது; சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலை ஏறி இருக்கிறது. இந்த விலையேற்றத்தை ஏறத்தாழ எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்து இருக்கின்றன. “உத்தரப் பிரதேசத்தில் சாமான்யனுக்கு ஆதரவாக வேஷம் போடும் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது” என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாட்டி இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மெல்லிய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.

திமுகவின் எதிர்ப்பை ஏன் மெல்லிய எதிர்ப்பு என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழக் கூடும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை சொல்கிறது. மிகவும் தீவிரமான கண்டனச் சொற்கள் இல்லையே என்றெல்லாம் பேசுவதில் பொருள் இல்லை. ஏதோ இந்த அளவிற்காவது, விலையேற்றம் நியாயமான செயல் அல்ல என்று சொல்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். முதலமைச்சர் ஜெயலலிதா விலைஉயர்வைக் கண்டித்திருக்கிறார் என்பதால் நாம் அந்த விலையேற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்காமல் இருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

“லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்ப்பதால் அவருடைய அதிகார வரம்பு குறைக்கப்படுகிறது; அதனால் நான் அந்த ஆலோசனையை எதிர்க்கிறேன்” என்று ஜெயலலிதா சொல்வதை நினைத்துப் பாருங்கள். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி சொன்னதன் எதிர்விளைவு என்று சிலர் நினைப்பதை எப்படி தடுக்க முடியும்? அதையும் மீறிய அரசியல் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

இதுவரை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு சொல்லி வந்த காரணம் மக்களிடம் இப்போது எடுபடவில்லை என்பதை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதுதான் இங்கு விலையேற்றத்துக்குக் காரணம் என்ற பழைய பல்லவி இன்று பொருந்தாது என்பதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் விலை குறையும் போது இங்கு விலை குறைவதில்லை. இதற்கு என்ன காரணம்? இங்கு விலை ஏறுவதற்கு மத்திய அரசு விதித்திருக்கும் உற்பத்தி வரி, சுங்க வரி ஆகியவையும் மாநில அரசின் விர்பனை வரியும் காரணம் என்பதை பரவலான பிரசாரம் மூலமாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் காதில் பூச்சுற்ற முயற்சி நடக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமையை மத்திய அரசு வைத்திருக்காது; எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தாகி விட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுங்க வரிக்கோ அல்லது உற்பத்தி வரிக்கோ எந்த பாதகமும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். ஆனால் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்! மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதை ஆமோதிக்கிறார்!

அதாவது “நாங்கள் ஐம்பது ரூபாய் விலை உயர்த்துவோம்; நீங்கள் உங்கள் வருவாயில் 14 முதல் 15 ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று மத்திய அரசு மாநில அரசுகளைச் சொல்கிறது. டெல்லிக்குப் போக வேண்டியது தமிழகத்தில் இருந்து போய்விடும்; சென்னைக்குக் கிடைக்க வேண்டியதை தமிழகம் இழக்க வேண்டும். இதை ஒரு தீர்வாக மத்திய அரசு சொல்கிறது; மாநில சுயாட்சி பற்றிப் பேசுபவர்கள் அதை ஏற்றுக் கொண்டு இன்றைய தமிழக அரசுக்கும் ஆலோசனை சொல்கிறார்கள். தமிழ்நாட்டு நலனில் இருக்கும் அக்கறையை விட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நலனில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடே இதன் மூலம் வெளிப்படுகிறது!

இந்த விலை உயர்வால் நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? ஏற்கனவே சரக்குக் கட்டணங்களை லாரி உரிமையாளர்கள் உயர்த்திவிட்டார்கள்; ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் அதிரடியாக அதிகரித்து இருக்கின்றன. காய்கறிகளில் தொடங்கி அனைத்துப் பொருட்களின் விலையும் படிப்படியாக எகிறத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலின் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறவர்களுக்கு விலையேற்றத்தின் கடுமையான விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம்மால் அவர்களைப் போல இருக்க முடியாது!

குமுதம் ரிப்போர்ட்டர் 07.07.11

எதிராக இருப்பது யார்?

கடிதம்! நம்மில் பலருக்கு முற்றிலுமாக மறந்து போன ஒரு பொருள்! தாளும் பேனாவும் எடுத்து நாம் கடிதம் எழுதி வருடங்கள் ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது. இருந்த போதிலும் இன்னும் நமக்கு கடிதத்தை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது யார்?

அரசியல்வாதிகள் தான்! உள்ளூர் பிரச்னையில் இருந்து உலகப் பிரச்னை வரை டெல்லிக்கு கடிதம் எழுதும் தலைவர்கள்! டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள்! நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா? ஆம். கடிதத்தின் நகலை உடனடியாக ஊடகங்களில் வெளியிட முடியும்!

அப்படி ஊடகங்களில் வெளியான ஒரு கடிதத்துக்கு சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஊழல் எதிர்ப்பு ‘நாயகன்’ அன்னா ஹசாரேக்கு அவர் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஒரு முறையும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஒரு முறையும் அன்னா ஹசாரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று சோனியாவிடம் கண்ணைக் கசக்கி இருந்தார். அதற்கு சோனியா காந்தி “உங்களை சிலர் விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை; அவர்களை நான் ஊக்கப்படுத்தவும் இல்லை” என்று பதில் அனுப்பி இருந்தார்!

ஆனால், சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்; அதேசமயம் கட்சியில் இருந்து வரும் பொறுப்பற்ற விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவும் இல்லை. திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவேதி போன்ற தலைவர்கள் அன்னா ஹசாரே அணிக்கு எதிராகவும் ராம் தேவ் குழுவுக்கு எதிராகவும் ‘பிய்த்து உதறுகிறார்கள்’; உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களை மட்டுமா எதிர்த்துப் பேசுகிறார்கள்? அல்லது அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துவதோடு நின்று விடுகிறார்களா என்ன?

அவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்; நாடாளுமன்றம் பெரியதா அல்லது சிவில் சமூகம் பெரியதா என்று புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். ஊழலை எதிர்த்துத் தானே அன்னா ஹசாரே போராடுகிறார் என்று அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அரசை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அரசும் ஊழலும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது!

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யார் யாரோ அப்படிப் பேசினால் நமக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றாது. நம்முடைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிவில் சமூகப் போராட்டங்களைக் குறை சொல்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தங்களுடைய பொறுப்புகளை விட்டுக் கொடுப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்! ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன் என்றும் அவர் சேர்த்தே சொல்கிறார்!

இதற்கு என்ன பொருள்? “நீங்கள் போராடலாம்; ஆனால் நாங்கள் நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திவிட வேண்டும்; நாங்கள் எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்! காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும் பொதுநல அமைப்புகளின் போராட்டம், ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்ற ரீதியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று லோக்பால் சட்ட முன்வரைவில் சில விஷயங்களை பொதுநல அமைப்புகள் வலியுறுத்துவதை காங்கிரஸ் கட்சியால் தாங்க முடியவில்லை! அதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் போராட்டங்கள் அபகரிக்க முயல்கின்றன என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா சானு, ராம் தேவ் போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுக்க முயல்கிறார்களா? நிச்சயம் இல்லை. அவர்களுடைய போராட்டங்களில் ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம். ஊடகங்களின் பாரபட்சம் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்புக்கோ அல்லது கருப்புப் பண ஒழிப்புக்கோ முழுமையான தீர்வு அளிப்பவை அல்ல என்று ஒருவர் கருதலாம். அதற்காக அரசு சொல்லும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது!

