Thursday, February 01, 2007

வரலாற்றுப் பிழைகள்

‘கிறிஸ்தவர்களுக்கு மதமாற்றம் செய்வதற்கான உரிமை உள்ளது என்று சொன்னவர் இவர்களில் யார்?’
அ) சோனியா காந்தி ஆ) சகோதரி நிர்மலா இ)போப் பெனடிக்ட் ஈ) அருட்தந்தை பிரகாஷ்.

இந்தியாவில் சிறுபான்மையினரால் கறுப்பு நாள் என்றும் ஆர்.எஸ்.எஸ்-&ஸால் வெற்றி நாள் என்றும் கொண்டாடப்படும் நாள் எது?’
அ) செப்டம்பர் 11 ஆ) ஜூலை 2 இ) ஜனவரி 26 ஈ) டிசம்பர் 6.

இந்தக் கேள்விகள் ஆர்.எஸ்.எஸ். உணர்வு கொண்ட தொலைக்காட்சியில் நடைபெற்ற பொது அறிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று நினைத்து விடாதீர்கள். ஆயுர்வேத மருத்துவர்களை வேலைக்கு எடுப்பதற்காக ‘குஜராத் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இவை மட்டுமல்ல... குஜராத் அரசின் பசுவதைத் தடைச் சட்டம், மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைக் கேலி செய்யும் கேள்வி, முகமது நபி குறித்த கேலிச்சித்திர சர்ச்சை, அமீர்கான் நடித்த ‘ஃபனா’ என்று அரசியல் ரீதியாகவும் மதக் கண்ணோட்ட ரீதியிலும் பல கேள்விகள் அதில் இருந்ததாக வந்த ஒரு செய்தியை நீங்கள் படித்திருக்கக் கூடும்.

இந்தத் தேர்வை எழுதிய ஒருவர் இந்தக் கேள்வித்தாள் குறித்து, ‘‘பொதுஅறிவு, கணிதம், புவியியல் மற்றும் வரலாறு குறித்த கேள்விகளே இந்தத் தேர்வில் இடம்பெற வேண்டும். ஆனால், இந்தக் கேள்விகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்’’ என்றார்.

பாவம்! அவருக்கு உலகம் புரியவில்லை என்பதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.
எங்கும் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் பார்வையிலேயே வரலாறு எழுதப்படுகிறது.

புலிகள் தங்களுக்கென்று வரலாற்று ஆசிரியர்களை வைத்துக் கொள்ளாதவரை, புலி வேட்டையில் சிறந்த மன்னனின் வீரமே வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கும். மான்கள் தங்களுக்கென்று தங்கள் பார்வையில் அச்சம் நிறைந்த வாழ்க்கையைப் பதிவு செய்யாதவரை, புலிகளின் பாய்ச்சலே போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும். தீர்வு கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு எங்கோ, யாரோ, எப்போதோ செய்த ஒரு செயல்தான் காரணம் என்று கூறும் வலியவர்களின் குரலே வரலாறாகப் பதிவாகி இருக்கும்.

வரலாறு என்பது என்ன? அதில் சொல்லப்படும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு முட்டாள்கூட ஒரு வரலாற்று சம்பவத்தின் நாயகனாக இருக்க முடியும். ஆனால், அந்த வரலாறு அவனால் எழுதப்படாது. வேறு யாராவது ஓர் அறிஞனால் எழுதப்படும். ஒருவேளை, அந்த முட்டாளின் பார்வையிலேயேகூட எழுதப்படலாம். அது அந்த முட்டாள் வெற்றி பெற்றானா அல்லது தோல்வி அடைந்தானா என்பதைப் பொறுத்த விஷயம்!

இதனால்தானோ என்னவோ, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி நடந்தது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் போன்ற அமைப்புகளில் முரளி மனோகர் ஜோஷி மற்றும் ராஜு பையா என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சிங் ஆகியோரின் சீடர்கள் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மாணவர்களின் இளம் மனங்களில், ‘வெறுப்பு’ விதையைத் தூவக் கூடாது என்ற பெயரில் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றான் என்ற செய்தியைக்கூட மறைப்பதற்கு முயற்சி நடைபெற்றது.

