Sunday, February 04, 2007

பொய் பேசும் ‘சமத்துவங்கள்!’

மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி சில சமயங்களில் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. சமத்துவப் பெருவிழாவால் கிடைத்த சந்தோஷத்துக்கு இப்படி ஒரு நிலை நேரும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளில் தலைவர்களாக தலித் பிரதிநிதிகள் பொறுப்பேற்றார்கள். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இதைச் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் கருணாநிதிக்கு ‘சமத்துவப் பெரியார்’ என்று தொல்.திருமாவளவன் பட்டமளித்து மகிழ்ந்தார். 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை என்பதும், அந்த ஆட்சிக் காலத்தில் மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்டதும் இன்றைய மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், மதுரை மாவட்டத்தில் நடந்ததாக வந்திருக்கும் வேறொரு சம்பவம் குறித்த செய்தி, நமது மகிழ்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

‘என்னைத் தயவுசெய்து ஏலம் போடாதீர்கள். இந்தப் பதவி மூலமாக இந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு கமிஷன் கிடைத்தாலும் அதை ‘ஊரிடம்’ ஒப்படைத்து விடுகிறேன் என்று மன்றாடிப் பார்த்தேன். ஆனால், கிராமத்துப் பெரியவர்கள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று அந்தப் பெண்மணி, ஓர் ஆங்கில நாளிதழ் செய்தியாளரிடம் பேசியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் பாலமணி. அவர் மதுரை மாவட்டம் கொடிகுளம் ஊராட்சியின் தலைவர். அவரைத்தான் கிராமத்துப் ‘பெரியவர்கள்’ ஏலம் போட்டிருக்கிறார்கள். இதன்படி தலைவரை ஏலத்தில் எடுத்தவர், கிராம கமிட்டிக்கு ஏலத்தொகையை செலுத்துவார். இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த ஊராட்சித் தலைவர் போடும் கையப்பங்களினால் கிடைக்கும் ‘வருமானம்’ முழுவதும் ஏலத்தில் வெற்றி பெற்றவரையே சாரும். வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அந்தத் தலைவர் ஏலம் எடுத்தவரின் கையில் இருக்கும் வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’தான்!

ஆனால், இந்தச் செய்தியை கிராமத்து மக்கள் மறுக்கின்றனர். ஊராட்சித் தலைவருக்கு அவரது பணிகளில் உதவி செய்வதற்காகக் கிராமத்தில் இருந்து ஒருவரைத் ‘தேர்வு’ செய்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். 2006- க்கு முன்னதாக நடந்த தேர்தல்களில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடந்தது போலவே பாலமணியை ராஜினாமா செய்யச் சொல்லலாம் என்று கிராமத்தில் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஊரில் ஒருவரை அவருக்கு ‘உதவுவதற்காகத் தேர்வு’ செய்வது என்ற முடிவு எடுத்ததும், ராஜினாமா என்ற சிந்தனையைக் கைவிட்டு விட்டார்கள். ஊருக்குள் யாரைக் கேட்டாலும் ‘ஏலம் நடக்கவில்லை’ என்ற பதிலே கிடைக்கும். ஊராட்சித் தலைவர் கூறியதாகப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தி மட்டுமே அங்கு ஜனநாயக விரோதமான செயல் ஏதோ நடந்திருப்பதை உலகறியச் செய்திருக்கிறது.

ஒருவேளை, அடுத்த சில தினங்களில் இந்த செய்தி மறுக்கப்படக்கூடும். ஊருக்குள் சேர்ந்து வாழவேண்டிய சொந்த வாழ்க்கை நிர்ப்பந்தம் அந்தப் பெண்மணிக்கு இருக்கிறது. ‘சமத்துவ புரமாக’த் திகழும் தமிழகத்தில் இப்படி ஒரு பிரச்னை செய்தியாக எழுவதைத் தடுக்கும் அவசரம் நிர்வாகத்துக்கு இருக்கலாம். இவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ அந்தப் பத்திரிகைச் செய்தியை பாலமணி மறுப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும். கிராமத்தில் பிற சாட்சிகள் கிடைப்பதும், இந்தச் சூழலில் சாத்தியப்படாமல் போகலாம். எனவே பிரச்னையைப் பூசிமெழுகும் முயற்சிகளில் நிர்வாகம் இறங்கலாம்.

இதைத் தவிர்த்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நிர்ப்பந்தத்தை நிர்வாகத்துக்கு சில அரசியல் கட்சிகள் கொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அவை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு ஆளும் கூட்டணியில் இடங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. எது எதற்கெல்லாமோ பரபரப்பு காட்டும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும், முக்கியமான ஒரு நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மராட்டிய மாவீரர் சரத்பவாரை தள்ளி நிற்குமாறு அவமானப்படுத்திய பிரச்னையில், துணை முதல்வர் நேரம் கழிந்தது. பார்வையற்றவர்களின் ஊர்வலத்தில் மகாராஷ்டிர காவல்துறை தடியடி நடத்தித் தனது செயல்வேகத்தைக் காட்டியது. ஐஸ்வர்யா ராய்க்கு பார்சல் கடிதம் மூலம் வந்த பணம் குறித்துப் பரபரப்பான புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பந்தாரா மாவட்டத்தில் உள்ள காயர்லான்ஜி கிராமத்தில் நடந்த ஒரு படுபாதகச் செயலை மாநில அரசும் ஊடகங்களும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் பல நாட்களாகக் கண்டுகொள்ளவே இல்லை.
ஊர்ப் பெரியவர்கள் கேட்கும் தனது நிலத்தின் பகுதியைத் தரமறுத்து வாதாடியதுதான் சுரேகா என்ற அந்த 44 வயது பெண் செய்த குற்றம். அவரும் அவரது 18 வயது மகள் பிரியங்காவும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ஊருக்குள் நடத்திச் செல்லப்பட்டு, பகிரங்கமாக வன்புணரப்பட்டு அதன்பிறகு சாகடிக்கப் பட்டிருக்கிறார்கள். 23 வயது மகன் ரோஷனும் 21 வயது மகன் சுதிரும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளை எல்லாம் பிரியங்காவின் தந்தை வேறொரு உறவினரின் குடிசையில் மறைந்திருந்து பார்த்திருக்கிறார்.