அரசாங்கமும் ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களும் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது? மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு வர வேண்டும்; வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்; அதோடு அவர்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. சட்டம் இயற்றும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே; அந்த நடைமுறையில் பிரதிநிதிகளுக்கு மக்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. இந்த ஆளுவோரின் சிந்தனைதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக மக்களைத் ‘திசைதிருப்பும்’ வேலைக்கு அடிநாதமாக இருக்கிறது!

உண்மையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யார் பறித்துக் கொண்டிருகிறார்கள்? ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன? ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? ‘எங்கள் தலைவருக்கு ஜலதோஷம், அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தும்மிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் மனம் திறந்தார்களே, இதுதான் இந்திய இறையாண்மையா?

தேசிய சிறப்பு அடையாள அட்டையை இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கும் திட்டத்துக்காக நந்தன் நிலகேனியை மத்திய அரசாங்கம் தலைவராக நியமித்தது. எந்த நாடாளுமன்றத்திடம் அதற்காக அனுமதி வாங்கியது நம் அரசு? தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது? நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன்! மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன்! அவ்வளவு ஏன்? சோனியா காந்தியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஆலோசனைக் குழுமத்தைக் கூட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் அமைப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை சிதம்பரத்தை விடவும் ஜெயந்தி நடராஜனை விடவும் யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும்? நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்! தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்? பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும்! அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ மக்களாகிய நமக்குத்தான் இல்லை!

குமுதம் ரிப்போர்ட்டர் 30.06.11

Tuesday, June 21, 2011

ஓய்வறியாப் போராட்டம்

“எத்தனை வருஷம்தான் இப்படி ஓடிக்கிட்டே இருப்பீங்க? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. இதைப் போன்ற கோரிக்கைகளை உரிய காலத்தில் யார்தான் கேட்கிறார்கள்? பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குப் போய் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்; அதன் பிறகும் வயதான காலத்தில் வேலைக்குப் போகும் அப்பாக்களும் அம்மாக்களும் இருக்கிறார்கள். பொது சேவைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடும் ஒருவரை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஒதுங்கி ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். அவர் அந்த வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அதைப் போலவே நியாயத்துக்காக போராடுபவர்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அநியாயங்களை அம்பலப்படுத்துவதை எந்த வயதிலும் நிறுத்துவதில்லை!

அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் ஜோதிர்மாய் தேய். மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட்-டே’ என்ற ஆங்கில நாளிதழில் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். அவர் கடந்த ஜூன் 11-ம் நாள் காலையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலனாய்வுப் பிரிவு என்றவுடன் நீங்கள் கற்பனையைக் கன்னாபின்னாவென்று அலைய விட்டு விடாதீர்கள். அரைகுறையாகக் கிடைத்த தகவலை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ‘புலனாய்வு பத்திரிகையாளர்’ அல்ல அவர்! நிழல் உலக தாதாக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் எல்லாத் துறைகளிலும் எப்படி ஊடுருவி நிற்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து அவர் அம்பலப்படுத்தி வந்தார். அவரைத் தான் நண்பர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அவர் கேட்கவில்லை. இப்போது எதிரிகள் அவருக்கு ‘நிரந்தர ஓய்வைக்’ கொடுத்திருக்கிறார்கள்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் மும்பை பதிப்பு 2005-ல் வெளியிடப்பட்டது. முதல் நாள் வெளியான பத்திரிகை கடைகளுக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அதோடு அந்த நாளுக்கும் அந்த வாரத்துக்குமான செய்தியை அது கொடுத்தது. நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிகர் சல்மான்கான் பேசிய டேப்பின் உரையாடலை அது வெளியிட்டது. நிழல் உலக தாதாக்களுடன் சல்மான் கானுக்கு இருந்த தொடர்பு, பாலிவுட் வட்டாரத்தில் தாதாக்களின் செல்வாக்கு போன்றவை அம்பலமாயின. அந்த செய்தியை வெளியிட்டவர் ஜோதிர்மாய் தேய்.

கடத்தல், போதை மருந்து, சூதாட்டம் போன்ற தொழில்களுடன் மட்டுமே நிழல் உலக தாதாக்களை 1970 களிலும் எண்பதுகளிலும் நாம் பார்க்க முடியும். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர்கள் கை வைக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. சினிமா, வட்டி, ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை என்று நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பல துறைகளில் அவர்களுடைய செல்வாக்கு அதிகரித்து விட்டது. அரசியலில் இறங்கி சட்டமன்ற உறுப்பினர்களாகவும் சில மாபியா கும்பல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.

இதற்கு என்ன பொருள்? நாம் நேரடியாக நம்முடைய பைகளில் இருந்து பணத்தை எடுத்து அவர்களுடைய கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தொழிலதிபர்கள் என்ற முகம் கிடைக்கிறது. அவர்களுடைய சாயம் வெளுக்கத் தொடங்கினால், அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணமாக இருப்பவர்களைக் கொன்று போடுகிறார்கள்; அதன் மூலம் மற்றவர்களையும் வாய் மூடி மௌனியாக இருக்கும்படி அச்சுறுத்துகிறார்கள். இந்த நிலைமைகளை சரியான முறையில் புலனாய்வு செய்து தேய் கட்டுரைகளை எழுதி வந்தார்!

கடந்த மே 27-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு குண்டு வெடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியின் அடிப்படையில் தேய் மும்பையில் இருக்கும் நீதிமன்றங்களுக்கு நேரில் சென்றார்; ஆய்வுகளை நடத்தினார்; பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் தயார்நிலையில் இல்லை என்று செய்தி வெளியிட்டார்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று போட்டுடைத்தார்.

மும்பையில் புராதனப் பெருமை கொண்ட ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு, பத்து தளங்களைக் கொண்ட ஒரு வணிக வளாகம் கட்டப் போகிறார்கள். இந்த வளாகத்தில் இருந்து தாக்கப்படும் தூரத்தில் தான் மும்பை காவல்துறைத் தலைவர் அலுவலகம் இருக்கிறது. இந்த அபாயத்தைக் கருத்தில் கொள்ளாமல் புதிய வளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை கடந்த மே 18-ம் தேதி வெளிப்படுத்தினார். மே 16-ம் நாள் வேறொரு பரபரப்பான செய்தியை அவர் கொண்டு வந்தார். மும்பை நகரத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல், டீசல் மோசடி நடக்கிறது என்பது அந்த முதல் பக்க கட்டுரையின் சாரம்.

கடந்த மே மாதம் 10-ம் தேதி அவர் இன்னொரு முக்கியமான நபரைத் தொட்டார். ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டார். மே 19-ம் நாள், தாவூதின் தம்பி இக்பால் காஸ்கர் மீது நடந்த கொலை முயற்சி, தாவூத் இப்ராஹிமை மறைவிடத்தில் இருந்து வெளிவரச் செய்வதற்கான தூண்டில் என்ற ரீதியில் ஒரு கட்டுரையை அவர் எழுதினார். இப்படித் தொடர்ந்து பல செய்திகளை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம்.

மற்ற துறையில் இருக்கும் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர் போய் காவல்துறையில் பாதுகாப்பு கேட்க முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள், மாஃபியாக்கள் ஆகியோருக்குள் இருக்கும் கூட்டணியை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையாளன் என்ன செய்ய முடியும்? போலீஸ் பாதுகாப்பு கேட்க முடியுமா? கேட்டு அவர்கள் பாதுகாப்புக் கொடுத்து விட்டால், அவனால் வேலை செய்ய முடியுமா? அவனுக்குத் தகவல் கொடுக்கும் ‘சோர்ஸ்’களை அவன் போலீஸ் துணையுடன் போய் சந்திக்க முடியுமா? இந்த நிலை அயோக்கியர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒரு சில நாட்கள் ஒருவரைத் தொடர்ந்து கண்காணித்து விட்டு, ஒரு நாள் அவர்களால் ‘போட்டுத் தள்ள’ முடிகிறது.

