Thursday, May 12, 2011

பொய் சொன்னாலும் நீயே ...........

‘உலகத்திலேயே மிகவும் மோசமான பயங்கரவாதி’ என்று அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டவர் ஒசாமா பின்லேடன்; அவர் இப்போது உயிருடன் இல்லை. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை அவரைக் கொன்றுவிட்டது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் அவர் தங்கி இருந்தார். அங்கு அதிரடியாக உள்ளே நுழைந்த அதிரடிப்படை அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவரைக் கொன்று விட்டது. இதுவே ஊடகங்களும் அமெரிக்க அதிபரும் நமக்கு தந்த செய்தி.

ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இணையாக பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் ‘ஒசாமா வதைப் படலம்’ சித்தரிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புதிய காட்சிகளை அமெரிக்க அரசு சார்பில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாட்டு மக்களுக்கான உரையில் சொல்லப்பட்ட திரைக்கதையின் முக்கிய காட்சிகளைக் கூட மாற்றும் அதிகாரம் அங்குள்ள அதிகாரிகளுக்கு இருக்கிறது போலிருக்கிறது. ஆனால் மாறாத செய்தி ஒன்று இருக்கிறது. ஒசாமா பின்லேடன் இப்போது உயிருடன் இல்லை என்பதே அது!

இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இறந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகவே பல காலம் இருந்தது. அந்த ஒரு சர்ச்சையை வைத்துக் கொண்டு, போராளிகளின் சாவுகள் மட்டுமே சர்ச்சைகளை உருவாக்குகின்றன என்று சொல்லி விட முடியாது. பேரினவாத அடிப்படையிலான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள். அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக உயிரற்ற ஓர் உடலைக் காட்டினார்கள். அடுத்த சில நாட்களுக்கு ஏராளமான கதைகள் உலா வந்தன!
தமிழ்நாடு அதிரடிப்படையின் கைகளில் சிக்காமல் நீண்டநாட்களாக இருந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் சர்ச்சைகள் கிளம்பின. மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடலை ஒரு வேனில் வைத்து பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அப்போது சொன்னவர்கள் உண்டு. பேட்டை ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் சிலர் ‘என்கவுண்டரில்’ கொல்லப்படும் போதும் சர்ச்சைகள் எழுகின்றன. ஏன்? அரசுத் தரப்பு சொல்லும் கதைகளில் ஓட்டைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன!

“உண்மை வீட்டை விட்டு கிளம்புவதற்குள் பாதி உலகத்தைப் பொய் சுற்றி வந்து விடுகிறது” என்று சொல்வார்கள். ஒசாமா பின்லேடனின் இப்போதைய மரணச் செய்தியையும் ‘அப்பட்டமான பொய்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று சிலர் சொல்வதைப் போல, ஒசாமா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று இவர்கள் சொல்லவில்லை. மாறாக, கடந்த 2001-ம் ஆண்டே சிறுநீரகம் செயல் இழந்து போனதால் அவர் இறந்து போய்விட்டார் என்பது அவர்களுடைய கருத்து. டேவிட் ரே க்ரிஃபின் என்பவர் எழுதிய ‘ஒசாமா பின்லேடன்: டெட் ஆர் அலைவ்’ என்ற நூலை ஆதாரமாகச் சொல்கிறார்கள். அவர் முன்வைக்கும் ஆதாரங்கள் என்னென்ன?

2001-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஒசாமாவின் தகவல்கள் அமெரிக்க உளவுத் துறையால் இடைமறித்துக் கேட்கப்படவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் பாகிஸ்தானின் ஒரு பிரபல செய்தித்தாளில் ஒரு செய்தி வந்தது. பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளில் முக்கியமான ஒருவர், ‘ஒசாமா பின்லேடனின் இறுதிச் சடங்குகளில்’ தான் பங்கேற்றதாகத் தெரிவித்து இருந்தார். மிகவும் மோசமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2001, செப்டம்பர் மாதத்தில் ராவல்பிண்டி மருத்துவமனையில் ஒசாமா அனுமதிக்கப்பட்டிருந்ததாக சிபிஎஸ் நியூஸ் சொன்னது. ஜூலை, 2001 –இல் துபாயில் ஒரு மருத்துவமனையில் ஒசாமா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அப்போது அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் அதிகாரி அவரை அங்கு சந்தித்ததாகவும் ஒரு தகவல் சொல்கிறது.

