Monday, March 28, 2011

பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்

”வைகோ என்ன செய்வார் என்று நினைக்கறீங்க?” என்று அந்த நண்பர் கேட்டார். அண்ணா திமுகவின் வேட்பாளர் பட்டியலை முதலில் ஜெயலலிதா வெளியிட்ட கூத்து நடந்த சில நிமிடங்களில் இந்தக் கேள்வியை அவர் கேட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தொகுதிகளைப் பார்த்தால் பிரச்னை மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் இருந்ததைப் போலத் தோன்றவில்லை. சுடுகிற நெருப்பில் கைவைத்ததைப் போல தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இடதுசாரிகளும் மற்ற சிறிய கட்சிகளும் அதிர்ச்சியில் கத்தினார்கள். எப்படி எதிர்வினையாற்றுவது என்று அப்போது அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை!

“அவருக்கு எதுக்கு இந்தத் தேர்தல்? தமிழீழத்தில் பேரழிவை ஏற்படுத்திய சிங்களப் பேரினவாதிகளுக்கு உறுதுணையாக நின்ற சக்திகளையும் அவர்களுடைய அடிப்பொடிகளையும் தோற்கடிப்பதே எங்கள் லட்சியம். அதைச் செய்யும் ஆற்றல் கொண்ட அதிமுக அணியில் எங்களுக்கு இடங்கள் ஒதுக்குவதற்கு தயங்குகிறார்கள். அதனால் ம.தி.மு.க இந்தத் தேர்தலில் பங்கேற்காது என்று அவர் சொல்ல வேண்டும்” என்று பதில் சொன்னேன்.

நான் சொன்ன பதிலில் அந்த நண்பருக்கு உடன்பாடு இல்லை. எப்படியாவது அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற வேண்டும் அல்லது அதிமுகவைத் தவிர அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும். இதுவே அந்த நண்பரின் விருப்பம். மூன்றாவது அணி என்பதை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஏற்றுக் கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்றால் அடுத்த பிரதான கட்சியான அதிமுகவை ஆதரிப்பது, அதிமுகவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் திமுகவை ஆதரிப்பது என்ற நிலையையே அவர்கள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்கள். எனவே ‘மூன்றாவது அணி’ நம்பிக்கையை மாநில அரசியலில் அவர்களிடம் வைக்க முடியாது!

அப்புறம் யார் எஞ்சுகிறார்கள்? தேமுதிக! 2006 சட்டமன்றத் தேர்தலிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் விஜயகாந்தின் கட்சி தனியாகவே களம் கண்டது. எட்டு சதவீதம், பத்து சதவீதம் என்று வாக்குகள் வாங்கினாலும் விஜயகாந்த் தவிர யாரும் சட்டப் பேரவைக்குள் போக முடியவில்லை. இதை நன்றாக உணர்ந்திருந்த விஜயகாந்த், மூன்றாவது அணியை கைவிட்டு அதிமுக ஜோதியில் கரைந்து விட்டார். மீண்டும் அவரை மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும்படி எந்த நம்பிக்கையில் பேசினார்கள் என்பது புரியவில்லை.

ஆரம்ப காலம் தொட்டே விஜயகாந்துக்கு வைகோ மீது அன்போ மதிப்போ கிடையாது. அதைப் போலவே வைகோவும் விஜயகாந்தை ஒரு அரசியல் சக்தியாகக் கருதியதில்லை. ஆனால் அரசியல் நிகழ்வுகள் ஒருவருடைய விருப்பத்துக்குக் காத்திருப்பதில்லை. தேர்தல்அரசியலில் விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விட்டார். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஆணவமான நடவடிக்கை வைகோவுக்கும் விஜயகாந்துக்குக் இடையில் இருக்கும் இந்த இடைவெளியைக் கூட குறைத்து விடும் என்று பலர் கருதினார்கள். விஜயகாந்தையும் வைகோவையும் ஒரே அணியில் இணைய வைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று நினைத்தார்கள். கருணாநிதியை ஆறாவது முறையாக முதலமைச்சராக்கும் வல்லமையும் ஜெயலலிதாவுக்கே இருக்கிறது என்று சொல்லிச் சிரித்தார்கள். ஆனால் அந்தப் பெருமையை அவ்வளவு எளிதாக அவருக்குக் கொடுப்பதற்கு தேமுதிக, சி.பி.ஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தயாராக இல்லை.

தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் எல்லாம் மீண்டும் ஜெயலலிதாவுடன் பேசி உடன்பாடு கண்டன. மதிமுக மட்டும் தனித்து விடப்பட்டது. அவர்களுடைய உடன்பாடு முடியும் வரை முஷ்டிகளை உயர்த்திப் பேசியவர்கள் எல்லாம், உடன்பாட்டுக்கு பிறகு சுருதி மாறினார்கள். “ ஏதோ ஒண்ணு ரெண்டு குறைஞ்சாலும் பரவாயில்லை; அதிமுக கூட்டணியில் வைகோ நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்” என்று நண்பர்களிடம் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூடியது. அவர்கள் முன்னால் இருந்த தேர்வுரிமைகள் என்ன?

“குடும்ப ஆதிக்கமா அல்லது தமிழ்நாட்டுக்கு ஜனநாயகமா என்பதை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கடந்த சில வருடங்களாக வைகோ பேசி வருகிறார். ராஜபக்சேயும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். எனவே அந்தப் பிரசாரத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்வது ஒரு தேர்வுரிமை! இதற்கு என்ன பொருள்? “எங்களுக்கு தொகுதிகள் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் உங்களுக்குத் தொண்டூழியம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். சரியான அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். எங்களுடைய நேர்மை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது” என்று ஜெயலலிதாவிடம் சொல்வது போல் இருக்கும். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்று வள்ளுவரை சாட்சிக்கு அழைத்திருக்கலாம்!

அடுத்து, “வைகோ கேட்ட 35 தொகுதிகள் அல்லது 21 தொகுதிகளில் மதிமுக போட்டியிடும். மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கும்” என்ற முடிவை எடுத்திருக்கலாம். இது அதிமுகவின் அலட்சியத்துக்கு எதிர்வினையாக இருக்கும்; கடந்த ஐந்து ஆண்டு மதிமுக அரசியலின் தொடர்ச்சியாகவும் இருந்திருக்கும். 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது இரண்டு தொகுதிகள் கேட்ட மார்க்ஸிஸ்ட் கட்சியை திமுகவும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் தொங்கலில் விட்டன. அப்போது மதுரையிலும் வடசென்னையிலும் வேட்பாளர்களை நிறுத்திய மார்க்சிஸ்ட் கட்சி, மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்தது!

அல்லது இங்கு தீவிரமாக இயங்கிவரும் தமிழின உணர்வாளர்களின் அரசியல் நிலையை ஆதரிக்கலாம். “காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம்” என்று வைகோ சொல்லலாம். ஆனால் இந்த முடிவுகள் எதையும் மதிமுக உயர்நிலைக் குழு எடுக்கவில்லை. “ஜெயலலிதாவின் ஆணவமும் அகங்காரமும் மாறவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாது. எனவே தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என்று அந்தக் குழு தீர்மானித்திருக்கிறது. அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாஞ்சில் சம்பத் சொல்வதைப் போல, “ பெற்ற பிள்ளையை விஷம் வைத்துக் கொல்லும் தாய்” என்ற முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது!

மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் அப்படி என்ன நடந்தது? 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கொடுத்த 35 தொகுதிகளை முதலில் வைகோ கேட்டார்; 2006 தேர்தலில், மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்தன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் இல்லை; தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த ஐந்து வருட காலத்துக்குள் புதிதாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அவர்களுக்கும் தொகுதிகளை அதிமுக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை வைகோ புரிந்து கொண்டு தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சொல்லியது.

தொகுதிகளின் எண்ணிக்கையை வைகோ குறைத்துக் கொண்டார்; 25 என்று தொடங்கி 21 வரை வந்திருக்கிறார். 8 சதவீத வாக்குகளைக் கொண்ட விஜயகாந்தை அணிக்குள் சேர்த்து 41 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா! தனித்தனியாக இரண்டு சதவீத வாக்குகளைக் கூட வைத்திருக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பத்து இடங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பன்னிரண்டு இடங்களும் கொடுத்திருக்கிறது அதிமுக! அதாவது ஒரு சதவீத வாக்குகளை ஒரு கட்சி வைத்திருந்தது என்றால், ஜெயலலிதா அந்தக் கட்சிக்கு 5 இடங்கள் கொடுத்திருக்கிறார் என்று பொருளாகிறது. அப்படிப் பார்க்கும்போது மதிமுகவுக்கு ஜெயலலிதா 25 முதல் முப்பது இடங்களைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பன்னிரண்டு தொகுதிகளுக்கு மேல் கொடுப்பதற்குத் தயாராக இல்லை!

கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் தனக்குத்தான் என்று வைகோ நினைத்திருக்கக் கூடும். நாம் எந்தவித கோரிக்கைகளையும் வலியுறுத்தாமல், பதவிகளைக் கேட்காமல், நிபந்தனைகளை விதிக்காமல், ஒரு தலைமையின் முடிவுகளை ஏற்று நடந்து கொண்டிருக்கும் வரை நம்முடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்! இது ஒரு எழுதப்படாத விதி! “ நான் உனக்காக இந்த வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று தினமும் போய் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. அப்படி இல்லாத நிலையில் கூட்டணித் தலைமை என்ன நினைக்கிறது? “ இவர்களுக்கு பொருளாதார தேவைகள் கிடையாது; தொகுதிகள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியதில்லை; மனதளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதைப் போல ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து அந்த மயக்கத்திலேயே அவர்களை 234 தொகுதிகளிலும் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூட்டணித் தலைமை கணக்கு போடுகிறது.

கேட்டது கிடைக்காத நிலையில் ஒரு மனிதன் முகத்திலே எப்போதும் புன்னகையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாதுதான்! இதன் உச்சமாக அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது என்றும் இந்தத் தேர்தலில் பங்கேற்பதில்லை என்றும் உறுதியாக தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியது. இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர்கள் அதன்பிறகு வைகோ மீதும் மதிமுக மீதும் அன்பைப் பொழிந்தார்கள். “தேர்தலில் என்ன செய்வது என்று முடிவெடுப்பது உங்கள் உரிமை; நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் உங்கள் மீதுள்ள அன்புச் சகோதரியின் அன்பும் மதிப்பும் மாறாது” என்று ஜெயலலிதா பாசமழை பொழிந்தார். தங்களுடைய 10 சீட்டுக்கும் 12 சீட்டுக்கும் பாதகம் இல்லை என்று உறுதியான பிறகு, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள் இடதுசாரிகள்! திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பலரும் வாஞ்சையுடன் வைகோவை அழைத்தார்கள். வைகோ இனி சீட் கேட்க மாட்டார்! மதிமுக தேர்தலைப் புறக்கணிக்கிறது! வைகோவை ஆதரிக்கும் நடுநிலையாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் எப்படி தங்கள் பக்கம் இழுப்பது? அவர்களுடைய ஓட்டுக்களை எப்படி குறிவைத்து அடிப்பது? வைகோவின் மீது இரண்டு அணிகளும் காட்டும் அக்கறை அவ்வளவுதான்!

இரண்டு அணிகளும் சமமாகப் பிரிந்து நிற்கின்றன; சோதிடத்தைத் தவிர வேறு வகையில் வெற்றி தோல்வியை அந்த அணிகளால் முடிவு செய்ய முடியவில்லை. இருட்டில் பயம் போவதற்காக பாட்டுப் பாடிக் கொண்டே போவது போல் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால் உண்மையில் சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்று தவிக்கிறார்கள். வைகோவின் ஆதரவாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இந்நிலையில் எழுகிறது. அடுத்து வரும் நாட்களில் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் வைகோ?

கடந்த ஐந்து வருட அரசியல் பிரசாரத்தின் தொடர்ச்சியை முன்னெடுப்பாரா அல்லது சமீபத்திய அவமதிப்பை முக்கியமானதாக்குவாரா? இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவே கட்சியின் தீர்மானம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

அவர்களும் மனிதர்களே!

அதிர்ச்சியூட்டும் எத்தனையோ செய்திகளுக்கு நடுவில் அந்த செய்தியும் இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி நிற்கிறார்கள். அன்னாவுக்கு நீதி வழங்கு என்ற பதாகை அவர்கள் அனைவரையும் அந்த இடத்தில் ஒருங்கிணைக்கிறது. அன்னாவும் ஒரு வீட்டில் வேலை செய்தவர்; அவர் மர்மமான முறையில் சில நாட்களுக்கு முன்னதாக இறந்திருக்கிறார். அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை. அவர்கள் ஊர்வலமாக மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்துக்குப் போகிறார்கள். போகும் வழி எல்லாம் ‘அன்னாவுக்கு நீதி வழங்கு’ என்று முழக்கம் இட்டுச் செல்கிறார்கள். அந்த அலுவலகத்தின் வாசல் கதவு அவர்களுக்காக திறக்கப்படவில்லை!

அவருடைய அலுவலகத்தின் வாசலிலேயே அவர்கள் அனைவரும் நிறுத்தப்படுகிறார்கள். அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியை ஊர்வலத்தினரோடு சந்தித்துப் பேசும்படிச் சொல்லி விட்டு துணை ஆணையர் வெளியேறிவிட்டார்! அதிகாரம் எதுவும் இல்லாத அடுத்த நிலை அதிகாரியும் ‘உங்கள் கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்ற ரீதியில் ஏதோ சொல்லி கூட்டத்தைக் கலைந்து போக வைத்துவிட்டார்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுதான் அன்றாட நடைமுறை. அமைப்புரீதியாக திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களில் யாருக்கு எது நடந்தாலும் மற்றவர்கள் கவலைப்படாமல் இருப்பார்கள் என்பதே பொதுவான ஒரு தோற்றம். உண்மை மற்றவர்களுக்குத் தெரியாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுவதால், அந்தப் பரந்த மக்களுக்கு எதுவும் தெரியாமலும் புரியாமலும் போய் விடுகிறது. சமூக மாற்றங்களில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் தலையிடும்போது மட்டுமே இது போன்ற ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்த முடிகிறது.

ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் பெரிதாக எதையும் சாதிக்க முடிவதில்லை என்று நீங்கள் முணுமுணுக்க்க் கூடும். ஆம்.. ஒரு வகையில் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. நம்முடைய சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் நிர்வாக எந்திரமும் நீதித் துறையும் விளிம்புநிலை மனிதர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதில்லை. அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கும் எல்லா உரிமைகளையும் உறுதி அளித்திருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த உரிமைகளை அவ்வளவு எளிதாக அனுபவிக்க முடிவதில்லை. அவர்கள் அபூர்வமாக ஒருங்கிணைந்து வந்தாலும் அரசு எந்திரத்தின் கதவுகள் அவர்களுக்காகத் திறப்பதில்லை. பார்வையற்றவர்களாக இருந்தாலும் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் காவலர்கள் தாக்குவதற்குத் தயங்குவதே இல்லை.

