Thursday, April 07, 2011

காட்சிப் பிழைகள்

என்ன செய்வது என்றே சரவணனுக்குத் தெரியவில்லை. தீபாவளி செலவுக்காக அலுவலகத்தில் இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான். வீட்டுக்குப் புறப்படும்போது அவனிடம் அந்தப் பணம் இல்லை. அலுவலகத்திலேயே அது காணாமல் போயிருந்தது. அவனுடைய இருக்கைக்கு முன்னால் இருக்கும் மேஜையின் மேலோ அல்லது மேஜையின் டிராயருக்குள்ளோ அவன் கவருடன் வைத்திருக்கக் கூடும். காசாளரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்த்து நினைவிருக்கிறது. போகும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று எங்கோ வைத்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் எங்கே இருந்து அது காணாமல் போனது என்பதை அவனால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அந்தக் கவர் அவனிடம் இல்லை. யாரை சந்தேகப்படுவது?

அன்று தீபாவளிக்கு முந்தைய நாள். சரவணனுடைய வீட்டுக்கு அந்த நண்பர் வந்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பை இருந்தது. பணத்தைப் பறிகொடுத்த சரவணன், அவனுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் புத்தாடைகள் வாங்கி இருக்க மாட்டான் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடைய குடும்பத்தில் ஏமாற்றமும் அசாதாரண அமைதியும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் அவர்களுடைய தேவை அறிந்து சரவணனுடைய குழந்தைக்கு புது ஆடையும் கொஞ்சம் இனிப்புகளும் பட்டாசுகளும் அவர் வாங்கி வந்திருந்தார்.

அந்த நண்பரின் செயல் சரவணனுக்கும் அவனுடைய மனைவிக்கும் மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. ஆனால் அலுவலகத்தில் அவனுடைய பணத்தைத் திருடியதே அந்த நண்பர்தான் என்ற உண்மையை சரவணன் அறிந்திருக்கவில்லை!

அந்த சரவணனின் நிலையில் தான் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் நமக்கு என்னென்னவோ இலவசமாகத் தரப் போகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாருடைய ஆட்சி அமைந்தாலும், நமக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, இலவச பஸ் பயணம், மடிக்கணினி எல்லாம் தரப் போகிறார்கள். மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, ஃபேன் எல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அ.தி.மு.க தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி அவை நமக்குக் கிடைக்கும். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் எப்படி கிடைக்கும்? அவர் தான் “சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் சேர்த்து செய்வார்” என்று பிரசாரம் செய்கிறார்களே!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். சென்ற இதழில் இந்தப் பகுதியில் நானும் திமுக அறிக்கையின் நீட்சி அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இன்றைய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்க முடியாத ஒரு வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார். கேபிள் தொழிலை அரசுடைமையாக்குவோம் என்றும் கட்டணமில்லாமல் இலவசமாக ‘கேபிள் கனெக்ஷன்’ மூலமாக தொலைக்காட்சி சேவைகளை வழங்குவோம் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ஒரு வகையில் இதுவும் கூட திமுகவின் செயல்திட்டத்தின் நீட்சிதான்!

குடும்பத்துக்குள் முரண்பாடுகளும் பகை உணர்வும் தலைதூக்கிய காலத்தில் அரசு கேபிள் நிறுவனத்தைத் தொடங்கியது திமுக அரசு. “கண்கள் பனித்தன; நெஞ்சம் இனித்தது” என்று முதலமைச்சர் கருணாநிதி சொன்ன நாள் முதல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த திட்டத்துக்கு உயிர் கொடுப்பேன் என்பதே ஜெயலலிதாவின் வாக்குறுதி!
ஏற்கனவே மின்வெட்டால் அவதிப்படும் தமிழகத்தில் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் என்று மின்சக்தி தேவைப்படும் கருவிகளாக கொடுக்கப் போகிறார்கள்.

இவற்றைப் பயன்படுத்துவதற்கான மின் ஆற்றலை எங்கிருந்து பெற முடியும்? சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை சொல்கிறது. ஒரு வீட்டுக்கான மின் தேவைகளை எதிர்காலத்தில் சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்வதே நல்ல மாற்றாகத் தெரிகிறது. அனல் மின்சாரம் சுற்றுச்சூழலை மாசு படுத்துகிறது; அணு மின்சாரம் கதிரியக்க அபாயத்தைத் தன்னுள் கொண்டதாக இருக்கிறது; சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெறுவதற்கான வழிகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதே நல்லதாகத் தோன்றுகிறது. அந்த வகையில் இலவச அறிவிப்புகளைத் தாண்டி இது போன்ற சில ஒளிக்கீற்றுகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் காண முடிகிறது!

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பதையும் அரிசி, கோதுமையை இலவசமாக கொடுப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. வறுமையை ஒழிப்போம் என்கிறோம்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்கிறோம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நம்பிக்கை அளிக்கிறோம்; இந்த வார்த்தைகள் சாதாரண மனிதர்களின் உள்ளங்களில் கோபம் வராமல் பார்த்துக்கொள்கின்றன.

இதை எல்லாம் மீறி, அவர்களுடைய வயிற்றில் எழும் பசித்தீ அவர்களைக் கோபமடைய வைத்து விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நாம் முன் வைத்திருக்கிறோம்; இலவச அரிசி உட்பட பல ‘மக்கள் நலத் திட்டங்களை’ நடைமுறைப்படுத்துகிறோம். விடுதலைச் சதுக்கங்களையோ மெமோரியல் ஹால்களையோ ஜந்தர் மந்தர்களையோ நோக்கி மக்கள் அணிவகுக்காமல் தடுப்பதற்கு ஓரளவு இவை காரணமாக இருக்கின்றன!

நம்மை அல்லது நம்மோடு வாழும் சாதாரண மக்களை அரைகுறை வயிறோடும் உயிரோடும் வைத்திருக்க உதவும் சில இலவசங்களை விட்டு விடலாம். தொலைக்காட்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக நம்முடைய அரசாங்கம் எப்படித் தர முடிகிறது? இப்படிப் பல இலவசத் திட்டங்களை நமக்குக் கொடுத்து ‘கொடை வள்ளல்கள்’ போலவும் நம் வாழ்க்கையில் அக்கறை உள்ளவர்கள் போலவும் நம்முடைய தலைவர்களால் எப்படி ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது?

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கு 3750 கோடி ரூபாய் என்பதில் தொடங்கி நலத் திட்டங்களுக்காக ஒரு வருடத்துக்கு 15000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்த வருடம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் ஏறத்தாழ 15000 கோடி ரூபாய்! நாட்டின் வளர்ச்சி விகிதம் ஏறுகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் மது விற்பனை ஒரு வருடத்துக்கு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வாங்கிய கூலியை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பதற்குள் உழைக்கும் மக்களிடம் இருந்து ’டாஸ்மாக்’ மூலமாகத் திருடி விடுகிறோம்; அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு அரிசியும் கிரைண்டரும் மிக்ஸியும் கொண்டு கொடுக்கிறோம். முதல் வரியில் இருக்கும் சரவணனின் பணத்தைத் திருடிவிட்டு குழந்தைக்கு பார்சல் கொண்டு வந்த நண்பருக்கும் நம்முடைய அரசாங்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home