Wednesday, December 27, 2006

விவசாயம் அழிந்தது யாரால்?

விவசாயத்தைத் துறந்து மக்கள் நகரங்களுக்குப் படையெடுப்பதற்கு யார் காரணம் என்று வலைப்பதிவுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பத்திரிகையாளர் சாய்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சாரத்தை இங்கு மறுபதிவு இடுகிறேன்.

விவசாயம் அழிந்தது யாரால்?

விவசாயத்திற்கு நமது நாட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் முழங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் முழங்கிய ஒரு நாளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா பகுதியில் ஒரு விவசாயியின் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அதே வாரத்தில் மகாராஷ்டிர சட்டசபையில் விவசாயிகளின் உருவ பொம்மைகளை வைத்து இறுதிச் ஊர்வலங்களை எதிர்க்கட்சிகள் நடத்தினர். அந்த ஏழு நாட்களில் விதார்பா பகுதியில் 20 விவசாயிகளுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அனைவரும் கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களே. பிரதமர் மன்மோகன்சிங்கின் 'நிவாரண உதவி' அளிக்கப்பட்டு மாதங்கள் ஆன பிறகும் விதார்பாவின் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் வருகிறது.

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நாக்பூரில் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். கயர்லாஞ்சி என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலித்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிரான போராட்டச் செய்திகளில் பருத்தி விவசாயிகளின் அவலங்கள் ஊடகங்களில் இடம் பெறாமல் போய்விட்டன. அந்த நாட்களில் பருத்தி விவசாயப் பகுதி முழுவதிலும் கொள்முதல் மையங்களில் மோதல்கள் வெடித்தன.

இந்தப் பகுதியில் ஏற்படும் பதற்றமும் மோதல்களும் எதிர்பாராதல்ல. விவசாயிகளிடம் இருந்து அரசு பருத்தியைக் கொள்முதல் செய்வதில் ஏற்படும் கால தாமதம், பருத்தி விவசாயிகளைத் தனியாரிடம் தள்ளி விடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் 300 கொள்முதல் மையங்கள் இருந்தன. ஆனால் இப்போது 56 மையங்களே இருக்கின்றன. எனவே விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் தங்கள் பருத்தியை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நெருக்கடியில் சென்று விற்கும்போது அவர்களிடம் இருந்து விவசாயிக்கு என்ன விலை கிடைக்கும்? குறைந்த விலைதான் கிடைக்கும்..

இந்த பருவத்தில் அதிகாரபூர்வமான பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு ரு1700 முதல் ரூ1900 வரை இருக்கிறது. இங்குதான் பருத்தியின் தரத்தை நிர்ணயிப்பவர்களின் பங்களிப்பு வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கு இவர்கள் யார் சார்பாக இருப்பார்கள் என்பது நன்றாகத் தெரியும்.. ஆம்.. அவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். விவசாயிகளின் நல்ல விளைபொருளைக் கூட தர நிர்ணயம் செய்யும்போது குறைத்துக் கூறி விடுவார்கள். இதனால் விவசாயிகளுக்கு நடைமுறையில் இருக்கும் கொள்முதல் விலையை விட குறைவான விலையே கிடைக்கும்.

ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு சென்ற ஆண்டு எடுத்த நடவடிக்கை மூலம் ரூ 2250 இலிருந்து ரூ1700 ஆக ஒரு குவிண்டாலுக்கான பருத்தி விலை குறைந்து போய்விட்டது. பருத்தியின் உற்பத்தி செலவை விட கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக மகாராஷ்டிர அரசே ஏற்றுக் கொள்கிறது. ''மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை: ஒரு பார்வை" என்ற ஆவணத்தில் இந்த உண்மையை அரசு ஒப்புக் கொள்கிறது.

அதிலும் இந்த பருவத்தில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குவிண்டாலுக்கு ரூ 1900 கூட கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியானபோது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பருத்திக்கு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ 2700 அளிக்கப்படும் என்று இந்த அரசு வாக்களித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்காக இப்போது அவர்கள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.

