Sunday, November 06, 2005

புத்தகம் மூடிய மயிலிறகு

புத்தகங்கள் படிக்கும் பழக்கமே அவனைப் பண்படுத்தியது என்று சொல்லலாம்.வீட்டில் சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பத்திரிகைகளின் பழைய இதழ்கள் இருக்கும். தி ஹிந்து, தினமணி இரண்டு நாளிதழ்கள் வாங்குவார்கள். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி வீட்டிற்குள் வராது.

ஐந்தாவது வகுப்பு படிக்கும்போதே நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவனிடம் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் "தேநீர்க் கோப்பையை உதட்டில் வைத்தார். தேநீரை உறிஞ்சிக் குடித்தார் சங்கர்லால்" மாதிரியான சங்கர்லால் துப்பறியும் நாவல்கள் தான் அவனுக்குப் பிடிக்கும்..கொலை என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதே தமிழ்வாணன் நாவல்களில் இருந்து தான் தெரியும்.

தமிழ்வாணனைத் தொடர்ந்து ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை எடுத்துப் படித்தான். கூடவே பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் டி.எம்.எஸ் குரலில் "எம்.ஜி.ஆர் பாடல்களாக" அவனை ஈர்த்தன.

'வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க

உந்தன் வீரத்தை முளையிலேயே
கிள்ளி வைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே'

இந்த வரிகள் தான் அவனுக்கு உலகைக் காட்டத் தொடங்கிய முதல் வரிகள். அவன் வீட்டின் பின்புறம் ஒரு வேப்பமரம் இருந்தது. கொல்லைப்புறத்தில் கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்கு அவனுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது.

"பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்"
என்று பாடல் வரிகளை முணுமுணுத்தபடி பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்பா அவனை அழைத்தார். அப்போது பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

அவன் கையில் ஒரு கவர் கொடுத்தார். அதில் அவனது பெயர் மற்றும் அவனது வகுப்பு,பிரிவு,பள்ளி இருந்தது. பள்ளி முகவரிக்கு அவனுக்கு வந்த கடிதம். பிரித்துப் படித்தான்.

அது அவனை விளித்து எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம். அப்பா சொன்னார்:
" இது இரண்டாவது கடிதம். முதலில் ஒன்று வந்தது. அறியாத பருவத்து செயல் என்று உன்னிடம் சொல்லாமலே நானே கிழித்து விட்டேன். உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உனக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்போது உனக்குப் படிக்கத் தந்தேன். இதையும் நீயே கிழித்துப் போட்டுவிடு..இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்த உணர்வுக்கான பருவம் இதல்ல.. வகுப்பில் மற்றவர்களிடம் சொல்லாதே. அந்தப் பெண்ணிடமும் எப்போதும் போல் பழகு. நான் யாரிடமும் இது குறித்துப் பேசப் போவதில்லை''

கடிதத்தை உடனே அவன் கிழித்துப் போடவில்லை. இரண்டு நாட்கள் சட்டைப் பையில் வைத்திருந்தான். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்க இயலாது என்று கிழித்துப் போட்டான். "சட்டைப் பையில் உன் கடிதம் தொட்டுத் தொட்டு உரச என் இதயம் உன்னைச் சுற்றுதே" என்று அப்போது சினிமா பாடல் வரவில்லை.

அப்பாவின் அணுகுமுறை அவனை நெகிழச் செய்தது.ஜெயகாந்தனின் "சமூகம் என்னும் நாலு பேர்" சிறுகதையை அவன் படித்திருந்தான்.

பள்ளியில் சக மாணவிக்கு ஒரு மாணவன் "லவ் லெட்டர்" கொடுப்பான். அவள் வீட்டில் சொல்லி அவர்கள் ஊரைக் கூட்டி கலாட்டா செய்வார்கள். மாணவியே ஒதுக்கி இருக்கலாம் அல்லது அவளது பெற்றோர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம் ; மாறாக அவர்கள் செய்த இந்தச் செயல் அந்த மாணவனை அவமானத்தால் கூனிக் குறுகச் செய்யும் செயல் என்று ஆசிரியர் கருத்து வரும்.

