Monday, January 29, 2007

ஒரு தோழர் சர்வாதிகாரி ஆகிறார்!

அந்த நாடக அரங்கம் நிரம்பி வழிந்தது. ‘நாடகத்தை நடத்தாதே’ என்று இயக்குநருக்கு மன்னரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதை மீறி நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இறுதிக் காட்சி முடிந்து திரை விழுந்த பின், இயக்குநர் மேடை ஏறினார். அரங்கமே எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டி ஆர்ப்பரித்தது. இந்த ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பிறகு அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்து, ‘‘இந்த நாடகம் ஒரு மோசமான நாடகம்’’ என்று ஐந்து பேர் கோஷமிட்டார்கள். இயக்குநர் சொன்னார், ‘‘இருக்கலாம். ஆனால், இவ்வளவு மக்கள் அதைப் பாராட்டுகிறார்களே, அவர்களது உணர்வுக்கு சிறிதாவது நாம் மதிப்பளிக்க வேண்டாமா?’’

அந்த அரங்கத்தில் இருந்த ஐந்து நபர்களின் உணர்வில்தான் இப்போது மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இருக்கிறார். ‘மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் ஜக்மோகன் டால்மியா தலைவராகப் போட்டியிடக் கூடாது’ என்று புத்ததேவ் ‘ஆணை’ இட்டார். ஆனால், டால்மியா அதைப் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் நின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேற்கு வங்க காவல்துறை ஆணையர் பிரசுன் முகர்ஜியை விட ஐந்து வாக்குகள் அதிகம் பெற்று டால்மியா ஜெயித்துக் காட்டியிருக்கிறார். டால்மியாவுக்கு எதிராக புத்ததேவ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர். இருந்தும் டால்மியா வெற்றி பெற்றார்.

சோர்வடையாமலும் விரக்தியடையாமலும் ஒரு தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் பெற்ற மனிதனே உலகில் மனத்துணிவு கொண்டவனாகக் கருதப்படுவான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று ஏற்றுக் கொள்பவன்தான் ஜனநாயகவாதியாக அங்கீகரிக்கப்படுவான். ஆனால், புத்ததேவ் தன்னை மனத்துணிவு கொண்டவராகவும் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. ஜனநாயக உணர்வு கொண்டவராகவும் காட்டிக் கொள்ளவில்லை. டால்மியா பெற்ற வெற்றியில் அவருக்கு ஏமாற்றமும் விரக்தியும் கோபமும் கொப்புளிக்கிறது.

கிரிக்கெட் சங்கத் தேர்தல் ஒரு சிலுவைப்போரும் அல்ல; புனிதப் போரும் அல்ல; முழுப்புரட்சியும் அல்ல. உண்மையில் அதை புத்ததேவ் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது ‘டால்மியாவுக்கு எதிரான போரில் ஒரு களத்தை இழந்திருக்கிறோம்; ஆனால், தோற்கவில்லை’ என்ற ரீதியில் புத்ததேவ் பேசியிருக்கலாம். அவர் அவ்வாறு பேசவில்லை. ‘‘நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் நடந்த போராட்டத்தில் தீய சக்திகள் வெற்றி பெற்றுள்ளன. இது நீதிக்கும் அநீதிக்குமான போர். இந்தப் போர் தொடரும். கிரிக்கெட் சங்கத்தைவிட்டு டால்மியா விலகுவதையே இளம் கிரிக்கெட் வீரர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர் விலகும்வரை போராட்டம் தொடரும்’’ என்று மிரட்டியிருக்கிறார்.

ஒருவேளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி ஒரு நிலை எடுத்துவிட்டதோ என்று பார்த்தால், அவ்வாறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கட்சியின் பிற தலைவர்கள், புத்ததேவ் கூறியுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் முதல்வரும் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜோதிபாசு, ‘‘கட்சிக்கும் கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கு வங்க முதல்வரின் வேட்பாளராக முகர்ஜி இருந்திருக்கலாம். ஆனால், கட்சியின் வேட்பாளர் யாரும் இல்லை. டால்மியா மீது முதல்வர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவை குறித்துக் கட்சி விவாதிக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஜோதிபாசுவும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் எதிரெதிர் நிலை எடுத்திருக்கிறார்கள். மற்ற தலைவர்களும் புத்ததேவ் உதிர்த்த கருத்துக்களை அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் கட்சிக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