இதற்கெல்லாம் முன்னதாகவே உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, மாநில அரசின் பாடநூல்களில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட வேலையை இத்தனை மணி நேரம் இவ்வளவு மனிதர்கள் செய்து முடிக்கிறார்கள் என்றால், வேறு ஒரு வேலையை இத்தனை மனிதர்கள் எவ்வளவு மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்ற ரீதியிலான கேள்வியை நாம் கணிதத்தில் படித்திருப்போம். அதையே அங்கு ‘ஒரு மசூதியை இடிப்பதற்கு இத்தனை நபர்களுக்கு இவ்வளவு மணி நேரம் ஆகிறது’ என்று மாற்றிக் கணக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இந்த முயற்சிக்கு அப்போது நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கேட்டது.

இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த அரசும் தேசிய பாடத்திட்டத்தில் மாறுதல்களை முன்வைத்திருக்கிறது. சர்ச்சைகளுக்கு இடமில்லாத சம்பவங்களை மட்டுமே பாடங்களில் சேர்ப்பதாக முதலில் இருந்த கொள்கை இப்போது மாற்றப்பட்டுள்ளது. ஏராளமான சர்ச்சைகளுடன் சமகால அரசியலில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை அவற்றின் சர்ச்சைத்தன்மை காரணமாகப் பாடங்களில் இருந்து ஒதுக்கி வைப்பதில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.

இதன் காரணமாகக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இந்திய அரசியலில் முக்கியமான திருப்புமுனை சம்பவங்களைச் சேர்த்திருக்கிறது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நடந்த 1984 சீக்கியர் படுகொலை, சமீபத்திய குஜராத் கலவரத்தில் நடந்த இஸ்லாமியர் படுகொலைகள், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு சவால் விட்ட நெருக்கடி நிலை போன்ற உள்நாட்டு சம்பவங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. நேருவின் வெளியுறவுக் கொள்கை, இந்திய சீனப் போர், 1971 பாகிஸ்தானுடனான போர், இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை, அமெரிக்கா&சோவியத் யூனியன் பனிப் போர் காலம், உலக அரங்கில் அமெரிக்காவின் தனிப் பெரும் செல்வாக்கு, தெற்காசியா என்று பல பாடங்கள் வரவுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களிலும் மாறுபட்ட பார்வைகளும் சிந்தனைகளும் உள்ளன. அப்படி இருக்கும்போது, அரசு எந்தப் பார்வையை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லும் என்ற கேள்வி எழுவது இயல்பு. சர்ச்சைகளுக்கு இடமே இல்லாத அரசாங்கத்தின் பார்வை மட்டுமே பாடமாக இடம் பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த வாக்கியமே ஏராளமான சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடியது. இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை குறித்து எந்த அரசாங்கத்தின் பார்வை பாடமாக வரும்? இந்திராவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பார்வையா அல்லது மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசாங்கத்தின் பார்வையா என்பது புரியவில்லை. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் ராஜீவ் காந்தி, ‘ஒரு மிகப்பெரிய ஆலமரம் விழும்போது பூமியில் அதிர்வுகள் ஏற்படுவது சகஜம்தான்’ என்று சொன்ன தகவலும், அதன் பின்னால் இருக்கும் அரசியலும் இடம்பெறுமா? ‘ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்ச்செயல் இருக்கும்’ என்று குஜராத்தில் இஸ்லாமியர் கொல்லப்பட்டபோது நரேந்திர மோடி பேசியதும், அதன்பின் உள்ள அரசியலும் இடம்பெறுமா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகளுக்கு முன், பாபர் மசூதி என்றும் அது அமைந்திருக்கும் இடம் என்றும் அயோத்தியில் ஒரு பகுதி அழைக்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளில் ‘சர்ச்சைக்குரிய கட்டடம் மற்றும் நிலப்பரப்பு’ என்றானது. இப்போது அங்கு ‘தற்காலிகமாக’ அமைக்கப்பட்ட ராமர் கோயில் என்றுகூடக் குறிப்பிடப்படாமல், ‘அயோத்தியில் ராமர் கோயிலுக்குள் குண்டுகள் துளைக்காத பாதுகாப்பு ஏற்பாடுகள்’ என்று பேசப்படுகிறது. இவற்றில் எந்தப் பார்வையைப் பாடத்தில் நாம் படிக்கப் போகிறோம்? நமது வாழ்நாளின் மிகக் குறுகிய காலத்திலேயே நம் கண் எதிரில் வரலாறும் அரசியல் அறிவியலும் படும்பாட்டை நாம் பார்க்க முடிகிறது.