அரசாங்கத்தில் இருப்பவர்கள் இப்படிப்பட்டவர்களை சந்திப்பதே இல்லை. ஒரு மாநில அரசாங்கத்தைப் பொறுத்தவரை முதல் அமைச்சரோ, ஆளுநரோ அவர்களை சந்திப்பதற்கு நேரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுடைய குரல் ஆட்சி செய்பவர்களால் கேட்கப்படுகிறது என்ற போலி மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குக் கூட அவர்களால் முடிவதில்லை. அவர்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களையும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களையும் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நேரம் இருக்கிறது!

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் வழக்கறிஞர் விக்ரம் சின்கா வீட்டில் வேலை பார்த்த பெண் அன்னா. அவருடைய வீட்டில் அன்னா கடந்த ஐந்து வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். விக்ரமின் வீடு மூன்றாவது தளத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 4-ம் தேதி அந்த வீட்டின் பால்கனியில் இருந்து கால் தவறிக் கீழே விழுந்து அன்னா இறந்து போனார் என்கிறார் விக்ரம் சின்கா. பால்கனியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்து வைப்பதற்காக வரும்போது அந்த விபத்து நடந்ததாக விக்ரம் சொல்கிறார். ஆனால் அந்த பால்கனியில் 3 அடி உயரத்தில் தடுப்பு இருக்கிறது என்றும் அதைத் தாண்டி ‘கால் தவறி’ கீழே விழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் மற்றவர்கள் சொல்கிறார்கள்!

ஏதோ ஒன்று கீழே விழுந்ததைப் போல சத்தம் கேட்டதால் விக்ரம் சின்கா வெளியில் வந்து பார்த்தாராம். அன்னா கீழே ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனடியாக அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாராம். அங்கு போய்ச் சேர்வதற்கு முன்னால் அன்னாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனையில் சொல்லி விட்டார்களாம். அன்னா விழுந்து கிடந்த இடத்தை வீட்டின் செக்யூரிட்டி விக்ரமின் உத்தரவுப்படி ‘கழுவி’ சுத்தம் செய்து விட்டார். அந்தக் காவலாளியின் வார்த்தைகளின்படி, கீழே விழுந்த அன்னாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. எந்த சத்தமும் இல்லை. உயிர் இல்லாத ஓர் உடலை மேலிருந்து போட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கே இந்த வார்த்தைகள் அனைவரையும் இழுத்துச் செல்கின்றன.

இந்தியா முழுவதும் ஏராளமான செய்திகள் வீட்டுப் பணியாளர்கள் குறித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறை தொடர்பானவையாக இருக்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய அந்தப் பிரச்னையை முக்கியமானதாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு மசோதா ஒன்றை அரசு வைத்திருக்கிறது. அதில் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர்களையும் அதில் சேர்த்துப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்.

சில வீடுகளில் நடக்கும் கொள்ளை, கொலை போன்ற கொடுஞ்செயல்களுக்கு ஓரிரு வீட்டுப் பணியாளர்கள் துணை போகிறார்கள் என்ற செய்தியையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. வீட்டில் ஒரு சிறிய பொருள் காணாமல் போனால், நம்முடைய வீட்டுப் பணியாளர்கள் மேல்தான் நாம் சந்தேகப்படுகிறோம். காவல்துறையிடம் புகார் கொடுத்து அவர்களை ‘விசாரிக்கச்’ சொல்கிறோம். அதன் பிறகு ‘காணாமல் போன’ நம்முடைய பொருள் காணாமல் போகவில்லை என்றும் அதை நாம் தான் கை தவறி எங்கேயோ வைத்திருக்கிறோம் என்றும் தெரிய வருகிறது. அப்போதும் நம்முடைய தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம். இதைப் போல எத்தனையோ விதங்களில் நாம் அவர்களை சகமனிதர்களாக பாவித்து நடத்துவதில்லை.

வீட்டுவேலை செய்பவர்களை அந்த மசோதாவுக்குள் சேர்க்காமல் இருப்பதன் மூலம் அரசு மிகப் பெரிய தவறைச் செய்கிறது. ஏறத்தாழ பத்து கோடிப் பேர் இந்தியாவில் வீடுகளில் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். அவற்றில் 20 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்கள் என்பது உபரியாகக் கிடைக்கும் செய்தி. அவர்களை எல்லாம் பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்றால் அது மிகப் பெரிய அநீதி ஆகிவிடும். இந்த சட்ட மசோதாவுக்கான முன்வரைவை முதலில் தேசிய மகளிர் ஆணையம் தயாரித்தது. அந்த வரைவில் வீட்டுப்பணியாளர்களும் இடம் பெற்றிருந்தார்கள். “அந்தப் பகுதி எப்படி நீக்கப்பட்டது என்று புரியவில்லை” என்கிறார் மகளிர் ஆணையத்தின் தலைவி கிரிஜா வியாஸ்.

பெற்றோர் வேலை பார்க்கும் அலுவலகங்களுக்கு வரும் குழந்தைகள், அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பயிற்சி முகாமுக்கு வரும் விளையாட்டு வீராங்கனைகள், அலுவலகத்துக்கு மற்ற காரணங்களுக்காக வருவோர் உட்பட பலர் இந்த மசோதாவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டுப் பணியாளர்களையும் சேர்த்துக் கொள்வதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் என்பது புரியவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்



இயற்கையின் இன்னொரு முகம்

அந்தச் சிறுவனுக்கு வயது ஒன்பது. அன்று அவனுடைய பிறந்த நாள். அவன் வசிக்கும் ஊரின் நேரத்தின்படி, காலை ஏழரை மணிக்கு பள்ளிக்குப் புறப்பட்டு விடுவான். அதற்கு முன் அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால், நான் காலையில் நான்கு மணிக்கு முன்னதாக எழுந்திருக்க வேண்டும். வேறு சில வருடங்களில் அப்படி காலையில் மூன்றரை மணிக்கு எழுந்திருந்து அவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். ஆனால், அன்று என்னவோ என்னால் காலையில் எழுந்திருக்க இயலவில்லை. மாலை அவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவனுடன் பேசிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். ”இந்த நாள் மகிழ்ச்சிகரமாக மீண்டும் மீண்டும் உன் வாழ்வில் வந்து கொண்டே இருக்கட்டும்என்ற வாழ்த்துச் செய்தியை அன்று சாயங்காலம் அவனிடம் என்னால் சொல்ல முடியாது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!

வழக்கமாக ரிப்போர்ட்டர் இதழுக்கு அனுப்ப வேண்டிய பத்தியை அதிகாலையில் எழுந்திருந்து எழுதி அனுப்பி விடுவது என் பழக்கம். வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னால் அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்பது என்னுடைய நடைமுறை. அன்று அதையும் எழுதி அனுப்பவில்லை. முழுவதும் முடிக்காமல் அரைகுறையாக நின்றது. சரி, அலுவலகத்துக்குப் போய் அரை மணி நேரத்தில் அதை முடித்து அனுப்பி விடலாம் என்று அலுவலகத்துக்கும் போய்விட்டேன். பேசுவதற்கு இடமோ நேரமோ இல்லாமல் தொடர்ச்சியான வேறு பணிகள் வந்து விட்டன. கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்து கொண்டிருந்தபோது, தொலைக்காட்சியில் அதிர்ச்சி தரும் அந்த செய்தி எழுத்துக்களாக ஓடத் தொடங்கியது.