ஒரு பிரச்னைக்கு பல கோணங்கள் உண்டு என்று அவனுக்கு அப்பாவுடன் சேர்த்து சிறுகதைகளும் உணர்த்தின.

ஸ்டேஷன் பெஞ்ச்சில் அமர்ந்து நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களைத் தாண்டி ஓரிரு பாலியல் தொழிலாளிகள் போவார்கள்; வருவார்கள்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் இரவு 7.30 மணிக்கு அந்த ஸ்டேஷனைக் கடந்து சென்றுவிட்டால், பிறகு மறுநாள் காலை தான் ரயில். இரவு நேரம் அங்கு என்னென்னவோ நடக்கும் என்று அறிந்திருக்கிறான்.

எப்போதாவது அவர்களைக் கடந்து போகும் போது "தம்பி, டிரெய்ன் போயிடுச்சா?" என்று பாலியல் தொழிலாளி கேட்பார். அவனுக்கு அருவருப்பாக இருக்கும். அவர்களைப் பார்த்தாலே பிடிக்காது. இதைப் போலவே தான் சிறை சென்று வந்தவர்கள், மது வாசனையுடன் இருப்பவர்கள் யாரையும் அவனுக்குப் பிடிக்காது.

இலக்கணம் மீறிய கவிதை என்ற சிறுகதை பாலியல் தொழிலாளியின் காதல் குறித்தது. அது அவனது பார்வைக்கான சாளரத்தைத் திறந்தது. அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்ற திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவின.

"சாளரம்" என்றொரு கதை. பக்கத்து வீட்டில் சகோதரனும் சகோதரியும் உறவு கொள்ளும் கதை.. அதிர்ச்சியை அளித்தது. ஆனாலும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இது போன்றும் நடக்கலாம் என்று புரிந்து கொள்ள உதவியது.

"ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" ஹென்றி, "பாரீசுக்குப் போ" சாரங்கன், "ஒரு இலக்கியவாதியின் திரையுலக அனுபவங்கள்" ஜெயகாந்தன் ஆகியோர் மது அருந்துதலை ஒழுக்கக் கேடாகப் பார்ப்பதில் இருந்து மாற்றினர். உடல்நலனுக்குத் தீங்கான ஒரு தனிமனிதப் பழக்கம் என்ற அளவில் அவன் புரிந்து கொண்டான்.

காண்டேகரின் "கிரௌஞ்சவதம்" திலீபன், "வெண்முகில்" நரேந்திரன் போராடும் உணர்வை வளர்த்தார்கள்.

இந்திரா பார்த்தசாரதியின் "தந்திரபூமி" கஸ்தூரி வேறு சில விஷயங்களில் இருந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்தார். ஆதவன் அவரது சிறுகதைகள் மூலம் தனிமனித மனங்களுக்குள் நிகழும் போராட்டங்களை அறிய உதவினார்.

அடிதடி தகராறுகளில், கத்திக் குத்து, அரிவாள் வெட்டு போன்ற வழக்குகளில் சிறை சென்று வந்த ஒருவர், இரவு 9 மணிக்கு மேல் அவனை சாலையில் கண்டால் " காலம் கெட்டுக் கிடக்கு தம்பி.. சீக்கிரம் வீட்டுக்குப் போ" என்பார்.

ஆரம்பத்தில் அவரிடம் பேச பயப்பட்ட அவன் பிறகு அவரை நிறுத்தி நலம் விசாரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டான்.

அவருடைய கோஷ்டிக்கும் எதிர் கோஷ்டிக்கும் அவனது வீட்டு முன்னால் கடும் மோதல். அவருடைய தம்பி அவன் வீட்டு கதவைத் தட்டி "சார்" என்று அழைத்தான். ஜன்னல் வழியாகப் பார்த்தால் அரிவாள், வேல்கம்பு கையில் கொண்ட மனிதர்கள்..