இப்படி விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த அரசு எடுக்கிறது? ஏறத்தாழ 17.44 லட்சம் விவசாயக் குடும்பங்களும் அவற்றைச் சார்ந்த ஒரு கோடி பேரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கும் அரசு – அதிலும் 20 லட்சம் பேர் "கடுமையான நெருக்கடியில்" சிக்கித் தவிப்பதாக அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு – விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10000 அரசு ஊழியர்களும் பிற பணியாளர்களும் பங்கேற்று நடத்தப்பட்ட அரசின் கணக்கெடுப்பிலேயே ஆறு மாவட்டங்களில் உள்ள அவலநிலை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் மரணங்கள் குறித்த தகவல்களை அரசு ஆவணங்களிலும் அரசின் இணைய தளத்திலும் காண முடிகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் விவசாயத்துறையில் நெருக்கடிநிலை என்று அறிவித்து அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பினால் ஏமாந்து போவீர்கள். கடந்த 9ஆம் தேதி சனிக்கிழமையின் பெரும்பாலான நேரம் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளைக் கைது செய்வதிலேயே அரசு குறியாய் இருந்தது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கூட பத்திரிகைகள் அறிந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.

இவ்வளவு மோசமாக மக்கள் இருக்கும் நிலையிலும் கூட எதிர்க்கட்சிகள் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. பாஜகவும் சிவசேனையும் சட்டசபையில் நாடகங்களை அரங்கேற்ற முனைகிறார்களே தவிர அரசிடம் இருந்து எந்த சலுகைகளையும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியவில்லை. விதார்பா பகுதியில் சமீபத்தில் நடந்த சிமூர், தார்யப்பூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு வேட்பாளர்களும் சிவசேனையில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது ராஜினாமாவால் நடந்த தேர்தல் என்பதும் அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்கள் என்பதும் வேறு விஷயம். ஆனால் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகள் எந்த அளவு செயல்படாமல் இருக்கின்றன என்பதற்கான எடுத்துக் காட்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து விதார்பா பகுதி விடுபடுவதற்கு சில மேதாவிகள் ஒரு யோசனையைச் சொல்கிறார்கள். அதாவது பருத்தி விவசாயத்தில் இருந்து கரும்பு பயிரிடுதலுக்கு மாறி விட வேண்டுமாம்! மகாராஷ்டிரா ஏற்கனவே கரும்பு ஆலைகள் மற்றும் சர்க்கரைத் தொழிலிலும் மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புகள் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு ஆலைகள் இல்லை. அரசு உதவி இல்லை என்றால் இங்கும் பருத்தி விவசாயிகளைப் போன்ற நிலையே ஏற்படும். விதார்பா பகுதியில் ஏற்கனவே தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் இங்கு கரும்பைப் பயிரிடுவதா? பருத்தியைவிட கரும்பு விளைவதற்கு 200 மடங்கு தண்ணீர் தேவை..

அதேசமயம் அமெரிக்க அரசு அங்குள்ள பருத்தி விவசாயிகளுக்கு அதிக மான்யம் வழங்குகிறது. கடந்த 2005க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் அங்கிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் அளவு அதற்கு முந்தைய 25 ஆண்டுகளின் இறக்குமதிக்கு இணையானது. நமது அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான வரியைக் கூட்டி உள்ளூர்ச் சந்தையைப் பாதுகாக்கவில்லை. இந்தியாவின் பருத்தி இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு இருபது சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தத் தகவல்களை எல்லாம் அரசே ஒப்புக் கொள்கிறது. அதன் ஆவணங்களில் எடுத்தாள்கிறது. ஆனால் அந்தத் தகவலை வேறு யாராவது எடுத்துப் பேசினால் அவர்கள் கைது செய்யப்படலாம். வழக்குகள் அவர்கள் மீது பாயலாம்.

மத்திய அரசின் நிவாரணத் தொகை மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்காது. விவசாயிகளுக்கு தேவை விளைவித்த பருத்திக்கு நியாயமான கொள்முதல் விலை.. கடன்கள் ரத்து.. சுலபமான நிதி வசதி.. உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைப்பதற்குத் தேவையான உதவி.. இவையெல்லாம் செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் விவசாயிகள் பிரச்னையை சட்டசபையில் விவாதித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

நன்றி: தி ஹிந்து

ஆங்கில மூலம்: பி. சாயிநாத்

நன்றி: தினமலர் – செய்திமலர் (நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வெளிவரும் ஞாயிறு நாளிதழுடன் வரும் இணைப்பு)

0 Comments:

Post a Comment

<< Home