Tuesday, January 02, 2007

வராத மணமகளுக்கு ஏங்கும் மாப்பிள்ளைகள்!

‘‘பிரிட்டன் ஜனநாயக மரபுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரே அடுத்து பதவியேற்கக் காத்திருக்கும் பிரதமர்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எல்.கே.அத்வானி, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார். அவ்வளவுதான்! பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் பலர் கொதித்துப் போய்விட்டனர். நேற்றும் இன்றும் நாளையும் அடல் பிகாரி வாஜ்பாய்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றார்கள் அவர்கள்.

‘‘பிரதமர் பதவிக்கு வாஜ்பாய் பெயரை நான் தான் முன்மொழிந்தேன். அப்போது நான் பா.ஜ.க. வின் தலைவராக இருந்தேன். அடுத்த தேர்தலில் அவர் என்னுடைய பெயரை முன்மொழிவாரா என்பது சந்தேகம் தான்’’ என்று இன்னொரு சமயத்தில் அத்வானி கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது கட்சித் தலைவராக ராஜ்நாத்சிங் இருக்கிறார். பிரதமர் பொறுப்புக்கு தனது பெயரை ராஜ்நாத்சிங் முன்மொழிய வேண்டும் என்பது அத்வானியின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவில், அத்வானியை தான் ஆதரிப்பதாக வாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது வேறு விஷயம்!
ஆனால், எப்போதெல்லாம் பா.ஜ.க. வின் ஆட்சித் தலைமை குறித்து சர்ச்சை எழுகிறதோ அப்போதெல்லாம் வாஜ்பாய்க்கு இருக்கும் செல்வாக்கு உறுதி செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தால், பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய்க்கு மட்டுமே தங்கள் ஆதரவு அளிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சொல்லியிருக்கிறார். ‘‘கட்சியின் மூத்த தலைவர் வாஜ்பாய். அவருடைய கருத்துக்களை மனதில் கொள்ளாமல் புறக்கணித்து, பா.ஜ.க. தனது வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது’’ என்று உ.பி. முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முலாயம் சிங் யாதவ் இல்லை. இருந்தும் அவர் வாஜ்பாயின் தலைமை குறித்து இப்படிப் பேசியிருக்கிறார்.

தலைவர்கள் பேசும் வார்த்தைகள் அறியாமல் வந்து விழுபவை அல்ல; உணர்ச்சி வேகத்தில் சிலர் வேண்டுமானால் பேசலாம். ஆனால், ‘நானே பிரதமராக வேண்டும்’ என்று அத்வானி அறியாமல் சொல்வதற்கு வாய்ப்பில்லை. பாகிஸ்தான் சென்றிருந்தபோது, முகமது அலி ஜின்னா ‘மதச்சார்பற்றவர்’ என்று அத்வானி சொன்னதுகூட தற்செயல் நிகழ்வாக நிச்சயம் இருக்காது. அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வாஜ்பாய் சொன்னதற்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராக அத்வானி உருவாக வேண்டும். அதற்கு அவருடன் இருக்கும் தீவிர இந்துத்துவ முத்திரை தடையாக இருக்கிறது. அந்தத் தடையைத் தகர்க்கும் முயற்சியின் முதல் படியாகவே அத்வானி அப்படிப் பேசியிருக்க வேண்டும்.

நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ‘லக்னோ வழியாகவே டெல்லி செங்கோட்டையைச் சென்றடைய முடியும்’ என்று வாஜ்பாய் பேசியிருக்கிறார். இதுவும் பொருள் பொதிந்ததாகவே தெரிகிறது. அதாவது, உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்காமல் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பில்லை என்பது அதன் பொருள். இன்றைய அரசியல் சூழலில் உ.பி.யில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. வுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு என்ன அர்த்தம்? முலாயம் அல்லது மாயாவதியுடன் கூட்டணி மூலமாக உ.பி.யில் தனது செல்வாக்கை உறுதி செய்து கொள்ளவேண்டும். அல்லது எதிர்அணி போலத் தோற்றம் அளித்தாலும், தங்களுக்குத் தொல்லைகள் கொடுக்காத ஆட்சி அங்கு அமைய வேண்டும். அப்படி ஒரு புரிதல் பா.ஜ.க.வுக்கும் முலாயமுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை நோக்கியும் மாயாவதியை நோக்கியும் நகர்வதற்குத் தயாராக இருக்கும் ‘உயர்’ சாதியினரின் வாக்கு வங்கியைத் தங்களிடம் தக்க வைப்பதற்கு பா.ஜ.க. போராடுகிறது. இதற்காகவே தீவிரமான இந்துத்துவ முழக்கங்களை மீண்டும் முன்வைக்கிறது. முதலமைச்சராக பா.ஜ.க. முன்னிறுத்துகின்ற கல்யாண்சிங்குக்கும் முலாயம் சிங்குக்கும் நல்ல உறவு நீடிக்கிறது.

கல்யாண்சிங்கின் மகன் முலாயம் அரசில் இருந்து வெளியேறி, பா.ஜ.கவில் சேர்ந்த பின்னும் அமைச்சராக இருந்தபோது தனக்கு தரப்பட்ட மாளிகையை அவர் இன்னும் காலி செய்யவில்லை. கல்யாண்சிங்கின் வீட்டுக்கு அடுத்த பங்களாவை அவரது தோழியரான குசும்ராய் 30 வருடங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து முலாயம் அரசு ஆணையிட்டுள்ளது. அங்கு குசும்ராய் அவரது அப்பாவின் பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். அவரது அப்பா பொதுவாழ்வில் பிரபலமானவர் இல்லை என்னும்போது இந்த சலுகை ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே ராஜ்நாத்சிங் பா.ஜ.க. தலைவராக்கப் பட்டதில் இருந்து ராஜபுத்திரர்களின் வாக்குகள் முலாயமிடம் இருந்து பா.ஜ.க.வுக்கு இடம் மாறியிருக்கக் கூடும். ‘மதச்சார்பற்ற’ கட்சிகளான காங்கிரஸ் எதிர்ப்பு, இடதுசாரிகளின் ஆதரவின்மை, வி.பி.சிங்கின் எதிர்ப்பு போராட்டங்கள், புதிதாக உருவாகியிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள், ஆட்சியில் இருந்ததால் எழும் எதிர்ப்பு ஆகியவை முலாயமின் முதலிடத்தை அசைத்துப் பார்க்கும் காரணிகளாக இருப்பதை ஒதுக்கிவிட முடியாது. இவற்றால் ஏற்படுகின்ற இழப்புகளைச் சரிசெய்வதற்கு பா.ஜ.க.வின் மறைமுக உதவி அவருக்குத் தேவைப்படலாம். அதை பா.ஜ.கவும் அங்கீகரிக்கலாம். அதேபோல் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு சொந்தமாகவோ அல்லது முலாயம் மூலமாகவோ உருவாகும் உ.பி. ஆட்சி அவசியம் என்பதை வாஜ்பாயும் உணர்ந்து, அதை அவருடைய பாணியில் தனது கட்சியினருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மத்தியில் உடனடியாக இடைத்தேர்தல் நடைபெறு வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லாதபோது, அடுத்த பிரதமர் யார் என்ற சர்ச்சை எழுவதற்கான அவசியம் இல்லை. இருந்தும், அப்படி ஒரு சர்ச்சை வலிந்து உருவாக்கப்படுகிறது. ஏன்?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிறப்பான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்படவில்லை. அந்த எதிர்க்கட்சியின் இடத்தை ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் இடதுசாரிகளே ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த நிலையில் தங்களது செயல்திட்டத்தின் தவறுகளை மறைப்பதற்கு பா.ஜ.க.வுக்கு ஏதாவது சர்ச்சைகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாகவே 2009- இல் வர இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிந்தபின், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடக்கப்படுகிறது. 1999 இல் அவர்களே பரணில் தூக்கிப் போட்ட ராமர் கோயில், பொது சிவில் சட்டம் மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஆகியவற்றை இப்போது மீண்டும் கையில் எடுக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான சில கொள்கைகளால் துன்பப்படும்போது மக்கள் மாற்று அணியைத் தேடுவார்கள். தீவிர இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தால், பா.ஜ.க.வை அந்த மாற்றாக மக்கள் பார்க்க மாட்டார்கள். தீவிரமான கொள்கைகளை அரசியல் இயக்கங்கள் கைவிட்ட பிறகே, மக்கள் அவற்றை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாரதிய ஜனதா பாடம் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (03.01.07)