அன்று மார்ச் 11-ம் தேதி. வெள்ளிக்கிழமை. ஜப்பானில் பெரிய அளவில் நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் சக ஊழியர்கள் எல்லோரும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் நிற்கிறார்கள். கார்கள், பஸ்கள், எரிந்து கொண்டிருக்கும் நிலையில் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்ட ஒரு வீடு எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு ஆழிப்பேரலை நகருக்குள் ஆட்டம் போட்டது. செந்தாய் நகரில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த இடத்துக்கும் தோக்கியோவுக்கும் எவ்வளவு தூரம்? தோக்கியோ நகரில் சுனாமியின் தாக்குதல் இருக்கிறதா? தோக்கியோவில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னுடைய தம்பியின் குடும்பத்தினர் பத்திரமாக இருக்கிறார்களா? அவர்களைத் தவிரவும் அங்கு இருக்கும் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? பொதுவான சேதங்களும் இழப்புகளும் அதிர்ச்சி அளித்த போதிலும், குறிப்பான இந்தக் கேள்விகள் மனதிற்குள் குடைந்து கொண்டிருந்தன. மெதுவாக சக ஊழியர்கள் கூடியிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வெளியேறினேன்.

கையில் இருந்த தோக்கியோ எண்களுக்கு எல்லாம் தொலைபேசியில் பேச முயன்றேன். எந்த எண்ணும் கிடைக்கவில்லை. அரை மணி நேரத்துக்கும் மேலாக எனக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அலுவலகத்துக்கு வெளியே வந்து அங்கு சாலையில் நடந்து கொண்டே மீண்டும் மீண்டும் தொலைபேசி எண்களைப் போட்டுக் கொண்டே இருந்தேன். எந்த பலனும் இல்லை. இதற்கிடையில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ‘தோக்கியோவில் யாருடனாவது பேசினாயா?’ என்று கேட்டு எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கி விட்டன. மீண்டும் அலுவலகத்துக்குள் வந்தேன். தம்பியின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் இணையதளத்துக்குப் போய்ப் பார்த்தேன். “குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; பெற்றோர் வந்து அழைத்துச் செல்லுங்கள்என்று முதல் பக்கத்தில் பெரிதாகப் போட்டிருந்தார்கள்!

அதன்பிறகு தம்பிக்கும் அங்குள்ள மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். யாவரும் நலம் என்று பதில் உடனடியாக கிடைத்தது. சுனாமி தாக்குதலுக்கு உள்ளான செந்தாய் நகரம் தூரத்தில் இருப்பதாகவும் தோக்கியோ நகரில் சுனாமி இல்லை என்றும் சொன்னார்கள். “பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது; ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது; அதனால் பஸ்களுக்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தார்கள்; சாலைகள் முழுவதும் வாகனங்கள் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் இருந்தது. நில நடுக்கத்தின் விளைவாக சில வீடுகள், கட்டிடங்கள் பற்றி எரிந்தன என்பதைத் தாண்டி தோக்கியோ நகரில் பெரிய அளவு உயிரிழப்புகள் இல்லைஎன்பதே பதிலாக வந்த மின்னஞ்சல்களில் இருந்து அறிய முடிந்த செய்தி!

அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவிலானது; சாதாரணமாக இந்த அளவிலான நிலநடுக்கம் பிற நாடுகளில் மிகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். நிலநடுக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தாக்கலாம் என்று எதிர்பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி வீடுகளையும் கட்டிடங்களையும் ஜப்பானியர்கள் கட்டியிருக்கிறார்கள். நில நடுக்கத்துக்கு சிறிது நேரம் முன்னதாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள்; முன்னதாகவே சுனாமிக்கான அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் இயற்கையான விஷயங்கள்; அவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மனிதர்கள் எப்படி தங்களைக் காப்பாற்றிக் கொள்வது என்ற படிப்பினைகளும் அவர்களுக்கு இருக்கின்றன. நில நடுக்கங்களும் சுனாமிகளும் அணுகுண்டு வீச்சுகளும் அவர்களையே அதிகம் பாதித்து இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அடுத்த நொடியே எழுந்து நிற்கிறார்கள்!

இப்போது அதிகம் கவலைப்படச் செய்யும் செய்தி அணு உலைகளில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளும் கதிர்வீச்சும் தான்! ஃபுக்குஷிமா டைச்சி அணுமின்நிலையத்தில் மூன்று உலைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஜப்பான் எப்படி அணு மின்நிலையங்களுக்கு ஆதரவாக இருந்தது என்ற கேள்வி இயல்பாக ஒருவருக்கு எழக் கூடும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருப்பதற்காகவே இந்த அணு தொழில்நுட்பத்தை ஜப்பான் தேர்ந்தெடுத்திருக்கிறது. எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்திருந்த போதிலும், இன்று இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் அவை போதுமானவையாக இல்லை. அந்த செய்தியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மகாராஷ்டிர மாநிலத்தில் நிலநடுக்கம் வர வாய்ப்பிருக்கும் இடத்தில் அணு மின் நிலையம் அமைய இருப்பதாக தெரிகிறது. மாநில அரசும் மத்திய அரசும் அந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன. சிவசேனை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கல்பாக்கத்தில் 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. எதிர்பாராமல் ஏதாவது நடந்தால், நம் நாட்டில் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன என்பது குறித்து தீவிரமான ஆய்வுகள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

அந்த வெள்ளிக்கிழமை இரவு இணையம் மூலமாக தம்பியிடம் பேசினேன். குழந்தைகளிடம் பேச முடியவில்லை. அவர்கள் அப்போது தூங்கி விட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிர்ச்சியைப் போக்கும் வகையில் அன்பாக சில வார்த்தைகளைப் பேசலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலையில் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஒன்பது வயதுப் பையனிடம், நிலநடுக்கம், சுனாமி, அணு உலை எதைப்பற்றியும் பேசாமல் பொதுவாக அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “நேற்று காலையிலேயே உனக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து வர இரவாகி விட்டது. அப்போது நீ தூங்கி விட்டாய்என்று பையனிடம் பேச்சை ஆரம்பித்தேன்.

பரவாயில்லை பெரியப்பா! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.. நேத்து இங்கே பெரிய நில நடுக்கம் வந்தது.. பக்கத்துலே கொஞ்ச தூரம் தள்ளி சுனாமி வந்தது.. நியூக்ளியர் எக்ஸ்ப்லோஷனும் இருக்குன்னு சொல்றாங்க.. இந்த நாடே வருத்தமா இருக்கு.. எல்லாம் சரியாக இன்னும் மூணு அல்லது நாலு வாரம் ஆகும்னு நினைக்கறேன்என்று பெரிய மனிதன் மாதிரி அவன் பேசினான்.

என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

தேர்தல் நேரத்து மயக்கம்!