பிறகு இந்த மாதிரி பத்திரிகையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன பாதுகாப்பு நம் சமூகத்தில் இருக்கிறது? பாதுகாப்பாவது புடலங்காயாவது! இந்தியாவில் இதழாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதே செய்தி. முன்பெல்லாம் இந்த மாதிரியான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரிலோ அஸ்ஸாமிலோ, பஞ்சாபிலோ அல்லது மாவோயிஸ்ட் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களிலோ மட்டும் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நாட்டின் எந்த மூலையில் வேண்டும் என்றாலும் கிரிமினல்களால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையே இருக்கிறது.

அப்படி என்றால் அரசு எதுவுமே செய்வதில்லையா? அரசு ஏதாவது செய்யாமல் இருக்குமா? “பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் பிணையில் வெளி வர முடியாத குற்றத்தைச் செய்தவர்களாகிறார்கள்” என்று ஒரு சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டு வரப் போகிறது. ஏற்கெனவே, டாக்டர்களைத் தாக்குபவர்களுக்கு பிணை கிடையாது என்று அங்கு சட்டம் இருக்கிறது. இப்போது பத்திரிகையாளர்கள்! சில வாரங்களில் வழக்கறிஞர்கள்! அடுத்த சில மாதங்களில் ஆசிரியர்கள்! அடப்பாவமே! தலைவலி, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் புதுசு புதுசா சட்டம் கொண்டு வர்ற அரசாங்கத்தை ‘இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு’?

குமுதம் ரிப்போர்ட்டர் 26.06.11

என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்றிருக்கிறார். மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் இப்போதுதான் முதல் முறையாக டெல்லி போயிருக்கிறார். “பிரதமர் மன்மோகன்சிங்கையும் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவையும் அவர் சந்தித்து தமிழக அரசுக்கு கூடுதல் நிதி கோருவார்” என்பது நமக்குக் கிடைக்கும் செய்தி. அதை மீறிய அரசியல் முக்கியத்துவம் இந்த பயணத்தில் இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவும் சோனியாவும் சந்திப்பது மட்டுமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்க முடியும். தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று திமுக உயர்நிலைக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தச் சூழலில், சோனியா காந்தி ஜெயலலிதாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார் என்றால் அது திமுகவுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோனியா காந்தி டெல்லியில் இல்லை. அவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதனால் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு முதல்முறையாக வரும் ஜெயலலிதாவை சோனியா காந்தி சந்திப்பதற்கு வழியில்லை. அதனால் திமுக கவலைப்படத் தேவையில்லை.

டெல்லி வந்து சேர்ந்த பிறகு ஜெயலலிதாவை மூன்று அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்தவித அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று ஒரு செய்தி சொல்கிறது. “உங்களை எப்போது வந்து நான் பார்க்கலாம்?” என்று ஜெயலலிதா கேட்டதாகவும் அதற்கு ஷீலா தீட்சித் “நானே வந்து உங்களை சந்திக்கிறேன்” என்று சொல்லி நேரில் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் இருந்து எந்த விதமான செய்தியையும் எடுத்துச் சென்றிருக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவை சந்தித்தார். “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு. தேர்தல் வெற்றிக்காக நான் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். அப்போது அவர் நன்றி சொல்லிவிட்டு, டெல்லி வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். இப்போது அவர் டெல்லி வந்திருக்கிறார். நாங்கள் சந்தித்துப் பேசினோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருக்கிறார். தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் இந்த சந்திப்பில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்று சிலர் கருதக் கூடும். “நாங்கள் அரசியல் பேசவில்லை. தமிழ்நாட்டைப் பாதிக்கும் மின்வெட்டு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளையும் மாநிலத்தின் தேவைகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்” என்று ராஜா செய்தியாளர்களிடம் சொன்னார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித், பாரதிய ஜனதாவின் ரவி சங்கர் பிரசாத், இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா என்று மூன்று அணிகளின் தலைவர்களையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசி இருக்கிறார். அதாவது தேசிய அளவில் இருக்கக் கூடிய எந்த அணியிலும் இணைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை. எல்லாத் தரப்பிலும் திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துப் போய் திமுகவை தேசிய அரசியலில் தனிமைப்படுத்த அவர் முயல்கிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை என்று அவர் கருதக் கூடும்!

பிரதமர் மன்மோகன்சிங்கையும் மான்டெக்சிங் அலுவாலியாவையும் ஜெயலலிதா சந்திப்பதும் மாநிலத்துக்கு உதவிகள் கோருவதும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள். கனிமொழி கைது உள்ளிட்ட பல பிரச்னைகளால் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி உறவில் இந்த நிர்வாக நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இருக்கும் உறவு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்வதை கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார். உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டுமல்ல, கடந்த 13-ம் தேதி திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலும் அவர் ஒரே புகாரை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதாவது காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் கூட்டணி உறவை உடைப்பதற்கு பத்திரிகைகள் முயற்சி செய்கின்றன என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு!

டெல்லியில் ஜெயலலிதா இருக்கும்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வேறு சர்ச்சைகள் காரணமாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று பரதன் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் சார்பிலும் யாராவது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தக் கூடும். காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் உறவில் அடுத்தடுத்து நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களைச் செய்யச் சொல்லி அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் எழும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இந்த வேலையைச் செய்வதில் அந்தக் கட்சிகளுக்கு என்ன பலன்? அந்தக் கட்சிகளின் அரசியல் எதிரியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. தேசிய அளவில் இருக்கக் கூடிய மூன்று தரப்புகளிலும் திமுக அரசின் முறைகேடுகளையும் எடுத்துச் சொல்வது என்று அதிமுக முடிவு செய்திருக்கலாம். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுகவினர் ‘கறை படிந்த’ பிம்பத்தோடு இருப்பதை தேசிய அரசியல் அரங்கம் அறிந்து வைத்திருக்கிறது. இந்த நிலையில், இடதுசாரிகளும் பாஜகவும் திமுகவுக்கு எதிராக எது செய்தாலும் அது ஜெயலலிதாவின் அரசியலுக்கு சாதகமானதாகவே இருக்கும்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடியும் டி.ராஜாவும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த காட்சி ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் வேறு என்ன சாதிக்கும்? தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேசிய கட்சிகளிடம் ஜெயலலிதா அரசியல் ஆதரவு கோருகிறாரா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு பொருளாதாரத் தடை, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தீர்மானம், கடிதம் போன்ற காகிதப் பணிகள் தவிர, ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்!

குமுதம் ரிப்போர்ட்டர் 23.06.11

Tuesday, June 14, 2011

உறவுகள் தொடர்கதை!

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை இனிதே நடந்து முடிந்தது. தேசிய ஊடகங்கள் எதிர்பார்த்த எந்த அதிரடி முடிவையும் திமுக எடுக்கவில்லை. கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த பிறகு இரண்டு நாட்களில் தி.மு.கவின் உயர்நிலைக் குழு கூடியது. கூட்டத்துக்கு முன்னதாக, அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் உருவாக்கின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இப்போது இருப்பதைப் போல திமுக தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவையில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டு ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று ஊகங்கள் கிளப்பி விடப்பட்டன. மிகவும் இக்கட்டான இந்த சூழலில் எந்த உதவியும் செய்யாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் திமுக விலகிக் கொள்ளும் என்ற ‘செய்தியும்’ ஊடகங்களில் விதைக்கப்பட்டன.