அப்பா கதவைத் திற என்றார். அவன் தயங்கினான். வாசலில் ரத்தம் சொட்ட ஒருவருடன் அந்தத் தம்பி.. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பா சொன்னார்." சண்டை போடற பசங்கள்லேயும் பாதிக்கு மேல என்னோட மாணவர்கள் தான்.. இவனுக்கு இடம் கொடுக்கறதுனால யாரும் நம்ம கிட்ட சண்டைக்கு வர மாட்டாங்க.."

அவனது தயக்கத்தைப் போக்கினார். அவன் கதவைத் திறந்தான். சண்டை முடிந்து கும்பல் கலையும் வரை காயப்பட்டவனை அவனது வீட்டில் வைத்திருக்கச் சொல்லிவிட்டு, கும்பல் கலைந்தபிறகு அந்த தம்பி வந்து அழைத்துச் சென்றான். சண்டைகள் போட்டாலும் அவர்களும் நம்மைச் சார்ந்த மனிதர்களே என்று அவன் புரிந்து கொண்டான்.

நேற்று அப்பா ஊரில் இருந்து தொலைபேசியில் பேசினார். 'கோபால் அய்யரின் தமிழ் இலக்கண நூல் அவசியம் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விலை அதிகம் என்று நினைக்க வேண்டாம். உடனடியாக இன்றோ நாளையோ போய் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஆனால் வாங்கி வைத்திரு" என்றார்.

அவர் இதுவரை இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. அந்த நூலை வாங்க வேண்டும்.

19 Comments:

At 1:00 PM, Blogger தருமி said...

நீங்கள் சொன்ன பட்டியலோடு எனக்கும் தொடர்பு இருந்தது.ஆனால், உங்களைத்தொட்ட அளவு என்னைத் தொட்டார்களா என்பது கேள்விக்குறியே.அதனால்தானோ என்னவோ, நான் 'மயிலிறகாக' மாறவேயில்லை!

 
At 1:28 PM, Blogger Thangamani said...

நான் படித்த புத்தகங்களையும் அதுதொடர்பான நினைவுகளையும் கிளர்த்தியது இப்பதிவு.

சமூகம் என்பது நாலு பேரும், கோகிலா என்ன செய்துவிட்டாளும் சேர்ந்த புத்தகம் ரொம்பநாள் என் மேசையின் மீதே இருக்கும். பாரிசுக்கு போவும் அப்படியே எனக்குப் பிடித்தது.

 
At 6:30 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி: பாரீசுக்கு போ இப்போது சில நாட்களுக்கு முன் மீண்டும் படித்தேன். ஒவ்வொருமுறை படிக்கும் போதும் பல புது விளக்கங்கள் தோன்றுகின்றன. எதையும் நேர்மறையாக சொல்லும் போது அது உண்டாக்கும் விளைவு கோபப்பட்டோ அல்லது கடிந்து கொண்டோ சொல்லும் போது இன்னும் மறைமுகமாகவேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும். என் வீட்டு நடைமுறையும் அப்படியே இருந்தது, இப்போது என் பிள்ளையிடம் நாங்கள் சொல்வதும் அப்படியே. தனிமனித கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்பதும் நான் அடிக்கடி என் பிள்ளையிடம் சொல்லும் பாடல்.

 
At 6:47 PM, Blogger ஜென்ராம் said...

தருமி:
வருகைக்கு நன்றி..

தங்கமணி: ஜெய ஜெய சங்கர,கங்கை எங்கே போகிறாள், ஊருக்கு நூறு பேர் காலங்களில் அன்னியப்பட்டுவிட்டார்.யாருக்காக அழுதான் ஜோசப் கண்கலங்க வைத்தவர். பல விளிம்புநிலை மனிதர்களை மதிப்பதற்கு எனக்குக் கற்றுக் கொடுத்தது அவரது சிறுகதைகள்.

 
At 6:51 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி தேன் துளி.//ஒவ்வொருமுறை படிக்கும் போதும் பல புது விளக்கங்கள் தோன்றுகின்றன// நமது புரிதலில் ஏற்படுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன.

