பெயரில் தெரியும் அடையாளங்கள்
" நீ தமிழா முஸ்லீமா?"
பாலர் வகுப்பில் சேர்ந்த முதல் நாள்.
சக குழந்தையிடம் இருந்து வந்த இந்தக் கேள்விக்கு அந்தச் சிறுமியால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியவில்லை.
அந்தச் சிறிய நகரத்தில் வசிக்கும் மக்களிடையே தமிழ் என்றும் முஸ்லீம் என்றும் பிரிவுகள் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
பள்ளி செல்லும் காலத்திற்கு முன்னர் வீட்டுக்கு வந்து அவளைக் கொஞ்சும் அப்பாவின் நண்பர்கள் விசு, கணேஷ், அழகேசன், ஹாஜா, மார்ட்டின் போன்றோரை அப்பாவின் நண்பர்களாக மட்டுமே தெரியும்.
அவர்களை இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்று அவள் புரிந்திருக்கவில்லை. 3 வயது முடிந்திருந்த நிலையில் அவளுக்கு இதெல்லாம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
"அப்படீன்னா என்ன அர்த்தம்? நீ கேக்கறது எனக்குப் புரியலே!"
" நீங்க தமிழ் ஆளுங்களா முஸ்லீம் ஆளுங்களான்னு கேட்கறா" பக்கத்தில் இன்னொரு மழலை.
"எனக்குத் தெரியலையே"
ஆசிரியை வருகிறார்.
வகுப்பில் இருக்கும் குழந்தைகள் பெயரைக் கேட்கிறார்.
ஒவ்வொரு குழந்தையும் பெயர் சொல்லி பெயர் சொல்லி அமர்கிறது.
இவளும் எழுந்து சொல்கிறாள்.
டீச்சரின் கேள்வி." நீங்க கிறிஸ்டியனா?"
மீண்டும் குழந்தை தனது மழலைப் பருவத்தை இழக்கிறது.
காலையில் இருந்து இரண்டாவது முறை..விடை தெரியாத – கேள்விப்படாத சொற்கள்..கேள்விகள்..
"தெரியலை மிஸ்"
ஆசிரியை விடவில்லை. குழந்தைக்கு எளிதில் புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.
"நீங்க கோவிலுக்கு போவீங்களா, சர்ச்சுக்கு போவீங்களா?"
"இந்த ஊர்ல நாங்க எங்கேயும் போக மாட்டோம். எங்க சொந்த ஊருக்குப் போனா மட்டும் தாத்தா பாட்டியோட கோவிலுக்குப் போவோம்"
" அப்ப நீங்க இந்துதான்.. அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பெயரை வைச்சிருக்காங்க?"
முதன் முதலாக அவளது பெயரில் ஏதோ தப்பு இருக்கிறது என்ற எண்ணம் அவளுக்கு விழுந்தது.
அப்பா, அம்மா, அவர்களுடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி போன்ற உடனடி உறவு மற்றும் நட்பு வட்டம் தவிர மற்றவர்களில் பலர் தன்னை தனது பெயரில் அழைக்காமல் "ஜனனி" என்று அழைப்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பிய தந்தையிடம் சிறுமி கேட்டாள்:
"ஏம்ப்பா எனக்கு இந்த பெயரை வச்சே?"
பெண்ணின் முதல் நாள் பாலர் வகுப்பு அனுபவத்தைக் கேட்டறிய ஆவலுடன் வந்த அப்பாவுக்கு அதிர்ச்சி..
குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். குழந்தை சொல்லச் சொல்ல காலையில் பள்ளியில் நடந்த கதையைக் கேட்டார்.
அம்மா புத்தக அலமாரியில் இருந்து ஓர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்தார். அதனுள் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு குடும்ப போட்டோவில் ஒரு பெண்மணியைக் காட்டி, " இவங்க ரொம்ப நல்லவங்க.. அதனால தான் இவர் பெயரை உனக்கு வைச்சிருக்கோம்," என்றார்.
"அது சரிம்மா..இவங்க தமிழா முஸ்லீமா "
பள்ளியில் கற்ற பாடத்தை வீட்டில் உரசிப் பார்த்தாள் சிறுமி.
குழந்தையின் காயத்தை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தனர். குழந்தையை அன்புடன் கட்டிக் கொண்டு சொன்னார்கள்.
" நம்ம மாதிரியே அவங்களும் மனுஷங்க.. அவ்வளவு தான்."
குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ உரையாடல் முற்றுப் பெற்றது.
அன்று தொடங்கிய பிரச்னை இன்று வரை தொடர்கிறது.
அடுத்ததாக வந்த வகுப்புகளில் பெயர்க்காரணம் தெரியாமல் புலனாய்வு எல்லாம் நடந்தது. அது ஒரு சிறிய நகரமாக இருந்ததால் பிற குழந்தைகளின் வீடுகளிலும் நடந்த விவாதங்கள் நண்பர்களுக்குத் தெரிய வந்தன..
அப்பாவுக்கு அந்தப் பெயரில் யாராவது “தோழி” இருந்திருப்பார்கள், அதனால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம் என்று வியாக்கியானங்கள்..
அப்பாவின் நண்பர்கள் மத்தியில் கூட என்னதான் இருந்தாலும் பெயர் தமிழ்ப் பெயராக இல்லை என்று விமர்சனம்..
மாலனின் சொல்புதிது என்ற புத்தகத்தில் திருமாவளவன் தனது தந்தை உள்ளிட்ட பலருக்கு இந்துப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர் வைத்த நிகழ்ச்சி குறித்து எழுதியிருந்தார். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பெயர் ஒரு பண்பாட்டின் வெளிப்பாடு என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். பெயரிலோ தோற்றத்திலோ மத அல்லது சாதி அடையாளங்கள் வெளிப்படக் கூடாது என்ற கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒருவரது பெயரைக் கேட்கும்போதே அந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற சாதி, மதம் அறிந்து கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். பெயரில் அவர்கள் விரும்பும் பதில் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
“போராடும் தொழிலாளர்க்கு
ஜாதி இல்லை மதமும் இல்லை
கொள்கை உண்டு கோஷங்கள் உண்டு
கோரிக்கைகள் சிலவும் உண்டு
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் போராடும்”
என்றெல்லாம் பல ஊர்வலங்களில் முழக்கங்கள் எழுப்பப்படும்.
ஊர்வலம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது ஒவ்வொருவரும் அவரவர் சாதியினராகவே மாறிவிடுகிறார்கள்.
குடும்பம் சாதிப் பழக்க வழக்கங்களிலேயே பெரும்பாலும் இயங்குகிறது.
எனவேதான் சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது பெரும்பாலும் பெற்றோரே. அவர்கள் வைக்கும் பெயரால் குழந்தைகள் சிரமப்படும் என்றால் அது சரியா? இது பெற்றோரின் தவறா? சமூகம் இப்படிப் பல நுட்பமான விலங்குகளால் மனிதர்களை நிலவும் சமூக அமைப்பை மீறிச் செயல்படவிடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?
சென்னைக்கு ஏழாவது வகுப்புக்கு வந்து சேரும்போது உடன் படித்த மாணவர்கள் அவளது பெயரை அகராதியில் தேடி “பெண் கழுதை” என்று கிண்டல் வேறு..
இந்த நிலைக்கும் முன்னரே அவளுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கானவர்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். உயர்நிலைப் பள்ளி வரும்போது கொஞ்சம் முதிர்ச்சி இருந்ததால் கிண்டலும் கேலியும் அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
உயர்நிலைப்பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளி சேர்க்கைக்காக சென்றிருக்கும்போதும் கல்லூரியில் சேர்ந்தபிறகும் அவளது பெயர் அவளைக் கிறித்தவரா என்ற கேள்வியை எதிர்கொள்ள வைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற சில நிறுவனங்களின் நேர்காணலிலும் “உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்ற கேள்வி தொடர்ந்திருக்கிறது.
அவள் இப்போதெல்லாம் தெளிவாகச் சொல்கிறாள். “ இது கார்ல் மார்க்ஸின் மனைவி பெயர். அவருக்கு இதே பெயரில் ஒரு குழந்தை கூட இருந்ததாம். நான் பிறந்தபோது என் அப்பா மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.”
''ஆயிரந் தட்டல்களுக்குத்
திறக்காத கதவும்
உன்
ஒரே மிதியில் திறந்து கொள்ளும்
அந்த நம்பிக்கையோடு
உன்
அடுத்த அடியை எடுத்து வை." என்கிறார் வைரமுத்து.
ஜென்னி இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!
பாலர் வகுப்பில் சேர்ந்த முதல் நாள்.
