Thursday, May 12, 2011

“அடங்க மறுத்தால் அவதூறு செய்”!

எதிர்ப்பவர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதை தனிமனிதர்களை விட அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்கள் மத்தியில் முதலில் பயத்தை விதைக்க வேண்டும்; அவர்களிடம் இருக்கும் அறியாமையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; சாதி, மதம், இனம் போன்ற விஷயங்களின் மூலம் எதிர்ப்பவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்; இவற்றை எல்லாம் மீறியும் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் அணி திரண்டார்கள் என்றால் எதிர்க்கும் தலைவர்கள் மீது அவதூறுகளை அள்ளி விட வேண்டும். இந்த வழிமுறைகளை எல்லாம் ஏதேனும் நிர்வாகப் பள்ளி சொல்லிக் கொடுக்கிறதா என்று தயவுசெய்து கேட்காதீர்கள். இருக்கும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும் தனிமனிதர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் காலம்காலமாக இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!

அப்படி ஒரு நிலையைத் தான் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் இன்று எதிர்கொள்கிறது. அந்த இயக்கத்தால் எந்த அடிப்படைகளும் தகர்ந்து போகப்போவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்தாலும் கூட, அன்னா ஹசாரே குழுவினரை அவ்வளவு சுலபமாக அவர்களால் விட்டுவிட முடியவில்லை. “ஊழல் குடியரசு” என்று இளைஞர்கள் இணையத்திலும் செல்பேசி குறுஞ்செய்திகளிலும் இந்தியாவைக் கிண்டல் செய்கிறார்கள். எந்த ஒரு அரசுத் திட்டமும் ஊழல் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படாது என்று பொதுமக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில் லோக்பால் சட்டம் நம்முடைய நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்தும் அல்லது அறவே ஒழிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் விதைக்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மாபெரும் அறப் போராட்டமாக சித்தரிக்கப்பட்டது. லோக்பால் சட்டம் இயற்றுவதற்கான குழுவில் அன்னா ஹசாரே சொல்லும் நபர்களும் சேர்க்கப்பட்டனர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷண், அவருடைய மகன் பிரசாந்த் பூஷண் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றார்கள். இப்போது அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

சாந்தி பூஷண் என்ற பெயர் எனக்குப் பரவசமூட்டிய நாட்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவருடைய தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப் போனவர் அவர். அந்த வழக்கில் ராஜ்நாராயண் வெற்றி பெற்றார். இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்தது. அதை அடுத்து சட்டங்கள் வளைக்கப்பட்டதும் நாடு முழுவதும் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் தனிக்கதை! ராஜ்நாராயணனின் அந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் சாந்திபூஷண்!

நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அடுத்து அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் அமைச்சரவையில் இதே சாந்தி பூஷண் சட்ட அமைச்சரானார். எதற்காக இப்போது அதை எல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது? மத்திய சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே சாந்திபூஷண் லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆட்சி போனதோடு அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டது!

இன்றைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் போட்ட ஒரு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் சாந்திபூஷண் வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். இடமலையார் அணையில் நீர்மின் திட்டப்பணிக்காக கொடுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு அது. அமைச்சர் பாலகிருஷ்ணபிள்ளை போட்ட அந்த ஒப்பந்தத்தால் மாநில அரசுக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அச்சுதானந்தன் வழக்கு போட்டார். உச்சநீதிமன்றம் வரை வந்த அந்த வழக்கில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 10000 ரூபாய் அபராதமும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. நீதித்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி சாந்தி பூஷணும் அவருடைய மகன் பிரசாந்த் பூஷணும் இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

“நீங்கள் சட்ட அமைச்சராக இருந்திருக்கிறீர்கள்; ஆனால் தெருவில் குறும்புகள் செய்து கொண்டு திரியும் சிறுவன் மாதிரி பேசுகிறீர்கள்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த காலத்தில் சாந்தி பூஷணைக் கண்டித்திருக்கிறார்கள்; அதேபோல் ஒரு சமயம், “நான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்று சாந்தி பூஷண் நீதிமன்றத்தில் உறுதியாக இருந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் இப்போது அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகளைச் ‘சமாளிப்பதில்’ மகன் பிரசாந்த் கில்லாடி என்றும் அதற்கான செலவு 4 கோடி ரூபாய் வரை ஆகலாம் என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கிடம் சாந்திபூஷண் பேசிக் கொண்டிருக்கும் ஒரு குறுந்தகடு வெளியானது. அது ஒட்டுவேலை செய்யப்பட்ட சி.டி என்று ட்ரூத் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனம் சொல்கிறது. அதில் எந்த ஒட்டு வேலையும் இல்லை என்றும் உண்மையான பதிவுதான் என்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் தெளிவுபடுத்துகிறது. எது உண்மை என்று இப்போது யாரும் அறிந்து கொள்ள முடியாது.

நில ஒதுக்கீடு பற்றிய அடுத்த குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது. நொய்டா நகரத்தில் 10000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பண்ணை இல்ல நிலத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு சாந்தி பூஷணுக்கு ஒதுக்கி இருக்கிறது. இதற்காக அவர் மூன்றரை கோடி ரூபாய் கட்டியிருக்கிறார். ஆனால் இதன் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும். அவருடைய இன்னொரு மகனான ஜெயந்துக்கும் ஒரு பண்ணை இல்ல நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான ஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டது என்று பூஷண்கள் சொல்கிறார்கள். அந்த ஒதுக்கீடு தற்செயலானதா அல்லது திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா என்பது வேறு விஷயம். ஆனால் லோக்பால் சட்ட மசோதாவை உருவாக்கும் குழுவில் இருந்து பூஷண்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகத் தொடங்கி விட்டது.

இதை எல்லாம் பார்க்கும்போது என்ன எண்ணம் தோன்றுகிறது? பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home