Tuesday, July 05, 2011

அன்னையின் நிழலில்….

“நீங்க இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா, நான் அழுதுடுவேன்,” என்று குழந்தைகள் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் அந்த மாதிரிப் பேசும் குழந்தைகளையோ வளர்ந்த மனிதர்களையோ பார்த்திருக்கக் கூடும். அவர்களை அவர்கள் விருப்பப்படி விட்டுவிட வேண்டும். மாறாக அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக யாராவது அவர்களிடம் ஏதாவது பேசினால் போதும். கண்களில் கண்ணீர் உடனடியாக எட்டிப் பார்க்கும். அதைப் போன்ற ஒரு காட்சியே, அந்த செய்தியைப் பார்த்ததும் என்னுடைய நினைவுக்கு வந்தது. அது என்ன செய்தி?

ஐந்து அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு அவர்களுடன் ஒன்றரை மணி நேரம் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசி இருக்கிறார். பல விஷயங்களைப் பற்றி அவர்களிடம் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்தே முதலில் சொன்ன காட்சியை நினைவுபடுத்தியது. “இந்த மாதிரி அரசாங்கத்தை செயல்பட விடாமல் முற்றுகையிட்டால், விரக்தி அதிகமாகும்; வளர்ச்சிக்காக பாடுபடும் எண்ணம் குறைந்துவிடும்” என்பது அவர் சொன்ன செய்தி. அவருடைய அரசாங்கத்தை யார் செயல்படவிடாமல் ‘கெரோ’ செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு உடனடியாக உங்களிடம் பதில் இருக்கும். ஆனால் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.

“ஒரே நேரத்தில் குற்றம் சாட்டுபவர்களாகவும் விசாரணையில் வழக்காடுபவர்களாகவும் நீதிபதிகளாகவும் ஊடகங்கள் செயல்படுகின்றன,” என்று மன்மோகன்சிங் மனம் பொருமி இருக்கிறார். அதாவது ஊடகங்கள் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன; விசாரணை நடத்துகின்றன; தீர்ப்பும் வழங்கி விடுகின்றன என்று ஊடகங்களைக் குறை சொல்கிறார். “காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசலை உருவாக்குவதற்கு ஊடகங்கள் முயல்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி சில வாரங்களுக்கு முன்னால் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அதைப் போலவே மத்திய அரசாங்கத்தில் எதுவுமே நடக்காததைப் போலவும் ஊடகங்களே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து ‘விசாரணை’ நடத்தி தீர்ப்பு வழங்கிவிடுவதைப் போலவும் அவர் சொல்லி இருக்கிறார்!

ஊடகங்கள் என்ன செய்கின்றன? சில பிரச்னைகளை எழுப்புகின்றன. அவற்றின் மீது விவாதங்களை நடத்துகின்றன. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அந்த சிக்கல்கள் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. எதிர்க்கட்சிகள் அவை குறித்து அறிக்கை விடுகின்றன; ஓரிரு கட்சிகள் மட்டுமே போராட்டங்களை நடத்துகின்றன. ஜனநாயக அமைப்பில், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை முற்றுகையிடும் நடவடிக்கை அல்ல; நிர்வாகத்தை முடக்கிப் போடும் செயல்பாடும் அல்ல; ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் இதற்காக வேதனைப்படுகிறார்; ஊடகங்களைக் குற்றம் சாட்டுகிறார். அப்படி என்றால் அவர் வேண்டுவது என்ன? முழு அளவிலான சர்வாதிகாரமா?

“எல்லா உண்மைகளும் தெரியாத நிலையில் முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதிகமாக உண்மை தெரிந்த நிலையில், தணிக்கை அதிகாரி, நாடாளுமன்றம், ஊடகங்கள் ஆகியவை அரசாங்கத்தின் முடிவுகளை ஆய்வு செய்கின்றன. இந்தச் சூழ்நிலையில் செயல்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்றும் அவர் பேசி இருக்கிறார். இதற்கு என்ன பொருள்? நிர்வாகத்தில் முடிவெடுக்கும்போது முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிவதில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு முறையும் ஊழல் புகார் வரும்போது, ‘என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று மன்மோகன்சிங் சொன்னதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது.

