Monday, January 29, 2007

போகட்டும் போர் மாயை

அந்த இளைஞனின் வயது 19.

பெயர் ஜாசன் செல்சீ..

அவனுடன் படித்த இளைஞர்கள் மேற்படிப்புக்குச் சென்றிருப்பார்கள் அல்லது அவர்களது முதல் வேலையில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், ஜாசன் செல்சீக்கு வேறுவிதமான எதிர்காலம் காத்திருந்தது. இராக்குக்குச் செல்ல இருக்கும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவில் படைவீரனாக அவன் செல்ல இருந்தான். அதற்கு அவனைத் தயாரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்த வகுப்புகளில் அவனிடம் சொல்லப்பட்ட விஷயங்கள், அவனுடைய சிந்தனைப் போக்கையே மாற்றி விட்டது.

ஆம்! அவன் அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டும், தனது மணிக்கட்டு நரம்புகளை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டான்.

நாள்தோறும் செய்தித்தாள்களில் பலவிதமான தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து நாம் செய்திகளைப் பார்க்கிறோம். காதல் தோல்வி, பரீட்சையில் ஃபெயில், கடன் தொல்லை, பாலியல் தொல்லை, என்று பல காரணங்களுக்காக மனிதர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இந்தத் தற்கொலைச் செய்திகள் எல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஜாசனின் தற்கொலை மட்டும் உலக அளவில் ஏன் ஏற்படுத்தியிருக்கிறது?

ஜாசன் ஒன்றும் சர்வதேச பிரபலம் இல்லை. மிகவும் சாதாரண பிரிட்டிஷ் குடிமகன். ஏன் அவனது தற்கொலை மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது? ஏனென்றால், அவனது மரணம் போரின் குரூரமான பக்கங்களை உலகுக்கு அம்பலப்படுத்துகிறது.

ஜாசனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின்போது மேலதிகாரிகள் சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறார்கள். ‘‘இராக்கில் நீங்கள் போரிடச் செல்கிறீர்கள். பயங்கரவாதத்தை அழிப்பதற்கான இந்தப் போரில் நீங்கள் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. நம்மை அழிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையைக்கூட தற்கொலைப் படையாக குண்டுகளை அணிவித்து எதிரிகள் அனுப்பக்கூடும். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்களைக் கொன்றுவிட வேண்டும். நீங்கள் தயங்கினீர்கள் என்றால், உங்களுடன் உங்கள் படையில் உள்ள உங்கள் நண்பர்களும் உயிரிழக்க நேரிடும்’’ என்பதே அந்த மேலதிகாரிகளின் அறிவுரை.

இந்த அறிவுரையைக் கேட்ட ஜாசனுக்குப் பயத்தில் உடல் நடுங்கியிருக்கிறது. அவனது வாழ்வில் இப்படிப்பட்ட படுகொலைகளைச் செய்ய நேர்ந்துவிடுமோ என்று நடுங்கியிருக்கிறான். இதையெல்லாம் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட்டு அடுத்த இரு நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டான். மரணப் படுக்கையில் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்: ‘‘என்னால் அங்கு போக முடியாது; என்னால் அவர்களைக் கொல்ல முடியாது. அவர்கள் எதிரியின் தரப்பில் உள்ள குழந்தைகளாகவே இருக்கட்டும்... அதற்காக அவர்களை என்னால் கொல்ல முடியாது. எனவே நான் இராக் போகமாட்டேன்.’’

ஜாசன் செல்சீயின் இந்த மரணம் இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தின் அளவைக் காட்டுகிறது. ஜாசன் தற்கொலை செய்து கொள்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகத்தான் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இராக்கில் பணியாற்றும் படைவீரர்களில் 1,541 பேருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அங்கு பணியாற்றும் வீரர்களில் ஏறத்தாழ 10 சதவிகிதம் பேர் மனப் பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். படைவீரர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறப்பு சிகிச்சைக்காக சிறப்புப் பிரிவுகள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இங்கெல்லாம் சென்று தனது பிரச்னை குறித்து ஜாசனால் விவாதிக்க முடிய வில்லை. அவனது மனதில் ஏற்பட்ட உணர்வு ராணுவத்தில் இருப்பவர் களுக்கு இருக்கக் கூடாத உணர்வு என்று அவனே ஒருவேளை கருதியிருக்கக் கூடும். அவனது மனசாட்சி பிளவுபட்டு அதன் உச்சகட்டமாக உயிரையே போக்கிக் கொண்டிருக்கிறான்.

தற்கொலையை மிகச் சிறந்த சுயவிமர்சன வடிவமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். தங்கள் கண்டுபிடிப்புகள் அழிவுக்குப் பயன்படுவதை அறிந்து மனம் வருந்தி வாழ்வை முடித்துக் கொண்ட அறிவியல் அறிஞர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஜாசன் தனது கடமையை எதிர்கொள்ளும்போதே மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறான்.

