Thursday, May 12, 2011

நிறம் மாறாத புள்ளிகள்

“அவங்க வேறு எப்படி நடந்துக்குவாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?” என்று அந்த நண்பரிடம் கேட்டேன். நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் நடந்த கலாட்டாக்கள் பற்றி அப்போது செய்தி வந்திருந்தது. அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் யார்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள்; அவர்களை நியமித்திருப்பது எது? மக்களவை. பிறகு அந்தக் குழுவில் மட்டும் அமளியும் போட்டிக் கூட்டங்களும் எப்படி இல்லாமல் போகும்?

தமிழ்நாடு, ஆந்திரா, உ.பி, மகாராஷ்டிரா,ஒரிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அந்தந்த மாநில சட்டமன்றக் கூட்டங்களில் அவ்வப்போது என்னென்ன நடந்தன என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? அங்கே கற்ற பாடங்களை வேறு எங்கே பரிசோதித்துப் பார்ப்பது? அதனால் அந்த கலாட்டா பற்றி எனக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ எதுவும் இல்லை!

ஆனால் பேசிக் கொண்டிருந்த நண்பர்களுக்கு வருத்தம் இருந்தது. அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தின் மீதும் அது அமைக்கும் நிலைக் குழுக்கள் மீதும் நம்பிக்கை இருந்தது. அவநம்பிக்கையாளர்களாக அவர்கள் இன்னும் மாறவில்லை. மரபுகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன என்பதால் அவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அல்லது காங்கிரஸ், பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக என்று பல முனைகளில் தாக்கும் அற்புத ஆயுதமான ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தமாகவும் இருக்கலாம். அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம். அவர்களுடைய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பல வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டம் நடந்தது. அதன் தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அந்தக் குழு விசாரித்து ஒரு வரைவு அறிக்கையைத் தயாரித்து இருந்தது. அந்த அறிக்கை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவரைக் கண்காணிக்கத் தவறிய பிரதமர், பிரதமர் அலுவலகம், அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் என்று எல்லோரையும் குற்றம் சாட்டி இருந்தது. அந்த வரைவு அறிக்கையைக் குழு ஏற்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்யவே அன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களுக்கு அந்த வரைவு அறிக்கையின் நகல் கொடுக்கப்பட்ட நாளே அதன் உள்ளடக்கம் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சங்கடங்களை உருவாக்கும்படி அந்த அறிக்கை இருந்ததால், அந்தக் கட்சிகள் ‘ஊடகங்களுக்கு அறிக்கை கசிந்தது எப்படி’ என்று கண்டனம் தெரிவித்தன. முரளி மனோகர் ஜோஷி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த வரைவு அறிக்கையை ஏற்காமல் நிராகரிப்பதற்கு குழுவுக்குள் பெரும்பான்மையைத் தேடும் முயற்சிகளில் ஆளும் தரப்பு இறங்கியது.

ஒவ்வொரு வருடமும் பொதுக் கணக்குக் குழு அமைக்கப்படும். 22 உறுப்பினர்களுக்கு மிகாமல் அந்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். மக்களவையில் இருந்து 15 பேரும், மாநிலங்களவையில் இருந்து 7 பேரும் இருக்கலாம். இந்த 22 பேரும் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கக் கூடாது என்பது விதி. இப்போது இந்தக் குழுவில் மொத்தம் 21 உறுப்பினர்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏழு பேர். திமுகவில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் முறையே இரண்டு பேர். பாஜகவுக்கு நான்கு பேர்; சிவசேனை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வொரு உறுப்பினர்.

இந்தக் கணக்கில், காங்கிரசும் திமுகவும் சேர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எண்ணிக்கை ஒன்பது. பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை ஏழு. அதிமுகவும் மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மூன்று. இந்த மூன்று பேரும் ஆளும் கூட்டணிக்கு எதிராக இருப்பதால் வரைவு அறிக்கைக்கு ஆதரவான வாக்குகள் பத்து. எதிரான வாக்குகள் ஒன்பது. இங்கே தான் இந்திய அரசியலை தங்கள் விருப்பப்படி வளைக்கும் வலிமை கொண்ட உத்தரப் பிரதேச அரசியல் வருகிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்று சொல்லும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது. தங்களுடைய சிண்டு அல்லது குடுமியின் பிடி மத்திய ஆட்சியாளர்களிடம் இருந்தால், சிற்றரசர்களும் குட்டிராணிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் சரணடையத் தயாராக இருப்பார்கள் என்பதை நாம் மாயாவதி, முலாயம்சிங் நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு எதிராகவும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகவும் மாயாவதியின் கட்சியும் முலாயம் சிங் கட்சியும் ஒரே பக்கத்தில் நின்றன!

இப்போது குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு நெருக்கடி உருவானது. அவர் தயாரித்த வரைவு அறிக்கைக்கு அவர் தலைவராக இருக்கும் குழுவில் பெரும்பான்மை இல்லை. அவருக்கு எதிராக 11 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் இருந்தன. மொத்த எண்ணிக்கை 20 ஆக இருந்து ஆதரவும் எதிர்ப்பும் சமமாக இருந்தால் தலைவர் என்ற முறையில் அவர் ‘தீர்மானிக்கும்’ வாக்கை அளிக்கலாம். இப்போது அதற்கும் வழியில்லை. முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்காக முரளி மனோகர் ஜோஷி கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவானவர்களும் வெளியேறினார்கள். அரசுக்கு ஆதரவான 11 பேரும் காங்கிரஸைச் சேர்ந்த சைபுதீன் சோஸ் என்ற முன்னாள் மத்திய அமைச்சரை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்!

இந்த செயல் சட்டரீதியாக செல்லத்தக்கதா என்பது வேறு விஷயம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இது ‘ஊழலுக்கு’ எதிராக இருக்கும் ஒரு பகுதி மக்களுக்கு தார்மீக ரீதியாக சோர்வைக் கொடுக்கும். வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் கடந்த கால வரலாற்றில் பல சம்பவங்களில் இருந்து பார்க்க முடியும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் நரசிம்மராவ்! முலாயம் சிங்- அமர்சிங்கிடம் பேரம் நடத்தியும் எதிர்க்கட்சி எம்.பிக்களை ‘வாங்கியும்’ 2008-ல் பிரதமர் மன்மோகன்சிங் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்!

இந்த முலாயம்சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களை நம்பித்தான் சிலர் மூன்றாவது அணி என்றும் மாற்று அணி என்றும் பேசி வருகிறார்கள். இந்த மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கும் அவர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home