“தொலைத் தொடர்புத் துறையில் என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது. தலைமைக் கண்காணிப்பு ஆணையரிடம் யாரோ ஊழல் புகார் கொடுத்தார்கள்; சிபிஐ விசாரித்தது; அதன் பிறகும் கூட அந்த முறைகேட்டில் அமைச்சருக்கு எதிரான ஆதாரம் எதுவும் இருப்பதாக சிபிஐ என்னிடம் தெரிவிக்கவில்லை” என்று அந்த ஐந்து ஆசிரியர்களிடம் பேசும்போது மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார். அதே சமயத்தில் வேறொரு தகவலையும் அவர் சொல்கிறார். அவரை செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்கிறார். அவருடைய தலைமையில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முழுக்க முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும் அவர் உறுதிப்படுத்துகிறார். அவருடைய இரண்டு கூற்றுக்களுக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

இருந்தும் அவர் பேசியாக வேண்டியிருக்கிறது; ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரவை சகாக்களால் அரசாங்கத்தின் நற்பெயர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறை 2009-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன; இப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் அரசாங்கத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இழப்புகளையும் சேதங்களையும் சரிசெய்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இருக்கிறது. அதனால் அவர் ஊடகங்களை அழைத்துப் பேசி இருக்கிறார்!

அதேசமயம், அனைத்து ஊடகங்களையும் அழைக்காமல் தேர்வுசெய்யப்பட்ட ஐந்து அச்சு ஊடக ஆசிரியர்களிடம் மட்டும் பேசுகிறார். அவர்கள் மூலமாக தான் சொல்ல நினைப்பதை மக்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவருடைய எண்ணம். அது நிறைவேறி இருக்கிறது. ‘நான் அதிகாரம் இல்லாத பிரதமர் இல்லை; அரசு என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது; லோக்பால் அதிகார வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை; ஆனால் என் அமைச்சரவை சகாக்கள் தான் அதை எதிர்க்கிறார்கள்’ என்று அவருடைய கருத்துக்களை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கி மக்களிடம் சேர்த்தன.

“ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை; அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திடம் குவியும் லைசன்ஸ் ராஜ்யம் மீண்டும் வந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்று அவர் மக்களை எச்சரிக்கிறார். உரிமங்களைப் பெறுவதற்காக அரசாங்கத்திடம் காத்திருக்க வேண்டியிருப்பதாலேயே லஞ்சமும் ஊழலும் பெருகுகிறது என்று நமக்கு கற்பித்தார்கள். இப்போது பெருகி இருக்கும் லஞ்சத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ‘லைசன்ஸ் ராஜ்யம்’ வந்துவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள்!

பரபரப்பான செய்திகளுக்கு நடுவே ஒரு செய்தி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. ஊடகங்களுடன் பிரதமர் மனம் திறந்து பேசினார், ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்ற திக்விஜய்சிங்கின் பேச்சு போன்றவை பட்டையைக் கிளப்பும் செய்திகள். அவற்றுக்கு நடுவே கவனிக்கப்படாமல் நம்மைக் கவலைப்படச் செய்யும் செய்தி என்ன? 2002-ல் குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ‘வழக்கமான அரசு நடைமுறை’ காரணமாக அழிக்கப்பட்டது என்பதே அந்த செய்தி!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, July 01, 2011

இருட்டினில் மறையும் நீதி

“கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ‘ஸ்பான்சர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அது தெரிவதில்லை!” இந்த வரிகளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ரிப்போர்ட்டர் இதழில் இந்த எரிதழல் பகுதியில் நான் எழுதிய முதல் பத்தியின் கடைசி வரிகள். கடந்த 11.07.2010 இதழுக்காக ஜூலை இரண்டாம் தேதி நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். எதைப் பற்றி? பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது குறித்த விமர்சனமாக அது எழுதப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து அதே பிரச்னையைப் பற்றி மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. இடையில் எத்தனையோ முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம்!

எதற்காக நான் எழுதிய அந்த பத்தியை இங்கு நினைவூட்டுகிறேன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதே பிரச்னை.. அரசாங்கத்திடம் இருந்து அதே வாசகங்கள்.. “விலை உயரும் போது சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம்; ஆனாலும் நாட்டு நலன் கருதி சில கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் இப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி! அதே சொற்கள், அதே பொருள்! அன்று பேசியவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி! இப்போது அவர் இன்னும் ஒரு படி மேலே ஏறி உயரத்தில் இருந்து கொண்டு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குகிறார். விற்பனை வரியைக் குறைத்து, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைக் குறைந்த விலையில் அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசுகள் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்!

