Saturday, February 19, 2011

வளரும் தற்கொலைகள்!

சார்! எதிர்பார்த்ததை விட கடுமையான டிராபிக் சார்! அதுக்கு நடுவுல மாட்டிட்டு இருக்கேன் சார்! அரை மணி நேரத்துக்குள்ள வந்துடுவேன் சார்!” என்றார் அந்த ஊழியர். அவருக்கு என்று தனியாகப் பெயர் சொல்லத் தேவையில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் பல அலுவலகங்களில் காலை ஒன்பதரை மணி முதல் பத்தரை மணி வரை வரும் பல தொலைபேசி அழைப்புகளின் உள்ளடக்கம் இதுதான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதே ‘சர்க்கஸ் வித்தை’ போல இருக்கிறது என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். மாநகரங்களின் எல்லா சாலைகளும் எதை நோக்கிப் போகின்றன என்பது தெரியாது. ஆனால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் என்பதை மட்டும் அறிய முடிகிறது.

இந்தப் போக்குவரத்து நெரிசலைப் பற்றிப் பேசும் போதெல்லாம், வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகமாகி இருப்பதையும் அவற்றை வாங்கும் சக்தி நடுத்தர மக்களிடம் அதிகரித்து இருப்பதையும் பேசிப் பேசி மாய்ந்து போகும் பல நண்பர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 1990-களுக்கு முன்னால், சாதாரணமாக ஒரு ஸ்கூட்டருக்கு பதிவு செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருந்த காலத்தை சில மூத்த அதிகாரிகள் சொல்லும்போது இளைஞர்கள் ‘வாய் பிளந்து’ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் ‘வளர்ச்சியைப்’ பற்றி டாக்டர் மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏற்கனவே 2004-ம் ஆண்டு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியாவை ‘ஒளிரச்’ செய்த வரலாறும் அவர்களுடைய மனதில் தோன்றி மறையக் கூடும்.

இந்த ‘மயக்க’ நிலையோடு சில செய்திகளைப் பார்க்கும்போது அந்த செய்தியின் தீவிரம் நம்மைத் தாக்கி நம்முடைய மனசாட்சியை உலுக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா மண்டலத்தில் அவுரங்காபாத் நகர்ப் பகுதியில் கடந்த 2010 அக்டோபர் மாதத்தில் மட்டும் 150 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் 65 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டன என்று பத்திரிகையாளர் பி.சாயிநாத் ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறார். தொடர்ந்து ‘எரிதழல்’ போன்ற அரசியல் மற்றும் சமூக விமர்சனக் கட்டுரைகளை அல்லது பத்திகளை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு பி.சாய்நாத் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் பேரன். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் ‘ஊரகப் பிரிவு ஆசிரியராகப்’ பணியாற்றுகிறார். ரமன் மேக்சேசே விருது பெற்ற இந்தப் பத்திரிகையாளர் தன்னை ஒரு ‘செய்தியாளர்’ என்று மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறார். இந்தியாவின் கிராமப்புறங்களில் விவசாயம் எப்படி நடக்கிறது என்பதையும் விவசாயிகள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விபரங்களையும் பிற பகுதி மக்களுக்கு அறியத் தந்தவர் சாயிநாத்!

150 பென்ஸ் கார்கள் வாங்கப்பட்ட செய்தியையும் 2009-ம் வருடம் இந்தியாவில் 17368 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தேசிய குற்றப் பதிவுக் குழுமத்தின் தகவலையும் இணைத்து ஒரு கட்டுரையை பி.சாயிநாத் எழுதி இருக்கிறார். சாமான்ய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நன்றாக செயல்படுத்துவதாக நம்பி, இந்திய மக்கள் அந்தக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு அமர்த்திய ஆண்டில் இத்தனை தற்கொலைகள்! 2008-இல் 16196 விவசாயிகள் தற்கொலை செய்தார்கள் என்கிறது தேசிய குற்றப் பதிவுக் குழுமம். டாக்டர் மன்மோகன்சிங், நரசிம்மராவ் தொடங்கி வைத்த பொருளாதார சீர்திருத்தங்களின் பலன்களை இந்திய மக்கள் அனுபவிக்கத் தொடங்கிய 1997 முதல் 2009 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 216500! இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை என்று சொல்வார்களே, அந்த மும்பையைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் கடந்த பத்து வருடங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் முதல் மாநிலமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைத் ‘தற்கொலை வளைய மாநிலங்கள்’ என்று சொல்கிறார்கள்!

தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது; நிலமற்ற விவசாயிகளுக்கு ‘காணி நிலம்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கவலைகளை மறந்து பொழுதுபோக்குவதற்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் பொதுவாக ஒருவருடைய மனதில் எழலாம். ஆனால் தேசிய குற்றப் பதிவுக் குழுமம் நம்முடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளி வீசுகிறது. 2008-ம் வருடம் தமிழ்நாட்டில், 512 ஆக இருந்த தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2009-ம் வருடம் 1060-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 2005-ம் வருடத்தில் இருந்து 2009 –ம் வருடம் வரை தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3737 என்கிறது ஒரு செய்தி.

வருடம்

தேசிய குற்றப் பதிவுக் குழுமம்

அரசு தகவல்

2009

1060

0

2008

512

1

2007

484

1

2006

426

0

2005

1255

1

மொத்தம்

3737

3

ஆனால், இந்த எண்ணிக்கையை தமிழக அரசு முற்றிலுமாக மறுக்கிறது. அந்த செய்தியின்படி, இந்த ஐந்து வருடங்களில் 3 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாரிமுத்துவும், ம.தி.மு.க.வின் ஞானதாசும் இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முற்றிலுமாக மறுத்திருக்கிறார். தமிழக விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இந்த செய்தி தவறானது என்று சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் தமிழக காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து விவசாயத் துறை புள்ளி விபரங்களைக் கேட்டுப் பெறுவதாக அமைச்சர் சொல்கிறார். தேசிய குற்றப் பதிவுக் குழுமம் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் தகவல் திரட்டுவதாக சொல்கிறது. ஒரே காவல் நிலையத்தில் இருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு வெவ்வேறு விபரங்களைக் கொடுப்பார்களா என்பதை யார் உறுதி செய்வது? அந்த செய்தியில் 2005-ம் வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்து திமுக ஆதாயம் தேடிக் கொள்ள முயலும் என்பது வேறு விஷயம்!

ஏராளமான சிறு விவசாயிகள் விதை வாங்குவதற்கும், உரம் வாங்குவதற்கும் வங்கிகள் அல்லாத இடங்களில் வாங்கிய கடன்கள் அரசாங்கம் தள்ளுபடி செய்த கடன்களில் அடங்காதவை. அதாவது ‘7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி’ என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு வெளியே ஏராளமான விவசாயிகள் கடனில் மூழ்கி இருக்கிறார்கள். இந்தக் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும் அவை ’மானம் பெரிது’ என்று வாழும் விவசாயிகளுக்குத் தரும் மன உளைச்சலையும் எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழக அரசு சொல்வதைப் போல், ‘பட்டினிச் சாவு’ இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விவசாயத் தொழில் தரும் நெருக்கடியால் எழக் கூடிய பிரச்னைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற தரவை அரசு மறுக்க முடியாது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home