Saturday, August 14, 2010

படம் பார்த்து கதை சொல்லுங்கள்

அந்தப் பெண்ணின் பெயர் ஆயிஷா; வயது 18; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்; கடந்த ஆகஸ்ட் 9, 2010 தேதியிட்ட ‘டைம்’ வார இதழின் அட்டைப்படமாக அவர் இருந்தார்; அந்தப் படம் அமெரிக்காவில் ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. வார இதழ்களின் அட்டைகளில் அழகான இளம்பெண்கள் தானே பெரும்பாலும் இருப்பார்கள், இதில் சர்ச்சை என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை படம் மிகவும் ஆபாசமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வரலாம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணின் மூக்கும் காதுகளும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் குரூரமாக இருக்கும் அந்தப் படத்தை அட்டையில் போட்டு, ‘நாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்?” என்று ‘டைம்’ கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்கும்போது இப்படி எல்லாம் மனிதர்கள் செய்வார்களா என்று கோபம் வருகிறது!

அந்தக் கொடுமையை செய்தது யார்? தலிபான் தீவிரவாதிகள் கொடுத்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு அவளுடைய கணவனே அவளுடைய மூக்கை அறுத்தான் என்கிறார் ஆயிஷா; கணவனுடைய குடும்பத்தார் அவளை தினமும் கொடுமைப்படுத்தினார்கள்; துன்பம் தாங்க முடியாமல் ஆயிஷா வீட்டை விட்டு வெளியேறினார்; அந்த செயலை அந்தக் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே போன குற்றத்துக்காக தலிபான் தீவிரவாதிகள் அவளுடைய காதுகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கவில்லை என்றாலும் அதன் உறுப்பினர்கள் இன்னும் இதுபோல் ‘தண்டனைகள்’ வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அங்கு பெண்களும் குழந்தைகளும் சொல்லமுடியாத பல துயரங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு உரிய மனித உரிமைகளை வாங்கிக் கொடுக்காமல் அமெரிக்கா எப்படி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியும்? இந்தக் கேள்வியை உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய மனதில் அந்தப் படம் மூலமாகவும் கட்டுரை மூலமாகவும் ‘டைம்’ வார இதழ் பதியச் செய்கிறது!

அரசியல்வாதியின் உணர்ச்சிகரமான பேச்சை விட சில சமயங்களில் ஒரு புகைப்படம் நம்முடைய உணர்வைத் தட்டி எழுப்பும் சக்தி கொண்டதாக இருக்கிறது. சில புகைப்படங்கள் அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன; சில புகைப்படங்கள் நம்முடைய மனதில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மை விட்டுப் போவதில்லை. ஏறத்தாழ இருபது வருடங்கள் வியட்நாம் மீது அமெரிக்கா போர் நடத்தியது. அந்த நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க மக்கள் அரசை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய மனசாட்சியைப் பிடித்து உலுக்கி அவர்களை போராட்ட களத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததில், இரண்டு புகைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆடை எதுவும் இல்லாத நிலையில் ஒரு சிறுமி கதறிக் கொண்டே ஓடி வரும் ஒரு புகைப்படம். இன்னொன்று ஒரு வியட்நாமிய இளைஞனின் தலைக்கு நேராக துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க ஆதரவு வியட்நாமிய படைத் தளபதியின் புகைப்படம்.