ஒரு லிட்டர் டீசலின் விலை மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது; சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலை ஏறி இருக்கிறது. இந்த விலையேற்றத்தை ஏறத்தாழ எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்து இருக்கின்றன. “உத்தரப் பிரதேசத்தில் சாமான்யனுக்கு ஆதரவாக வேஷம் போடும் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது” என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாட்டி இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மெல்லிய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.

திமுகவின் எதிர்ப்பை ஏன் மெல்லிய எதிர்ப்பு என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழக் கூடும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை சொல்கிறது. மிகவும் தீவிரமான கண்டனச் சொற்கள் இல்லையே என்றெல்லாம் பேசுவதில் பொருள் இல்லை. ஏதோ இந்த அளவிற்காவது, விலையேற்றம் நியாயமான செயல் அல்ல என்று சொல்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். முதலமைச்சர் ஜெயலலிதா விலைஉயர்வைக் கண்டித்திருக்கிறார் என்பதால் நாம் அந்த விலையேற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்காமல் இருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

“லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்ப்பதால் அவருடைய அதிகார வரம்பு குறைக்கப்படுகிறது; அதனால் நான் அந்த ஆலோசனையை எதிர்க்கிறேன்” என்று ஜெயலலிதா சொல்வதை நினைத்துப் பாருங்கள். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி சொன்னதன் எதிர்விளைவு என்று சிலர் நினைப்பதை எப்படி தடுக்க முடியும்? அதையும் மீறிய அரசியல் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

இதுவரை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு சொல்லி வந்த காரணம் மக்களிடம் இப்போது எடுபடவில்லை என்பதை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதுதான் இங்கு விலையேற்றத்துக்குக் காரணம் என்ற பழைய பல்லவி இன்று பொருந்தாது என்பதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் விலை குறையும் போது இங்கு விலை குறைவதில்லை. இதற்கு என்ன காரணம்? இங்கு விலை ஏறுவதற்கு மத்திய அரசு விதித்திருக்கும் உற்பத்தி வரி, சுங்க வரி ஆகியவையும் மாநில அரசின் விர்பனை வரியும் காரணம் என்பதை பரவலான பிரசாரம் மூலமாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் காதில் பூச்சுற்ற முயற்சி நடக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமையை மத்திய அரசு வைத்திருக்காது; எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தாகி விட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுங்க வரிக்கோ அல்லது உற்பத்தி வரிக்கோ எந்த பாதகமும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். ஆனால் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்! மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதை ஆமோதிக்கிறார்!

அதாவது “நாங்கள் ஐம்பது ரூபாய் விலை உயர்த்துவோம்; நீங்கள் உங்கள் வருவாயில் 14 முதல் 15 ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று மத்திய அரசு மாநில அரசுகளைச் சொல்கிறது. டெல்லிக்குப் போக வேண்டியது தமிழகத்தில் இருந்து போய்விடும்; சென்னைக்குக் கிடைக்க வேண்டியதை தமிழகம் இழக்க வேண்டும். இதை ஒரு தீர்வாக மத்திய அரசு சொல்கிறது; மாநில சுயாட்சி பற்றிப் பேசுபவர்கள் அதை ஏற்றுக் கொண்டு இன்றைய தமிழக அரசுக்கும் ஆலோசனை சொல்கிறார்கள். தமிழ்நாட்டு நலனில் இருக்கும் அக்கறையை விட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நலனில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடே இதன் மூலம் வெளிப்படுகிறது!

இந்த விலை உயர்வால் நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? ஏற்கனவே சரக்குக் கட்டணங்களை லாரி உரிமையாளர்கள் உயர்த்திவிட்டார்கள்; ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் அதிரடியாக அதிகரித்து இருக்கின்றன. காய்கறிகளில் தொடங்கி அனைத்துப் பொருட்களின் விலையும் படிப்படியாக எகிறத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலின் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறவர்களுக்கு விலையேற்றத்தின் கடுமையான விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம்மால் அவர்களைப் போல இருக்க முடியாது!

குமுதம் ரிப்போர்ட்டர் 07.07.11

எதிராக இருப்பது யார்?

கடிதம்! நம்மில் பலருக்கு முற்றிலுமாக மறந்து போன ஒரு பொருள்! தாளும் பேனாவும் எடுத்து நாம் கடிதம் எழுதி வருடங்கள் ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது. இருந்த போதிலும் இன்னும் நமக்கு கடிதத்தை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது யார்?

அரசியல்வாதிகள் தான்! உள்ளூர் பிரச்னையில் இருந்து உலகப் பிரச்னை வரை டெல்லிக்கு கடிதம் எழுதும் தலைவர்கள்! டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள்! நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா? ஆம். கடிதத்தின் நகலை உடனடியாக ஊடகங்களில் வெளியிட முடியும்!