2002, ஜூலை மாதத்தில் சி.என்.என் ஒரு செய்தி வெளியிட்டது. அந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே ஒசாமா பின்லேடனின் மெய்க்காவலர்கள் பிடிபட்டார்கள் என்கிறது அந்த செய்தி. அதற்கு என்ன அர்த்தம் என்றும் அந்த செய்தி அறிக்கை விளக்கியது. ‘பின்லேடனின் மெய்க்காவலர்கள் தனியாகப் பிடிபடுகிறார்கள் என்றால், அந்தக் காவலர்கள் யாருடைய பாதுகாவலர்களாக இருந்தார்களோ, அந்த முக்கியமான நபர் உயிருடன் இல்லை என்று பொருள்’ என்பதே அந்த விளக்கம்! அத்துடன் அவருடைய ஆதாரங்கள் நிற்கவில்லை. பாகிஸ்தான் அதிபராக அப்போது இருந்த பர்வேஸ் முஷாரப், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்ஸாய், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ.யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் டேல் வாட்சன் உள்ளிட்ட பலர் பின்லேடன் உயிரோடு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அவ்வப்போது பின்லேடன் பேசியதாக வெளியான டேப்கள் உண்மையானவை அல்ல என்றும் உருவாக்கப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்!

இவை எல்லாம் பின்லேடன் 2001-லேயே இறந்து போய்விட்டார் என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள். ஒருவேளை இவை சொல்வது உண்மை என்று வைத்துக் கொள்வோம். உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் இவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான தகவலை நாட்டு மக்களிடம் சொல்வாரா? அல்லது அவருக்கே தெரியாமல் இதெல்லாம் நடக்கிறதா? ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் ஒசாமா நிராயுதபாணியாக இருந்தார் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது. அப்படி என்றால் அவரை ஏன் கொல்ல வேண்டும்? உலகம் முழுவதும் பயங்கரவாத வலைப்பின்னலை தலைமை தாங்கி நடத்தும் ஒருவர் உயிருடன் சிக்கினால் தானே அரசுக்கு பயன்?

ஒரு மனிதனுடைய மரணத்தை உறுதிசெய்வது எது? அவனுடைய உயிரற்ற உடல்தானே? ஒசாமாவின் உடலை உலக மக்களுக்குக் காட்டாமல், அவசர அவசரமாக கடலில் ‘அடக்கம்’ செய்வதற்கு என்ன காரணம்? சாட்சியாக சடலத்தைக் காட்டாமல் இருந்தால் ஒரு மரணத்தை சட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இப்படி ஏராளமான கேள்விகள் வரலாம் என்பது தெரிந்தும் ஓர் அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? அமெரிக்க அதிபர் மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறார். ஆனால் அவருடைய கவர்ச்சி இப்போது அமெரிக்க மக்களிடம் எடுபடவில்லை. அவருக்கான மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. ஆனால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்றும் 9/11 நிகழ்வுக்கு நீதி வழங்கப்பட்டது என்றும் ஒபாமா உரை ஆற்றினார். இதனால் அமெரிக்க தேசியத்தின் பெருமை உயர்த்திப் பிடிக்கப்பட்டவுடன், அவருக்கான ஆதரவு இப்போது பெருகி இருக்கிறது.

ஒசாமா பின்லேடன் உயிருடன் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக ஏற்றாகி விட்டது. நல்லது! இப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போர் முடிவுக்கு வருமா? வரும்.. ஆனா வராது. ஏன்? ஒசாமாவின் சாவுக்கு அல்கைதாவும் தலிபானும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது! அந்தத் தாக்குதல்களில் இருந்து உலக மக்களை அமெரிக்காவைத் தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home