”போருக்குப் பிறகு அந்த தளபதி அமெரிக்காவில் குடியேறினார்; அங்கு ஒரு ஹோட்டல் நடத்தினார்; அந்த ஹோட்டலுக்கு வந்த மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்; அந்த ஹோட்டல் கழிப்பறை சுவரில், ‘நீ யார் என்று எங்களுக்குத் தெரியும், பொறுக்கி!’ என்று எழுதி அவரை எச்சரித்தார்கள்” என்பது அந்தக் கால செய்தி. எத்தனை வருடங்கள் உருண்டோடி இருந்தாலும் அந்த முகத்தை சிலரால் மறக்க முடியவில்லை என்று அதில் இருந்து தெரிகிறது. குத்புதீன் அன்சாரி என்ற பெயர் உங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால், அவரைக் கொல்ல வந்த ஒரு கும்பலிடம் உயிர்ப்பிச்சை கேட்டு நின்ற அவருடைய டத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கண்களில் பயமும் கண்ணீருமாக இரண்டு கைகளையும் கும்பிட்டபடி அவர் மன்றாடும் அந்தப் படம் வெளிவராத எத்தனையோ துயரங்களுக்கான ஒரு மாதிரி! 2002 மார்ச் மாதம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த படம் ஒருவருடைய நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் துணை ராணுவத்தினர் பலி என்ற செய்தி வந்த போது வரிசையாக ராணுவ வீரர்களின் சடலங்கள் காட்டப்பட்டன. உயிரோடு இருக்கும் வீரர்கள் அந்த உயிரற்ற உடல்களை ’ இறுகிய முகங்களுடன் ஸ்ட்ரெச்சர்களில்’ எடுத்துச் சென்றார்கள். பலியான வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய இழப்புக்காக கதறி அழும்போது, நமக்கு நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. அந்த வீரர்களைப் பறிகொடுத்துவிட்டு அவர்களுடைய குடும்பங்கள் அடுத்து அனுபவிக்கப் போகும் வாழ்க்கைத் துயரங்கள் நம்மைத் தாக்குகின்றன. அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது ’அநீதியான போரை நியாயமான போர் மூலமாகவே ஒழிக்க முடியும்’ போன்ற வன்முறைக்கு ஆதரவான பிரசாரங்கள் தவிடுபொடியாகின்றன. மாவோயிஸ்டுகள் மேல் இயல்பாக நமக்குக் கோபம் வருகிறது.

ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளுக்கு அந்த வலிமை இருக்கிறது. ஒருவருடைய நம்பிக்கைகளை தலைகீழாக சில சமயங்களில் அவை புரட்டிப் போட்டுவிடுகின்றன. நாளெல்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கும் ஒரு சாமியாரை ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் பார்க்கும்போது, அந்த சாமியாரின் பக்தர்கள் அவர் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை கொஞ்சமாவது முன்னேற்றுவார்கள் என்று எந்தக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்களோ, அந்த கட்சித் தொண்டர்களே மக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதை படங்களில் பார்க்கும்போது மக்களுக்கு அந்தக் கட்சியின் மீது ருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது. ராணுவமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக போராடுவதாக சொல்லும் தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும் செயல்களில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று நாகரிக சமூகம் எதிர்பார்க்கிறது. யார் செய்தாலும் வக்கிரமும் காட்டுமிராண்டித்தனமும் மிகுந்த ஒரு செயலை அந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. சோரபுதீன் என்கவுண்டர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கை உறுதியாகிறது. இன்னும் நீதி கிடைக்காமல் நிறைய வழக்குகள் இருக்கின்றன என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

அண்மைக்காலத்தில் இன்னொரு படம் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. பரவலாக எல்லா ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்றாலும் கூட சில பத்திரிகைகளில் அந்தப் படம் வந்திருந்தது. வேட்டைக்குப் போய் மானையோ புலியையோ கொன்று தலைகீழாக ஒரு கம்பில் கட்டி ராஜாக்களும் இளவரசர்களும் வெற்றிப் பெருமிதத்துடன் கொண்டு வருவார்கள் என்று கதை கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, துணை ராணுவப் படையால் கொல்லப்பட்ட ஒரு பெண் மாவோயிஸ்ட்டின் உடலை கம்பில் கட்டி இரண்டு படைவீரர்கள் தூக்கி வருகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வரும் வீரர் தோளிலும் கம்பு இருப்பதைப் பார்த்தால் அவரும் ஒரு சடலத்தை தூக்கி வருகிறார் என்று தெரிகிறது. பிணங்களை எடுத்து வருவதற்கு வேறு வசதிகள் இல்லாத நிலையில் இப்படி எடுத்து வந்தார்களா அல்லது கிராமத்து மக்களிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக இப்படி கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. எது காரணமாக இருந்தாலும் இறந்தவர்களை தெய்வங்களாக மதிக்கும் பண்பாடு கொண்டிருப்பதாக சொல்லப்படும் நம் நாட்டில் இப்படி ஒரு புகைப்படத்தை பார்ப்பது மனதை நெருடுகிறது!