சில செய்தித்தாள்களிலும் சில ஆங்கில செய்தி ஊடகங்களிலும் இதுபோன்ற பரபரப்பான செய்திகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சாதாரணமான கூட்டத்தை எப்படிப் பரபரப்புக்குள்ளாக்குகிறார்கள் இவர்கள் என்று சில சமயங்களில் எரிச்சல் கூட எழுகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக அரசின் சில திட்டங்களை ரத்து செய்தார். அரசாங்கத்தின் அந்த செயல் நியாயமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பது இங்கு நோக்கம் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டு விடலாம்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து திமுக என்ன செய்ய முடியும்? தோல்வியில் துவண்டு கிடக்கும் தொண்டர்களைத் திரட்ட வேண்டும். அதற்கு அடித்தளமாக கட்சிக் கூட்டம் நடத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தான் திமுக செய்திருக்கிறது. அதற்குள் ஊடகங்கள் மத்திய ஆட்சியில் இருந்து திமுக விலகுமா என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பு ஊட்டி விட்டன!

அப்படி என்றால் ஊடகங்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இப்படிப்பட்ட கதைகளை அவிழ்த்து விடுகின்றன என்று சொல்ல முடியுமா? ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்று பிறந்த நாள் செய்தியாக திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லையா? அவர் கூடா நட்பு என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணியையா குறிப்பிட்டார்? அல்லது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சொன்னாரா? அல்லது கட்சிக்குள் தொண்டர்கள் வேறுவிதமான சிந்தனையில் இருப்பது தெரிந்தும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று ‘விசுவாசமாக’ இருந்த திருமாவளவனைக் குறிப்பிட்டாரா? நிச்சயமாக இருக்க முடியாது. குடும்பத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாமல் இருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வந்த அரசியல் செய்தியாகத் தான் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கி.வீரமணி என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள். திமுகவின் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு செயல்களுக்குப் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று அவர் உறுதியாக சொன்னார். எந்தவிதமான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறாரோ, அந்தக் கருத்தை ஊடகங்களில் எதிரொலிப்பதே சிலருடைய அரசியல் பணி! அதனால் வீரமணியின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு திமுகவுக்கு காங்கிரஸ் மீது மனக்கசப்பு இருக்கிறது என்று ஊடகங்கள் நிறுவ முயன்றிருக்கலாம்!

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவிதமான கசப்பும் இல்லையா? இரு கட்சிகளுக்கும் இடையில் ஊடகங்கள்தான் சிண்டு முடிகின்றனவா? அப்படி நாம் நம்ப வேண்டும் என்று இரு கட்சிகளும் விரும்புகின்றன. ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள் அந்தக் கட்சித் தலைவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இப்போது கூடாநட்பு என்று தமிழில் கருணாநிதி சொன்னதற்கு காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இதைத் தான் நான் சில வாரங்களுக்கு முன்னால் சகவாச தோஷம் என்று சொன்னேன்’ என்று சொல்லி சண்டைக்குத் தயாராகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘சந்தேஷ்’ என்ற இதழ் தேர்தல் தோல்விக்கு திமுக தான் காரணம் என்று சொல்கிறது. “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் காரணமாகவே தமிழகத்திலும் புதுவையிலும் காங்கிரஸ் தோற்றுப் போனது” என்று சந்தேஷ் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியின் தவறுகளால் தங்களுடைய வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்துவிடக் கூடாது என்பதால் தமிழகக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“வெற்றி கிடைத்தால் அதன் பெருமையைக் கொண்டாட பலர் முன்வருவார்கள். தோல்வியடையும்போது பொறுப்பை பகிர்ந்து கொள்ள யாரும் வரமாட்டார்கள்” என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்த விஷயத்திலும் நடக்கிறது. திமுக சார்பாக வீரமணியும் காங்கிரஸ் சார்பாக ‘சந்தேஷ்’ பத்திரிகையும் ‘கூட்டணியால் தோல்வி அடைந்தோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, எல்லாம் சுமுகமாக இருப்பதாக நம்மை நம்பச் சொல்கிறார். “சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்னையை பூதாகாரமாக ஊதிவிட்ட காரணத்தால், அதை வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையில் அப்படி எழுதி இருப்பார்கள்” என்று சமாளிக்கிறார். “ திமுகவின் தோல்விக்கு ஒரு சில ‘பார்ப்பனர்களின்’ முயற்சியே முக்கிய காரணம்” என்று அடுத்த அம்பை ஏவுகிறார்!

“காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், எங்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, திட்டமிட்டு முடிவு செய்து ஒரு சிலர் இங்கே வந்து கேள்வியைக் கேட்கிறீர்கள்” என்று ஊடகங்கள் மீது பழியைத் திருப்புகிறார். கூடாநட்பு என்று சொன்னது ‘உங்களில் ஒரு சிலரோடு எனக்கு இருக்கும் நட்பாக’ இருக்கலாம் என்று லாவகமாக அடித்து ஆடுகிறார். தொலைக்காட்சிக்கு வர்த்தகரீதியாக கடன் வாங்கியதையும் அலைக்கற்றை ஒதுக்கீட்டையும் முடிச்சுப் போட்டு கனிமொழியைக் கைது செய்த சிபிஐ அமைப்பை திமுக கண்டித்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐயைக் கண்டிப்பது மத்திய அரசை எதிர்த்த கண்டனம்தானே என்று கேட்டால், நீங்கள் விருப்பப்படி எழுதிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்வார்!

மத்திய அரசில் இருந்து ஆ.ராசா கட்டாய ராஜினாமா, கலைஞர் டி.வி.ரெய்டு, தயாளு அம்மாள், கனிமொழி விசாரணை, கனிமொழி கைது, அடுத்து தயாநிதி மாறனைச் சுற்றும் சர்ச்சைகள் என்று அடுக்கடுக்காக தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனால் “இதனால் எல்லாம் திமுகவுடனான எங்கள் உறவு பாதிக்கப்படாது” என்று காங்கிரஸ் சொல்கிறது. அதையே திமுக வழிமொழிகிறது.

இதைப் பார்க்கும்போது வடிவேலுவின் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே, இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கு” என்ற காமெடி காட்சியே நினைவுக்கு வருகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, June 13, 2011

நடுநிசி நாய்கள்

“என் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு வன்முறையை நான் பார்த்ததே இல்லை” என்று பாபா ராம்தேவ் சொல்லி இருக்கிறார். அப்படி என்ன வன்முறை அங்கே நடந்தது? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் சாகும்வரை டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கத்துடன் பேசிய போது அங்கே அவர் யோகா வகுப்பு எடுக்க இருப்பதாகவும், ஜூன் 4-ம் நாள், சனிக்கிழமை ஆறு மணியுடன் அந்த வகுப்பை முடித்துக் கொண்டு எல்லோரும் கலைந்து விடுவதாகவும் மத்திய அரசுக்கு அவர் வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்து தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டம் மாலை ஆறு மணியளவில் முடிவடையவும் இல்லை. பின்னிரவில் காவல்துறை அந்த மைதானத்துக்குள் புகுந்து கூட்டத்தினரைக் கலைந்து போகச் செய்தது. பாபா ராம்தேவைக் ‘கைது’செய்து ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் மீண்டும் தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் என்பது வேறு செய்தி!