“வருஷக்கணக்குல ஒண்ணா இருந்துட்டு தேர்தல் நேரத்துல கூட்டணி பேசும்போது ஏன் கட்சிகளுக்கு இடையில பிரச்னை வருது?” நண்பர் ஒருவர் கேட்டார். சில அரசியல்வாதிகள் ‘அப்படி ஒரு சிக்கலும் எங்களுக்குள் இல்லை. ஊடகங்கள் தான் இல்லாததும் பொல்லாததுமாக எழுதி சின்னப் பிரச்னையைக் கூட பெரிதாக்குகின்றன’ என்று சொல்கிறார்கள். 60 தொகுதிகள் என்ற காங்கிரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிறகும் திடீரென்று 63 இடங்கள் கேட்கிறார்கள் என்றும் அது நியாயமா என்றும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டது உண்மைதானே? அந்த அறிக்கைதான் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடி மத்திய அரசில் இருந்து அமைச்சர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் பிரச்னையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பார்கள் என்றும் தீர்மானம் இயற்றியது உண்மையில் நடந்த நிகழ்வுதானே!

பிறகு எந்த மாதிரி செய்திகளை ஊடகங்கள் பெரிதாக்கும் செய்திகள் என்று சொல்கிறார்கள்? பேரம் உச்சமாக நடக்கும்போது ஒவ்வொரு தரப்பும் என்ன பேசுகிறார்கள் என்பது ஊடகங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போது ஊடகங்கள் என்ன செய்கின்றன? தங்களுக்கு நம்பிக்கையான நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுகின்றன. தங்களுக்கு நம்பிக்கைக்கு உகந்தவர்கள் என்று ஊடகங்கள் நினைக்கும் நபர் உண்மையில் ‘உண்மையைத்’தான் ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்கிறாரா? சில சமயங்களில் உண்மை இருக்கலாம்; பல சமயங்களில் உண்மை பாதி, கற்பனை பாதி இருக்கலாம்; வேறு சில சமயங்களில் முழுக்கவே கற்பனையான விதைக்கப்பட்ட செய்தியாகக்கூட இருக்கலாம். தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு ஓரளவு ஒத்துப்போகக் கூடிய ‘கதைகளை’த்தான் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

பரபரப்புக்காகவும் தகவல்களை முந்தித் தருவதற்காகவும் சில ஊடகங்கள் இது போன்ற பொக்குகளை, விதைகள் என்று நம்பி விடுகின்றன. அரசியல் கட்சிகளும் அந்தக் கதைகளை ரசிக்கின்றன. தங்களுக்கு விரோதமாக வரும்கதைகளை மட்டும் கடுமையாகச் சாடுகின்றன. எதிர்தரப்பை தர்மசங்கடப்படுத்தும் செய்திகள் என்றால் மகிழ்ச்சி அடைகின்றன. எடுத்துக்காட்டாக இப்போது நடந்த இரு நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் அணி மாறுமா என்று வந்த ஒரே ஒரு செய்திக் கட்டுரை, அவர்களுடையை தேர்தல் நிலையை இறுதி செய்வதற்கு ‘கிரியா ஊக்கி’யாக இருந்தது என்று சொல்லலாம். அந்தக் கட்டுரையின் சாரத்தை வேகமாக மறுத்த திருமாவளவனுடன், திமுக அன்றே உடன்பாடு செய்து கொண்டது.

அடுத்ததாக திமுகவுடன் காங்கிரஸ் செய்து கொண்ட உடன்பாடு. மார்ச் 5 சனிக்கிழமை திமுகவின் உயர்நிலைக்குழு கூடி தீர்மானம் போடுகிறது. அமைச்சர்கள் தங்களுடைய ராஜினாமாவை பிரதமருக்கு ‘ஃபேக்ஸ்’-ல் அனுப்பவில்லை. சனிக்கிழமை இரவோ ஞாயிறு காலையோ அமைச்சர்கள் டெல்லி செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முதலமைச்சர் கருணாநிதி, ‘இதுவரை காங்கிரஸ் எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை’ என்று சொல்கிறார். அதன் பிறகுதான் காங்கிரஸ் திமுகவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்கிறது. பிரணாப் முகர்ஜி பேசிகிறார். அவர் ஒரு மகான்! மகாபாரதத்தில் சர்வ வல்லமை கிருஷ்ணனுக்கு இருப்பதாக சொல்வார்களே அதைப் போல பிரணாப்! “எங்களுக்கு பிரச்னைகளை உருவாக்கவும் தெரியும்; அவற்றைத் தீர்த்து வைக்கவும் தெரியும்” என்று செய்தியாளர்களிடம் பேசுகிறார். இறுதியில் பிரச்னை தீர்ந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை திமுக கொடுத்தது. இதற்கிடையில், சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் குட்டக் குட்ட குனியக் கூடாது என்றும் திராவிடர் கழகத்தின் அறிவுரையை திமுக ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசில் இருந்து விலகுவது என்று தீர்மானம் இயற்றிய உடனே விரைந்து வந்து வாழ்த்துச் சொல்லி கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தினார் திருமாவளவன். திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகவே இல்லை! இந்த நிலையில் ‘உறவு முறிந்தது’ என்று செய்தி போட்ட ஊடகங்கள் அவற்றின் ஆசையை வெளிக்காட்டின என்று குற்றம்சாட்டப்படுகின்றன!

இந்த வார்த்தைகளை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் இந்த நொடி வரை அதிமுக அணியிலும் தொகுதிப் பங்கீடு முடிவடையவில்லை. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அணிக்குள் சேர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளும் வேகமும் இப்போது குறைந்திருக்கிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிகளும் அதிமுக தலைமையின் அழைப்புக்காக காத்திருக்கின்றன என்றே அறிய முடிகிறது. ஒருவேளை கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? தனியாக நிற்கும் முடிவுக்கே வரவேண்டியிருக்கும். எப்பாடுபட்டாவது திமுக அரசைப் பதவியில் இருந்து இறக்குவோம் என்ற அவர்களுடைய கொள்கை முடிவுக்கு அது எதிராக இருக்கும். அதனால் வேறு வழி இல்லாமல் இறுதியாக அதிமுக கொடுக்கும் தொகுதிகளுக்கு தலையாட்ட வேண்டிய நிலையிலேயே மதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை இருக்கின்றன. தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது உருவான பரபரப்பு இந்தக் கூட்டணியில் இருக்காது. ஏன் என்றால் காத்திருக்கும் மூன்று கட்சிகளுமே அந்த அணியின் இளைய பங்குதாரர்கள் தான்!

திமுக அணியில் காங்கிரஸ்.. அதற்கு இணையாக அதிமுக அணியில் தேமுதிக! திமுக அணியில் பாமக, அதிமுக அணியில் மதிமுக! ஓர் அணியில் விடுதலைச் சிறுத்தைகள், இன்னொரு அணியில் புதிய தமிழகமும் இந்திய குடியரசுக் கட்சியும்! ஒரு பக்கம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மற்றொரு பக்கம் மனித நேய மக்கள் கட்சி! ஒரு பக்கம் நெப்போலியன், எஸ்.வி.சேகர், வாகை சந்திரசேகர், தியாகு, குஷ்பூ என்று சினிமா நட்சத்திரங்கள், அடுத்த பக்கம் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக்! விஜய் நற்பணி மன்றமும் இந்தப் பட்டியலில் இணையும் என்று சொல்கிறார்கள்! சாதிரீதியான அமைப்புகள், சினிமா நட்சத்திரங்கள், தமிழ் உணர்வாளர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என்று இரண்டு தரப்பிலும் கொடிகள் பறக்க இருக்கின்றன. தமிழ்நாட்டில் வேறு எந்த தேர்தலைவிடவும் இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.

அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீட்டை முடித்துக் கொண்டு பிரசாரம் செய்யப் புறப்பட்டு விடும். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அடுத்த ஒரு மாதம் அரசியலே பொழுதுபோக்காக இருக்கும். ஜனநாயகத்தின் அடிப்படைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் தகர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாதபடி எல்லாவிதமான பூச்சுகளும் பூசிக் கொண்டு அரசியல் நடிகர்கள் வீதிகளில் உலாவரப் போகிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு என்று பெரிய விஷயங்கள் குறித்த பிரசாரங்களுக்கு நடுவில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற மக்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு ஆட்கள் இருக்காது. திருவிழாவில் தொலைந்து போன சிறுவர்களைப் போல இந்தக் கூட்டங்களுக்கு நடுவில் சிலர் பேசலாம்; பிரசாரம் செய்யலாம்.

திருவிழாக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அந்தக் கொண்டாட்டங்களுக்காக நாம் வாங்கிய கடன் நம்முடைய நினைவுக்கு வந்து அழுத்தும். அதைப்போல, தேர்தல் முடிந்த பிறகு நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகள் நம்மை நெருக்கும். அப்போது நம்முடைய உதவிக்கு யாராவது வருவார்கள் என்று வீதியைப் பார்த்தால், தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, March 14, 2011

பெருந்தன்மையை பாருங்கள்!

அந்த செயல் அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது” என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் பெருமையை நமக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி. நம்முடைய பிரதமர் நேர்மையுடனும் பெருந்தன்மையுடனும் இருந்தால் நம் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால் அதில் என்ன பிரச்னை என்றால், அவருடைய பெருந்தன்மையையும் ஜனநாயக உணர்வையும் நமக்குத் தெரிய வைப்பதற்கு உச்சநீதிமன்றம் அடிக்கடி உதவி செய்ய வேண்டியிருக்கிறது! இப்போது ’பெருந்தன்மையாக’ மன்மோகன்சிங் என்ன செய்திருக்கிறார்? “மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டதற்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். அது தவறாக எடுக்கப்பட்ட முடிவு” என்று நாடாளுமன்றத்தில் அவர் பேசி இருக்கிறார். அதைத் தான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பெருமையாகச் சொல்கிறார். “நீங்கள் தவறு செய்யும்போது இப்படிப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று எதிர்க்கட்சிகளைப் பார்த்து சவால் விடுகிறார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இதே எரிதழல் பகுதியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.ஜே.தாமஸ் மீதான பாமாயில் இறக்குமதி வழக்கு பற்றி கடந்த நவம்பர் மாதம் பேசி இருந்தோம். மீண்டும் ஒருமுறை அதை நினைவுபடுத்துவது பிரதமரின் ‘பெருந்தன்மையைப்’ புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மூவர் குழுதான் அந்த நியமனத்தை செய்ய வேண்டும். மூவரில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்படக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்தக் குழுவுக்குள் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதால் ‘ஆணவத்துடன்’ – பெருந்தன்மையுடன் அல்ல – பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுகிறார். இன்று காங்கிரஸ் கட்சி கோருகிறபடி பிரதமர் பெருந்தன்மையானவராக இருந்திருந்தால், எதிர்க்கட்சியின் எதிர்ப்பை மதித்து வேறு ஒரு பெயரை அந்த நியமனத்துக்கு பரிசீலித்திருப்பார்!

ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பொதுநல வழக்குகள் போடப்பட்டன. மத்திய அரசின் பெருந்தன்மை அந்த நேரத்திலாவது வெளிப்பட்டிருக்கலாம்! “தவறு நடந்துவிட்டது; நாங்கள் அவரை பதவி விலகும்படி கேட்டுக் கொள்கிறோம்; வேறு யாரையாவது நியமிக்கிறோம்” என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படிச் சொன்னதா மத்திய அரசு? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் வாகன்வதி என்ன சொன்னார்? “மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் அப்பழுக்கு இல்லாதவராகவும் நாணயமானவராகவும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், ‘அப்பழுக்கில்லாத நாணயம்’ என்னும் தகுதி ஆணையருக்கு இருக்க வேண்டும் என்று எந்த விதியையும் மத்திய கண்காணிப்புச் சட்டம் வரையறை செய்யவில்லை” என்று வாதம் செய்தார்! அப்படி என்றால் என்ன பொருள்? பி.ஜே.தாமஸ் ‘நாணயமில்லாதவர்’ என்று மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனாலும் அவரை ஊழலைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பின் தலைவராக நாங்கள் நியமிப்போம் என்றும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் நேர்மையானவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நீதிமன்றத்தில் சொல்கிறது!

தினம்தோறும் ஒவ்வொருவிதமான ஊழல் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நிர்வாக விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சொன்னது யார் என்று நினைவிருக்கிறதா? கடந்த 2010 செப்டம்பர் ஆறாம் தேதி டெல்லியில் சில பத்திரிகை ஆசிரியர்களுடன் பிரதமர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது’ என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி இருந்தார். அதையும் செப்டம்பர் 16, 2010 தேதியிட்ட ரிப்போர்ட்டர் இதழின் இந்தப் பகுதியில் விவாதித்து இருந்தோம். மத்திய அரசாங்கத்தின் முடிவுகள் குறித்து ஒருவருக்கு வேறுபாடு இருந்தால், நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடுவது அவருடைய உரிமை. அதை மறுக்கும் விதமாக ஒரு பிரதமர் பேசுவதுதான் பெருந்தன்மையா? உங்கள் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் முறைகேடு செய்திருக்கிறார் என்றும் அதற்காக அவர் மீது வழக்கு தொடரவேண்டும் என்றும் அனுமதி கோரும் கடிதத்துக்கு பிரதமர் ஏன் பதில் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதே, அப்போது என்ன உணர்வை பிரதமர் வெளிப்படுத்தினார்? ‘உங்கள் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை’ என்று நீதிமன்றங்கள் சொல்லக் கூடாது’ என்று ஒரு நாட்டின் பிரதமர் சொல்வார் என்றால் அது மிரட்டலா அல்லது பெருந்தன்மையா என்று அபிஷேக் சிங்வி சொல்ல மாட்டார்!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 3-ம் நாள் தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு தாமஸ் தன்னுடைய பதவியை விட்டு விலகினார். ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம்; ஏற்றுக் கொள்கிறோம்’ என்று பிரதமர் ‘பெருந்தன்மையுடன்’ செயல்படத் தொடங்கினார். ’அந்த நியமனத்துக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்’ என்றார். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர்தான் அந்த நியமனத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்த குழுவுக்கு பிரதமர்தான் தலைவர்! தாமஸ் குறித்த விபரங்களை முறையாக கவனத்தில் கொள்ளவில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் அவருடைய நியமனத்தை ரத்து செய்திருக்கிறதே தவிர, அவரை நியமிக்கும் குழுவின் முடிவு ஒருமனதாக இல்லை என்பதால் அல்ல. அதாவது ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமனம் செய்யும் உயர் அதிகாரக் குழுவில் மூன்று பேரும் ஏற்றுக் கொள்ளும் நபரையே ஆணையராக நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. அப்படி நீதிமன்றம் சொல்லி இருந்தாலும் கூட, எதிர்காலத்தில் கருத்தொற்றுமைக்கு அரசு தரப்பில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்!