எந்தப் புகைப்படத்தை அட்டையில் வைப்பது, எந்த போட்டோவை இதழின் எந்தப் பக்கத்திலும் வெளியிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த பத்திரிகைக்கே இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘டைம்’ வார இதழ் ஆயிஷாவின் படத்தை அட்டையில் வைக்கிறது; அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது. எந்தச் சூழ்நிலையில் இது நடக்கிறது? ’போரை நிறுத்துவேன் என்று சொல்வதோடு நின்றுவிட மாட்டேன், அடிக்கடி போர் தொடுக்கும் நம் மனநிலையை மாற்றுவேன்’ என்று ஆரம்பத்தில் முழங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அதன் பிறகு மாறி விட்டார். கூடுதலாக முப்பதாயிரம் வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். போர் தொடங்கி ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் அமெரிக்க படையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானில் நீடிக்க வேண்டும் என்ற உணர்வை அமெரிக்க மக்களிடத்தில் ’டைம்’ விதைக்கிறது.

இந்த அரசியலை நன்கு புரிந்து கொண்ட சில அமெரிக்கர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். ‘ஆயிஷாவுக்கு 18 வயது. அதில் ஒன்பது வருடங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் தான் அவள் வளர்ந்திருக்கிறாள். அவள் மூக்கு அறுக்கப்பட்டதும் தலிபான் ஆட்சியில் இல்லை. அமெரிக்க ராணுவம் அங்கே இருக்கும்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்கப் படையால் தான் அதைத் தடுக்க முடியவில்லையே’ என்று சொல்லி, படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். அங்கு நடந்து கொண்டிருக்கும் போரில் பலியான அமெரிக்க வீரர்களின் பிணங்களை அட்டைப்படமாக ‘டைம்’ போட்டிருக்கிறதா அல்லது அமெரிக்காவின் தலைமையில் அங்கு இருக்கும் கூட்டுப் படையினரின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான அல்லது முகம் கருகிய ஆப்கன் பெண்கள் அல்லது குழந்தைகளின் படங்களை ‘டைம்’ போடுமா என்று கேள்விகளை அடுக்குகிறார்கள். ”பெண்களுடைய உரிமைகளைக் காப்பதற்காக நாம் அங்கு இருக்க வேண்டியது அவசியம் என்ற வாதத்தை இப்போது நீங்கள் சொல்கிறீர்கள். தலிபானுக்கு எதிராக இதே கருத்தைத்தான் அன்று சோவியத் யூனியனும் சொன்னது. ஆப்கானிஸ்தானில் தன்னுடைய ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக சோவியத் யூனியன் இப்படி சொல்கிறது என்று நாம் அப்போது சொன்னோம். இன்று நாமும் அதே வார்த்தைகளைப் பேசுகிறோமே, து நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்கு அமெரிக்கர் ஒருவர் பதில் சொல்கிறார். ”ஹை-டெக் வகுப்பறைகளில் நம்முடைய மாணவர்கள் கல்வி கற்பார்கள்; உயர்ந்த தரமான அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்; களத்தில் இருந்து படைவீரர்கள் திரும்பி வந்து குடும்பங்களுடன் இணைவார்கள்; அதனால் பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்; எல்லா அலுவலகங்களிலும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் இருக்கும்,என்று போரில் விரயமாகும் பணத்தால் என்னென்ன செய்ய முடியும் என்று அடுக்குகிறார். அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home