கூடியிருந்த கூட்டத்தைக் கலைந்து போகச் செய்வதற்கு காவல்துறை தடியடி நடத்தியிருக்கிறது. கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி எதுவும் இல்லை. ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தைக் கலைப்பதற்கு ‘எளிய’ வழிகளையே காவல்துறை பயன்படுத்தி இருக்கிறது. வெறும் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் பழங்குடியினரைக் கலைப்பதற்கு எல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களில் சிலரைக் கொல்லும் காவல்துறை, பாபா ராம்தேவின் பக்தர்களை விரட்டுவதற்கு அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதற்கே அவர் ‘இப்படி ஒரு வன்முறையை என் வாழ்நாளில் நான் பார்க்கவில்லை’ என்று சொல்கிறார். இதற்குப் பொருள் என்ன? அவர் இதுவரை மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார் என்று அர்த்தமாகிறது!

இப்படிச் சொல்வதால் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை நான் ஆதரிப்பதாக நீங்கள் கருதி விடக் கூடாது. எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாத ராம்தேவ் பக்தர்களைக் கலைப்பதற்கு இந்த குறைந்தபட்ச தடியடி கூடத் தேவையில்லை. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அவரே ‘இடத்தைக் காலி செய்துவிட்டு’ போயிருப்பார். அதை விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தை கலைப்பதற்கு தடியடியும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியதன் மூலம் ராம்தேவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கிடைப்பதற்கு அரசு உதவி இருக்கிறது! இந்திய அரசின் கரங்களை வலுப்படுத்தும் சில கோரிக்கைகளை அவர் முன்வைப்பதையும் பார்க்கும்போது, அரசுக்கும் ராம்தேவுக்கும் இடையில் நல்ல ‘புரிதல்’ இருப்பதாக நம்ப இடமிருக்கிறது!

ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும் இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது என்று ‘செங்கல்’ உருவியவர் யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாபா ராம்தேவ் தான். “மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை இப்படி விமர்சனத்துக்கு உள்ளாக்கினால் அது நம்முடைய சமூகத்துக்கு நல்லதா?” என்ற கேள்வி எழுப்பியவர் பாபா ராம்தேவ். அன்னா ஹசாரே மற்றும் ஆதரவாளர்களுக்கு மாற்றாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவராகக் கூட பாபா ராம்தேவ் இருக்கலாம்.
சிவில் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டை தனிமனிதர்களுக்கு அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலாக மாற்றிக் காட்டுவதற்கு அவர் உதவியாக இருக்கிறார். காமன்வெல்த் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு, டெலிபோன் இணைப்பகத்தையே முறைகேடாகப் பயன்படுத்திய அமைச்சர் என்று பல முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருக்கும் மக்களுடைய உணர்வை மடைமாற்றுவதற்கும் ராம்தேவ் கருவியாக இருக்கிறார்!

இப்படிப்பட்ட சூழலில் ராம்தேவின் போராட்டத்துக்கு ஒருவர் ஆதரவளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்திய மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்தை நாம் ஆதரித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் அவர் அந்த ஒரு கோரிக்கையைத்தான் முன்வைக்கிறாரா? அவருடைய கோரிக்கைப் பட்டியலில் உள்ள விஷயங்கள் யாருடைய நலன்களை முன்னிறுத்துகின்றன?

ஊழல் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முதல் கோரிக்கையை வைக்கிறார். நாகரிக சமூகங்கள் எல்லாம் மரணதண்டனையை இல்லாமல் ஒழித்துக் கட்டி வரும் காலகட்டத்தில், மரண தண்டனையை இவர் வலியுறுத்துகிறார். லோக்பால் விசாரணை வளையத்துக்குள் கூட பிரதமரும் தலைமை நீதிபதியும் வரக் கூடாது என்று சொல்பவர் அதிகாரிகளை மட்டும் தூக்கில் போட வேண்டும் என்று சொல்கிறார். இந்தக் கோரிக்கையை எப்படி பரந்து விரிந்த அரசியல் பார்வை கொண்ட ஒருவர் ஆதரிக்க முடியும்?

1000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கி விட வேண்டுமாம். இந்த நோட்டுக்களை ஊழல் பெருச்சாளிகள் மட்டுமா வைத்திருக்கின்றன? நியாயமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் கூட இந்த மாதிரியான நடவடிக்கையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நெல்லை விற்று கிடைத்த பணத்தை வங்கிகளில் போடாமல் செலவுக்கு வைத்திருக்கும் விவசாயிகளே கிராமங்களில் அதிகம்.
ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்னை அல்ல இது. மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. எளிமையாகப் பார்த்தால், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இது என்னவிதமான செய்தியைத் தருகிறது? ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியை கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இந்திய மொழிகள் எல்லாவற்றையும் தேசிய மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராம்தேவ் முன்வைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

அடுத்து மிகவும் முக்கியமான ஓர் அரசியல் கோரிக்கையை அவர் வைக்கிறார். இந்தியப் பிரதமர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய அந்தக் கோரிக்கை. அதாவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அவருக்கு வேம்பாய்க் கசக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்களின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பதிலாக அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்!

இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறையின் அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. பாபா ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை என்று தோன்றுகிறது. ஊழல், கருப்புப் பணம் போன்ற விஷயங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படக் கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!

குமுதம் ரிப்போர்ட்டர் 12.06.11

தடுக்கப்பட வேண்டிய வன்முறை

“ரத்தத்தில் தோய்த்தெடுத்த சிவந்த கரங்களுடன் சுதந்திர தேவி வந்தால், அவளைக் கை குலுக்கி வரவேற்பது கடினம்” என்று சொல்வார்கள். வன்முறையைக் கொள்கையாக அரசியலில் வரித்துக் கொண்டவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோருக்கும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் அப்படி எளிதாக நம்மால் அரசியலில் ஈடுபடுகிறவர்களை வகைப்படுத்திவிட முடிகிறதா? இந்த சமூகத்தை வன்முறை நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே மாற்ற முடியும் என்று அறிவித்துவிட்டு செயல்படுகிறவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். உதடுகள் ஒன்றை உச்சரிக்கும் போது, கைகள் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே மற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்!

வன்செயல் என்றால் என்ன? ஏதாவது ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்துவதா? அல்லது ஒருவரை இன்னொருவர் கொல்வதா? வழக்கமாக நாம் இது போன்ற செயல்களை மட்டுமே வன்முறை என்று கருதுகிறோம்; ஆனால் கண்ணுக்குத் தெரியாத வன்செயல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் ஒருவரை கடுமையான வார்த்தையால் முகம் சுருங்கச் செய்வதும் வன்செயல்தான். ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அதை நான் எப்போதாவது தருவேன். நான் தரும்போது நீ பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொல்வதும் ஒருவிதமான வன்செயல்தான்!

நமக்கு எதிராக நான்கு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறோமே, அந்த செயலில் கூட வன்முறை இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு மனதளவில் ஏற்றுக் கொள்ளாமல், அதிகாரத்துக்குப் பயந்து ‘கீழ்ப்படிதலுடன்’ செய்து முடிக்கிறோமே, நாம் கண்டு அஞ்சும் அந்த அதிகாரத்தில் வன்முறை படிந்து கிடக்கிறது. சாதி, மதம், பாலினம், இனம், நாடு போன்ற பல காரணங்களுக்காக இன்று உலகம் முழுவதும் வன்செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்தியாவிலும் இதுபோன்ற மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வன்செயல்களுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்திய விடுதலையை ஒட்டிய காலங்களில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 1960 - களில் ஜெபல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதல்கள் குறித்து அறிய முடிகிறது. 1984-ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாடெங்கும் சீக்கியர்கள் மிக மோசமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பாபர் மசூதி இடிப்புக்கான பிரசார காலத்திலும் அந்த மசூதி இடிக்கப்பட்ட பிறகும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த படுகொலைகளை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.