‘போரில் எல்லாம் நியாயமே’ என்ற தத்துவத்தை ஜாசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே ஒரு பாவச் செயலைச் செய்வதற்கு முன்னதாகவே உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறான். பச்சிளம் பாலகர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல நேர்ந்துவிடுமோ என்ற அச்சமே அவனை இந்த முடிவை நோக்கித் துரத்தியிருக்கிறது.

ஆனால், பாலகர்களைப் படைவீரர்களாகவும் கேடயங்களாகவும் பயன்படுத்துபவர்களும் பச்சிளம் குழந்தைகளின் காப்பகங்களில் குண்டுவீசித் தாக்குபவர்களும் இதே உலகத்தில் எந்தவித உறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமே ‘போர்... போர்...’ என்று போர்வெறிக் கூச்சல்களை எழுப்பிக் கொக்கரிக்கிறார்கள்.

ஆனால், இவர்களது போர் மாயைகளை எல்லாம் தகர்த்து எறிந்துகொண்டு மனித நேயம் எல்லா நாட்டு மக்களிடத்திலும் மேலோங்கி வருகிறது. ‘‘சந்தேகப்படுபவர்களை முதலில் சுடு; அதன்பிறகு கேள்விகள் கேட்டு விசாரித்துக் கொள்ளலாம்’’ என்பது போன்ற ஆணைகள் பெரும்பாலும் நிரபராதிகளையும் அப்பாவிகளையும் கொல்லவே பயன்பட்டு வருவதை இராக்கில் அனுபவபூர்வமாக அமெரிக்க இளைஞர்களும் பிரிட்டிஷ் இளைஞர்களும் உணர்ந்து வருகிறார்கள். எண்ணெய் வர்த்தக சித்து விளையாட்டில் தமது பிள்ளைகள் இராக்கில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வு, அமெரிக்கத் தாய்மார்களிடம் மேலோங்கி வருகிறது.

இதுபோன்ற பின்னணியில் ஜாசன் செல்சீயின் தற்கொலையை வழக்கமான தற்கொலையைப் போலப் பார்க்கக் கூடாது என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். ஜாசன் உயிருடன் இருந்து உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஒரு போர் அவலத்தை அவனது மரணம் உரத்துச் சொல்லியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். ராணுவத்திலும் காவல்துறையிலும் உயரதிகாரிகள் இடும் கட்டளையை மீறக் கூடாது என்பது பரவலான கருத்து. எனவே உயரதிகாரிகளோடு உடன்பட முடியாத ஜாசன் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் வேறு சில நாடுகளில் நடந்த மக்கள் புரட்சிகளிலும் ராணுவம் அல்லது அதன் ஒரு பகுதி, மக்களைச் சுட்டுக் கொல்ல மாட்டோம் என்று மக்களோடு இணைந்து போராட்டங்களில் குதித்துள்ளது. ஜாசன் எதிர்த்துக் குரல் கொடுத்து ‘ஒழுக்கமின்மை’க்காக ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அது இன்னும் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி இருக்கும். வாழ்க்கை எவ்வளவுதான் துயரம் மிகுந்ததாக இருந்தாலும், அவலங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அதற்குத் தற்கொலை தீர்வல்ல!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (06.09.06)

3 Comments:

At 11:34 AM, Blogger யாரோ - ? said...

ஜாசன் செல்சீயின் மரணம் ஒன்றும் இந்த உலகின் போக்கை மாற்றாவிடினும், ஓர் செய்தியை இந்த உலகத்துக்கு சொல்லியிருக்கிறது. அதுவம் உரத்துச் சொல்லியிருக்கிறது. என்ன இருந்தாலும் தற்கொலை ஒரு தீர்வல்லதான்.

 
At 11:54 AM, Blogger SP.VR. SUBBIAH said...

//ஜாசன் எதிர்த்துக் குரல் கொடுத்து ‘ஒழுக்கமின்மை’க்காக ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அது இன்னும் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி இருக்கும//

இல்லை அய்யா, வேறு வீதமாகக்கூட
நடந்திரூக்கும். போர் முடியும்வரை ராணுவம் எந்த செய்தியும் வெளியே கசிந்து விடாமல் காத்திருக்கும்
(அல்லது நீங்கள் இதற்கு முன் பதிவியில் எழுதிய சுஷ்மிதா கதையில் நட்ந்ததைப்போல
சொதப்பியிருப்பார்கள்)

 
At 7:50 AM, Blogger ஜென்ராம் said...

SP.VR.சுப்பையா, யாரோ:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 

Post a Comment

<< Home