 
At 6:56 PM, Blogger ramachandranusha(உஷா) said...

ராம்கி, ஒரு வாரம் போனதே தெரியவில்லை. அனைத்தும் நிறையான பதிவுகள். நன்றீ

 
At 7:12 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி உஷா

 
At 7:24 PM, Blogger enRenRum-anbudan.BALA said...

Ramki,
//ராம்கி, ஒரு வாரம் போனதே தெரியவில்லை. அனைத்தும் நிறையான பதிவுகள். நன்றீ
//
நான் வழி மொழிகிறேன் :-)

தங்கள் எல்லாப் பதிவுகளும் அருமையாக அமைந்தன.

You were really a SUPER star of the week !!

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !!!

 
At 8:20 PM, Blogger தாணு said...

ஓரளவு மட்டுமே எழுதியுள்ளதாகத் தெரிகிறது. பாலகுமாரனின் `அகல்யா'வும் சிவசுவும் எந்த பாதிப்பையும் கொடுக்கலையா?

நான் சமீபத்தில் ஜெயகாந்தனின் புத்தகங்கள் வாங்கி அடுக்கிவிட்டேன், ஆலீஸுக்கு பரிச்சயமாகட்டும் என்று, எழிலுக்கு அதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்.

பள்ளிப் பருவ கிளுகிளு மேட்டர் பற்றி சொல்லப்படாது என்று நினைத்தேன். `சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் உறங்கிக் கிடப்பது மீதி'.
கண்ணதாசனைப் பற்றி எதுவுமே சொல்லலையே, ஏன்?

 
At 8:33 PM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு: மின்மடல் பார்ப்பதே இல்லையா?

 
At 9:00 PM, Blogger ஜென்ராம் said...

என்றென்றும் அன்புடன் பாலா:
பாராட்டுகளுக்கு நன்றி.

தேன் துளி:
நன்றி..நன்றி..நன்றி..

 
At 10:51 AM, Blogger ஜென்ராம் said...

நன்றி..உஷா சங்கர்..

துப்பறியும் சாம்பு, அப்புசாமியும் சீதாப் பாட்டியும் போன்ற புத்தகங்களும் படித்திருக்கிறேன்..ஆனால் வளர்ந்தபின் அவற்றை மீண்டும் படித்தது கிடையாது.

அன்பான வார்த்தைகளுக்கு நன்றி..

 
At 10:53 PM, Blogger VSK said...

அழுத்தமான பதிவு!
நானே சொல்வது போல உணர்ந்தேன்.
ஒவ்வொருவரும், அவரவர் தந்தையை, தாயைப் பற்றி எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும்!
தன்னை அறிய அது உதவும்.

நன்றி.

 
At 12:41 AM, Blogger ஜென்ராம் said...

நன்றி எஸ்கே.

 
At 11:29 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப வருத்தமா இருக்குங்க.. இதுல நிறைய புத்தகம் நான் படித்ததில்லை.. இன்னும் ரெண்டு மாசத்துல வாங்கி படிச்சிடப் போறேன்

 
At 3:21 PM, Blogger ஜென்ராம் said...

புதுப் புத்தகம் மற்றும் பொன்ஸ் :

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் எனது நன்றி..

 
At 3:31 PM, Blogger தருமி said...

long time..........no see.......

 
At 3:31 PM, Blogger தருமி said...

long time..........no see.......

 
At 5:06 PM, Blogger Nagarajan Seshadri said...

hello,
thamizhil ezhudha vendum endru asai anal thamizh font illai en computer-il. agave tamizh english variyil ezhudhugiren. enakku thuppariyum samby romab pidikkum. adhilum pazhaiya cartoom sambu kidaikkuma endru thedukiren. yaridamavahu irundhal sollungal. oru xerox copyyavadhu edhuthu parkka virumbukiren. irundhal email seyyavum alladhu indha blog-il post seyyavum. email ID:snrajan2006@gmail.com
nandri.

 

Post a Comment

<< Home