அடுத்ததாக, ஊழல் கண்காணிப்பு ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்று அடுத்த ஆணையரை நியமிக்கிறோம் என்று பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார்! ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்திருந்தால் என்ன நடக்கும்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மூலம் பிரபலமான சுரேஷ் கல்மாடி, ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு ஒதுக்கீடு காரணமாக முதலமைச்சர் பதவியை இழந்த அசோக் சவான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆ.ராசா என்று நீளும் பட்டியலில் இருந்து ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார்! அப்போதும் அபிஷேக் சிங்வி, “பிரதமர் கண்ணியமானவர்; பெருந்தன்மையானவர்” என்று சொல்லக் கூடும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

மாணவன் நினைத்தால்..

என்ன இப்படிப் பண்ணிட்டாங்க?” என்று கேட்டபடியே வந்தார் நண்பர்.

“என்ன எப்படிப் பண்ணிட்டாங்க” என்று வடிவேல் பாணியில் பதில் கேள்வி கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் வந்த நண்பரின் ஆர்வம் வடிந்து போய்விடுமோ என்ற எண்ணத்தில் விளையாட்டுத்தனமான சிந்தனையை அடக்கிக் கொண்டேன்.

“எதை யாரு எப்படிப் பண்ணிட்டாங்க?”

“ஏப்ரல் 13-ம் தேதி போய் தேர்தலை வைச்சிருக்காங்களே.. பள்ளிக் கூடம், காலேஜ் எல்லா இடத்துலயும் பரீட்சை முடிஞ்சிருக்காதே.. ”

“ஆமாம் முடிஞ்சிருக்காதுதான்.. நம்ம வீட்டுப் பிள்ளைகள் மேல , அவங்க படிப்பு மேல தேர்தல் கமிஷனுக்கு இருக்கற அக்கறை அவ்வளவுதான்! நம்ம குழந்தைகளை விடுங்க.. அவங்க தேர்தல் நடத்தறதுக்கு பள்ளிக்கூடங்கள் வேணும். அதுல வேலை செய்யறதுக்கு வாத்தியாருங்கதான் அதிகம் வேணும்”

“அப்போ பரீட்சையை எல்லாம் தள்ளி வைச்சிருவாங்களா?”

இப்படிப்பட்ட உரையாடல்கள் அன்று ஏராளமாக நடந்திருக்கும். அஸ்ஸாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அன்றுதான் அறிவித்திருந்தது. ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் என்றும் வாக்கு எண்ணிக்கையும் முடிவும் மே 13-ம் தேதி என்றும் அறிந்த போது மிகவும் வேதனையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. “ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வந்துவிடுமா” என்று கேட்ட ஏராளமான நண்பர்களிடம் ‘அதற்கான வாய்ப்பு இல்லை’ என்று அடித்துப் பேசி இருந்தேன். என்னுடைய அந்தக் கணிப்பு பொய்யாகி இருந்தது!

எனக்குள் ஏற்பட்ட வருத்தமும் வேதனையும் ‘நான் எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை’ என்ற ஏமாற்றத்தால் வந்தவை அல்ல. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் அவர்களை ‘வழிகாட்டும்’ அதிகாரத்தைக் கொண்டு இருக்கும் ‘சக்திகளிடமும்’ இந்த நாட்டின் அடுத்த தலைமுறை மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு பிறக்கிறது. அதிகார பீடங்களில் ‘அரசியல்’ இருக்கும் அளவு அன்பும் அக்கறையும் இருக்காது என்பதை நாம் எல்லோரும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதும் உண்மைதான். இருந்தாலும் கூட, அவ்வப்போது நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் பார்ப்போமே என்ற ‘நேர்மறை சிந்தனை’ வந்துவிடுகிறது. எப்போதும் எந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசினாலும் அரசு மீது நம்பிக்கையில்லாமல் ‘எதிர்மறையாகவும்’ அவநம்பிக்கையுடனும் பேசுவதாக சில நண்பர்கள் சொல்வதுண்டு. அதே நேரம் இந்த நண்பர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து ‘பாசிட்டிவாகப்’ பார்க்க முயற்சி செய்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் காலை வாரி விட்டு விடுகிறார்கள். அதனால் பட்டும் படாமலும் ‘மிச்சமிருக்கும் நம்பிக்கையையாவது காப்பாற்றுங்கள்’ என்று சொன்னால், ‘என்ன அங்கு மீதம் இருக்கிறது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்கு’ என்று தொலைபேசியில் சில நண்பர்கள் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!

தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை நான் மட்டும்தான் அதிருப்தியுடன் பார்க்கிறேனோ என்று அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்கள் யோசித்ததுண்டு. வழக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் எடுக்கும் முடிவுகளோடு பெரும்பாலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால், இதிலும் தனிமைப்படுத்தப்படுவோமோ என்று சில நிமிடங்கள் எண்ணியிருந்தேன். ஆனால், தி.மு.க.தலைவரும் நம்முடைய முதலமைச்சருமான கருணாநிதி அவருடைய அதிருப்தியை தெளிவாக ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் கடிதம் மத்திய அரசுக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ எழுதிய கடிதம் அல்ல; தொண்டர்களுக்கு இடைவிடாமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கடிதம்! தேர்தல் பணிகளுக்கு ஆணையம் கொடுத்திருக்கும் கால அவகாசம் குறைவு; ஆனால் வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் நாட்கள் அதிகம். இதில் ஏதேனும் ‘உள் அரசியல்’ இருக்கும் போலிருக்கிறது. ஏனென்றால் ‘தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் – சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

அந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கான கண்டனம் என்று எடுத்துக் கொண்டால், அந்தக் கண்டனத்தில் மாணவர்களுடைய – அடுத்த தலைமுறையின் பள்ளி அல்லது கல்லூரித் தேர்வுகள் குறித்த கவலை வெளிப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு இருக்கக் கூடிய சிரமங்களின் பட்டியலாகவே அது இருக்கிறது. அதன் பிறகு இடதுசாரிகள், மறுமலர்ச்சி திமுக, பா.ஜ.க. என்று ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிரான குரல்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கின. தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. மற்ற அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவை தேர்தல் தேதி பொதுமக்களுக்கு வசதிக்குறைவாக இருக்கும் என்றே நினைக்கின்றன. இந்நிலையில் தேர்தல் தேதியை மே மாதத்தின் முதல் வாரத்துக்கு தள்ளி வைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும்.

அதனால் தமிழக மக்களின் பிரதிநிதிகளான தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கூட்டுகின்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும். அதன் முடிவை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தேர்தல் தேதியை மாற்றுவார்கள் என்று மனதின் ஒரு ஓரத்தில் நம்பி இருப்பவர்களுக்கு தமிழகத்தின் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அதிர்ச்சி அளிக்கிறார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். “எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்துத் தான் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதனால் தமிழகத்தின் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை” என்று சொல்லி இருக்கிறார்.