Labels: , ,

Thursday, December 28, 2006

வாக்கு வங்கியை நோக்கி அம்பேத்கர் பாதை?

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக தலித் இனத்தைச் சேர்ந்த கே.ஜி.பால கிருஷ்ணன் பதவி ஏற்க இருக்கிறார். இந்தப் பதவியில் அமரப்போகும் முதல் தலித் இவர்தான். இவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்பதால் இந்தப் பதவியை ஏற்க இருக்கிறாரே தவிர, தலித் என்பதால் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிபதி பாலகிருஷ்ணன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன் தலித் இனத்தைச் சேர்ந்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற மூன்று பதவிகளை இந்தியாவின் மிகவும் பெரிய பதவிகள் என்று ஒப்புக்கொண்டால், இன்னும் பிரதமர் நாற்காலியில் மட்டுமே தலித் இனத்தைச் சேர்ந்தவர் அமரவில்லை என்பது புரிகிறது.

நீதிபதி பாலகிருஷ்ணனும் கே.ஆர். நாராயணனும் உயர் பதவிகளுக்கு வர முடிந்திருப்பது, தலித் மக்கள் தங்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தில் வென்று வருவதன் அடையாளம் என்று கருதலாம். அதேசமயம் இப்படிப்பட்ட உயர் பதவிகளில் தலித் இனத்தின் பிரதிநிதிகள் அமர முடிவதால் மட்டுமே இந்தியாவில் அந்தப் பிரிவு மக்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் முன்னேற்றம் அடைந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது. தலித்களுக்கு எதிரான பாகுபாடுகள் மறைந்து விட்டதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் ஒரு பிரிவினர் தங்களுக்கு உரிய இடங்களைப் பெறுவதற்கு கல்வி, சமூக, பொருளாதார, மற்றும் அரசியல்ரீதியாக நெடுந்தூரம் போக வேண்டியதிருக்கிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டிய சூழலில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.

இந்தியாவின் முதன்மை நீதிபதியாக ஒரு தலித் அமர இருக்கும் சூழலில், நமது இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதும் அவசியமாகிறது. நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு முதன்மை நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிப்புச் செய்தி வந்த டிசம்பர் மாதத்தில் நடந்த வேறு ஒரு செய்தி கவலையளிக்கிறது.

ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்துக்குள் 200 தலித் மக்கள் சென்றனர். இந்தியா விடுதலை அடைந்த 60 ஆண்டுகளில் இதை ஒரு செய்தியாகச் சொல்ல நேர்கிறது என்பதே சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆலயப் பிரவேசம்கூட நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகே நடந்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு தலித் இளம் பெண்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு ஆலயத்துக்குள் நுழைவதற்கான உரிமைப் போர் தொடங்கியிருக்கிறது. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத் துக்குள்ளும் செல்லலாம்’ என்ற தீர்ப்புக்குப் பிறகே இந்த ஆலயப் பிரவேசம் நடந்திருக்கிறது. அதற்கு அடுத்த நாள், அந்தக் கோயிலில் பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறவில்லை. அங்கு ஏற்கெனவே பணியில் இருந்தவர்கள் காட்டிய எதிர்ப்பே இதற்கான காரணம். இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை!
அந்தக் கோயிலில் உள்ள சுவர் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு பெரிய அளவில் ஒரு கம்பித் தடுப்பு போடப் போகிறார்கள். அந்தக் கம்பிக்கு வெளிப்புறமாக நின்று அனைத்துப் பக்தர்களும் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும். அர்ச்சகர்களும் பூஜை செய்பவர்களும் மட்டுமே கம்பித் தடுப்புக்கு உள்ளே நுழைந்து கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு நிர்வாகம் இப்படி ஒரு சமரசத்தில் இருதரப்பினரையும் இணைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சமரசத்தை அம்பேத்கர் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்தக் கிராமத்தில் மீண்டும் மீண்டும் இந்த ஆலய நுழைவு உரிமைக்காகப் போராடி சலித்துப்போன தலித் மக்கள் ஆயிரம் பேர், வருகிற புத்தாண்டில் புத்த மதத்தைத் தழுவ இருப்பதாக இன்னொரு செய்தி கூறுகிறது. அதாவது ‘‘நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’’ என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியில் நடக்கத் தீர்மானித்து விட்டனர். ‘உங்கள் கோயிலுக்குள் என்னை வரக்கூடாது என்று சொன்னீர்கள் என்றால், நான் எனது சொந்தப் பாதையைத் தீர்மானித்துக் கொள்கிறேன்’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். ஒரிசா உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ‘எந்த ஓர் இந்துவும் எந்த ஓர் ஆலயத்துக்குள்ளும்’ சுலபமாக நுழைந்துவிட முடியவில்லை என்பதே உண்மையான நடைமுறையாக இருக்கிறது. ‘ஒருநாள் ஆலய நுழைவு’ என்பது ஓர் அடையாளமாக அல்லது ஒரு சடங்காக நடந்து முடிந்திருக்கிறது.

ஒரு சமூகம் அடையாளங்களுடன் மட்டும் மனநிறைவு கொண்டுவிட முடியாது. பிரிவுக்கும் பாகுபாடுகளுக்கும் காரணமான அடிப்படை முரண்களுக்குத் தீர்வு காணாத அடையாளங்களால் பரந்த சமூகத்துக்கு எந்த ஒரு பலனும் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி ஆட்சிக்கு வந்தார். மத்திய அரசில் நீண்ட காலம் பீகாரைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அமைச்சராக இருந்தார். ஆனால், இவர்கள் எல்லாம் டாக்டர் அம்பேத்கரைப் போல பரந்த உழைக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்தார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே.

மாயாவதியும் ஜெகஜீவன்ராமும் தலித் அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கான அடையாளங்கள். அவர்கள் அரசியல்வாதிகள். எனவே அடுத்த தேர்தல் என்ற இலக்கைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலாது. ஆனால், வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் அரசியல்வாதியாக அம்பேத்கர் இருக்கவில்லை. அவர் ஓர் அரசியல் மேதை. எனவே அவர் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்தித்தார். அதனால்தான் அடிப்படை முரண்களைத் தீர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

எப்படி இருந்தபோதிலும் ஓர் அடையாளமாக உயர்பதவிகளுக்கு ஒரு தலித் வருவதுகூட நமது சமூகத்தில் சிரமமானதாகத்தான் இருக்கிறது. சிக்கலான பிரச்னைகள் பலவற்றை எதிர்கொண்டதற்குப் பிறகே இந்த உயர்நிலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் மற்றும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வந்திருக்க முடியும்.

இவர்களைப்போல் வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து முன்னேறும் மனிதர்களுக்கும் சமூகத்தினருக்கும் உற்சாகம் அளிக்கும் மேற்கோள் ஒன்று இருக்கிறது.

‘‘அவர்கள் முதலில் உங்களைப் புறக்கணிப்பார்கள்; பிறகு உங்களைக் கேலி செய்வார்கள். அதன் பிறகு உங்களுடன் போட்டி போடுவார்கள்; இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’’ என்பதே அது.

- ஜென்ராம்
நன்றி : ஜூனியர் விகடன் (31.12.06)

Labels: , ,