Sunday, November 07, 2010

ஆதித்யாவின் அரசியல் அதிரடி

அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கு எதிராக நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை” என்பது பேரன் ஆதித்யாவின் பதில். ம்..ம்..கற்பனையைக் கன்னாபின்னா என்று ஓட விடாதீர்கள். ந்த ஆதித்யா, வேறு யாருமல்ல, சிவசேனை நிறுவனர் தலைவர் பால் தாக்ரேயின் பேரன். “பாடத் திட்டத்தில் இருந்த ஒரு புத்தகத்துக்கு எதிராக நீங்கள் நடத்திய போராட்டம் தவறானது என்று உங்கள் கல்லூரி முதல்வர் சொல்லி இருக்கிறாரே?” என்ற கேள்விக்கு ஆதித்யா அப்படிப் பதில் கொடுத்திருக்கிறார். “அவர் என்னுடைய கல்லூரி முதல்வர். அவரை நான் மதிக்கிறேன். எனவே அவர் கருத்தை மறுத்து வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை” என்று அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார். ஆதித்யா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் கவிஞரும் கூட. இப்போது அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அவர் சிவ சேனையின் இளைஞர் அணியைக் கவனித்துக் கொள்வார்!

“வெள்ளையும் கருப்பும்” என்ற கவிதை நூல் ஒன்றை அவர் 2007-ல் வெளியிட்டு இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 20. அப்படி என்றால் அந்தக் கவிதை நூலை வெளியிடும்போது அவருக்கு வயது 17. எப்படியும் அந்தக் கவிதைகள் ஒரே மாதத்தில் எழுதிக் குவித்தவையாக இருக்காது என்றும் கடந்த ஒரு வருடமாக எழுதியவையாக இருக்கக் கூடும் என்றும் வைத்துக் கொண்டால், அவர் 16 வயதினிலே கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். தாத்தாவின் கலை உணர்வு அவருக்கு இயல்பாக வந்திருக்கும் போலிருக்கிறது. அந்தக் கவிதைகளை அவர்தான் உண்மையிலேயே எழுதினாரா அல்லது ‘யாராவது மண்டபத்திற்கு வந்து எழுதிக் கொடுத்தார்களா’ என்று நீங்கள் சந்தேகப்பட்டால், அதிகாரத்துக்கு அருகில் இருப்பவர்கள் மேல் அவநம்பிக்கை கொண்டவர் நீங்கள் என்று தான் சொல்ல முடியும்.

ஆதித்யா நடத்திய போராட்டம் எதற்காக? ரோஹிந்தன் மிஸ்ட்ரி என்பவர் எழுதிய ‘ஸச் அ லாங் ஜர்னி’ என்ற நாவலை மும்பை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்யா தலைமையில் அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் புத்தகத்தை ஏன் நீக்க வேண்டும்? ‘பூக்கர்’ பரிசுக்கான போட்டியில் பங்கு கொண்ட பெருமையை அந்தப் புத்தகம் பெற்றதற்காகவா? இல்லையென்றால் ஏதாவது மதத்தையோ அல்லது மாநிலத்தையோ சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பையும் விஷத்தையும் அந்தப் புத்தகம் உமிழ்கிறதா? அப்படி முஸ்லீம்களுக்கு எதிராகவும் மதராசிகளுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் பேசியவர்களையும் இப்போதைய சீசனில் பீகார், உ.பியைச் சேர்ந்த வட இந்தியர்களுக்கு எதிராக அனல் கக்கும் வார்த்தைகளைக் கொட்டுபவர்களையும் கூட எந்த அரசும் தடை செய்யவில்லை. இந்தப் புத்தகம் ‘சிவசேனையின் மனதுக்கு நெருக்கமான சில விஷயங்கள்’ மீது இந்த நாவல் விமர்சனம் வைக்கிறதாம்! அதனால் அந்தப் புத்தகம் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

இந்த நாவல் திடீரென்று இந்த வருடம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடமாக இது இருந்து வருகிறது. இந்த நாவல் கற்பிக்கப்பட்டதால் எந்த மாணவரும் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எந்த ஒரு மாணவனும் இந்த நாவலில் வரும் வரிகளால் தான் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு புகாரையும் யாரிடத்திலும் கொடுக்கவில்லை. ஆனால் ஆதித்யா படிக்கும்போது அந்த நாவல் அவருக்கு உறுத்தியது. போராட்டம் நடத்தினார். பல்கலைக்கழக துணைவேந்தரும் ஒரு குழுவினருடன் ‘ஆய்வு’ செய்தார். அந்த நாவல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. மாநில முதலமைச்சரும் அந்த நாவலை வாசித்துப் பார்த்து அதில் ‘ஆட்சேபகரமான வரிகள்’ இருக்கின்றன என்பதை உறுதி செய்தார். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து ஒரே முடிவுக்கு வந்த பிறகு, நம்முடைய ஜனநாயகத்தில் வேறு ஏதாவது குரலுக்கு வழி இருக்கிறதா என்ன? தமிழ்நாட்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருந்த இன்குலாப் கவிதைகளுக்கு இதே கதிதானே நேர்ந்தது!