வரலாறு மனிதர்களால் படைக்கப்படுகிறது. மனிதர்கள் வரலாற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். வரலாறும் மனிதர்களிடத்தில் மாட்டிக்கொண்டு விடுகிறது. அதை எழுதுபவர்களுக்கும் பதிப்பவர்களுக்கும் வருமானத்தைத் தருவதைத் தவிர, வரலாற்றால் எந்த பயனும் இல்லை என்று கருதுபவர்களும் உண்டு. கவிதைக்குப் பொய் அழகு என்று நாம் கூறினாலும்கூட, வரலாற்றைவிட கவிதை உண்மையின் அருகில் இருக்கிறது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அழுக்குப் படிந்த அரசியலைச் சுத்தம் செய்து, சிறுவர்களுக்கும் அப்பாவிகளுக்கும் படிக்கத் தருவதே வரலாறு என்ற பார்வையும் நம்மிடையே உள்ளது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மைதான்... என்ன பாடம்? இது போன்ற ‘வரலாறு’களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்ற பாடம்தான் அது!
ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 27.08.06

8 Comments:

At 2:05 PM, Blogger thiru said...

நண்பர் ராம்கி,

நல்ல பதிவு! நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

//மான்கள் தங்களுக்கென்று தங்கள் பார்வையில் அச்சம் நிறைந்த வாழ்க்கையைப் பதிவு செய்யாதவரை, புலிகளின் பாய்ச்சலே போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும். தீர்வு கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு எங்கோ, யாரோ, எப்போதோ செய்த ஒரு செயல்தான் காரணம் என்று கூறும் வலியவர்களின் குரலே வரலாறாகப் பதிவாகி இருக்கும்.//

இந்திய மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இது தான். சங்கப்பரிவாரங்களின் படை வரலாற்றை திரித்து பொய்யை வரலாறாக்க பலரை உலவ விட்டிருக்கிறது. வலைப்பூக்கள், இணையத்தளங்கள், விக்கீபீடியா என இந்த படை வரலாற்றை குறிவைத்து தொடரும் தாக்குதல்கள் அளவில்லாதது. இந்த பிரச்சனையை எதிர்கொள்வது அனைவரின் கடமை.

 
At 5:08 PM, Blogger Bagath said...

test

 
At 5:20 PM, Blogger Bagath said...

i am aasath

All democratic well-wishers should view the history as the SCIENCE.
Hitler also describe the importance of history.

He described that importance of reason of the historical incidence, impact oe defects due to the incidence, comparison of today incidence also the 3b factors to listen by everyone who make the new era.

BJP use it through this way to gain the Govt. So-called Left wings has fight for the saferside of Parliment. They haven't can ready to listen anything from our poligars whom fight against England colonical states, Thippu, Bagath, Kattabomman, Maruthu Brors., Uumaithurai, Thunthajivaugh, Kirushnappa, Chennamma, Vishwanatha Dass, Mapplah rebelions, !806 Vellore rebelions, Gopal nayak, Kerala Varman, Thanthiya Thoppe, Jhancis' Lakshmibhai, Ashimullah, Nanasahape, Hazrath magal, Thalvar rebelions, Thelungaana struggle, Naxalparri struggle, and any struggle with good political core like against Hindu Fascist.

 
At 5:57 PM, Blogger மாசிலா said...

நல்ல பதிவு.

இந்தியா போன்ற பலதரபட்ட இனங்களை, சமூகங்களை கொண்ட நாடுகளில் 'இதுதான் வரலாறு' என சுறுக்கமாக எதையும் எழுதிவிடவும் முடியாது.

 
At 9:56 PM, Blogger சிவபாலன் said...

அய்யா

மிக அருமையான பதிவு!!

உங்கள் கருத்துடன் ஒன்றுபடுகிறேன்..

( நகைச்சுவையாக சொல்லப் போனால், இம்சை அரசனில் வடிவேல் வரலாற்றைப் பற்றி குறிப்பிடுவது ஓரளவு சரியோ? என தோன்றுகிறது)

பதிவுக்கும் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

 
At 7:09 AM, Blogger SP.VR. SUBBIAH said...

//வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மைதான்... என்ன பாடம்? இது போன்ற ‘வரலாறு’களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்ற பாடம்தான் அது!//

நன்றாகச் சொல்லியுள்ளீ்ர்கள்

 
At 9:29 PM, Blogger ஜென்ராம் said...

திரு:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நீங்கள் செயல்வீரராகத் திகழ்கிறீர்கள். எனது வாழ்த்துக்கள்!

 
At 9:32 PM, Blogger ஜென்ராம் said...

பகத் என்ற ஆசாத்,
மாசிலா,
சிவபாலன் வெ.,
sp.vr.சுப்பையா:

நன்றி..

 

Post a Comment

<< Home