எல்லாவிதமான மத மோதல்கள் அல்லது படுகொலைகளையும் மிஞ்சும் வகையில் 2002-ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை இருந்தது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. எல்லா கலவரங்களும் முஸ்லீம்களுடன் தான் நடந்ததா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் 2008-ல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக படுகொலைகளும் துன்புறுத்தல்களும் நடந்தன. காஷ்மீரில் இந்துக்கள் அவர்களுடைய வாழ்விடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டார்கள்.

நம்முடைய சட்டதிட்டங்களின்படி சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அதில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஆனால் இந்திய மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. 24 மணி நேரத்துக்கும் மேலாக – சில சமயங்களில் 48 மணி நேரத்துக்கும் மேலாக - ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியான வன்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு என்ன பொருள்? மாநில அரசு அந்த வன்முறையை ஒடுக்கி சட்டம் ஒழுங்கைக் காக்க விரும்பவில்லை என்று அர்த்தம். அப்படி ஒரு நிலை வந்தால், மத்திய அரசு தலையிடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தது. அந்த சட்டத்துக்கான முன்வரைவு ஒன்றை தேசிய ஆலோசனைக் குழுமம் தயாரித்தது. அதைப் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் வைத்தது. ஜூன் 4-ம் தேதி வரை மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்பட்டன.

சட்டங்கள் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் என்னென்ன மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பலாம். அடிப்படையில் இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை இருக்கிறது என்று நினைப்பவர்கள் கூட, இந்த சட்ட மசோதாவில் வேறு சில குறைகள் இருக்கின்றன என்று சொல்லலாம். எவ்வளவு குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு சட்டத்தின் தேவையை நாம் மறுக்க முடியாது.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்த சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை மட்டுமே பேசுகிறது என்றும் பெரும்பான்மையினருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. அதாவது இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம்! ஆனால் மசோதா அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஏழு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மறும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை அந்த ஏழு மாநிலங்கள். அங்கெல்லாம் இந்த சட்டம் பாதுகாக்கும் சிறுபான்மையினர் பிரிவில் இந்துக்களும் இருக்கிறார்கள்!

‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சி இருக்கிறது; அப்படி என்றால் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள்’ என்று சிலர் கேட்கிறார்கள். இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள், உயர்சாதிகளுக்கு எதிராக வன்முறை, ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லாம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவை. அதற்காக அவற்றின் மீது நடவடிக்கைகள் தேவையில்லை என்று யாரும் சொல்வதில்லை!

சிலர் மீது வெறுப்பை உமிழும் கருத்துகள் என்ற வன்முறை உட்பட ‘எல்லாவிதமான’ வன்செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. “உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தின் ஆட்சி நடக்கவில்லை. வன்முறையே ஆள்கிறது. இதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உண்மையை பகிரங்கமாக சொல்லாமல் விட்டுவிடுவது சிறப்பானது” என்பதை நீங்கள் ஏற்கனவே புரிந்தவராக இருந்தால், உங்களிடம் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!

குமுதம் ரிப்போர்ட்டர் 09.06.11

இரு துருவங்கள் சேருமோ?

“ஐந்து விரல்கள் தனித் தனியாக இருந்தாலும், அவை ஒன்றாக சேர்ந்தால்தான் உருப்படியான காரியத்தை நிறைவேற்ற முடியும்” என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். சட்டமன்றம் என்பது மனிதனுடைய கையைப் போன்றது. அங்கு இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம் விரல்களைப் போன்றவை. அவை ஒன்றாக இணைந்து பணியாற்றினால்தான் உருப்படியான வேலைகளைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார். எந்த சந்தர்ப்பத்தில் அவர் இப்படிப் பேசுகிறார்?

தமிழக சட்டமன்றத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரை வாழ்த்திப் பேசும்போது, ஸ்டாலின் இப்படிச் சொல்கிறார். “பெரிய தேர் ஓடுவதற்கு சக்கரங்கள் தேவை. அவற்றின் அச்சாணி மிகவும் சிறியதுதான். ஆனால் அந்தச் சிறிய அச்சாணி இல்லையென்றால், தேர்ச் சக்கரம் நகராது. அதைப் போல பெரிய கட்சி, சின்ன கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்த சட்டமன்றத்தை வழிநடத்துங்கள் என்றும் அவர் பேசி இருக்கிறார்!

சட்டமன்றத்தில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இப்போது தி.மு.கவுக்கு வந்துவிட்டது. ஏனென்றால் வாக்குகளின் அடிப்படையில் அது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த போதிலும், சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 1991இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே தி.மு.க ஜெயித்தது. எதிர்க்கட்சியாக அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைப் போல இந்த தேர்தலிலும் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. அதன் தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த அரசியல் சூழ்நிலையில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக இருப்பதற்கு ஸ்டாலின் சம்மதித்திருப்பதை பாராட்டத்தக்க ஒரு செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். “அந்த அம்மா முதலமைச்சர்; விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர். நீங்க சபைக்கே போக வேண்டாம்.. அங்கே போனாலே உங்களுக்கு அவமானம்தான்” என்று அந்தக் கட்சியில் சில ‘ஜால்ராக்கள்’ வேப்பிலை அடித்திருக்கலாம். கட்சியின் வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. 1991 –இல் திமுகவுக்கு கிடைத்த தோல்விக்குப் பிறகு சட்டமன்றத்துக்குப் போக கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. துறைமுகம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்!

2001-ல் திமுகவுக்கு 31 இடங்கள் கிடைத்தன. அப்போதும் அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை! இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்ள முடிகிறது? சட்டசபைக்குப் போனால், அங்கு திமுகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசுவதைக் கேட்க வேண்டியிருக்கும். அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு இருக்குமா தெரியவில்லை. இந்நிலையில் அங்கு போய் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதே அவமானம் என்று கருதுகிறவர்கள் என்ன செய்வார்கள்? ஸ்டாலின் அவைக்குப் போக வேண்டாம் என்றே சொல்வார்கள்.

நாம் இடம் கொடுக்காமல் நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாது என்பதை ஸ்டாலின் நம்புகிறார் போலிருக்கிறது. நம்மைப் புண்படுத்த வேண்டும் என்று யாரோ ஏதோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய அந்த செயலால் நாம் புண்பட்டால்தானே அவர்களுடைய எண்ணம் நிறைவேறும்? 2001-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினுக்கு நான்காவது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த முறை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார் என்கிறது செய்தி!

சட்டநுட்பங்களின்படி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், திமுகவின் வி.வி.ஐ.பி. என்ற வகையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன? அதனால் ஜெயலலிதாவின் அரசு எந்த விதத்தில் குறைந்துவிடப் போகிறது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கூட ஸ்டாலின் ஒரே நாளில் வாரிசாக முன்னுக்கு வந்துவிடவில்லை. தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி எல்லோரும் குறுகிய காலத்தில் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். 2004-ல் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், உடனடியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார். குடும்பத்துக்குள் மோதல் வலுத்த போது கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார். 2009 தேர்தலில் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, உடனே மத்திய அமைச்சராகி விட்டார்.

ஆனால் ஸ்டாலின் விஷயத்தில் அப்படியான உடனடி வளர்ச்சி எதுவும் இல்லை.
மிசா சட்டத்தின் கீழ் நெருக்கடிநிலை இருண்ட காலத்தில் பல மாதங்களாக ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். சிறைக் காவலர்களின் மிருகத்தனமான அடக்குமுறை அவர் மீது ஏவி விடப்பட்டது. அவர் 1989-ம் வருடம் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது திமுக தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவருக்கு எந்தவிதமான அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.