அவரைத் தவிர வேறு யாரும் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியில்லை. இரு பெண்களும் வன்புணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். இப்போது மார்க்சிஸ்ட் கட்சியும் இன்னும் சில தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் தலையிட்டு நடத்திய போராட்டங்களுக்குப் பிறகுதான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது! புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடுக்கப்பட்ட உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் முழுமையான உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று சிலர் வாதிடக்கூடும். இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளையும் சகிப்புத் தன்மையில்லாத நிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சாதி, பொருளாதார நிலை, பாலினம் போன்ற வேறுபாடுகள் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும்போது, நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் ‘உயர்ந்த’ நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவான சார்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மூலமாக ‘மதச்சார்பற்ற மற்றும் சமத்துவ’ என்ற இரு சொற்களைச் சேர்ப்பதால் மட்டுமே இந்திய சமூகத்தில் சமத்துவம் வந்துவிடாது. கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு சமூகத்தைப் பார்ப்பவர்களுக்கு, இந்திய சமூகத்தில் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் இறப்புக்குப் பின் உள்ள வழக்கு, வரலாறு என்று எல்லாவிதங்களிலும் வேறுபாடுகள் இன்னும் நிலவி வருகின்றன என்பது நன்றாகத் தெரியும்.

டெல்லியில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி பலியான பிரியதர்ஷினி மட்டூ, அதிகார போதையில் தள்ளாடிய வாரிசு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜசீகா லால் மற்றும் பலரின் வழக்குகளையும் பாருங்கள்... இந்தப் பிரியங்காவின் வழக்கையும் தொடர்ந்து கண்காணியுங்கள். உங்களுக்கு உண்மை புரியும். இதற்கு மாறாகத் தனிமனிதர்கள் சிலரின் முயற்சியால் இந்திய சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாகக் காட்டப்படும் சித்திரம் சரியானதல்ல. சமூகப் போராளிகள்கூட சில சமயங்களில் சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி உண்மைக்கு மாறான தகவல்களை அளிக்கலாம். ஆனால், சடலங்கள் பொய் பேசுவதில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (26.11.06)

4 Comments:

At 7:45 PM, Blogger சீனு said...

:(

 
At 12:06 AM, Blogger செல்வநாயகி said...

ராம்கி,

நீங்கள் ஜூவியில் எழுதும் ஜென்ராமா? உங்கள் கட்டுரைகளை விரும்பிப் படிக்கும் என் நண்பன் அவ்வப்போது அவற்றை எனக்கும் படிக்கச்சொல்லிப் பரிந்துரைப்பது உண்டு. உங்களைப் போன்றவர்களும் இப்பதிவுலகில் எழுதவந்திருப்பது மகிழ்ச்சி.

///இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மூலமாக ‘மதச்சார்பற்ற மற்றும் சமத்துவ’ என்ற இரு சொற்களைச் சேர்ப்பதால் மட்டுமே இந்திய சமூகத்தில் சமத்துவம் வந்துவிடாது. கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு சமூகத்தைப் பார்ப்பவர்களுக்கு, இந்திய சமூகத்தில் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் இறப்புக்குப் பின் உள்ள வழக்கு, வரலாறு என்று எல்லாவிதங்களிலும் வேறுபாடுகள் இன்னும் நிலவி வருகின்றன என்பது நன்றாகத் தெரியும்.///

உண்மை. கண்களும், மனதும் திறந்து பார்க்காதது மட்டுமின்றி, அப்படியே பார்த்தாலும் அதில் பிரசினைகளின் மூலத்தைக் கேள்விகேட்கும் துணிவின்றியோ அல்லது அப்படிக்கேட்கிறபோது அதனால் பாதிக்கப்பட்டுவிடும் தன் நலனைக் கருதியோ அமைதிகாக்கும் போக்குக்குப் பழகிவிட்ட சமூகம் நம்முடையது. நன்றி ராம்கி. தொடர்ந்து எழுதுங்கள்!

 
At 8:12 AM, Blogger சல்மான் said...

மனதுக்கு பெரும் சஞ்சலமளிக்கும் நிகழ்வுகள்
:(

 
At 9:37 AM, Blogger ஜென்ராம் said...

செல்வநாயகி:

//கண்களும், மனதும் திறந்து பார்க்காதது மட்டுமின்றி, அப்படியே பார்த்தாலும் அதில் பிரசினைகளின் மூலத்தைக் கேள்விகேட்கும் துணிவின்றியோ அல்லது அப்படிக்கேட்கிறபோது அதனால் பாதிக்கப்பட்டுவிடும் தன் நலனைக் கருதியோ அமைதிகாக்கும் போக்குக்குப் பழகிவிட்ட சமூகம் நம்முடையது.//

மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீகள். வாழ்த்துக்கள். அன்பான சொற்களுக்கு நன்றி..

சீனு, சல்மான்: பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

 

Post a Comment

<< Home