சென்னையிலும் தஞ்சாவூரிலும் மழை பெய்கிறது. சென்னை பீட்டர்ஸ் சாலையில் நடைபாதையில் வசிக்கும் ராஜம் என்ற இளம்பெண் மழையும் குளிரும் தாங்க முடியாமல் விறைத்து செத்துப் போகிறாள். தஞ்சையில் பெரிய கோவில் வாசலில் நிற்கும் ராஜராஜனின் சிலையும் மழையில் நனைந்தது. ராஜராஜன் மன்னனாகவே இருந்திருந்தாலும் அவனுடைய சிலைக்கு நரம்புகள் இல்லை; நாளங்கள் இல்லை. இதயத் துடிப்பு இல்லை. ஆனாலும் மழையில் சிலை நனைகிறதே என்று கவலைப்பட மனிதர்கள் இருந்தார்கள். அதைக் கோவிலுக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பதறினார்கள். ஆனால் பீட்டர்ஸ் சாலையில் செத்துப்போன நடைபாதைவாசி ராஜத்துக்காக கண்ணீர் சிந்த மனிதர்கள் இல்லை. “பண்பாடு மிக்க பாரத நாட்டில் மானுடம் மலிவாய்ப் போனது. வாடையில் வருந்திய மயிலுக்காக போர்வை தந்த புண்ணிய பூமியில் மனிதர்கள் மட்டும் வாடையில் விறைத்தனர். பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத் தான் பரமாத்மாவும் பட்டாடை கொடுப்பான். ராஜத்திற்கு ஒரு பருத்தி ஆடை கொடுப்பானா?” என்று கவிதை எழுதியிருந்தார் இன்குலாப்.

மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து வெற்றி பெறுவதை வீரம் என்று கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் அதை காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமல் என்று இன்குலாப் சொன்னார். பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம் மண்ணில் தேய்த்த மாபாதகன் என்றும் தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்கு கால்கோள் விழாச் செய்த காமுகன் என்றும் ராஜராஜன் மீது இன்குலாப் அந்தக் கவிதையில் விமர்சனம் வைத்தார். மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை அவர் அந்தக் கவிதையில் விளக்கி இருந்தார். “மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கவில்லை; மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்” என்று வசனம் பேசி மக்களை ஈர்த்தவர் முதலமைச்சராக இருந்தார். “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று சொன்ன இயக்கம் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இப்படி மக்களுக்காகப் போராடுபவர்களாக இருந்த சூழலில் இன்குலாபின் அந்தக் கவிதை நூலுக்கு விருதுகள் குவிந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அந்த நூலை அரசு எடுத்து விட்டது!

மகாராஷ்டிர அரசும் தமிழக அரசும் என்ன கருத்தைக் கொண்டிருந்தனவோ அந்தக் கருத்தையே தான் ஆதித்யாவும் வைத்திருக்கிறார். “அந்தப் புத்தகத்தையே தடை செய்யுங்கள் என்று நான் கோரவில்லை. அது சந்தையில் விற்பனைக்கு இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருக்கக் கூடாது” என்பதே ஆதித்யாவின் நிலை. அதாவது நெடுங்காலமாக சமூகத்தில் சரியானதானது என்று போற்றப்படுகிற எந்த விஷயத்தைப் பற்றிய மாற்றுக் கருத்தும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது என்பதே அவருடைய அரசியல். ஆதித்யா நடத்திய முதல் போராட்டம் ‘வெற்றி’ பெற்று விட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறார்? “இளைஞர்கள் மத்தியில் அரசியல் உணர்வையும் குடிமை உணர்வையும் வளர்ப்பதிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம்” என்று சொன்னார். அடுத்த நாட்களில், சிவசேனையின் நாளேடு சாம்னா, “பெண்கள் பர்தா அணிவதை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும்” என்று தலையங்கம் எழுதியது. ஆதித்யா தலைமையில் யுவ சேனை எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான சிவசேனையின் வழிகாட்டுதல் இதுதான் போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home