1991-ல் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 1996-ல் மீண்டும் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2001-ல் மீண்டும் திமுக ஆட்சியை இழந்தது. 1989-ல் சட்டமன்ற உறுப்பினரான ஸ்டாலின், 2006-ல் தான் அமைச்சராக முடிந்தது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பணி செய்திருக்கிறார். அதில் இரண்டு முறை திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய செய்தி. நான்காவது முறையாக சட்ட மன்ற உறுப்பினராகும்போதுதான் அவர் தமிழக அமைச்சராகிறார். அதற்காக அவர் காத்திருந்த ஆண்டுகள் 17!

அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் தேசிய திராவிட முற்போக்குக் கழகம் இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமே இருக்கிறது. முதலமைச்சராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ இல்லாமல் கருணாநிதி தமிழக சட்டமன்ற உறுப்பினராக மட்டும் சட்டமன்றத்துக்குள் வருவாரா என்பது சந்தேகம் தான்! அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினின் பங்கே சட்டமன்றத்தில் முக்கியமாகிறது.

அதற்குத் தகுந்தவாறு, முதலமைச்சர் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். “மிகவும் குறைந்த இடங்களையே எதிர்க்கட்சிகள் பிடித்திருக்கின்றன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க ஆளும் கட்சி தயங்காது. சட்டப்பேரவை ஜனநாயகம் வாழவும் வளரவும் வளம் பெறவும் நிலைத்து நிற்கவும் துணையாக நிற்போம்” என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே அப்படி ஒரு நிலையை உருவாக்க ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் ஆகிய மூவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக ஆட்சியாளர்களின் கடந்தகால அணுகுமுறை, நமக்குள் அவநம்பிக்கையை உருவாக்கக் கூடும். இருந்தாலும் ஸ்டாலின் அதற்கான முயற்சியை மேற்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. முயற்சிகள் ஒருவேளை தோற்றுப் போகலாம்; ஆனால் முயலாமலேயே இருப்பது ஜனநாயகத்துக்குப் பெருந்தோல்வி என்றே சொல்லத் தோன்றுகிறது!

குமுதம் ரிப்போர்ட்டர் 05.06.11

Monday, May 30, 2011

பெருமையல்ல!

இப்படி ஒன்று நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் யாராவது சொல்லி இருந்தால், யாரும் அதைக் காதிலேயே போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சியிலும் வெளியிலும் இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். பொதுவாழ்க்கையில் குற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட சிலர் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளின் அவசியம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதை எப்படித்தான் கட்சியினரால் எதிர்பார்க்க முடியும்?

மே 23-ம் நாள் சூரியன் உமிழும் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் மாலை நேரத்தில், கருணாநிதி திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அவரது துணைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு ஆகியோர் அப்போது உடன் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன. “இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது” என்று அதிகாரிகள் சொன்னதாக ஒரு செய்தி சொல்கிறது. அது உணர்ச்சிபூர்வமானதா உணர்வு பூர்வமானதா அல்லது இரண்டும்தானா என்ற வார்த்தை விளையாட்டுக்குள் போக நான் விரும்பவில்லை. முப்பது நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த முப்பது நிமிடமும் அந்த அப்பாவின் மனதுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்!

“உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்குத் தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த நிலையில் என் மனம் இருக்கிறது” என்று கருணாநிதி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். செய்தியாளர்களிடம் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதை அறிந்த நொடியில், “எவ்வளவு திறமையாக நம்முடைய சிந்தனையைத் திசைமாற்றி விடுகிறார்” என்ற வியப்பே என் மனதில் எழுந்தது. சட்டம் தன் கடமையைச் செய்யும், இந்த சிக்கலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் உணர்வு வேறுவகையானது. “உங்க மகளுக்கு இப்படி நடந்தா உங்க மனசு என்ன பாடுபடும்?” என்ற கேள்வி நம்முடைய மனதில் உருவாக்கும் உணர்வுகள் வேறு வகை!

ஒரே ஒரு பெண்ணாக வீட்டில் வளரும் பெண்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையே இருக்கும் உணர்ச்சிமயமான உறவை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சைக்கிள் ஓட்டப் பழகும்போது கீழே விழுந்து முழங்காலில் ரத்தம் கசியும் சிராய்ப்போடு வந்த மகளைப் பார்த்து நம்மில் சிலர் பதறி இருக்கலாம். கல்லூரியில் சேர்க்கும்போதோ அல்லது படித்து முடித்தபின் வேலையில் சேரும்போதோ, வசதிக் குறைவான விடுதி அறையில் மகளை சேர்த்து விட்டு வீடு திரும்பி இருக்கிறீர்களா? இதெல்லாம் அனைவருக்குமான அன்றாட நடைமுறை என்று உங்கள் அறிவு சொல்லும்போது, மகள் கஷ்டப்படுவாளோ என்று உணர்வு உள்ளுக்குள் தவிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நம்முடைய கண் முன்னாலேயே மகளைக் கடுமையான வார்த்தைகளில் ஆசிரியர் திட்டும்போது, அவள் முகம் சுருங்குவதைப் பார்த்து உங்கள் மனம் வாடி இருக்கிறதா?

இவற்றைப் போன்ற பல கேள்விகளில் சில வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களால் கருணாநிதியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். புகுந்த வீட்டில் இருக்கும் மகள் சாதாரணமான ஒரு காரணத்துக்காக லேசாக கண் கலங்கினாலே, அப்பாக்களாலும் அம்மாக்களாலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகியதற்குப் பிறகு பிறந்து வளர்ந்த செல்ல மகளை, செல்வ மகளைச் சிறையில் சென்று சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் அப்பாவின் உணர்ச்சிகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேசமயம், சிறையில் மகனையோ மகளையோ பார்க்க நேர்கின்ற எல்லா அப்பாக்களும் அம்மாக்களும் இதே போன்ற உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வரும் சிக்கல்களை எல்லோரும் பரிவுடன் அணுக வேண்டும் என்றும் மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி தாம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைப்பது சுயநலம். அப்படிப்பட்ட சுயநலம் கொஞ்சமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவான கோரிக்கைக்காக பத்து வருடங்களாக உண்ணாவிரதமும் சிறை வாழ்க்கையும் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா சானுவின் அம்மாவுக்கும் மனம் இருக்கிறது. சமூகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகளை அதிக அளவில் உருவாக்கப் பாடுபட்ட மருத்துவர் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் மறக்கவில்லை. அவருடைய அம்மாவுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன.

எதற்காக வெளிமாநில உதாரணங்கள்? கடந்துபோன திமுக ஆட்சியில் எத்தனை முறை சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் கையை வீசி நடக்கும்போது அவர் கைவிரல் நகங்கள் யாரையாவது காயப்படுத்தின என்று எங்காவது ஒரு வழக்கு இருக்கிறதா? பிறகு எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் நேரடியாக வானத்தில் இருந்தா பூமியில் குதித்தார்? அவரும் ஒரு அம்மாவின் கருப்பையில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே! சீமானின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?

ஓர் ஆண் சிறையில் இருக்கலாம்; செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று ராம் ஜேத்மலானியைப் போல சிலர் வாதிடக் கூடும். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவைக் கைது செய்த போது இந்த வாதம் பொருந்தவில்லையா என்று சிலர் பதில் கேள்வியும் கேட்கக்கூடும். இப்போது கனிமொழிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையும் எதிர்க்கட்சி அரசாங்கத்தால் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்தில் இன்னும் திமுக அங்கமாகத் தான் இருக்கிறது. ராசாவும் கனிமொழியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாமல் செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிவிட முடியாது.