அரசியலை விளையாட்டாகக் கருதும் அரசியல்வாதிகள், விளையாட்டில் அரசியலைப் புகுத்துகிறார்கள். எங்கும் எதிலும் தான் நினைத்ததே நடைபெற வேண்டும் என்று விரும்பத் தொடங்கி விடுகிறார்கள். மூதறிஞர்களாகக் கருதப்படுபவர்கள்கூட எல்லா நேரங்களிலும் அறிவுபூர்வமாக மட்டுமே பேசிவிடுவதில்லை. ஒருமுறை பகுத்தறிவைப் பிரதிபலிக்கும் விதத்தில் பேசினால், ஐந்து முறை அவர்களது தனிப்பட்ட ரசனைக்குத் தகுந்த மாதிரியும் பேசி விடுகிறார்கள். அதுபோன்ற சில சமயங்களில், அவர்கள் அதுவரை கட்டியிருந்த கொள்கை வேட்டிகள் நழுவி விடுகின்றன. புத்ததேவ் பட்டாச்சார்யாவும் இந்த விஷயத்தில் அப்படியே நம் முன் நிற்கிறார்.

அரசியலில் அபத்தமாகப் பேசுவது ஒன்றும் குறையல்ல என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். கண் பார்வை இல்லாத பெண்ணுக்கும் கேட்கும் திறன் இல்லாத ஆணுக்கும் இடையில் நடைபெறும் திருமணம் மட்டுமே வெற்றிகரமான திருமணமாக இருக்க முடியும் என்றெல்லாம்கூட பேசுபவர்கள் இருக்கிறார்கள். அரசியலில் முன்வைத்த காலைப் பின் எடுக்கக் கூடாது என்றும், தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்றும் போதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், மார்க்சிஸ்ட்கள் இந்த வகையினர் அல்லர். அவர்கள் சுயவிமர்சனம் செய்து பார்ப்பவர்கள்; தவறுகளை ஏற்றுக் கொள்கிறவர்கள்; தோல்விகளை ஜனநாயக அடிப்படையில் தாங்கிக் கொள்பவர்கள். ஆனால், அந்தக் கட்சியின் முதலமைச்சரிடம் இருந்து சர்வாதிகாரக் குரல் ஏன் எழுகிறது? சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார மனப்பாங்கு எப்படி ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகப் போற்றப்படும் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரிடம் இருந்து வெளிப்படுகிறது? அவரது பேச்சு நிச்சயம் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்மீது அந்தக் கட்சி நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு துறவியின் குருகுலத்தில் முப்பது சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன், மற்றவனது பொருளைத் திருடும்போது பிடிபட்டான். துறவியிடம் நடந்த விஷயத்தைப் புகாராகக் கொடுத்து அவனைக் குருகுலத்தில் இருந்து விலக்குமாறு பிற சீடர்கள் கேட்டனர். துறவி, ‘‘அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்’’ என்றார். அந்தச் சீடன் அடுத்தடுத்துத் தவறுகள் செய்தான். பொறுக்க முடியாத சீடர்கள் துறவியிடம், ‘‘இனி எங்களால் பொறுக்க இயலாது. அவனை நீங்கள் இங்கிருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் வேறு குருவை நாடிச் செல்ல வேண்டியதிருக்கும்’’ என்றனர்.

துறவி சிரித்துக் கொண்டே, ‘‘தாராளமாகச் செல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நல்ல சீடர்கள். உங்களை எந்த குருவும் ஏற்றுக் கொள்வார். ஆனால், அவன் தவறுகள் செய்பவனாக இருக்கிறான். எனவே நான்தான் அவனைத் திருத்த வேண்டும். அவனை நான் இங்கிருந்து விலக்கினால், அவனை எந்தத் துறவியும் சேர்த்துக் கொள்ளமாட்டார்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்ததேவ் மீது நடவடிக்கை எடுக்காது!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (09.08.06)

3 Comments:

At 4:48 PM, Blogger Pot"tea" kadai said...

இந்தியாவில் தோழர்களா? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு எகத்தாளம் கூடாது.

 
At 8:34 PM, Blogger SP.VR. SUBBIAH said...

//துறவி சிரித்துக் கொண்டே, ‘‘தாராளமாகச் செல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நல்ல சீடர்கள். உங்களை எந்த குருவும் ஏற்றுக் கொள்வார். ஆனால், அவன் தவறுகள் செய்பவனாக இருக்கிறான். எனவே நான்தான் அவனைத் திருத்த வேண்டும். அவனை நான் இங்கிருந்து விலக்கினால், அவனை எந்தத் துறவியும் சேர்த்துக் கொள்ளமாட்டார்’’ என்றார்.//

மனதைத் தொடும் வாசக்ங்கள்!
அருமை!

 
At 7:49 AM, Blogger ஜென்ராம் said...

pot''tea''kadai, sp.vr.சுப்பையா:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home