Monday, December 25, 2006

சிக்காத லாலுக்கள்!

'கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை’ என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்தப் பாடல் வரிகளை சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டிருப்பார் போலும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவைத் தொடர்ந்து காண முடியாமல் இந்தியாவில் இருக்கும் ஊழல் அவரை உறுத்தியிருக்கக் கூடும். எனவே மாணவர்களிடம் ஊழல் ஒழிப்புக்குப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது தங்களுடைய பெற்றோர் லஞ்ச, ஊழலில் ஈடுபடாமல் தடுக்கும் பணியில் குழந்தைகள் இறங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

சமூகத்தில் இருக்கும் பல அவலங்களை நீக்குவதற்கு இனி முதிய தலைமுறையால் இயலாது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும். அல்லது குழந்தைகளுக்குப் புதிய ஆத்திச்சூடியும் பாப்பா பாட்டும் தந்த பாரதியின் வழிமுறை அவரைக் கவர்ந்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், லஞ்சத்தையும் ஊழலையும் அகற்றுவதற்குப் போராட வேண்டும் என்ற அவரது கோரிக்கை மாணவர்களால் மட்டுமே அமைதியாகக் கேட்கப்படும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியான ராப்ரி தேவியின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் இவ் வளவு வசதிகள் எப்படி வந்தன என்று கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், லாலு மற்றும் ராப்ரி மீது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கில் இருந்து லாலு யாதவும் ராப்ரி தேவியும் டிசம்பர் 18&ம் தேதி விடுவிக்கப் பட்டனர். இந்த விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த லாலு பிரசாத் யாதவுக்கு எம்.பி&க்கள் கைதட்டி ஆரவார வரவேற்பளித் துள்ளார்கள்.

‘‘மாம்பழம் இனிப்பான பழம்;லாலுஜியும் இனிப் பானவர்’’ என்று மக்க ளவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார். 1996&ல் ஐக்கிய முன்னணி ஆட்சி மத்தியில் நடந்தபோது அதை ஆதரித்த மார்க் சிஸ்ட் கட்சிதான், ஊழல் புகாருக்காக லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தது என்பது வேறு விஷயம்!

லாலு பிரசாத் யாதவ் அல்லது வேறு யாரோ ஓர் அரசியல் தலைவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் மக்கள் அவரை நேர்மையானவர் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின் பார்வையில் அவர் குற்றமற்றவர் ஆகிவிடுகிறார் என்பது உண்மைதான். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்ற அளவில் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றபடி அதிகாரத்தில் இருக்கும் பலரும் நேர்மைக்கு மாறான வழிகளில்தான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் நிலவுகிறது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு எழுந்த முந்திரா ஊழல் தொடங்கி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி&க்கள் லஞ்சம் வாங்கியது வரை ஏராளமான புகார்கள் உள்ளன. இவை எல்லாம் வெளியில் தெரிந்து குற்றச்சாட்டுகளாகவும் புகார்களாகவும் வெளியில் வந்தவை. வெளியில் தெரியாமலே இருந்து விடுபவை ஏராளமாக இருக்கக் கூடும். தேர்தலில் சிலர் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு, ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு தங்களுக்கு ‘என்னவெல்லாம்’ வேண்டும் என்று கேட்க வேண்டியதே இல்லை, அதுவாகவே வந்து கொட்டும் போலிருக்கிறது என்ற முடிவுக்கே வரத் தூண்டுகிறது.

இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் நம்மவர் களால் உருவாக்கப்பட்டனவா? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்தைய மன்னராட்சிகளிலும் முறைகேடுகள் இல்லையா? சிலர் பிரசாரம் செய்வது போல் ‘கழகங்களின்’ ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதா? அறத்துக்கு விரோதமான வழிகளில் பொருள் சேர்க்கும் வழக்கம் 1967&க்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டதா? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடினால், கிடைக்கும் பதில்கள் அதிர்ச்சி தருகின்றன.

‘‘ஆட்சியில் இருப்போர் மக்களிடம் இருந்து முறைகேடான வழிகளில் பணம் பெறுவது எதைப் போன்றது? கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் அவர்களது உடைமைகளைத் திருடன் வழிப்பறி செய்வதைப் போன்றது. தவறான வழிகளில் குவிக்கப்படும் செல்வத்தை விட வறுமை உயர்வானது...’’ இப்படியெல் லாம் கருத்துக்களை யார் சொல்லியிருப்பது என்று நினைக்கிறீர்கள்? நமது திருவள்ளுவர்தான்! அவர் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் அந்தக் காலத்திலேயே ஏன் ஏற்பட்டது? முறைகேடான வழிகளில் செல்வம் சேர்த்தவர்கள் அப்போதும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த முறையை தவறான வாழ்க்கைமுறை என்று சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’ என்று பாரதி சொல்லியிருக்கிறார். அவரும் அவர் காலத்தில் சூதும் வாதும் செய்த படித்தவர்களைப் பார்த்துத்தான் அப்படிப் பாடியிருக்க முடியும்.

‘‘ஊழல் பழமையானது; மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் செய்கின்றன. எனவே ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் ஒரு பயனும் இல்லை’’ இப்படி ஒரு கருத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல் நேரங்களில் ‘நல்லவர் தேவையில்லை; வல்லவரே தேவை’ என்று பிரசாரத்தையும் இவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். பொதுவாழ்வில் பெரும்பான்மையான ‘அன்பளிப்புகள்’ எழுதப்படாத விதி களுக்குக் கட்டுப்பட்டவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. எனவே அன்றாட வாழ்வில் பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதில்லை. அதேசமயம் எந்தவித ‘வரைமுறைகளுக்கும்’ கட்டுப்படாமல் அல்லது ‘உண்மையான’ அதிகார பீடங்களுக்கு அடங்காமல் நிமிர்கின்ற சிலர்மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக எழுகின்றன. அதாவது தங்களில் சிலரை நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் அலைய விட்டுவிட்டு மற்ற தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அப்படி வழக்குகளில் சிக்கியவர்களில் ஒருவராகத்தான் லாலு பிரசாத் யாதவ் இருக்கிறார்.

நமது பண்பாட்டைப் போலவே ஊழலும் தொன்மையானது என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதாலோ நமது அமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதாலோ அதனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.

நமது உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று தெரிகிறது. அதற்குக் காரணமான நோய் என்ன என்று மருத்துவரிடம் இருந்து அறிந்து கொள்கிறோம். நோய்க்கு நிவாரணம் மரணம்தான் என்று எந்த மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்

0 Comments:

Post a Comment

<< Home