சக குழந்தையிடம் இருந்து வந்த இந்தக் கேள்விக்கு அந்தச் சிறுமியால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியவில்லை.
அந்தச் சிறிய நகரத்தில் வசிக்கும் மக்களிடையே தமிழ் என்றும் முஸ்லீம் என்றும் பிரிவுகள் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
பள்ளி செல்லும் காலத்திற்கு முன்னர் வீட்டுக்கு வந்து அவளைக் கொஞ்சும் அப்பாவின் நண்பர்கள் விசு, கணேஷ், அழகேசன், ஹாஜா, மார்ட்டின் போன்றோரை அப்பாவின் நண்பர்களாக மட்டுமே தெரியும்.
அவர்களை இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்று அவள் புரிந்திருக்கவில்லை. 3 வயது முடிந்திருந்த நிலையில் அவளுக்கு இதெல்லாம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
"அப்படீன்னா என்ன அர்த்தம்? நீ கேக்கறது எனக்குப் புரியலே!"
" நீங்க தமிழ் ஆளுங்களா முஸ்லீம் ஆளுங்களான்னு கேட்கறா" பக்கத்தில் இன்னொரு மழலை.
"எனக்குத் தெரியலையே"
ஆசிரியை வருகிறார்.
வகுப்பில் இருக்கும் குழந்தைகள் பெயரைக் கேட்கிறார்.
ஒவ்வொரு குழந்தையும் பெயர் சொல்லி பெயர் சொல்லி அமர்கிறது.
இவளும் எழுந்து சொல்கிறாள்.
டீச்சரின் கேள்வி." நீங்க கிறிஸ்டியனா?"
மீண்டும் குழந்தை தனது மழலைப் பருவத்தை இழக்கிறது.
காலையில் இருந்து இரண்டாவது முறை..விடை தெரியாத – கேள்விப்படாத சொற்கள்..கேள்விகள்..
"தெரியலை மிஸ்"
ஆசிரியை விடவில்லை. குழந்தைக்கு எளிதில் புரிய வைக்க முயற்சிக்கிறாராம்.
"நீங்க கோவிலுக்கு போவீங்களா, சர்ச்சுக்கு போவீங்களா?"
"இந்த ஊர்ல நாங்க எங்கேயும் போக மாட்டோம். எங்க சொந்த ஊருக்குப் போனா மட்டும் தாத்தா பாட்டியோட கோவிலுக்குப் போவோம்"
" அப்ப நீங்க இந்துதான்.. அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பெயரை வைச்சிருக்காங்க?"
முதன் முதலாக அவளது பெயரில் ஏதோ தப்பு இருக்கிறது என்ற எண்ணம் அவளுக்கு விழுந்தது.
அப்பா, அம்மா, அவர்களுடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி போன்ற உடனடி உறவு மற்றும் நட்பு வட்டம் தவிர மற்றவர்களில் பலர் தன்னை தனது பெயரில் அழைக்காமல் "ஜனனி" என்று அழைப்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பிய தந்தையிடம் சிறுமி கேட்டாள்:
"ஏம்ப்பா எனக்கு இந்த பெயரை வச்சே?"
பெண்ணின் முதல் நாள் பாலர் வகுப்பு அனுபவத்தைக் கேட்டறிய ஆவலுடன் வந்த அப்பாவுக்கு அதிர்ச்சி..
குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். குழந்தை சொல்லச் சொல்ல காலையில் பள்ளியில் நடந்த கதையைக் கேட்டார்.
அம்மா புத்தக அலமாரியில் இருந்து ஓர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்தார். அதனுள் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு குடும்ப போட்டோவில் ஒரு பெண்மணியைக் காட்டி, " இவங்க ரொம்ப நல்லவங்க.. அதனால தான் இவர் பெயரை உனக்கு வைச்சிருக்கோம்," என்றார்.
"அது சரிம்மா..இவங்க தமிழா முஸ்லீமா "
பள்ளியில் கற்ற பாடத்தை வீட்டில் உரசிப் பார்த்தாள் சிறுமி.
குழந்தையின் காயத்தை அப்பாவும் அம்மாவும் உணர்ந்தனர். குழந்தையை அன்புடன் கட்டிக் கொண்டு சொன்னார்கள்.
" நம்ம மாதிரியே அவங்களும் மனுஷங்க.. அவ்வளவு தான்."
குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ உரையாடல் முற்றுப் பெற்றது.