அப்படி ஊடகங்களில் வெளியான ஒரு கடிதத்துக்கு சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஊழல் எதிர்ப்பு ‘நாயகன்’ அன்னா ஹசாரேக்கு அவர் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஒரு முறையும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஒரு முறையும் அன்னா ஹசாரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று சோனியாவிடம் கண்ணைக் கசக்கி இருந்தார். அதற்கு சோனியா காந்தி “உங்களை சிலர் விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை; அவர்களை நான் ஊக்கப்படுத்தவும் இல்லை” என்று பதில் அனுப்பி இருந்தார்!

ஆனால், சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்; அதேசமயம் கட்சியில் இருந்து வரும் பொறுப்பற்ற விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவும் இல்லை. திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவேதி போன்ற தலைவர்கள் அன்னா ஹசாரே அணிக்கு எதிராகவும் ராம் தேவ் குழுவுக்கு எதிராகவும் ‘பிய்த்து உதறுகிறார்கள்’; உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களை மட்டுமா எதிர்த்துப் பேசுகிறார்கள்? அல்லது அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துவதோடு நின்று விடுகிறார்களா என்ன?

அவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்; நாடாளுமன்றம் பெரியதா அல்லது சிவில் சமூகம் பெரியதா என்று புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். ஊழலை எதிர்த்துத் தானே அன்னா ஹசாரே போராடுகிறார் என்று அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அரசை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அரசும் ஊழலும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது!

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யார் யாரோ அப்படிப் பேசினால் நமக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றாது. நம்முடைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிவில் சமூகப் போராட்டங்களைக் குறை சொல்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தங்களுடைய பொறுப்புகளை விட்டுக் கொடுப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்! ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன் என்றும் அவர் சேர்த்தே சொல்கிறார்!

இதற்கு என்ன பொருள்? “நீங்கள் போராடலாம்; ஆனால் நாங்கள் நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திவிட வேண்டும்; நாங்கள் எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்! காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும் பொதுநல அமைப்புகளின் போராட்டம், ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்ற ரீதியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று லோக்பால் சட்ட முன்வரைவில் சில விஷயங்களை பொதுநல அமைப்புகள் வலியுறுத்துவதை காங்கிரஸ் கட்சியால் தாங்க முடியவில்லை! அதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் போராட்டங்கள் அபகரிக்க முயல்கின்றன என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா சானு, ராம் தேவ் போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுக்க முயல்கிறார்களா? நிச்சயம் இல்லை. அவர்களுடைய போராட்டங்களில் ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம். ஊடகங்களின் பாரபட்சம் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்புக்கோ அல்லது கருப்புப் பண ஒழிப்புக்கோ முழுமையான தீர்வு அளிப்பவை அல்ல என்று ஒருவர் கருதலாம். அதற்காக அரசு சொல்லும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது!

அரசாங்கமும் ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களும் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது? மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு வர வேண்டும்; வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்; அதோடு அவர்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. சட்டம் இயற்றும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே; அந்த நடைமுறையில் பிரதிநிதிகளுக்கு மக்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. இந்த ஆளுவோரின் சிந்தனைதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக மக்களைத் ‘திசைதிருப்பும்’ வேலைக்கு அடிநாதமாக இருக்கிறது!

உண்மையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யார் பறித்துக் கொண்டிருகிறார்கள்? ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன? ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? ‘எங்கள் தலைவருக்கு ஜலதோஷம், அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தும்மிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் மனம் திறந்தார்களே, இதுதான் இந்திய இறையாண்மையா?

தேசிய சிறப்பு அடையாள அட்டையை இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கும் திட்டத்துக்காக நந்தன் நிலகேனியை மத்திய அரசாங்கம் தலைவராக நியமித்தது. எந்த நாடாளுமன்றத்திடம் அதற்காக அனுமதி வாங்கியது நம் அரசு? தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது? நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன்! மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன்! அவ்வளவு ஏன்? சோனியா காந்தியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஆலோசனைக் குழுமத்தைக் கூட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் அமைப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை சிதம்பரத்தை விடவும் ஜெயந்தி நடராஜனை விடவும் யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும்? நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்! தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்? பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும்! அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ மக்களாகிய நமக்குத்தான் இல்லை!

குமுதம் ரிப்போர்ட்டர் 30.06.11