Monday, October 11, 2010

இரண்டு கணிப்புகள் இரண்டு முடிவுகள்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகளை தொடர்ந்து விளித்து வருகிறார். ஆனால் நாட்டின் பல மாவட்டங்களில் அந்த அச்சுறுத்தல்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் மத்தியில் உண்மையில் செல்வாக்கு இருக்கிறதா என்பதை அறிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி இருக்கிறது. அந்த கணிப்பின் முடிவுகளை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது. அதன்படி 58 சதவீத மக்கள் அவர்களுடைய பகுதிக்கு நக்சலைட்டுகளின் பாதை நல்லது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவு “எங்கள் கண்களைத் திறந்தது. அதேசமயம் எல்லோரையும் கவலைப்பட வைக்கக் கூடியது” என்று டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.

ஆந்திராவின் ஐந்து மாவட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தெலுங்கானா பகுதியில் இருக்கும் அடிலாபாத், நிசாமாபாத், கரீம்நகர், வாரங்கல் மற்றும் கம்மம் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களை ஒட்டி இருப்பவை. அந்தப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களில் 25 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் இந்த கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சில வருடங்களுக்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் செல்வாக்குடன் இருந்தார்கள். இப்போது அங்கு அவர்கள் ஒடுக்கப்பட்டு, மாவட்டங்கள் அனைத்தும் அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதாவது இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்த போதிலும் அரசாங்கத்தை விட மாவோயிஸ்டுகள் மேல் அதிகமான மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.

இந்த முடிவு ’எங்கள் கண்களைத் திறந்தது’ என்று அந்த நாளிதழ் ஏன் சொல்ல வேண்டும்? இதுவரை அரசாங்கத்தின் தகவலை மட்டுமே அந்த நாளிதழ் கேட்டிருக்கக் கூடும். இந்த சர்வேயின் முடிவுகளின்படி, அப்படிப்பட்ட பல அரசாங்க பிரசாரத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை என்ற புதிய செய்தி கிடைத்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் சிலர் சித்தரிப்பதைப் போல மாவோயிஸ்டுகளைக் குண்டர்கள் என்றும் பணம் பறிப்பவர்கள் என்றும் அந்த மக்களில் பலர் நம்பவில்லை. அவர்களுடைய கொள்கைகளும் அவற்றை நிறைவேற்ற அவர்கள் எடுக்கும் கடத்தல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகள் கூட கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இவ்வளவு காலம் புறக்கணிக்கப்பட்டு இருந்த அந்த மாவட்டங்களில் இப்போது வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்குக் கூட மாவோயிஸ்டுகள் காரணம் என்று அதிகமானவர்கள் நம்புகிறார்கள். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், மக்களால் நக்சலைட்கள் என்றே அறியப்படுகிறார்கள். மக்கள் யுத்தக் குழு என்ற நக்சலைட் அமைப்பாக இருந்த போது அந்த மாவட்டங்களில் அவர்கள் செயல்பட்டது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும். அந்த அமைப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்ற குழுவுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியது. இதற்குப் பிறகே அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இந்த சர்வே உண்மையிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அதன் முடிவை அந்த ஆங்கில நாளிதழ் உண்மை என்று நம்புகிறது என்பதும் அந்த செய்தியின் வாசகங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளை விட அந்த மாவட்டங்களில் நீண்ட காலமாக மாவோயிஸ்டுகள் வேலை செய்திருக்கிறார்கள் என்பதால் அங்கு இன்னும் அவர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் கூடுதலாக இருக்கலாம். அந்தப் பகுதியில் அவர்கள் இப்போது ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த செய்தி தருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறை எடுத்த நடவடிக்கைகளின் தீவிரம் அந்த மக்களிடம் அனுதாபத்தை உருவாக்கி இருக்கலாம்.

இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டங்களில் அவர்களுக்கான ஆதரவு அதிகமாக இருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அங்கு வாழும் ஏழை எளிய மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள் என்ற முடிவு உண்மை நிலையை பிரதிபலிப்பதாக தோன்றவில்லை. பிறகு எப்படி அந்த முடிவு கிடைத்தது? அந்த மக்களிடம் நீங்கள் முன்வைக்கும் கேள்விப்பட்டியலில் இருக்கும் கேள்விகளின் தொனியையும் தேர்வு செய்வதற்காக முன்வைக்கப்படும் விடைகளின் தன்மையையும் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

மக்களில் பாதிக்கு மேல் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் நம்ப விரும்பினால் நீங்கள் மேலே இருக்கும் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்களுக்கு சிஎன்என் – ஐபிஎன் என்ற ஆங்கில தொலைக்காட்சியும் தி வீக் வார இதழும் இணைந்து நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பின் முடிவுகள் நினைவுக்கு வருகிறதா? அந்த சர்வே நீண்ட நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதில்லை. ந்த சர்வே முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அதாவது ஏறத்தாழ 50 நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டதாக இந்தியத் திட்டக் குழு குறிப்பிடும் 36 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார்,ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் இந்த 36 மாவட்டங்கள் இருக்கின்றன.

ரண்டு சர்வேக்களின் முடிவுகளும் நேர் எதிராக இருக்கின்றன. சிஎன்என்-ஐபிஎன் கேள்விகளையும் முடிவுகளையும் பாருங்கள். தற்போதைய மோதலில் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு நக்சலைட்டுகள் பக்கம் என்று 5 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். அரசின் பக்கம் என்று 49 விழுக்காடு மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருக்கிறது என்பதும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகர நிர்வாகமே நடக்கிறது என்பதும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் என்று இந்த கணிப்பு சொல்கிறது. பத்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் அவர்களுடைய பகுதி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். நிபந்தனை எதுவும் இல்லாமல் இருதரப்பும் மோதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 56% மக்களும், இந்திய ஜனநாயகத்தில் தன்னுடைய ஓட்டுக்கு மதிப்பு இருக்கிறது என்று 60% மக்களும் தெரிவித்திருக்கிறார்கள். நக்சலைட்டுகளை அரசு எப்படிக் கையாள வேண்டும் என்ற கேள்விக்கு 37% கருத்து இல்லை என்றும் 33% வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமாக என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அரசாங்கம் உங்கள் பகுதியில் திட்டங்களை செயல்படுத்தி, காவல்துறையும் முறையாக நடந்து கொண்டால், நீங்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்டால், பெரும்பான்மை மக்கள் ”நக்சலைட்டுகளை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லக் கூடும். மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் “மாட்டோம்” என்ற பதிலை மக்கள் அளிப்பார்கள். தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீங்கள் நக்சலைட்டுகளின் செயல்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் “ஆதரிக்கிறோம்” என்று மக்களில் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். இதுபோன்ற கணிப்புகளில் கேள்விகளும் தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் விடைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

கேள்விகள் எப்படி இருந்தாலும் இரண்டு கணிப்புகளிலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மக்களிடம் ஒருமித்த கருத்து இருப்பதை அறிய முடிகிறது. நக்சலைட்டுகளை என்கவுண்டர்கள் மூலமாக தீர்த்துக்கட்டுவதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10.10.10

0 Comments:

Post a Comment

<< Home