அன்று தொடங்கிய பிரச்னை இன்று வரை தொடர்கிறது.
அடுத்ததாக வந்த வகுப்புகளில் பெயர்க்காரணம் தெரியாமல் புலனாய்வு எல்லாம் நடந்தது. அது ஒரு சிறிய நகரமாக இருந்ததால் பிற குழந்தைகளின் வீடுகளிலும் நடந்த விவாதங்கள் நண்பர்களுக்குத் தெரிய வந்தன..
அப்பாவுக்கு அந்தப் பெயரில் யாராவது “தோழி” இருந்திருப்பார்கள், அதனால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம் என்று வியாக்கியானங்கள்..
அப்பாவின் நண்பர்கள் மத்தியில் கூட என்னதான் இருந்தாலும் பெயர் தமிழ்ப் பெயராக இல்லை என்று விமர்சனம்..
மாலனின் சொல்புதிது என்ற புத்தகத்தில் திருமாவளவன் தனது தந்தை உள்ளிட்ட பலருக்கு இந்துப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர் வைத்த நிகழ்ச்சி குறித்து எழுதியிருந்தார். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பெயர் ஒரு பண்பாட்டின் வெளிப்பாடு என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். பெயரிலோ தோற்றத்திலோ மத அல்லது சாதி அடையாளங்கள் வெளிப்படக் கூடாது என்ற கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒருவரது பெயரைக் கேட்கும்போதே அந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற சாதி, மதம் அறிந்து கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். பெயரில் அவர்கள் விரும்பும் பதில் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
“போராடும் தொழிலாளர்க்கு
ஜாதி இல்லை மதமும் இல்லை
கொள்கை உண்டு கோஷங்கள் உண்டு
கோரிக்கைகள் சிலவும் உண்டு
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் போராடும்”
என்றெல்லாம் பல ஊர்வலங்களில் முழக்கங்கள் எழுப்பப்படும்.
ஊர்வலம் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது ஒவ்வொருவரும் அவரவர் சாதியினராகவே மாறிவிடுகிறார்கள்.
குடும்பம் சாதிப் பழக்க வழக்கங்களிலேயே பெரும்பாலும் இயங்குகிறது.
எனவேதான் சாதி, மதம் அறியும் கேள்விகளை எங்கு போனாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பது பெரும்பாலும் பெற்றோரே. அவர்கள் வைக்கும் பெயரால் குழந்தைகள் சிரமப்படும் என்றால் அது சரியா? இது பெற்றோரின் தவறா? சமூகம் இப்படிப் பல நுட்பமான விலங்குகளால் மனிதர்களை நிலவும் சமூக அமைப்பை மீறிச் செயல்படவிடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கிறதா?
சென்னைக்கு ஏழாவது வகுப்புக்கு வந்து சேரும்போது உடன் படித்த மாணவர்கள் அவளது பெயரை அகராதியில் தேடி “பெண் கழுதை” என்று கிண்டல் வேறு..
இந்த நிலைக்கும் முன்னரே அவளுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கானவர்கள் குறித்து அவள் அறிந்திருந்தாள். உயர்நிலைப் பள்ளி வரும்போது கொஞ்சம் முதிர்ச்சி இருந்ததால் கிண்டலும் கேலியும் அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
உயர்நிலைப்பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளி சேர்க்கைக்காக சென்றிருக்கும்போதும் கல்லூரியில் சேர்ந்தபிறகும் அவளது பெயர் அவளைக் கிறித்தவரா என்ற கேள்வியை எதிர்கொள்ள வைத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற சில நிறுவனங்களின் நேர்காணலிலும் “உங்களுக்கு ஏன் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்ற கேள்வி தொடர்ந்திருக்கிறது.
அவள் இப்போதெல்லாம் தெளிவாகச் சொல்கிறாள். “ இது கார்ல் மார்க்ஸின் மனைவி பெயர். அவருக்கு இதே பெயரில் ஒரு குழந்தை கூட இருந்ததாம். நான் பிறந்தபோது என் அப்பா மார்க்சீயத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.”
''ஆயிரந் தட்டல்களுக்குத்
திறக்காத கதவும்
உன்
ஒரே மிதியில் திறந்து கொள்ளும்
அந்த நம்பிக்கையோடு
உன்
அடுத்த அடியை எடுத்து வை." என்கிறார் வைரமுத்து.
ஜென்னி இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!