அப்படி அவர்கள் ஆய்வு செய்த விஷயம் என்ன? மாணவர்களுடைய தேர்வுகளா? பிரசாரத்தின் போது அவர்களுடைய படிப்புக்கான கவனம் சிதறும் என்ற தகவலா? ஐந்து மாநிலங்களிலும் ஒரு கட்சி பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறதாம். அதனால் அந்தக் கட்சியின் தலைமை ஐந்து மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்க வேண்டும். ஆகா..! தேர்தல் ஆணையத்தின் ஆய்வு மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்வுகள் எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களை விட ஒரு தேசிய கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக இருக்க வேண்டும். மக்களுக்காக கட்சிகளா? கட்சிகளுக்காக மக்களா? இப்படி எல்லாம் கேள்விகளைக் கேட்காதீர்கள். கட்சிகளுக்காகவே மக்கள் என்று தேர்தல் ஆணையம் பகிரங்கமாகச் சொல்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

தொலைந்து போன வாழ்க்கை

அந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் என்று பதினொரு பேரைத் தூக்கிலிட வேண்டும் என்று அந்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் இருபது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் வருடம் பிப்ரவரி 27-ம் தேதி காலையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி ‘தீப்பற்றியது’ அல்லது தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் இதில் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 31 பேரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது; 63 பேரை விடுதலை செய்தது. அன்று குற்றவாளிகள் என்று நீதிமன்றம் சொன்ன 31 பேருக்கான தண்டனையைத் தான் மார்ச் முதல் தேதி சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

“இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். அங்கும் இந்த தண்டனைகள் உறுதி செய்யப்படும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாது” என்று ‘குற்றவாளிகள்’ தரப்பு வழக்கறிஞர் முன்ஷி சொல்லி இருக்கிறார். அந்த ரயிலில் வரும் கரசேவகர்களைக் கொல்ல வேண்டும் என்ற சதி சில நாட்களுக்கு முன்னாலே தீட்டப்பட்டது என்ற குஜராத் அரசின் குற்றச்சாட்டை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் சம்பவம் நடந்து 4 மாதங்கள் கழிந்த பிறகே குற்றவாளிகள் ‘சதி’ செய்து கரசேவகர்களைக் கொன்றார்கள் என்ற கதை உருவாக்கப்பட்டது என்று முன்ஷி சொல்கிறார். ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்காக எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் போன்ற எரிபொருள் வெளியிலிருந்து ஊற்றப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இருப்பினும் எஸ்-6 மற்றும் எஸ்-7 பெட்டிகளை இணைக்கும் வழியில் இருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்கலாம் என்பதை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை 2009 ஜூன் மாதம் சபர்மதி சிறையில் தொடங்கியது. 253 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள்; 1500 ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குஜராத் போலீஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. குஜராத் காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 134 பேர். அவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள்; இன்னொரு ஐந்து பேர் இந்த ஒன்பது வருட கால விசாரணைக்குள் இறந்து போனார்கள்; 14 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 16 பேர் காணாமல் போய்விட்டார்கள். மீதி 94 பேர் மீதான வழக்குக்குத் தான் விசாரணை நடந்தது!

இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணை தவிர ஏற்கனவே இரண்டு கமிஷன்கள் இது குறித்து விசாரித்து அறிக்கை அளித்திருக்கின்றன. 2004-ம் வருடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யு.சி.பானர்ஜி அந்த விசாரணைக் குழுவுக்குத் தலைவர். அந்தக் குழுவின் முன்னாலும் பலர் ஆஜரானார்கள். என்ன நடந்தது என்பதைச் சொன்னார்கள். அங்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ரயில் எரிப்பு சம்பவத்தில் அந்தக் குழு எந்த சதியையும் பார்க்கவில்லை. எஸ்-6 பெட்டிக்குள் இருந்தே அந்த நெருப்பு பரவி இருக்க வேண்டும் என்பது அந்தக் குழுவின் முடிவு. குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷன் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. ரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்பது நானாவதி கமிஷனின் முடிவு!

ஒரே நிகழ்வு! மூன்று விசாரணைகள்! வேறுபட்ட முடிவுகள்! இவை எப்படி சாத்தியமாகின்றன? விசாரணைக் கமிஷனை யார் போடுகிறார்களோ அவர்களுடைய பாட்டுக்கு விசாரணைக் கமிஷன்கள் நடனம் ஆடுகின்றன என்று தான் ஒருவர் முடிவுக்கு வர முடியும். அப்படி ஒருவர் நினைப்பதைத் தவறென்று எப்படிச் சொல்ல முடியும்? அரசியல் சார்புகளுக்குத் தகுந்தவாறு நீதியின் நிறம் மாறிக் கொண்டே இருக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினால், என்ன ஆகும்? நானாவதி கமிஷனும் பானர்ஜி கமிஷனும் வேறு வேறு முடிவுகளை எடுத்ததை விடுங்கள். சதி காரணமாகவே ரயில் பெட்டி எரிக்கப்பட்டது என்கிறது சிறப்பு நீதிமன்றம்; ஆனால் சதியில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளி என்று போலீஸ் சொல்லும் மௌலானா உமர்ஜியை விடுதலை செய்திருக்கிறது!

குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் 94 பேர்; அவர்களில் விடுதலை செய்யப்பட்டவர்கள் 63 பேர். இவர்களில் 55 பேர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜாமீன் மறுக்கப்பட்டவர்கள்! இன்று சுதந்திரமாக வெளிக்காற்றை சுவாசித்தாலும் கடந்த 9 வருடங்களாக அவர்கள் சிறையில் இருந்ததுக்கு யார் காரணம்? யார் அவர்களுடைய குடும்பங்களின் வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் பொறுப்பேற்கப் போகிறார்கள்? அவர்களைப் பிணையில் கூட வெளியில் விடக் கூடாது என்று சொன்ன போலீஸ் அந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுக்குமா? அல்லது போலீஸ் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்களோ அவர்களுடைய வாதங்களை ஏற்று இத்தனை வருடங்கள் ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்த நீதிபதிகளோ இந்த சிக்கலைப் பற்றி சிந்திக்கப் போகிறார்களா? மாலேகான், ஹைதராபாத், ஆஜ்மீர் குண்டு வெடிப்புகளில் இருந்து வேறு சில கொலைகள் வரை சில சாதுக்களை இப்போது குற்றம் சாட்டுகிறோம்; அப்படி என்றால், அதே வழக்குகளில் வேறு சிலரை இதுவரை குற்றம் சாட்டி சிறைகளில் அடைத்த ’பாவத்துக்கு’ என்ன ‘விமோசனம்’ அல்லது ‘பரிகாரம்’ தேடப் போகிறோம்?

முதன்மையான சதிகாரர் என்று வழக்கில் சேர்க்கப்பட்ட மௌலானா உம்ர்ஜியின் பெயர் எப்போது வழக்கில் சேர்க்கப்பட்டது? அவருடைய குடும்பம் இந்திய விடுதலைக்காகப் போராடிய குடும்பம்; இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் அவருடைய வீட்டுக்கு வந்திருக்கிறார். கோத்ரா நகராட்சித் தலைவர் என்ற முறையில் குஜராத்தில் நில நடுக்கம் வந்தபோது நிவாரண உதவிகளை எல்லாம் செய்திருக்கிறார். கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்ட பிறகு பிரதமர் வாஜ்பாய் அங்கு வந்தார். அப்போது மௌலானா உமர்ஜி வாஜ்பாயிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். அந்த மனுவில் என்ன இருக்கிறது என்று வாஜ்பாய் கேட்டாராம். அவருக்கு அருகில் இருந்த முதலமைச்சர் நரேந்திர மோடியை சுட்டிக் காட்டிய மௌலானா உமர்ஜி, ‘அவரிடம் கேளுங்கள்; அவருடைய செயல்களைத் தான் எழுதி இருக்கிறேன்’ என்று சொனாராம். இந்த சம்பவத்துக்குப் பிறகு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் முதல் சதிகாரராக அவர் சேர்க்கப்பட்டார்!

ஒருவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்த ஒரு நொடியில் அவர் மீது வழக்கைப் போடுகிறது அரசு! இப்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது வேறு விஷயம். 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தப்படும் நாம், அந்த வழக்கில் ஒன்பது வருடங்களாக சிறையில் வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்காகவும் கவலைப்பட வேண்டும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்