அபியும் நானும் என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒவ்வொரு விஷயத்தையும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டு செய்யும் மகள் அபி, வளர்ந்த பிறகு அப்பாவின் கண்காணிப்பை ஒதுக்கத் தொடங்குவார். அப்பா தலையிடும் போதெல்லாம், “ ஐ நோ வாட் ஐ யம் டூயிங்” என்பார். அதாவது “என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்தே நான் செய்கிறேன்” என்று சொல்வார். மேல்படிப்பு, காதல், திருமணம் என்று மகளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும். அதீதமான அன்பு காரணமாக மகளைத் தன்னுடனேயே வைத்திருக்க நினைக்கும் அப்பாவின் தவிப்புகளைச் சொல்லும் படம் அது.

அந்தப் படத்தின் மகளைப் போல ‘ஐ நோ வாட் ஐ யம் டூயிங்’ என்று கனிமொழி சொன்னாரா என்று தெரியவில்லை. அப்பாவின் வேண்டுகோளைக் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் ஆனது தான் அவருடைய குற்றம் என்பதில் கூட உண்மையிருக்கலாம். ஆனால் அதுவல்ல பிரச்னை? எதற்காக சிறை செல்கிறோம் என்பதே இங்கு முக்கியம். நெருக்கடி நிலையின் போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சிறையில் இருந்தாரே, அதை யாராவது சிறுமையாகப் பார்க்கிறார்களா என்ன? அது அவருக்குப் பெருமையையும் புகழையுமே தேடித் தந்தது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டனை பெறுவது அப்படிப்பட்டதல்ல!


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Labels: , , ,

Tuesday, May 24, 2011

தமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா?

ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என்று சென்னையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு வந்த போது அவர் அப்படிப் பேசி இருக்கிறார். சென்ற இதழுக்கு முந்தைய ரிப்போர்ட்டர் இதழில் ’எரிதழல்’ பகுதியில் நானும் அவர் இந்திய அரசியலில் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் திசையில் இருக்குமா இருக்காதா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஓர் அணியை இந்திய அளவில் அமைப்பதில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். அது அவசியமா இல்லையா என்பதை அவர்தான் முடிவுசெய்து கொள்ள வேண்டும்!

‘தேசிய அரசியலில் ஜெயலலிதா மாற்றத்தை உருவாக்குவார்’ என்று நரேந்திரமோடி நம்புவது நான் சொல்லும் பொருளில் இருக்காது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா இணைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கலாம். இந்திய அரசியலில் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கக் கூடும். அது நடக்கவில்லை என்றாலும் மோடிக்கு ஒன்றும் இழப்பு இல்லை. காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஒரு வலுவான முதலமைச்சர் தேசிய அளவில் கிடைத்திருக்கிறார் என்று அவர் மனநிறைவு அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார் என்று நரேந்திரமோடி உறுதியாக நம்புகிறாரா என்பது தெரியவில்லை.

அரசியல் என்பது என்ன? ஓர் எண்ணிக்கை விளையாட்டு. தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவோ, அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவோ தேவையான எண்ணிக்கையை பெறுவதற்கு ஒரு கட்சி நடத்தும் ’சாகசங்களே’ இன்று அரசியல் என்று கொண்டாடப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் திமுகவால் தமக்கு பயன் இல்லை என்று சோனியா காந்தி நினைத்தால், அவர் என்ன செய்வார்? கருணாநிதியைக் கைகழுவி விட்டு ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ கூட்டணி வைப்பதற்கு முயல்வார். வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி வாழ்த்துச் சொன்னதைக் கூட சாதாரண நடைமுறையாக நம்மவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதே ஜெயல்லிதாவுடனான உறவுகளைச் சீர்செய்ய முனைகிறார்களோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் நரேந்திரமோடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா மதவாதி ஆகிவிடுவாரா என்ன?

இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எல்லோருக்கும் ஒரு செய்தியைத் தெளிவாக உணர்த்தி இருக்கிறது. தமிழகத்தை ஆள்வதற்கு இப்போது மீண்டும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுக்க தமிழக மக்கள் மறுத்திருக்கிறார்கள். திமுக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்ற அண்ணா திமுக, 1998 மக்களவைத் தேர்தலில் 30 இடங்களை ஜெயித்தது என்பதை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே அதிக இடங்களை வென்றது. இரண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறி விடவில்லையா? இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் மனதை மாற்றிக் கொள்ளும் அளவு அப்படி என்ன நடந்தது?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என்ற அடிப்படையில் திமுகவின் ஆ.ராசா அமைச்சர் பதவியை இழந்தார்; கைது செய்யப்பட்டார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. யாரிடம்? திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியிடமும் மகளிடமும் தான் அந்த விசாரணை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஆ.ராசா வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் அவர் பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வை ஏற்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இலங்கையின் தமிழர் பகுதிகளில் அந்த நாட்டு அரசு வான் தாக்குதல்களை நடத்தியது. இந்திய அரசும் தமிழக அரசும் அந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலின்போது நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தீவிரமான பிரசாரத்தை காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக மேற்கொண்டார்கள். இருந்தபோதிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்த ஒரு வாரத்துக்குள் இலங்கையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடந்தன. இன்று பேசப்படும் அனைத்துவிதமான போர்க்குற்றங்களும் இலங்கை அரசால் இழைக்கப்பட்டன. தமிழர்களின் தேசிய விடுதலைக்காக அங்கு போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையை இப்போது தமிழகத்தில் மக்களுக்கு நினைவூட்டினார்கள். மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியை படுதோல்விக்கு உள்ளாக்கினார்கள்!

வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாத சூழ்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தல் 2014-ம் வருடம்தான் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட தோல்வியில் இருந்து எப்படி மீள்வது என்றும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களை எப்படி பிடிப்பது என்றும் காங்கிரஸ் தலைமை வியூகங்களை வகுக்கும். அந்த செயல்திட்டங்களுக்கு ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் உடன்பட்டுப் போவார்களா என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ ஜெயலலிதா இடம் பெறவில்லை என்றால் அவர் முன் இருக்கும் அடுத்த தேர்வு என்ன? சந்திரபாபு நாயுடு மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஓர் அணிக்கு தலைமை ஏற்கலாம். அல்லது தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியை அமைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றிய பிறகு, அப்போதைய முடிவுகள் உருவாக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கலாம்.

தமிழ்நாடு தவிர இப்போது நடந்த மற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வரும் வலிமை கொண்டவையா? புதுச்சேரியில் இருந்து ஒரே ஒரு மக்களவை உறுப்பினர்தான். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தனியாகவே வெற்றி பெற்றிருக்கிறது. மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத அணியை உருவாக்கும் வலிமை இப்போது இடதுசாரிகளுக்குக் குறைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுடைய எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்குமா என்பதும் கேள்விக்குறியே!

இதன் விளைவு என்ன? இந்தியா இரு கட்சி அரசியலுக்கு அல்லது இரு கூட்டணி அரசியலுக்கு மாறி வருகிறது என்று பல ஊடகங்களும் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களும் பேசத் தொடங்குவார்கள். மாயாவதி, முலாயம்சிங் யாதவ், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான மாநிலத் தலைவர்களை ஓரங்கட்ட இரு கட்சிகளும் முயலும். அல்லது அவர்களைத் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பங்காளிகளாக மாற்ற முயல்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு நல்லதல்ல!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்