Thursday, January 11, 2007

எதிர்க்கட்சிகளை முடக்கலாமா?

ம.தி.மு.க.வின் பொதுக்குழு, ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் இன்னும் அடிப்படை உறுப்பினர்களாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரு எம்.பி.க்களும் நீடித்து வருகிறார்கள். இவர்கள் கட்சிக்குள் எழுப்பிய சலசலப்பு இந்தப் பொதுக்குழுக் கூட்டத்துடன் ஓரளவு அடங்கிப் போகும் என்று எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது. அதாவது அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்ற சர்ச்சைக்கு இந்த பொதுக்குழு முடிவு கட்டிவிடும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

இருந்தாலும், இந்தப் பொதுக்குழுவோடு இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புவதற்கு இடமில்லை. எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்னும் வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டார்கள். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம், ‘உண்மையான ம.தி.மு.க. எங்களிடம்தான் இருக்கிறது...’ என்ற அங்கீகார உரிமை கோரி மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளன.

ஓர் அரசியல் கட்சியில் கருத்து வேறுபாடு எழுவது இயல்பான ஒன்றுதான். கட்சியின் பெரும்பான்மை முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்ற கட்டுப்பாட்டுடன் இயக்கம் தொடர்ந்து இயங்கும். சமரசங்களுக்கு வாய்ப்பில்லாத சூழலில் அந்த இயக்கம் பிளவுபடக்கூடும். அல்லது தங்களுடைய அரசியல் ஆசைகள் நிறைவேறாத நிலையில், இனி தொடர்ந்து இந்த இயக்கத்தில் நீடிப்பதில் எந்த பயனும் இல்லை என்று சில தலைவர்கள் முடிவு செய்யக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த இயக்கத்தில் இருந்து சிலர் தாமாக விலகி விடுவார்கள். சிலர் அந்தக் கட்சிக்கு சிறிதாவது சேதம் ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் ஒரு பிரிவினருடன் வெளியேறுவார்கள். சிலருடைய வெளியேற்றம் ஒரு கட்சிக்கு பலத்த சேதத்தைக்கூட எதிர்காலத்தில் ஏற்படுத்தி விடுவதுண்டு.

ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக இந்திராகாந்தி வெளியேற நேர்ந்தது. 1977 முதல் 1979 வரையிலான காலம் தவிர, அவர் இறக்கும்வரை இந்திரா பிரதமராகவே இருந்தார். அதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆரும் அவர் உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சரானார். தான் இருந்து உழைத்த கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அந்தக் கட்சிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியவர்களில் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திராகாந்தி உருவாக்கிய கட்சியிலும் எம்.ஜி.ஆர். நிறுவிய கட்சியிலும்கூட, அவர்கள் வாழ்நாளிலேயே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டன. அவை எல்லாம் அவர்களுடைய செல்வாக்கைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அரசியல் களத்துக்காக தி.மு.க. உருவானது. அதில் இருந்தும் ஈ.வி.கே. சம்பத், எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், வைகோ போன்றவர்கள் வெளியில் வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. கேரளத்தில் அந்தக் கட்சியில் இருந்து எம்.பி.ராகவன், கே.ஆர்.கவுரி ஆகியோர் சிறிய பிளவுகளை ஏற்படுத்தினர். எனவே, ஒரு கட்சியில் இருந்து பிரிந்து இன்னொரு கட்சியை உருவாக்குபவர்களுடைய கட்சியில் ஒரு பிளவு வரும் போது, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வது பொருத்தமாக இல்லை.

தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களில் ஈ.வி.கே.சம்பத் தொடர்ந்து தனிக்கட்சி நடத்த இயலாமல் குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நெடுஞ்செழியனும் மக்கள் தி.மு.க.வைத் தொடர முடியாமல் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் இணைந்தார். தமிழக அரசியலில் சிறிய அளவிலான செல்வாக்கு என்ற அளவில் வைகோ ம.தி.மு.க.வை நடத்தி வருகிறார். அதாவது தி.மு.க.வில் கருணாநிதி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்சியை விட்டுப் போனவர்களில் இன்று வைகோ மட்டுமே ஒரு கட்சித் தலைவராக வெளியில் இருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க. எதிர்ப்பில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இருக்கிறது என்பது வேறு விஷயம்!

இந்தப் பின்னணியில் இன்று ம.தி.மு.க.வில் நடைபெற்று வரும் ‘குழப்பங்களைப்’ பார்க்க வேண்டியதிருக்கிறது. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரிலேயே எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிக்குள் கலகம் செய் கிறார்கள் என்பது வைகோ வின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை தி.மு.க. மறுத்துள்ளது.

‘‘பொய்யுரைத்துப் புலம்புகிறவர்கள் புலம்பட்டும்; புழுதிவாரித் தூற்றி அலைபவர்கள் அலையட்டும். அவர்களை மறப்போம்; அவர்தம் சகவாசம் அறவே துறப்போம்; நமக்கு வேலை நிரம்ப இருக்கிறது’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதாவது, ம.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் தி.மு.க.வினர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, ‘‘நமது முயற்சி எதுவும் இல்லாமலே அப்படி ஒரு முயற்சி நாம் செய்ய வேண்டும் என்று நாம் எண்ணிடாமலே ‘நானூறு பொதுக்குழு உறுப்பினர்களுடன் நாங்கள் வெளியேறி விட்டோம்’ என்று கறாராகக் கணக்கு காட்டியுள்ளார்கள்’’ என்று முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கையில் கூறி உள்ளார். இந்த அறிக்கையில் எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் தி.மு.க. அணியில் மேலும் ஒரு கட்சி இணையும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி ஆறாம் தேதி தி.மு.க&வின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் நேரடியாகவே ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி, தி.மு.க.வில் இணைகிறவர்களுக்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதி அளிப்பதாகக் கூறுகிறது. அதாவது ம.தி.மு.க.வினரைத் தி.மு.க.வில் சேருமாறு பகிரங்கமாக தூண்டுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது வைகோவை அரசியல்ரீதியாகத் தனிமைப் படுத்துவதற்கு ம.தி.மு.க.வில் நடைபெறும் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. தயாராக இருப்பதாகத் தெரிகிறது. 1976 முதல் 1989 வரையிலான 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் தி.மு.க.வைக் கட்டிக் காப்பதற்கு கருணாநிதி என்னென்ன சிரமங்களைச் சந்தித்தார் என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. அதைப் போலவேதான் வைகோவும் இன்று இருக்கிறார். ஆட்சி நிர்வாகத்துக்கான வாய்ப்பே இல்லாமல் 13 வருடங்களாக கட்சியை நடத்தி வருகிறார். ம.தி.மு.கவுடன் ஒப்பிடும் போது தி.மு.க மிகப் பெரிய இயக்கம். வைகோவுடன் ஒப்பிடும்போது, கருணாநிதிக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகம். ம.தி.மு.க தோன்றியதற்குப் பிறகு நடந்த 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் இதை நிரூபித்திருக்கிறார்கள்.

இப்போது மத்தியில் நடைபெறும் ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் கூட்டணி பலமாக இருக்கிறது. இந்நிலையில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மிகவும் அவசியம். எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணராமல் இருந்தாலும்கூட, ஜனநாயகவாதிகள் அவர்களுடைய செயல்பாட்டை முடக்க முயல மாட்டார்கள்!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (14.01.07)

1 Comments:

At 1:49 PM, Blogger ISR Selvakumar said...

Detailed article, though a bit lenghty, it's interesting.

 

Post a Comment

<< Home